Showing posts with label குத்தாலம் அருகில் உள்ள ஆலயங்கள். Show all posts
Showing posts with label குத்தாலம் அருகில் உள்ள ஆலயங்கள். Show all posts

Friday, February 6, 2026

சிவராமபுரம் - விசாலாக்ஷி - விஸ்வநாதர் ஆலயம். குத்தாலம்

சிவராமபுரம் - விசாலாக்ஷி - விஸ்வநாதர் ஆலயம்.
சிவராமபுரம் அக்ரஹாரத்தில் உள்ள ஸ்ரீ விசாலாக்ஷி சமேத ஸ்ரீ விஸ்வநாதர் ஆலயம்.
குத்தாலத்திலிருந்து,  ஆடுதுறை செல்லும் வழியில் பிரதான சாலையில், மாதிரிமங்கலம் அடுத்து வடபுறம் சிறிய பாதையில் செல்ல ஆலயம்.
காவிரியில் தென்கரைப்பகுதியில் அமைந்த சிறிய ஆலயம். அக்ரஹாரத்தில்,
ஒரு Arch அமைத்துள்ளர்கள். அதன் வழி ஆலயம்.
ஆலயம் பிரதானமாக கிழக்கு நோக்கியது.
தென்புறத்தில் அம்பாள் சன்னதி.
சுவாமி கிழக்கு நோக்கிய சிறிய உருவம், தனி கருவரையிலும், அம்பாள் தெற்கு நோக்கிய தனி கருவரையும் இணைக்கப்பட்ட பெரிய முன்மண்டபம் உடையது. ஆலயத்தில், வலம்புரி விநாயகர், வள்ளிதெய்வானை சுப்ரமணியர் உள்ளனர்.  நந்தியும் உள்ளார்.
பிரகாரகோஷ்ட்ட தட்சிணாமூர்த்தி, துர்க்கை, சண்டிகேஸ்வரர். அமைத்துள்ளார்கள்.
கிழக்குப்புறம் ஒரு வாசல் இருந்தாலும், சுற்று சுவர் அமைக்கப்பட்டுள்ளதால், தெற்குப்புறத்தில் உள்ள சிறிய சாலை வழியாகத் தான் ஆலயம் வர இயலும்.
ஆலயப்பகுதி சுற்றிலும் வாழை மற்றும் மரங்கள் சூழ உள்ளது.
காவிரி சிறிய அளவில் ஆலயம் வடபுறம் இருப்பதால், பசுமையாக உள்ளது.

தனியார் கட்டுப்பாட்டில் ஆலயம் பராமரிப்பில் உள்ளது.

#மீள்தரிசனம் - #ரதசப்தமி
25.01.2026 #சுப்ராம்தரிசனம்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

மாதிரிமங்கலம் - கைலாசநாதர்

மாதிரிமங்கலம் - கைலாசநாதர்
குத்தாலத்திலிருந்து கும்பகோணம் செல்லும் வழியில் குத்தாலத்திலிருந்து 3 கி.மீ.தூரத்தில் உள்ளது மாதிரிமங்கலம் ஸ்ரீ கைலாசநாதர் ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயம்.
பிரதான சாலைக்குத் தென்புறம் செல்லும் சிறிய சாலையில், ரயிலே லைன் கடந்து செல்ல வேண்டும். 
சிற்றூர் தென்புறத்தில் கிழக்கு நோக்கியவாறு ஆலயம் அமைந்துள்ளது. தென்புறம் உள்ள சாலையில் வாசல் உள்ளது. உயர அமைப்பில் கட்டப்பட்ட ஆலயம்.
தலபுராணம்:
தேரழந்தூரில் சொக்கட்டான் ஆடிய சிவன் பெருமாள் ஆட்டத்தில், அம்பாள், சார்புற்றதால், பசு சாபமாகப்பெற்ற அம்பிகையும், கோ மேய்க்கும் பேறு பெற்ற விஷ்ணுவும் ஆவூர், கோவிந்தக்குடி, கூடலூர், மேய்கரை மங்கலம், முதலிய பலதலங்கள் இருந்து, முடிவில், திருவாடுதுறையில் காட்சியளித்தார். அவ்வூருக்கு, ஈசானிய பாகத்தில் உள்ள இவ்வூரில், திருமகளைப் பிரிந்து வந்த பெருமாளுக்குத் திருமணம் செய்துவித்தார், ஈசன் என்பதால், இது மா+ திரு + மங்கலம் எனப்பட்டதாக புராணம் ஆலயத்தில் உள்ளது.
திருமணம் தடை நீக்கும் ஆலயம்.

ஆலய அமைப்பு:
கிழக்குப்புறத்தில் நுழைவில், காட்சி கோபுரம் அடுத்து, ஆலய முன்மண்டபம் உயரமாக இணைக்கப்பட்டுள்ளது. முன்மண்டபத்தில், நந்தியம் பெருமாளுக்கு தனி மண்டபம்.
சுவாமி கிழக்கு நோக்கி கருவரை, அர்த்த மண்டபம், உள் மண்டபத்தில் சிறிய நந்தி மற்றும், அம்பாள் கருவரையும், அர்த்த மண்டபத்துடன் உள்ளது. சுவாமி, அம்பாள் இரு கருவரை மண்டபங்கள் இணைப்புடன் கூடிய நடு மண்டபம் கல்யாணக்கூட அமைப்பில் நடுவில் உயர்த்தி பலகனிகளுடன் கட்டப்பட்டுள்ளது.  
மண்டபத்தின் தென்பகுதியில், திருஞானசம்பந்தர், இயற்பகை நாயனார் சிறிய உருவ சிலைகள், சுவாமி முன் இடத்தில் பெரிய விநாயகர் சன்னதி வலப்புறத்தில் சுப்பிரமணியர் அமைத்துள்ளனர்.

பிரகாரத்தில், கோஷ்ட்ட தட்சிணமூர்த்தி உயரமான மாட அமைப்பு; படிகள் உள்ளன.
மேற்கில், சிறிய லிங்கம், அம்பாள், சுற்று சுவற்றில் இணைந்துள்ளது.
துர்க்கை தனி சன்னதி. கிழக்குப்புறத்தில், பைரவர், சனி, சூரியன் அமைந்துள்ளார்கள்.
நல்ல பராமரிப்பில் வழிபாடுகளில் உள்ள ஆலயம். 
1987, 2002 ல்குடமுழுக்கு நடைபெற்ற குறிப்பு உள்ளது.
#மீள்தரிசனம் - #ரதசப்தமி
25.01.2026 #சுப்ராம்தரிசனம்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
🪷

ராஜகோபாலபுரம் : ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம்.

ராஜகோபாலபுரம் : ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம்.
குத்தாலத்திலிருந்து ஆடுதுறை செல்லும் வழியில், குத்தாலம் தாண்டியவுடன் வரும் சிற்றூர்.
பிரதான சாலையில், தெற்கில் பிரியும் சிறிய சாலையில் வரும் ரயில்வே லைன் தாண்டி உள்ளே 200 மீ தூரம். 
ஆலயம் கிழக்குப் பார்த்தது. 
சிறிய முன் காட்சிக்கோபுரம். 
முன்புறம் சிறிய நந்தி.
சுவாமி கிழக்கு நோக்கியும், அம்பாள் தெற்கு நோக்கியும் தனித்தனி கருவரைகளுடன், இணைப்பு முன்மண்டபம்.
பிரகாரத்தில், தட்சினாமூர்த்தி.
விநாயகர், வள்ளிதெய்வானையுடன் சுப்பிரமணியர், மகாலெட்சுமி, சண்டிகேஸ்வரர் - தனிதனி சன்னதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன.

கிழக்குப் புறத்தில், பைரவர், நவகிரகங்களும் உள்ளனர்.
சிறிய ஆலயம்.
தரிசிக்க முன் தகவலுடன் சென்றால், ஆலயம் முழுதும் தரிசிக்கலாம்.

#மீள்தரிசனம் - #ரதசப்தமி
25.01.2026 #சுப்ராம்தரிசனம்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

மன்மதீஸ்வரர் - ஆதிசக்திநாயகி அம்மன் ஆலயம், குத்தாலம்.

மன்மதீஸ்வரர் - ஆதிசக்திநாயகி அம்மன் ஆலயம், குத்தாலம்.
குத்தாலம் பேருந்து நிலையம் எதிரில் கிழக்கு நோக்கிய ஆலயம்
சுவாமி கருவரை கிழக்கு நோக்கியும், அம்பாள் தெற்கு நோக்கியும் தனிதனி கருவரைகளில் உள்ளார்கள்.
முன்மண்டபம் இரு சன்னதிகளையும் இணைப்பு.
சுற்றுப் பிரகாரத்தில் தெட்சினாமூர்த்தி
விநாயகர், முருகன், மகாலெட்சுமி தனி அமைப்பு,
வடக்கில் துர்க்கை,
ஆலயம் நல்ல முறையில் பராமரிப்பில் உள்ளது.

#தரிசனம் - #ரதசப்தமி
25.01.2026 #சுப்ராம்தரிசனம்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
🙏

சோழீஸ்வரர் ஆலயம்ஸ்ரீ பரிமள சுகந்த நாயகி (சௌந்தரநாயகி) சமேத ஸ்ரீ சோழீஸ்வரர் ஆலயம்.குத்தாலம்.

சோழீஸ்வரர் ஆலயம்
ஸ்ரீ பரிமள சுகந்த நாயகி (சௌந்தரநாயகி) சமேத ஸ்ரீ சோழீஸ்வரர் ஆலயம்.
குத்தாலம்.

 சுந்தரர் பாடிய தேவார வைப்பு தலம். விக்கிரமசோழன் திருப்பணி செய்து வழிபட்டதால் சோழீஸ்வரர் என மூலவர் அழைக்கப்படுகிறார்.
5 நிலை இராஜ கோபுரத்துடன் கூடிய கிழக்கு நோக்கிய மிகப்பழமையான ஆலயம்

10.9.23 அன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

சோழ மன்னர்களில் ஒருவரான
விக்ரம சோழனால் கட்டப்பட்ட ஆலயத்தின் மூலவர் ஶ்ரீ சோழீஸ்வரர்.

தற்போதைய ஆலயம் 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது..

பரத முனிவர் பெண் குழந்தை பெற வேண்டி அம்பாளை வேண்டிக்கொள்ள,
அம்பாள் சிவ பெருமானிடம் பரிந்து உரைக்க, பரிந்து உரைத்த நாயகி (பரிந்துரை செய்பவள்) என இத்தல அம்பாள் அழைக்கப்படுகிறாள்.

ஈஸ்வரன் அம்பாளை அவளை
முனிவரின் மகளாகப் பிறக்கும்படி வேண்டி கொள்ள முனிவரின் மகளாக அம்பாள் பிறந்து பின்னர் சிவ பெருமானை மணந்து கொள்கிறார்.

இந்த ஆலயத்தில் அம்பாள் திருமணமாகாத பரிமளா சுகந்த நாயகியாகவும், பிரதான சந்நிதியில் சௌந்தர நாயகியாகவும், இரண்டு சன்னதிகளில் நமக்கு காட்சி அளிக்கிறார்.

விக்ரம சோழனின் மனைவி கோமளைக்கு மருத்துவர்களால் குணப்படுத்த முடியாத தோல் நோய் இருந்தது. சோழன் இத்தலத்தில் பிரார்த்தனை செய்து நோய் நீங்கியதால்
இந்த ஆலயத்தை விரிவாக கட்டினார்.

இன்றும், தோல் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள், இந்த
கோவிலுக்கு சென்று, திராட்சை சாற்றை கொண்டு சிவ பெருமானுக்கு அபிஷேகம் செய்கின்றனர்.

இந்த ஆலயம் ஓர் சனி பரிகார தலம்.
இங்கு தனி சன்னதியில் சனீஸ்வரர்
பாதாள சனீஸ்வரர் என வணங்கப்படுகிறார்.

தேவர்கள் மற்றும் ரிஷிகள் இந்த தலத்திற்கு வருகை புரிந்த போது சனிஸ்வரர் அவர்களை அமிர்த கலசம் கொடுத்து வரவேற்றதால் அமிர்த கலச சனி என்றும் அழைக்கப்படுகிறார்.
நள மகாராஜா சனிப்பெயர்ச்சியில் இருந்து விடுபட யாத்திரை மேற்கொண்டபோது,
இந்த ஆலய பாதாள சனிஸ்வரரை வழிபட்ட பின்னர், சனீஸ்வரர் மன்னனை ஆசிர்வதித்து, திருநள்ளாறில் அவரது துன்பங்கள் தீரும் என்று தெரிவித்தார் என்பர்.

ஆலய தூண்களில் அனுமனுக்கு சிறப்பு சன்னதியும் . அனுமனின் பக்தர்கள் சனி தொடர்பான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெறுவதால், அமிர்த கலச சனியை வழிபடுவதுடன், அவரை வழிபடுவதும் மிகுந்த ப்பலனைத் தரும்.
பிரகாரத்தில் சித்தி விநாயகர், நால்வர்,
தேவியருடன் சுப்ரமணியர், கஜலட்சுமி, விநாயகருடன் தட்சிணாமூர்த்தி, பைரவர், சண்டிகேஸ்வரர், பாதாள சனீஸ்வரர் தனி சன்னதிகளில் தரிசிக்கலாம்.
கோஸ்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை சிற்பங்கள் உள்ளன.
நாகர் சிலைகள் வில்வ விருட்சத்தின் கீழ் அமைந்துள்ளன.
ஆலயம் இரண்டு பிரகாரங்கள் கொண்டது.

#மீள்தரிசனம் - #ரதசப்தமி
25.01.2026 #சுப்ராம்தரிசனம்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

ஓம்காளீஸ்வரர் ஆலயம் - குத்தாலம்

ஓம்காளீஸ்வரர் ஆலயம் - குத்தாலம்

பிரணவ உபதேசம் பெற்ற காளிதேவி!

இந்தத் தெய்வத் திருமணத்தில் பங்கேற்க வந்த தேவருலகத்தினர் இப்பகுதி முழுதும் ஆங்காங்கு தங்கியிருந்து, சிவ லிங்கப் பிரதிஷ்டை செய்து பூஜித்துள்ளனர். அவ்வகையில் காளிதேவியும் இங்கு வந்தாள். உத்தால வனத்தில் குறிப்பிட்ட ஓரிடத்தில், வில்வ மரத்தின் அடியில் சிவலிங்கம் அமைத்தாள்; தீர்த்தமும் உருவாக்கினாள்.அதில் புண்ணிய நீராடி, மலர்களுடன் வில்வ இலைகளாலும் அர்ச்சனை செய்து, சிவபூஜை செய்யத் துவங்கினாள் அன்னை.

சாந்த சொரூபத்தினளாக மகிழ்ச்சியுடன் காளிதேவி செய்த பூஜையைக் கண்டு மகிழ்ந்த பரமேஸ்வரரும் லிங்கத்திலிருந்து ஆவிர்பவித்து “யாது வரம் வேண்டும்.?” எனக் கேட்டார்.

பிரணவத்தின் பொருளைத் தனக்கு உபதேசித்து அருளும்படி விநயத்துடன் வேண்டினாள் காளி. சிவபெருமானும் மிகவும் சந்தோஷத்துடன் ‘ஓம்’ எனும் பிரணவத்தின் பொருளை உபதேசித் தார். இதனைக் கண்டு மகிழ்ந்த சகல தேவராதிகளும் காளி பூஜித்த லிங்கமூர்த்தியை `ஓம்காளீஸ்வரர்’ என்ற திருநாமத்தால் அழைத்தனர்.

மூல மந்திரங்கள் இங்கே ஸித்தியாகும்!

சிவ அனுக்கிரகத்தால் மகிழ்ந்த காளிதேவி ஆனந்த நடனம் புரிந்தாள். அத்தனும் ஆனந்த தாண்டவம் புரிந்தார். இவ்விருவரின் திருநடனம் கண்டு அம்பிகையும் இங்கு குடியேறி, `ஆனந்தவல்லி’ என்கிற திருநாமத்தினை உவப்புடன் ஏற்றாள்.

ஆக, குத்தாலத்தில் உள்ள தொன்மையான ஆலயமாகத் திகழ்கிறது ஓம்காளீஸ்வரர் கோயில். அளவில் பெரியது. மூலவர் ஓம்காளீஸ்வரர் கிழக்கு நோக்கி அருள்கிறார். கருவறை மிக உயரமாக வித்தியாசமான அமைப்புடன் இருப்பது குறிப்பிடத்தக்கது. மூல மந்திரங்களை ஜபிப்பவர்கள் இங்கு வணங்கிட பலன்கள் ஸித்தியாகும் என்பது நம்பிக்கை.

மகாமண்டபத்தில், மூலவருக்கு இடது புறத்தில் சிறு சந்நிதியில் சிவலிங்க பூஜை செய்யும் காளியின் சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது. டமருகம், பாசம் தாங்கிய மேற்கரங்களுடன்... கீழிரு கரங்களில் இடக் கரத்தில் பூக்குடலை திகழ, வலக்கரத்தால் அர்ச்சித்தபடி, சற்றே சிரம் தாழ்த்தி, சிஷ்ய பாவனையில் உபதேசம் பெறும் அமைப்பில் திகழ்கிறாள் காளிதேவி. வேறெங்கும் காண்பதற்கரிய காளிதேவி அம்சம் இது என்கிறார்கள்.

அருகிலேயே கணபதியும் அமைந்துள்ளார். இங்கே காளி தேவி, வழக்கமான தனது உக்கிரத்தை விலக்கி சாந்தத்துடன் திகழ இந்தப் பிள்ளையாரே காரணமாம்.

அபூர்வ அமைப்பில் கிரக மூர்த்திகள்

இங்கு சனைச்சரருக்கும் கேதுவிற்கும் இடையே குருபகவான் அமைந்துள்ளது விசேஷ அமைப்பாகும். அதேபோல் குருவின் பார்வை படும்படியாக நிழல் கிரகங்களான ராகுகேது அமைந் திருப்பதும் குறிப்பிடத் தக்கது. சர்ப்ப கிரகங்களினால் வாடுபவர்கள் இங்கு விளக்கேற்றி வணங்கிட, குருவின் சுப பார்வையினால் தீய பலன்களும் நற்பலன்களாக மாறுவது அதிசயம்.

அதேபோல், சூரியனும் சந்திரனும் எதிரெதிரே நேர்பார்வையில் அமைந்திருப்பதும் சிறப்பான அமைப்பாகும். மேலும், பஞ்ச பூதங்களும் இத்தலத்தில் வழிபட்டுள்ளனர். நெடிய பிராகாரத்தில் பஞ்ச பூதங்களும் வழிபட்ட பஞ்சலிங்கத் திருமேனிகளும் மனோன்மணி அம்மையுடன் நிலைத்திருப்பது அழகு.

ஏனைய சந்நிதிகளில் விநாயகர், லிங்கோத்பவர், சண்முகர், கஜலக்ஷ்மி, துர்காம்பிகை, பைரவர், சூரிய சந்திரர்கள் ஆகியோர் அருள்கிறார்கள்.

அம்பிகை ஆனந்தவல்லி தனித்த கோயிலில் வெளிச்சுற்றில் நிலை பெற்றிருக்கிறாள். வெள்ளிக் கிழமைகளில் இந்தச் சந்நிதியில் விளக்கீடு செய்து வணங்கினால், மகிழ்ச்சியான வாழ்வை அருள் கிறாள் இந்த அன்னை.

இந்தச் சந்நிதிக்கு எதிரில் தலவிருட்சமாகிய வில்வமரம் உள்ளது. இந்த வில்வத்துடன் ஒரு வேம்பு மரமும் கூடவே பிணைந்து வளர்ந்துள்ளது. அதனையே ஓங்காளீஸ்வரமாக வழிபடத் தொடங்கியும் உள்ளார்கள்.

கோபுர விதானங்களில் காளி சிவலிங்கத்தினைப் பூஜிப்பது போன்ற சுதைச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளதும் அழகு.

தில்லையில் சிவனை எதிர்த்து நடனம் புரிந்த காளி சிவனின் கோபம் குறைய பூஜை செய்து அருள் பெற்ற தலம் .சமய குறவர்கள் நால்வரும் பாடிய தேவார வைப்பு தலம் .சோழர் கால சிற்பங்கள் கோஷ்டத்தில் அழகுற அமைந்துள்ளன. மாயவரம் 11கி .மீ .சமீபத்தில் கும்பாபிஷேகம் நடந்து கோவில் புது பொலிவுடன் காட்சி தருகிறது .

#மீள்தரிசனம் - #ரதசப்தமி
25.01.2026 #சுப்ராம்தரிசனம்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

ஏகாம்பரேஸ்வரர் - காமாட்சியம்மன் ஆலயம், மற்றும், ஶ்ரீ பால தண்டாயுதபானி ஆலயம், குத்தாலம்.

ஏகாம்பரேஸ்வரர் - காமாட்சியம்மன் ஆலயம், மற்றும், ஶ்ரீ பால தண்டாயுதபானி ஆலயம், 
குத்தாலம்.
 நகரில் உள்ள சிறிய சிவன் ஆலயம் ஏகாம்பரேஸ்வரர் - காமாட்சியம்மன் ஆலயம். அருகில் அரசு பள்ளி உள்ளது.
கிழக்குப் பார்த்த ஆலயம். சிறிய காட்சி கோபுரம் நுழைவு. சுவாமி கிழக்கு நோக்கிய கருவரையும், அம்பாள் தெற்கு நோக்கிய கருவரையும் இணைத்த சிறிய முன்மண்டபம் கொண்டது.
சுவாமி கருவரை முன், இருபுறமும் விநாயகர், முருகன் உள்ளனர்.
ஆலயம் முன்பு நம் சிறிய நந்தியும் உள்ளது. கோஷ்ட்டத்தில் தட்சினாமூர்த்தி, லிங்கோத்பவர் மற்றும் தனி சன்டிகேஸ்வரர் சன்னதியும் உள்ள பிரகாரம் கொண்டது. பழமையான ஆலயம், புனரமைப்பு செய்து
சமீபத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்று உள்ளதால், ஆலயம் பராமரிப்புடனும், தூய்மையாகவும் நன்றாக உள்ளது.
#சுப்ராம்
https://maps.app.goo.gl/AzERHQe3Nno36ii99

2.சிவன் ஆலயம் மிக எதிரில் உள்ள தனி ஆலயம்
குத்தாலம் ஶ்ரீ பால தண்டாயுதபானி ஆலயம்

மேற்கு நோக்கிய ஆலயம். சிறிய கருவரையில் சுவாமி மேற்கு நோக்கியுள்ளார்.
ஒரு பிரகாரமும், முன் மண்டபமும் உள்ளது.

நகரின் நடுவில் பிரதான சாலையில் High School அருகில் உள்ள திருப்பத்தில் அமைந்துள்ளது.
எதிர்புறம் வடக்குப் பக்கத்தில், கிழக்கு நோக்கிய, ஸ்ரீ காமாட்சியம்மன் சமேத ஸ்ரீ ஏகாம்பரநாதர் சிவன் ஆலயம் ஒன்றும் உள்ளது.
Check out this review of Sri bala dhantayutha pani Temple on Google Maps
https://goo.gl/maps/SGx9XvP3atfn2DPK7
#ரதசப்தமி
25.01.2026 #சுப்ராம்தரிசனம்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

வில்லியநல்லூர் -காளீஸ்வர ஸ்வாமி, குத்தாலம்மயிலாடுதுறை மாவட்டம்,

வில்லியநல்லூர் -காளீஸ்வர ஸ்வாமி, குத்தாலம்
மயிலாடுதுறை மாவட்டம், 

குத்தாலம் அருகில் காவிரி நதி பாயும் வடகரையில், பந்தநல்லூர் செல்லும் பாதையில் சிற்றூரின் ஈசான பாகத்தில் உள்ளது.5.வில்லியநல்லூர் ஸ்ரீ காளீஸ்வர ஸ்வாமி, ஸ்ரீ சிவகாமிசுந்தரியம்மன் ஆலயம்.

ஆலயம் எதிரில் குளம் உள்ளது.
கிழக்குப்பார்த்த ஆலயம். காட்சி கோபுரம் மற்றும் சுற்று சுவற்றுடன் இருக்கிறது.

முன்மண்டபத்தில் நந்தி ஆலய கருவரை மண்டபத்தின் நுழைவில் உள்ளது.
சுவாமி கிழக்குப் பார்த்தும், அம்பாள் தெற்கு நோக்கியும் தனித்தனி கருவரைகளுடன் வெளவால் நெற்றி முன் மண்டபத்துடன் இணைந்துள்ளது.
முன் மண்டபத்தில் ஈசான பாகத்தில் சதுர்முக சண்டிகேஸ்வரர் தெற்கு பார்த்து உள்ளார். மற்றும் பைரவர், சூரியன், நாகர்
வைக்கப்பட்டுள்ளனர்.
பெரிய நந்தி வாகனம் ஒன்றும் உள்ளது.
சோமஸ்கந்தர் சன்னதி மட்டும் உள்ளது. விக்ரகங்கள் இல்லை.
பிரகாரத்தில், தனி தட்சினாமூர்த்தி தெற்கு பார்த்த அமைப்பில். 
தென்மேற்கு மூலையில் விநாயகர், அடுத்து முருகர், சன்னதிகளும் உண்டு.
கோஷ்ட்ட துர்க்கை. சன்டிகேஸ்வரர் ஆலய முன்மன்டபத்தில் உள்ளார்.
முன்புறம் சுற்று சுவரில் உள்ள கல்வெட்டுகள் மூலம் 1.07. 1993 ல் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளதை அறியலாம்.
பராமரிப்பில் வழிபாட்டில் உள்ள ஆலயம்.

#தரிசனம் - #ரதசப்தமி
25.01.2026 #சுப்ராம்தரிசனம்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
🌼

திருவேள்விக்குடிஅருள்மிகு கல்யாண சுந்தரேஸ்வரர் - பரிமளசுகந்தநாயகி - திருக்கோயில்.

திருவேள்விக்குடி
அருள்மிகு கல்யாண சுந்தரேஸ்வரர் - பரிமளசுகந்தநாயகி - திருக்கோயில்.

 திருவேள்விக்குடி - 609 801, குத்தாலம் 
மயிலாடுதுறை-கும்பகோணம் சாலை குத்தாலம் சந்திப்பில் இருந்து வடகிழக்கு 3 கி.மி தொலைவில் அமைந்துள்ளது.
மயிலாடுதுறை - கும்பகோணம் கல்லணை சாலையில் உள்ளது.

மிகவும் பழமையான தொன்மையான கோயில்.
 இத்தலத்திலுள்ள இறைவன் கல்யாணசுந்தரேஸ்வரர், இறைவி பரிமளசுகந்தநாயகி. இறைவன் மணவாளேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். 
பார்வதியின் துயரத்தை போக்கிட்ட சிவன், இங்கு வந்து வழிபடும் கல்யாணம் ஆகாத ஆண்கள், பெண்களின் துயரத்தை போக்கி திருமணத்தை சிறப்பாக நடத்தி வைக்கிறார்.

சிவன் - பார்வதி திருமணத்துக்கான வேள்வி வளர்த்து யாகம் முதலிய ஏற்பாடுகள் நடைபெற்ற தலமாதலால் திருவேள்விக்குடி என்ற பெயர் ஏற்பட்டது. திருமணத் தடை நீக்கும் ஒரு பிரார்த்தனைத் தலமாக திருவேள்விக்குடி விளங்குகிறது.

இறைவனின் திருமணத் தலம் என்பதால் இங்கு நவக்கிரகங்கள் கிடையாது. அதற்கு பதில் ஈசனே ஈசான்ய மூலையில் அமர்ந்துள்ளார்.

பிரார்த்தனை: நவக்கிரகதோஷத்தால் திருமண தடை உள்ளவர்கள் இவருக்கு 48 அகல் விளக்கு ஏற்றி வழிபட்டால் தோஷம் நீங்கும்.

இத்தலத்தின் தீர்த்தம் கௌதுகா பந்தன தீர்த்தம். 

நேர்த்திக்கடன்: பவுர்ணமி தினத்தில் காலை 10 முதல் மாலை 4 மணிவரை திருமண தடை நீங்க யாகம் நடக்கிறது. இந்த யாகத்தில் திருமணத் தடை உள்ள ஆண்கள், பெண்கள் இருபாலரும் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து வழிபடலாம். திருமணம் முடிந்தவுடன் தம்பதிகள் இத்தலத்திற்கு வந்து சுவாமி அம்பாளுக்கு அர்ச்சனை செய்து நன்றி சொல்லிவிட்டால் போதும்.

திருவிழா: மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம்.

தல வரலாறு - 1
1. திருவேள்விக்குடியின் அருகிலுள்ள குத்தாலத்தில் பரத மகரிஷியின் மகளாக பார்வதி அவதாரம் செய்தாள். அவள் தன்னை திருமணம் செய்ய வேண்டி பரமேஸ்வரனை நினைத்து 16 திங்கள்கிழமை விரதம் இருந்து மண்ணில் லிங்கம் பிடித்து பூஜை செய்தாள். 17வது திங்களில் ஈசன் "மணவாளேஸ்வரர்' ஆக தோன்றி, அவளைத் திருமணம் செய்து கொள்வதாக வாக்களித்தார்.
சிவன் தன்னில் ஒரு பகுதி பாகத்தை சக்திக்கு அளித்த தலம் இதுதான்.

அதன்படி அம்மனுக்கு கங்கணம் கட்டி, வேள்விகள் செய்து, பிரம்மா நடத்தி வைக்க மணம் புரிந்து கொண்டார். எனவே தான் இத்தலம் "திருவேள்விக்குடி' என அழைக்கப்பட்டது. இத்தலத்தில் அருள்பாலிக்கும் அன்னையின் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.. அவ்வளவு அழகு. தவத்தின் ஆரம்பத்தில் துயரத்துடன் இருந்த அன்னை, சிவன் தன்னை மணந்து கொள்கிறார் என்றவுடன் ஏற்பட்ட ஆனந்தத்தில் புன்னகை பூக்க அருள்பாலிக்கிறாள்.

தல புராணம் - 2.
சிவனை மதிக்காமல் பார்வதி ஒருமுறை நடக்க, சிவன் பார்வதியை பசுவாக பூலோகத்தில் வாழும்படி சாபமிட பார்வதி இத்தலத்தில் பசுவாக மாறி, சாப விமோசனம் பெற்ற தலம். பார்வதியுடன் கலைமகள் மலைமகள் இந்திராணி அனைவரும் பசுவாக மாறி இங்கே வாழ திருமால் இப்பசுக்களை மேய்த்துக் கொண்டு இருந்தார். பசுக்களின் பாலை இங்குள்ள சிவலிங்கத்திற்கு பூஜை செய்ய சிவன் எழுந்தருளியிருந்து பார்வதியின் சாபம் போக்கி, திருமண ஏற்பாடு செய்து இங்கேயே சடங்குகள் கங்கனதாரணம் நடைபெற்ற தலம்.

இங்கிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவிலுள்ள திருமணஞ்சேரியில் சிவன் பார்வதி திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் பிரம்மா தானே முன்னின்று வேள்வி செய்ததால் திருவேள்விக்குடி என பெயர் பெற்ற தலம்.

3. அகத்தியர் வாதாபியைக் கொன்றதால் ஏற்பட்ட சாபம் நீங்கப்பெற்ற தலம். 

4. அரச குமாரன் ஒருவனுக்கு நிச்சயித்திருந்த பெண்ணின் தாய் தந்தையர் திருமணத்திற்கு முன் இறந்து விட்டனர். பின் பெண் வீட்டார் இத்திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை.
அரசகுமாரன் இத்தலம் வந்து இறைவனை வணங்கி, நின்ற திருமணத்தை நடத்தி வைக்கக் கேட்டான். சிவன் ஒரு பூதத்தை அனுப்பி அந்த பெண்ணை அழைத்து வந்து, திருமணம் செய்து வைத்தார்.

தல சிறப்பு:
இத்தல இறைவன் கிழக்கு நோக்கிய சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.

இறைவனின் திருமணத் தலம் என்பதால் இங்கு நவக்கிரகங்கள் கிடையாது. அதற்கு பதில் ஈசனே ஈசான்ய மூலையில் அமர்ந்துள்ளார்.

தலபெருமை: சிவனின் தோழரான சுந்தரர் இங்கு வந்து அக்னி தீர்த்தத்தில் நீராடி சிவனை வழிபட்டு, தனது குஷ்டத்தை போக்கிகொண்டார். 

திருஞானசம்பந்தர் சுந்தரமூர்த்தி நாயனார் இருவராலும் பதிகம் பாடிப் பரவிய 276 சிவாலயங்களில் இது காவிரி வடகரைத் தலங்களில் 23வது தலம்.

இத்தல பதிகங்கள் இரண்டும், திருத்தருத்தி தலத்தோடு இணைந்து பாடப்பெற்றுள்ளன. இத்தல இறைவன் திருத்துருத்தியில் பகல் காலத்திலும், திருவேள்விக்குடியில் இரவிலும் வீற்றிருந்து அருள்பவர் என்று திருஞானசம்பந்தர் தனது பதிகத்தில் குறிப்பிடுகிறார்.

மழைவள ரிளமதி மலரொடு தலைபுல்கு வார்சடைமேல்
கழைவளர் புனல்புகக் கண்டவெங் கண்ணுதற் கபாலியார்தாம்
இழைவளர் துகிலல்கு லரிவையோ டொருபக லமர்ந்தபிரான்
விழைவளர் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே‌ - திருஞானசம்பந்தர்

இவ்வாலயம் காலை 7 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.

#மீள்தரிசனம் - #ரதசப்தமி
25.01.2026 #சுப்ராம்தரிசனம்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

குத்தாலம் - திருத்துருத்தி - உக்தவேதீஸ்வரர் அருள்மிகு அரும்பன்ன வனமுலைநாயகி உடனுறை உத்தவேதீஸ்வரர் திருக்கோயில், குத்தாலம் (திருத்துருத்தி).

குத்தாலம் - திருத்துருத்தி - உக்தவேதீஸ்வரர்
அருள்மிகு அரும்பன்ன வனமுலைநாயகி உடனுறை உத்தவேதீஸ்வரர் திருக்கோயில், குத்தாலம் (திருத்துருத்தி).

அமைவிடம்: மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில், மயிலாடுதுறையில் இருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் குத்தாலம் உள்ளது.
குத்தாலம் (திருத்துருத்தி) உத்தவேதீஸ்வரர் கோயில், திருமணத் தடைகளை நீக்கும் புகழ்பெற்ற தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலமாகும் (காவிரி தென்கரை 37-வது தலம்). சிவபெருமான் பார்வதியை மணந்த தலம், இங்கு சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மூலவர் உத்தவேதீஸ்வரர் (சொன்னவாறு அறிவார்) என்றும், அம்மன் அரும்பன்ன வனமுலைநாயகி (பரிமள சுகந்தநாயகி) என்றும் அழைக்கப்படுகின்றனர். 
கோயில் சிறப்பம்சங்கள்:
திருமணத்தடை நீங்கும் தலம்: பார்வதி தேவி சிவனை மணக்க வேண்டி, இங்கு மணலில் லிங்கம் அமைத்து தவம் செய்த இடம்..திருமணத் தடைகள் நீங்க இங்கு வந்து வழிபடுவது சிறப்பு.

கோயில் அமைப்பு
ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால் அம்மன் சன்னதி முன் உத்தால மரம் தனி அமைப்புடன் அமைந்துள்ளது.
கொடிமரம், பலிபீடம், நந்தியைக் காணலாம். கொடிமரத்தில் கொடிமர விநாயகர் உள்ளார். நந்தியைக் கடந்து உள்ளே செல்லும்போது இடப்புறம் அம்மன் சன்னிதி உள்ளது. அதற்கடுத்து உள்ளே மகாலட்சுமி சன்னிதி, சபாநாயகர் சன்னிதிகள் உள்ளன. எதிரில் உற்சவமூர்த்திகள் உள்ளனர். கருவறை கோஷ்டத்தில் அடிமுடிகாணா அண்ணலும், தட்சிணாமூர்த்தியும் உள்ளனர். கருவறை வெளிச்சுற்றில் நவக்கிரகம், மங்களசனீஸ்வரர், பைரவர், விசுவநாதர், வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன், சூரியன் ஆகியோர் உள்ளனர். அருகே லிங்கத் திருமேனிகள் உள்ளன. அடுத்து 63 நாயன்மார்கள் உள்ளனர். திருச்சுற்றில் வலம் வரும்போது சண்டிகேஸ்வரர் சன்னிதி காணப்படுகிறது.
சுந்தரர் தோல் நோய் நீக்கியத்தலம்.
ஆலயம் வாயு மூலையில், அம்மன் சன்னதி பின்புறம், சுந்தரருக்கு மண்டபத்துடன் தனி சன்னதி உள்ளது. எதிரில் சிறிய தீர்த்தக்குளம் உள்ளது.
சிறப்பு பெயர்கள்: முற்காலத்தில் 'திருத்துருத்தி' என்று அழைக்கப்பட்டது. 'துருத்தி' என்றால் ஆற்றுக்கு நடுவில் உள்ள மேடான பகுதி.
வழிபாடு: இங்குள்ள விநாயகர் 'துணை வந்த விநாயகர்' என அழைக்கப்படுகிறார்.

இந்த ஆலயம் 1000 ஆண்டுகள் பழமையானது மற்றும் சோழர் காலத்தைச் சேர்ந்தது. இத்திருக்கோயில் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்னர்ச் சோழ மன்னர்களால் புனர்நிர்மாணம் செய்யப்பட்டது.
தலபுராணம் வரலாறு: சிவபெருமான் பார்வதியை மணக்க கைலாயத்திலிருந்து புறப்படும்போது, உத்தால மர நிழலில் வந்ததாகவும், இங்கிருந்தே கைலாயம் சென்றதாகவும் வனமாக இருந்த காரணத்தினால் `உத்தாலம்’ என்று அழைக்கப்பட்ட பகுதி தற்போது குத்தாலம் என வழங்கப்படுகிறது. பூவுலகில் - பரத முனிவரின் தவச்சாலையில் வேள்வித் தீயிலிருந்து அவதரித்தாள். சிவச் சிந்தனையிலேயே வளர்ந்துஅவளின் பூஜையால் மகிழ்ந்த சிவப்பரம்பொருள், காலம் கனிந்ததும் உத்தால மரத்தின் கீழ் தோன்றி அவளுக்கு அருள்புரிந்தார். அம்பிகையைத் திருக்கரம் பற்றினார். `அமிர்த முகிழாம்பிகை’ என்ற அரும்பன்ன வனமுலையாளுக்கும், உத்தவேதீஸ்வர சுவாமிக்கும் திருக்கல்யாணம் நிகழ்ந்தது இந்தத் தலத்தில்தான்.
அம்பிகைக்குத் தான் அளித்த வாக்கின்படி, சொன்னவண்ணம் செய்து காட்டிய இறைவன் ‘சொன்னவாறு அறிவார்’ என்கிற திரு நாமத்துடன் இத்தலத்தில் நிலைத்திருக்கிறார். இதுதான் இவ்வூருக்கு பிரதான சிவாலயம். 

இத்தலத்தில் ஸ்ரீ சௌந்திர நாயகி ’ஸ்ரீ சக்கர பீட நிலையாய நம’ என்று ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம வடிவில் அமைந்துள்ளார். ஸ்ரீபரிமளசுகந்த நாயகி ’பிந்து தர்பண விந்துஷ்டாயின நமஹ’ என்ற வடிவிலும் அமைந்துள்ளார். பரத மகரிஷி தமக்குக் குழந்தைப்பேறு வேண்டி செய்த யாகத்தில் தோன்றியவர் ஸ்ரீ பரிமள சுகந்த நாயகி.
பெயர்க்காரணம்
தல விருட்சம் உத்தால மரம். இதைக் கொண்டு உத்தால வனம் எனப்பட்டது மருவி குத்தாலம் ஆயிற்று.
வழிபட்டோர்
அம்பாள், சிவபெருமானை வழிபட்டுத் திருமணம் செய்த திருத்தலம்
அக்கினி, வருணர், காளி, சூரியன், மன்மதன், காசிபர் உட்பட ஏழு முனிவர்கள் (காசிபர், ஆங்கிரசன், கவுதமர், மார்க்கண்டேயர், வசிட்டர், புலத்தியர், அகத்தியர்)
பரிகாரத் திருத்தலம், தல விருட்சம் & தீர்த்தம்: உத்தால மரம் மற்றும் காவிரி.
குடமுழுக்கு : இக்கோவிலில் கடந்த 1960 ஆம் ஆண்டு குடமுழுக்கு நடந்தது. அதன் பின்பு 62 ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் மே மாதம் 8 ஆம் தேதி 2022 ஆம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.

#மீள்தரிசனம் - #ரதசப்தமி
25.01.2026 #சுப்ராம்தரிசனம்..
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

எதிர்கொள்பாடி:மத்யனேசுவரர் என்ற ஐராவதீசுவரர் ஆலயம். மேலைத்திருமணஞ்சேரி. நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலம்.

எதிர்கொள்பாடி:
மத்யனேசுவரர் என்ற ஐராவதீசுவரர் ஆலயம். மேலைத்திருமணஞ்சேரி. 
நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலம்.

தற்போது மேலத் திருமணஞ்சேரி என்று அழைக்கப்படும் எதிர்கொள்பாடி எனும் இத்தலம், மயிலாடுதுறை-கும்பகோணம் சாலையில் குத்தாலம் சந்திப்பில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் திருமணஞ்சேரி மற்றும் வேள்விக்குடி இரு பாடல் பெற்ற தலங்களுக்கு அருகே அமைந்துள்ளது. 

தல இறைவன் மத்யனேசுவரர் எனும் ஐராவதேசுவரர். இறைவி திருநாமம் "சுகந்த குந்தளாம்பிகை' என்ற "மலர் குழல் நாயகி' என்பதுமாகும்.

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் , சுந்தரமூர்த்தி நாயனாரால் பதிகம் பாடிப் பரவு பெற்ற 24ஆவது காவிரி வடகரைத் தலம்.  சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

மேற்கு பார்த்த ஆலயம் 3 நிலை இராஜகோபுரம் உடையது.  சுவாமி மேற்கு பார்த்தும், அம்பாள் தெற்கு நோக்கியும் தனித்தனி கருவறைகளில் அமைக்கப்பட்டுள்ளது. முன் மண்டம், உள் மண்டபம் உள்ளது.
ஆலயம் முன்புறம் நந்தியும், வலதுபுறம் விநாயகர், இடதுபுறம் வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர். மேலும், சுவாமி சன்னதி கோஷ்டத்தில் தாமரை பீடத்தின் மீது துர்க்கை காட்சி தருகிறாள்.  மகாலட்சுமி, ஞானசரஸ்வதி, பைரவர், சனீஸ்வரர், துணைவந்த விநாயகர் சந்நிதிகளும் உள்ளன.
பரத முனிவர் வழிபட்ட பரதலிங்கம் பிரகாரத்தில் இருக்கிறது. 

'வைத்த உள்ளம் மாற்ற வேண்டா வம்மின் மனத்தீரே! அத்தர் கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே' என்று பாடி அனைவரையும் சுந்தரர் இந்த கோயிலுக்கு அழைக்கிறார். அந்த அழைப்பை நாம் ஏற்றால் தோழனின் மகிழ்ச்சியை காணும் சிவன் நமது குறைகளை போக்கி அருள்புரிவார்.

தல வரலாறு:

1. பரத்வாஜ மகரிஷி தனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க புத்திர காமேஷ்டி யாகம் நடத்தினார். அவருக்கு பார்வதியே குழந்தையாகப் பிறந்தாள். மணப்பருவம் அடைந்த போது, சிவனிடம் அவளை மணந்து கொள்ளும்படி வேண்டினார் மகரிஷி. சிவனும் அம்பிகையை மணக்க பூலோகம் வந்தார். வீட்டிற்கு வரும் விருந்தினர்களை வெளியே வந்து வரவேற்பது நம் கலாசாரம்.  பரத்வாஜரும் மாப்பிள்ளையாக வந்த சிவனை பூர்ணகும்ப மரியாதையுடன் வரவேற்றார். பரத்வாஜரின் மரியாதையை ஏற்ற சிவன், அவரது வேண்டுதலுக்காக இங்கே எழுந்தருளினார்.  பரத்வாஜர் எதிர்கொண்டு அழைத்ததால் தலத்திற்கு எதிர்கொள்பாடி என்றும், சுவாமிக்கு திருஎதிர் கொள்பாடி உடையார் என்றும் பெயர் உண்டானது. 

2. திருவேள்விக்குடியில் பரத முனிவர் சிவபார்வதி திருமணத்தை நடத்தி வைத்தார். மணம் முடிந்ததும் தான் குடியிருக்கும் மேல திருமணஞ்சேரிக்கு வர இறைவனுக்கு அழைப்பு விடுத்தார். இறைவனும் ஒப்புக் கொண்டார். இறைவனும், அம்மையும் வருகிறார்கள் என்றால் கேட்கவா வேண்டும். பிரமாதமான வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து விட்டார். மணக்கோலத்தில் வந்த தெய்வத்தம்பதியினரை பரதமுனிவர் எதிர்கொண்டு அழைத்தார். இதனால் இத்தலம் "எதிர்கொள்பாடி' என அழைக்கப்பட்டது. தற்போது "மேலக்கோயில்' என்று அழைக்கிறார்கள்.

3. சிவனுக்கு அணிவிக்கப்பட்ட தாமரை மலரை கைகளில் ஏந்தியபடி தேவலோகத்தில் துர்வாச முனிவர் வந்தார். அசுரர்களை வென்ற இந்திரனுக்கு பரிசாக அளித்தார். இந்திரன் அதை அலட்சியப்படுத்தினான். இதனால் கோபம் கொண்ட முனிவர் பாண்டிய மன்னன் எறியும் கைவளையால் இந்திரனின் முடி சிதறுமாறு சாபமிட்டார். பதறிப்போன இந்திரன் மன்னிப்பு கேட்க, இந்திரனின் தலைக்கு வருவது முடியோடு கழியும் என்று சாபவிமோசனம் தந்தார்.

தாமரை மலரை புறக்கணித்ததில் இந்திரனின் ஐராவத யானைக்கும் பங்குண்டு. துர்வாசரால் சபிக்கப்பட்ட யானை பூமிக்கு வந்து பல இடங்களில் சுற்றி திரிந்தது. பல தலங்களில் பூஜையும் செய்தது. கடைசியாக இத்தலத்திற்கு வந்து இறைவனை பூஜித்து துயரம் நீங்கியது. எனவே இங்குள்ள இறைவன் "ஐராவதேஸ்வரர்' என அழைக்கப்படுகிறார். 

இந்திரனும் இழந்த பொன், பொருள், பதவியை பெற்றான்.

ஐராவதம் என்னும் இந்திரனின் யானை வழிபட்டதால் ஐராவதேஸ்வரர் என்ற பெயர் பிற்காலத்தில் உண்டானது.
ஐராவதம் யானை வழிபட்டதால் இங்குள்ள கர்ப்பக்கிரகம்   யானை சுற்றும் அளவிற்கு மிகவும் பெரிதாக உள்ளது.

பிரார்த்தனை:

பரத்வாஜ முனிவர் நல்ல மருமகன் வேண்டி பிரார்த்தனை செய்ததால், மகளைப் பெற்ற தந்தைகள் நல்ல மருமகன் வேண்டுவோர் இத்தலத்தில் வழிபடுகின்றனர்.  

நல்ல குணம் படைத்த மருமகன் அமையவும், அமைந்த மருமகன் திருந்தவும் பெண்ணின் தந்தை வழிபட வேண்டிய தலம் மேலத்திருமணஞ்சேரி என்னும் எதிர்கொள்பாடி ஆகும்.

 இத்தலத்தில் அருளும் ஐராவதேஸ்வரர்,  சிறந்த மருமகன் கிடைக்க அருள் செய்கிறார். பெண்ணைப் பெற்றவர்கள் மகளுக்கு வரன் பார்க்கும் முன்பு, நல்ல மாப்பிள்ளை அமைய இங்கு மகளை அழைத்து வந்து. சிவனுக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் அணிவித்து பூஜை செய்கின்றனர். மாப்பிள்ளை வீட்டாருடன் மனக்கசப்பு உள்ளவர்களும் இங்கு பூஜை நடத்துகின்றனர். மகளின் வாழ்க்கை நன்றாக அமைய பெற்றோர் வழிபட வேண்டிய தலம் இது.
சிறப்பு:
திருமணம் தடைநீக்கும் ஆலயம்.
திருமணஞ்சேரி ஆலயத்துடன் இணைந்து தரிசிக்க வேண்டிய ஆலயம்.
திருமண வரவேற்பை இத்தலத்தில் நடத்தினால், தம்பதியர் நலம் பலபெற்று வாழ்வர் என்பது நம்பிக்கை.
தகவல்கள் - வலைதளம்  நன்றி🙏🏻

#மீள்தரிசனம் - #ரதசப்தமி
25.01.2026 #சுப்ராம்தரிசனம்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

திருமணஞ்சேரி அருள்மிகு கோகிலாம்பாள் சமேத உத்வாகநாதசுவாமி திருக்கோவில்

திருமணஞ்சேரி
அருள்மிகு கோகிலாம்பாள் சமேத உத்வாகநாதசுவாமி திருக்கோவில் 

சிவபெருமான் பார்வதி திருமணம் நடந்த தலம்

மயிலாடுதுறையிலிருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவார தலம் திருமணஞ்சேரி. இறைவன் திருநாமம் உத்வாக நாதர். இறைவியின் திருநாமம் கோகிலாம்பாள். இத்தலத்து இறைவி கோகிலாம்பாள், கருவறையில் மணக்கோலத்தில், மணப்பெண்ணுக்குரிய நாணத்துடன் அமர்ந்து உள்ளார். திருமணஞ்சேரி என்றால் திருமணம் நடந்த இடம் என்று அர்த்தம். பூலோகத்தில் சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் திருமணம் நிகழ்ந்த இடம்தான் இந்த திருமணஞ்சேரி. சிவபெருமானுக்கு பார்வதி தேவியை கன்னிகாதானம் செய்து திருமணத்தை நடத்தி வைத்தவர் மகாவிஷ்ணு. திருமணத்திற்கு புரோகிதராக இருந்தவர் பிரம்மா..
தல புராணம்
சிவ பார்வதி திருமண நிகழ்ச்சிகள் நடந்த தலங்கள்

ஒரு சமயம் பார்வதி தேவி சிவபெருமானிடம், நாதா! தங்களை பூலோக முறைப்படி திருமணம் செய்ய என் மனம் விரும்புகிறது . அவ்விருப்பத்தை நிறைவேற்றி வைக்குமாறு வேண்ட சிவனும் சிறிது காலம் பொறுத்திருக்கும்படி கூறினார் .

தம் எண்ணம் நிறைவேற வெகுகாலம் ஆகுமென்ற எண்ணத்தில் பார்வதி சிவனிடம் அலட்சியமாக நடந்து கொள்ள, அதை கவனித்த சிவபெருமான்,நான் உன் விருப்பத்திற்கு சம்மதித்த போதும் காலம் கடக்கிறதென அலட்சியமாக நடப்பதால் எம்மைப் பிரிந்து நீ பூலோகத்தில் பசுவாக பிறப்பாய் என கட்டளையிட்டார் .

அம்பிகைக்கு பசு சாபம் கொடுக்கப்பட்ட தலம் தேரழந்தூர். திருமால் பசு மேய்ப்போனாக உருவெடுத்து, பசுக்களை பராமரித்து வந்த தலம் கோமல். ஈசனின் சாபத்தால் அம்பிகை பசுவாகி சிவனின் மீது பக்தி கொண்டு உலவி வந்தார் .அப்படி உலவி வந்தபோது, ஒரு இடத்தில் இருந்த லிங்கத்தின் மீது தினம் பாலைப் பொழிந்து அபிஷேகித்து வந்தார் . பசு உருவில் இருந்த அம்பிகையின் பாதக்குளம்புகள் பட்டு ஈசனின் உடல் மீது தழும்புகள் உண்டான ஊர் 'திருக்குளம்பம்'. பின் திருவாடுதுறையில் சிவனால் பசுவுக்கு முக்தி அளிக்கப்பட்டது.

திருத்துருத்தி எனப்படும் குத்தாலத்தில் பரத மகரிஷி பிரமாண்ட யாகவேள்வி நடத்த அந்த யாக வேள்வியில் சிவபெருமானின் அருளால் அம்பிகை தோன்றினார். தெய்வீகப் பெண் ஒருவர் வேள்வியில் வர ஆச்சர்யப்பட்டு பரத மகரிஷி நிற்க, சிவபெருமான் தோன்றி,மகரிஷியே வேள்வியில் வந்தவர் உமாதேவியே! அவரை உமது பெண்ணாக ஏற்று எமக்கு திருமணம் நடத்த ஏற்பாடு செய்யுங்கள். நான் எதிர் கொண்டு வருவேன் எனக்கூறி மறைந்தார் . இறை உத்திரவுப்படி திருமண யாகங்கள் புரிந்து மங்கள ஸ்நானமும் கங்கணதாரமும் செய்த இடம், திருவேள்விக்குடி. பின் பாலிகை ஸ்தாபனம் குருமுலைப்பாலையில் செய்யப்பட்டது.

அதன் பின்னர் மணமகளான உமாதேவியை அழைத்துக்கொண்டு சிவனை தேடி பரத மகரிஷி வர, இறைவன் மாப்பிள்ளை கோலத்தில் எதிர் கொண்டு காட்சி கொடுத்த இடமே 'திரு எதிர்கொள்பாடி' என அழைக்கப்படுகிறது.

பின் மணமகனான சிவனையும் உமாதேவியையும் அழைத்துக்கொண்டு, பூலோக முறைப்படி கல்யாண வைபவம் நடந்த இடம் திருமணஞ்சேரி. திருமணத்தைகாண விண்ணவர்கள், தேவர்கள், நவகிரகங்கள் வந்தனர் . சிவபெருமானும், பார்வதி தேவியும் கைகோர்த்தபடி திருமணக் கோலத்தில் காட்சி தருவது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.

திருமண தடை நீக்கும் பரிகாரத் தலம்
திருமணஞ்சேரி நித்திய கல்யாண ஷேத்திரம் ஆகும். இங்கு சிவன் ஸ்ரீகல்யாண சுந்தரராக, ஸ்ரீ உத்வாக நாதராக எழுந்தருளி தன்னை நாடி வந்தோர் திருமணத்தை நடத்தி வைக்கிறார். அம்பிகை எப்படி தாம் விரும்பியவாறு சிவனை மணம் புரிந்து கொண்டாரோ, அதுபோல இங்கே வணங்குவோர்க்கு அவரவர் விருப்பம் போல திருமணம் நடைபெறுகிறது. திருமணஞ்சேரி கோவிலை தரிசித்தால், தடைப்பட்ட திருமணம் விரைவில் நடந்தேறும். நல்ல வரன் கிடைத்து, சிறப்பான இல்வாழ்க்கை அமையும் என்பது ஐதீகம்.

கோவில் தரிசன நேரம்- காலை 7.30 மணி முதல் பகல் 01.30 மணிவரை மாலை 3.30 மணி முதல் இரவு 8.30 மணிவரை
திருமண பூஜை மேலே குறிப்பிட்ட நேரத்தில் தொடர்ந்து நடைபெறும்.

பரிகாரம் பூசை:
நீண்ட நாள் திருமணம் தடை பெற்றவர்கள் இத்திருக்கோவில் கல்யாண பூஜையில் கலந்து கொண்டால் 3 மாதத்தில் திருமணம் நடைபெறும்.

திருமண பூஜையில் கலந்துகொள்ள திருக்கோவில் நிர்வாகம் சார்பாக திருக்கோவில் அலுவலகத்தில் ரூபாய் 200 செலுத்தி விட்டால் (2 மாலை, 2 தேங்காய், பூ, மஞ்சள், குங்குமம், கல்கண்டு, எலுமிச்சம் பழம், ) அடங்கிய பை வழங்கப்படும், பூஜை பை வாங்கி கொண்டு திருக்கோவில் உள்ளே செல்லவேண்டும் வெளியில் எந்தப் பொருளும் வாங்கத்தேவையில்லை. திருக்கோவில் உள்ளே சென்றதும் திருக்கோவில் கொடிமரம் அருகில் இருக்கும் விநாயகரை தரிசனம் செய்ய வேண்டும் விநாயகரை வணங்கிவிட்டு உள்ளே சென்றதும் திருமண கோலத்தில் உள்ள உற்சவர் சுவாமிக்கு எதிரில் உள்ள மண்டபத்தில் திருமணம் ஆகாத ஆண்கள் திருமணம் ஆகாத பெண்கள் என தனி தனியாக அமர வேண்டும் பூஜை முடிந்தவுடன் மூலவர் அம்பாளை தரிசனம் செய்ய வேண்டும்
பூஜை முடிந்தவுடன் கோவில் அர்ச்சகர் மாலை, எலுமிச்சம் பழம், பூஜை செய்த பூஜை பை நம்மிடம் வழங்குவார்

பூஜை முடிந்து மறுநாள் வீட்டிற்கு வந்தவுடன் காலை குளித்தவுடன் வீட்டில் விளக்கு ஏற்றி பூஜை செய்த மாலையை அணிந்து சாமி கும்பிடவேண்டும் சாமி கும்பிட்டுவிட்டு மாலையை மஞ்சள் பையில் வைத்து பூஜை அறையில் பத்திரமாக வைக்கவேண்டும் மற்றும் பூஜை செய்த எலுமிச்சம் பழத்தை வெறும் வயிற்றில் உப்பு சர்க்கரை சேர்க்காமல் திருமணபூஜை செய்தவர்மட்டும் குடிக்க வேண்டும் மேலும் பூஜை செய்த விபூதி குங்குமம் பூஜை செய்தவர் மட்டும் தினமும் அணிந்துகொள்ளவேண்டும்
திருமணம் ஆனவர்கள் தன் துணையுடன் மீண்டும் திருக்கோவிலுக்கு வந்து மாலையை கோவிலில் செலுத்தவேண்டும்

குழந்தை பேறு தடைப்பட்டவர்கள் தொடர்ந்து 3 அமாவாசை அன்று இராகு பகவானுக்கு நடைபெறும் சிறப்பு பூஜையில் பங்குபெற்றால் வெகு விரைவில் குழந்தை பேறு உண்டாகும்

மேலும் திருக்கோவிலுக்கு அருகில் ஆங்காங்கே வியாபாரிகள் மஞ்சள் குங்குமம் வாங்க வேண்டும் என்பார்கள் நீங்கள் எந்த பொருளும் வாங்க தேவையில்லை ஆலயத்தில்.ரூபாய் செலுத்தி Ticket வாங்கினால் மட்டும் போதும்.

இத்திருக்கோவிலுக்கு மயிலாடுதுறை மற்றும் குத்தாலம் ஆகிய ஊர்களில் இருந்து குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே பேருந்து வசதிகள் உண்டு

குத்தாலம் ஊருக்கு மயிலாடுதுறை கும்பகோணம் தஞ்சாவூர் ஆகிய ஊர்களில் இருந்து நிறைய பேருந்து வசதிகள் உள்ளன.

மேலும் குத்தாலம் ஊரில் இருந்து ஆட்டோ மற்றும் கார்களில் 1 நபருக்கு ரூபாய் 100-150 (விசாரித்து ) செலுத்தி திருக்கோவிலை அடையலாம். திருமணஞ்சேரி மிகவும் சிற்றூர். பெரிய வசதிகள் கிடையாது. கழிவரை குளியல் அறை, ஆலயம் முன்பு உள்ள கட்டிடத்தில் உள்ளன.
மிக அருகில் எதிர்கொள்பாடி பாடல் பெற்ற தலம் உள்ளது தரிசனம் செய்து வாருங்கள். மேலும், திருவேள்விக்குடி, குத்தாலம் ஊர்களும் மிக அருகில் சில கி.மீ.தூரத்திலேயே இருப்பதால், சேர்த்து தரிசனம் செய்யலாம்.
நன்றி🙏🏻

#மீள்தரிசனம் - #ரதசப்தமி
25.01.2026 #சுப்ராம்தரிசனம்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் 19.7.26

மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்   மதுரையின் நடுவே அமைந்துள்ள சிவன் கோயிலாகும். இச்சிவன் கோயிலின் மூலவர் சுந்தரேசுவரர் மற்றும் அம்பிகை ம...