Friday, July 31, 2026

திருமங்கலம்அருள்மிகு சொக்கநாதர் திருக்கோயில் 19.7.26

திருமங்கலம்
அருள்மிகு சொக்கநாதர் திருக்கோயில்
மூலவர் : சொக்கநாதர்.
அம்மன்: மீனாட்சி.
தல விருட்சம் : வில்வம்.
தீர்த்தம் : ஆகாயகங்கை.
புராண பெயர் : திருமாங்கல்யபுரம்.
ஊர் : திருமங்கலம். மதுரை

தல சிறப்பு : இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
தல வரலாறு :
மீனாட்சியை திருமணம் செய்ய, கயிலையில் இருந்த சிவன் மதுரைக்கு வந்தார். அவர்களின் திருமணம் மதுரையில் நடந்தது. திருமணத்திற்கு முன்பு, தேவர்கள் மதுரை அருகிலுள்ள ஒரு பகுதிக்கு வந்தனர். பொன்னை உருக்கி மாங்கல்யம் செய்தனர். மாங்கல்யம் செய்வதற்கு முன்பு, சிவனை வழிபட தேவர்கள் விரும்பினர். அவர்களின் விருப்பத்தை உணர்ந்த சிவன், இவ்விடத்தில் தனது திருமணத்திற்கு முன்பே பார்வதி சமேதராக எழுந்தருளி காட்சி தந்தார். எனவே இங்கும் இறைவனை சுந்தரேஸ்வரர் என்றும், சக்தியை மீனாட்சி என்றும் அழைத்து, அந்த இடத்திலும் தங்க வேண்டும் என தேவர்கள் கேட்டுக் கொண்டனர்.

அங்கு திருமாங்கல்யம் செய்யப்பட்டதால் அப்பகுதியை தேவர்கள் "திருமாங்கல்யபுரம்' என அழைத்தனர். காலப் போக்கில் "திருமங்கலம்' என பெயர் மாறியது. பிற்காலத்தில், மன்னர்கள் இங்கு கோயில் கட்டினர்.

ஆலய அமைப்பு 
சுவாமி கிழக்கு நோக்கியிருக்க, அம்பாள் தனிச்சன்னதியில் தெற்கு நோக்கியபடி உள்ளாள். பிரகாரத்தில் வில்வவிநாயகர், உஷா, சாயாதேவியுடன் சூரியன், நாகர், மேற்கு நோக்கியபடி ஆஞ்சநேயர், மங்கள தெட்சிணாமூர்த்தி, மயில் மீது அமர்ந்தபடி வள்ளி, தெய்வானையுடன் முருகன், நவக்கிரகங்கள், காசிவிஸ்வநாதர், அஷ்டபுஜதுர்க்கை ஆகியோர் உள்ளனர்.

பிரார்த்தனை : தடைபட்ட திருமணங்கள் நடக்க அன்னை மீனாட்சியை வழிபடுகிறார்கள்.

தலபெருமை :
யோக சனீஸ்வரர் : இத்தலத்தில், யோகசனீஸ்வரர் தனிச் சன்னதியில் தெற்கு நோக்கியபடி அருளுகிறார். இவரை, சனி தோஷம் உள்ளவர்கள் சனிக்கிழமைகளில் எள்விளக்கு போட்டு காக்கைக்கு அன்னமிட்டு மனமுருக வேண்டிக் கொண்டால், துன்பங்கள் நீங்கி சுபிட்சம் கிடைக்கும்.

அர்த்தநாரீஸ்வர விருட்சம் : இங்கு வில்வமும், வேம்பும் இணைந்து அர்த்தநாரீஸ்வரர் வடிவில் இருக்கிறது. இதனடியில் வில்வவிநாயகர் உள்ளார் சுவாமி, அம்பாளாக கருதப்படும் விருட்சங்களின் மடியில் இவர் அமர்ந்திருப்பதால் இவரிடம் வேண்டிக்கொள்ளும் அனைத்து செயல்களும் நிறைவேறும்.

இவருக்கு அருகம்புல் மாலையிட்டு, கொழுக்கட்டை நைவேத்யம் செய்து வணங்கினால் கல்வி, கேள்வி, ஞானம், திருமணம், குழந்தை பாக்கியம் குடும்ப நலம் உடல் பலம் உட்பட சகல பலன்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
திருவிழா : சித்திரையில் திருக்கல்யாணம் மாசிமகம், மகாசிவராத்திரி.
சிறப்பம்சம் : இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
காலை 6.30 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

இருப்பிடம் : மதுரையிலிருந்து திருநெல்வேலி செல்லும் ரோட்டில் 20 கி.மீ. தூரம் உள்ள இவ்வூருக்கு அடிக்கடி பஸ்கள் உள்ளன. திருமங்கலம் பஸ்ஸ்டாண்டிலிருந்து உசிலம்பட்டி செல்லும் ரோட்டில் 1 கி.மீ., தூரத்தில் கோயில் உள்ளது.

நன்றி🙏 19.7.2026சுப்ராம்மீள்தரிசனம்
#என்றும்_அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

No comments:

Post a Comment

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் 19.7.26

மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்   மதுரையின் நடுவே அமைந்துள்ள சிவன் கோயிலாகும். இச்சிவன் கோயிலின் மூலவர் சுந்தரேசுவரர் மற்றும் அம்பிகை ம...