பிரணவ உபதேசம் பெற்ற காளிதேவி!
இந்தத் தெய்வத் திருமணத்தில் பங்கேற்க வந்த தேவருலகத்தினர் இப்பகுதி முழுதும் ஆங்காங்கு தங்கியிருந்து, சிவ லிங்கப் பிரதிஷ்டை செய்து பூஜித்துள்ளனர். அவ்வகையில் காளிதேவியும் இங்கு வந்தாள். உத்தால வனத்தில் குறிப்பிட்ட ஓரிடத்தில், வில்வ மரத்தின் அடியில் சிவலிங்கம் அமைத்தாள்; தீர்த்தமும் உருவாக்கினாள்.அதில் புண்ணிய நீராடி, மலர்களுடன் வில்வ இலைகளாலும் அர்ச்சனை செய்து, சிவபூஜை செய்யத் துவங்கினாள் அன்னை.
சாந்த சொரூபத்தினளாக மகிழ்ச்சியுடன் காளிதேவி செய்த பூஜையைக் கண்டு மகிழ்ந்த பரமேஸ்வரரும் லிங்கத்திலிருந்து ஆவிர்பவித்து “யாது வரம் வேண்டும்.?” எனக் கேட்டார்.
பிரணவத்தின் பொருளைத் தனக்கு உபதேசித்து அருளும்படி விநயத்துடன் வேண்டினாள் காளி. சிவபெருமானும் மிகவும் சந்தோஷத்துடன் ‘ஓம்’ எனும் பிரணவத்தின் பொருளை உபதேசித் தார். இதனைக் கண்டு மகிழ்ந்த சகல தேவராதிகளும் காளி பூஜித்த லிங்கமூர்த்தியை `ஓம்காளீஸ்வரர்’ என்ற திருநாமத்தால் அழைத்தனர்.
மூல மந்திரங்கள் இங்கே ஸித்தியாகும்!
சிவ அனுக்கிரகத்தால் மகிழ்ந்த காளிதேவி ஆனந்த நடனம் புரிந்தாள். அத்தனும் ஆனந்த தாண்டவம் புரிந்தார். இவ்விருவரின் திருநடனம் கண்டு அம்பிகையும் இங்கு குடியேறி, `ஆனந்தவல்லி’ என்கிற திருநாமத்தினை உவப்புடன் ஏற்றாள்.
ஆக, குத்தாலத்தில் உள்ள தொன்மையான ஆலயமாகத் திகழ்கிறது ஓம்காளீஸ்வரர் கோயில். அளவில் பெரியது. மூலவர் ஓம்காளீஸ்வரர் கிழக்கு நோக்கி அருள்கிறார். கருவறை மிக உயரமாக வித்தியாசமான அமைப்புடன் இருப்பது குறிப்பிடத்தக்கது. மூல மந்திரங்களை ஜபிப்பவர்கள் இங்கு வணங்கிட பலன்கள் ஸித்தியாகும் என்பது நம்பிக்கை.
மகாமண்டபத்தில், மூலவருக்கு இடது புறத்தில் சிறு சந்நிதியில் சிவலிங்க பூஜை செய்யும் காளியின் சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது. டமருகம், பாசம் தாங்கிய மேற்கரங்களுடன்... கீழிரு கரங்களில் இடக் கரத்தில் பூக்குடலை திகழ, வலக்கரத்தால் அர்ச்சித்தபடி, சற்றே சிரம் தாழ்த்தி, சிஷ்ய பாவனையில் உபதேசம் பெறும் அமைப்பில் திகழ்கிறாள் காளிதேவி. வேறெங்கும் காண்பதற்கரிய காளிதேவி அம்சம் இது என்கிறார்கள்.
அருகிலேயே கணபதியும் அமைந்துள்ளார். இங்கே காளி தேவி, வழக்கமான தனது உக்கிரத்தை விலக்கி சாந்தத்துடன் திகழ இந்தப் பிள்ளையாரே காரணமாம்.
அபூர்வ அமைப்பில் கிரக மூர்த்திகள்
இங்கு சனைச்சரருக்கும் கேதுவிற்கும் இடையே குருபகவான் அமைந்துள்ளது விசேஷ அமைப்பாகும். அதேபோல் குருவின் பார்வை படும்படியாக நிழல் கிரகங்களான ராகுகேது அமைந் திருப்பதும் குறிப்பிடத் தக்கது. சர்ப்ப கிரகங்களினால் வாடுபவர்கள் இங்கு விளக்கேற்றி வணங்கிட, குருவின் சுப பார்வையினால் தீய பலன்களும் நற்பலன்களாக மாறுவது அதிசயம்.
அதேபோல், சூரியனும் சந்திரனும் எதிரெதிரே நேர்பார்வையில் அமைந்திருப்பதும் சிறப்பான அமைப்பாகும். மேலும், பஞ்ச பூதங்களும் இத்தலத்தில் வழிபட்டுள்ளனர். நெடிய பிராகாரத்தில் பஞ்ச பூதங்களும் வழிபட்ட பஞ்சலிங்கத் திருமேனிகளும் மனோன்மணி அம்மையுடன் நிலைத்திருப்பது அழகு.
ஏனைய சந்நிதிகளில் விநாயகர், லிங்கோத்பவர், சண்முகர், கஜலக்ஷ்மி, துர்காம்பிகை, பைரவர், சூரிய சந்திரர்கள் ஆகியோர் அருள்கிறார்கள்.
அம்பிகை ஆனந்தவல்லி தனித்த கோயிலில் வெளிச்சுற்றில் நிலை பெற்றிருக்கிறாள். வெள்ளிக் கிழமைகளில் இந்தச் சந்நிதியில் விளக்கீடு செய்து வணங்கினால், மகிழ்ச்சியான வாழ்வை அருள் கிறாள் இந்த அன்னை.
இந்தச் சந்நிதிக்கு எதிரில் தலவிருட்சமாகிய வில்வமரம் உள்ளது. இந்த வில்வத்துடன் ஒரு வேம்பு மரமும் கூடவே பிணைந்து வளர்ந்துள்ளது. அதனையே ஓங்காளீஸ்வரமாக வழிபடத் தொடங்கியும் உள்ளார்கள்.
கோபுர விதானங்களில் காளி சிவலிங்கத்தினைப் பூஜிப்பது போன்ற சுதைச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளதும் அழகு.
தில்லையில் சிவனை எதிர்த்து நடனம் புரிந்த காளி சிவனின் கோபம் குறைய பூஜை செய்து அருள் பெற்ற தலம் .சமய குறவர்கள் நால்வரும் பாடிய தேவார வைப்பு தலம் .சோழர் கால சிற்பங்கள் கோஷ்டத்தில் அழகுற அமைந்துள்ளன. மாயவரம் 11கி .மீ .சமீபத்தில் கும்பாபிஷேகம் நடந்து கோவில் புது பொலிவுடன் காட்சி தருகிறது .
#மீள்தரிசனம் - #ரதசப்தமி
25.01.2026 #சுப்ராம்தரிசனம்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
No comments:
Post a Comment