மாரியம்மன் திருக்கோயில்
உலகப் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள வண்டியூர் மாரியம்மன் கோவில் பழமையான கோவில்களில் ஒன்றாகும். கோயில் நகரமான மதுரையின் கிழக்கே அமைந்துள்ளது இந்த மாரியம்மன் கோயில் ஆகும். இக்கோயிலுக்கு வடக்கே வைகை ஆறும், தெற்கே மாரியம்மன் தெப்பக்குளமும், மேற்கே தியாகராசர் கலைக்கல்லூரியும் அமைந்துள்ளன.
வண்டியூர் தெப்பக்குளம் உருவாவதற்கு சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இக்கோவில் அமைந்துள்ளதாக வரலாறு கூறுகிறது.
மதுரையில் எந்த ஒரு பெரிய கோவில் திருவிழா துவங்கினாலும், இந்த வண்டியூர் மாரியம்மனுக்கு முதல் பூஜை நடத்தப்படுவது வழக்கம்.
முற்காலத்தில் மன்னர்கள் போருக்குப் புறப்படுவதற்கு முன்பு இங்கு வந்து வழிபட்டு சென்றனர். பருவ மழை பொய்த்து வறட்சி பரவிய பொழுது பக்தர்கள் மழைக்காக இவளை நாடி வந்து பூஜித்தனர். மக்களுக்கு மழையை அருளியதால் அவள் மழையின் தெய்வமான மாரியம்மனாக
கொண்டாடப்பட்டாள். எனவே மாரியம்மன் என்ற பெயர் அவளுக்கு நிலைத்துவிட்டது
கோவில் வாசலில் இரண்டு துவாரபாலகிகள் உள்ளனர். அரசமரத்தின் மரத்தடியில் விநாயகர் மற்றும் பேச்சியம்மன் மூலவராகிய மாரியம்மனுடன் பக்தர்களுக்கு அருள் புரிகிறாள்.
பொதுவாக மாரியம்மனின் பாதங்களுக்கு அடியில் ஏதேனும் ஒரு அசுரன் காணப்பட்டாலும், இக்கோவிலில் உள்ள அம்பிகை துர்கா தேவி என்பதால், குறிப்பாக மகிஷாசுரன் அவளது பாதங்களுக்கு அடியில் காணப்படுகிறான். கையில் பாசம், அங்குசம் ஏந்தி சிரித்த கோலத்தில் காட்சி தருகிறாள். பிற அம்மன் கோயில்களில் இல்லாத விதமாக இங்கு அம்மன் வலக்காலை இடக்காலின் மீது மடக்கிய நிலையில் எருமை தலையுடன் உட்கார்ந்த நிலையிலும், உற்சவ அம்மனாக நின்ற நிலையிலும் உள்ளார். மூலவராக மாரியம்மன் இருப்பதால் வேறு பரிவார தெய்வங்கள் கிடையாது. இரண்டு துவாரகபாலகர்கள் வாயில் நிற்க அம்மன் சன்னதியும், அதற்கு முன்புறம் அகலமான முற்றமும் கொண்டுள்ளது.
திருவிழாக்கள்
தைப்பூசத்தன்று வண்ணமயமான தெப்பத்திருவிழா இதன் தெப்பக்குளத்தில் கொண்டாடப்படுகிறது. பங்குனி மாதத்தில் பத்து நாள் பிரமோற்சவத்திருநாளும், பூச்சொரிதல் திருவிழாவும் கொண்டாடப்படுகிறது.
மதுரையில் காவல் தெய்வமான வண்டியூர் மாரியம்மன் கோவில், ஆடி மாதத்தில் சிறப்பு வழிபாடுகள், முளைப்பாரி திருவிழாக்கள், பூச்சொரிதல் விழா மற்றும் அம்மனுக்கு செய்யப்படும் சிறப்பு அபிஷேகங்களால் களைகட்டும். இங்கு அம்மன் சுயம்புவாக அருள்பாலிப்பதுடன் நோய் தீர்க்கும் சக்தி வாய்ந்தவராகவும் திகழ்கிறார்.
துர்கையாகவும், மாரியம்மனாகவும் தரிசனம் தரும் இந்த வண்டியூர் மாரியம்மனுக்கு ஆடி மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் இங்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், வளையல் அலங்காரம் மற்றும் கூழ் வார்ப்பது போன்ற நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெறும்.
வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம்
1645 ஆம் ஆண்டு திருமலை நாயக்கர் காலத்தில் இந்த பிரம்மாண்டமான தெப்பக்குளம் உருவாக்கப்பட்டது.
வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தை தோண்டிய பொழுது மீனாட்சியம்மன் கோவிலில் உள்ள 7 அடி முக்குருணி விநாயகர் சிலை கண்டெடுக்கப்பட்டது.
சதுர வடிவில் இருக்கும் இந்த கோவில் குளம் 16 ஏக்கர் பரப்பளவில் விரிந்துள்ளது. அதனுடைய நான்கு பக்கங்களிலும் உள்ள 12 நீண்ட கருங்கல்படிகள் மற்றும் சுமார் 15 அடி உயரத்திற்கு கல்லினால் சுவரும் கட்டப்பட்டிருக்கிறது. சுமார் 1000 அடி நீளமும், 16 ஏக்கர் பரப்பளவும் கொண்ட இந்த தெப்பக்குளம் தமிழ்நாட்டில் உள்ள பெரிய தெப்பக்குளங்களில் ஒன்றாகும். குளத்தின் நடுவில் விக்னேஸ்வரர் கோவிலைக் காணலாம். திருமலை நாயக்க மன்னர் கோவில் குளத்தையும், கோவிலையும் சுற்றி இந்த நீண்டப் படிகளைக் கட்டினார். திருமலை நாயக்கருடைய பிறந்த நாளை நினைவு கூறும் வகையில் இங்கு தை மாதத்தில் 'தெப்பத்தோட்ட விழா' கொண்டாடப்படுகிறது.
நன்றி🙏 19.7.2026சுப்ராம்தரிசனம்
#என்றும்_அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
No comments:
Post a Comment