Friday, February 6, 2026

எதிர்கொள்பாடி:மத்யனேசுவரர் என்ற ஐராவதீசுவரர் ஆலயம். மேலைத்திருமணஞ்சேரி. நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலம்.

எதிர்கொள்பாடி:
மத்யனேசுவரர் என்ற ஐராவதீசுவரர் ஆலயம். மேலைத்திருமணஞ்சேரி. 
நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலம்.

தற்போது மேலத் திருமணஞ்சேரி என்று அழைக்கப்படும் எதிர்கொள்பாடி எனும் இத்தலம், மயிலாடுதுறை-கும்பகோணம் சாலையில் குத்தாலம் சந்திப்பில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் திருமணஞ்சேரி மற்றும் வேள்விக்குடி இரு பாடல் பெற்ற தலங்களுக்கு அருகே அமைந்துள்ளது. 

தல இறைவன் மத்யனேசுவரர் எனும் ஐராவதேசுவரர். இறைவி திருநாமம் "சுகந்த குந்தளாம்பிகை' என்ற "மலர் குழல் நாயகி' என்பதுமாகும்.

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் , சுந்தரமூர்த்தி நாயனாரால் பதிகம் பாடிப் பரவு பெற்ற 24ஆவது காவிரி வடகரைத் தலம்.  சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

மேற்கு பார்த்த ஆலயம் 3 நிலை இராஜகோபுரம் உடையது.  சுவாமி மேற்கு பார்த்தும், அம்பாள் தெற்கு நோக்கியும் தனித்தனி கருவறைகளில் அமைக்கப்பட்டுள்ளது. முன் மண்டம், உள் மண்டபம் உள்ளது.
ஆலயம் முன்புறம் நந்தியும், வலதுபுறம் விநாயகர், இடதுபுறம் வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர். மேலும், சுவாமி சன்னதி கோஷ்டத்தில் தாமரை பீடத்தின் மீது துர்க்கை காட்சி தருகிறாள்.  மகாலட்சுமி, ஞானசரஸ்வதி, பைரவர், சனீஸ்வரர், துணைவந்த விநாயகர் சந்நிதிகளும் உள்ளன.
பரத முனிவர் வழிபட்ட பரதலிங்கம் பிரகாரத்தில் இருக்கிறது. 

'வைத்த உள்ளம் மாற்ற வேண்டா வம்மின் மனத்தீரே! அத்தர் கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே' என்று பாடி அனைவரையும் சுந்தரர் இந்த கோயிலுக்கு அழைக்கிறார். அந்த அழைப்பை நாம் ஏற்றால் தோழனின் மகிழ்ச்சியை காணும் சிவன் நமது குறைகளை போக்கி அருள்புரிவார்.

தல வரலாறு:

1. பரத்வாஜ மகரிஷி தனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க புத்திர காமேஷ்டி யாகம் நடத்தினார். அவருக்கு பார்வதியே குழந்தையாகப் பிறந்தாள். மணப்பருவம் அடைந்த போது, சிவனிடம் அவளை மணந்து கொள்ளும்படி வேண்டினார் மகரிஷி. சிவனும் அம்பிகையை மணக்க பூலோகம் வந்தார். வீட்டிற்கு வரும் விருந்தினர்களை வெளியே வந்து வரவேற்பது நம் கலாசாரம்.  பரத்வாஜரும் மாப்பிள்ளையாக வந்த சிவனை பூர்ணகும்ப மரியாதையுடன் வரவேற்றார். பரத்வாஜரின் மரியாதையை ஏற்ற சிவன், அவரது வேண்டுதலுக்காக இங்கே எழுந்தருளினார்.  பரத்வாஜர் எதிர்கொண்டு அழைத்ததால் தலத்திற்கு எதிர்கொள்பாடி என்றும், சுவாமிக்கு திருஎதிர் கொள்பாடி உடையார் என்றும் பெயர் உண்டானது. 

2. திருவேள்விக்குடியில் பரத முனிவர் சிவபார்வதி திருமணத்தை நடத்தி வைத்தார். மணம் முடிந்ததும் தான் குடியிருக்கும் மேல திருமணஞ்சேரிக்கு வர இறைவனுக்கு அழைப்பு விடுத்தார். இறைவனும் ஒப்புக் கொண்டார். இறைவனும், அம்மையும் வருகிறார்கள் என்றால் கேட்கவா வேண்டும். பிரமாதமான வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து விட்டார். மணக்கோலத்தில் வந்த தெய்வத்தம்பதியினரை பரதமுனிவர் எதிர்கொண்டு அழைத்தார். இதனால் இத்தலம் "எதிர்கொள்பாடி' என அழைக்கப்பட்டது. தற்போது "மேலக்கோயில்' என்று அழைக்கிறார்கள்.

3. சிவனுக்கு அணிவிக்கப்பட்ட தாமரை மலரை கைகளில் ஏந்தியபடி தேவலோகத்தில் துர்வாச முனிவர் வந்தார். அசுரர்களை வென்ற இந்திரனுக்கு பரிசாக அளித்தார். இந்திரன் அதை அலட்சியப்படுத்தினான். இதனால் கோபம் கொண்ட முனிவர் பாண்டிய மன்னன் எறியும் கைவளையால் இந்திரனின் முடி சிதறுமாறு சாபமிட்டார். பதறிப்போன இந்திரன் மன்னிப்பு கேட்க, இந்திரனின் தலைக்கு வருவது முடியோடு கழியும் என்று சாபவிமோசனம் தந்தார்.

தாமரை மலரை புறக்கணித்ததில் இந்திரனின் ஐராவத யானைக்கும் பங்குண்டு. துர்வாசரால் சபிக்கப்பட்ட யானை பூமிக்கு வந்து பல இடங்களில் சுற்றி திரிந்தது. பல தலங்களில் பூஜையும் செய்தது. கடைசியாக இத்தலத்திற்கு வந்து இறைவனை பூஜித்து துயரம் நீங்கியது. எனவே இங்குள்ள இறைவன் "ஐராவதேஸ்வரர்' என அழைக்கப்படுகிறார். 

இந்திரனும் இழந்த பொன், பொருள், பதவியை பெற்றான்.

ஐராவதம் என்னும் இந்திரனின் யானை வழிபட்டதால் ஐராவதேஸ்வரர் என்ற பெயர் பிற்காலத்தில் உண்டானது.
ஐராவதம் யானை வழிபட்டதால் இங்குள்ள கர்ப்பக்கிரகம்   யானை சுற்றும் அளவிற்கு மிகவும் பெரிதாக உள்ளது.

பிரார்த்தனை:

பரத்வாஜ முனிவர் நல்ல மருமகன் வேண்டி பிரார்த்தனை செய்ததால், மகளைப் பெற்ற தந்தைகள் நல்ல மருமகன் வேண்டுவோர் இத்தலத்தில் வழிபடுகின்றனர்.  

நல்ல குணம் படைத்த மருமகன் அமையவும், அமைந்த மருமகன் திருந்தவும் பெண்ணின் தந்தை வழிபட வேண்டிய தலம் மேலத்திருமணஞ்சேரி என்னும் எதிர்கொள்பாடி ஆகும்.

 இத்தலத்தில் அருளும் ஐராவதேஸ்வரர்,  சிறந்த மருமகன் கிடைக்க அருள் செய்கிறார். பெண்ணைப் பெற்றவர்கள் மகளுக்கு வரன் பார்க்கும் முன்பு, நல்ல மாப்பிள்ளை அமைய இங்கு மகளை அழைத்து வந்து. சிவனுக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் அணிவித்து பூஜை செய்கின்றனர். மாப்பிள்ளை வீட்டாருடன் மனக்கசப்பு உள்ளவர்களும் இங்கு பூஜை நடத்துகின்றனர். மகளின் வாழ்க்கை நன்றாக அமைய பெற்றோர் வழிபட வேண்டிய தலம் இது.
சிறப்பு:
திருமணம் தடைநீக்கும் ஆலயம்.
திருமணஞ்சேரி ஆலயத்துடன் இணைந்து தரிசிக்க வேண்டிய ஆலயம்.
திருமண வரவேற்பை இத்தலத்தில் நடத்தினால், தம்பதியர் நலம் பலபெற்று வாழ்வர் என்பது நம்பிக்கை.
தகவல்கள் - வலைதளம்  நன்றி🙏🏻

#மீள்தரிசனம் - #ரதசப்தமி
25.01.2026 #சுப்ராம்தரிசனம்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

No comments:

Post a Comment

திருப்புகழூர் அருள்மிகு கருந்தாள் குழலியம்மை உடனுறை அக்கினிபுரீஸ்வரர் நாயன்மார்தலம் திருமுறைத்தலம், திருப்புகழ்த்தலம்

திருப்புகழூர் அருள்மிகு கருந்தாள் குழலியம்மை உடனுறை அக்கினிபுரீஸ்வரர் நாயன்மார்தலம் திருமுறைத்தலம்,  திருப்புகழ்த்தலம் தலம்: சோழவள நாட்டில் ...