அருள்மிகு கோகிலாம்பாள் சமேத உத்வாகநாதசுவாமி திருக்கோவில்
சிவபெருமான் பார்வதி திருமணம் நடந்த தலம்
மயிலாடுதுறையிலிருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவார தலம் திருமணஞ்சேரி. இறைவன் திருநாமம் உத்வாக நாதர். இறைவியின் திருநாமம் கோகிலாம்பாள். இத்தலத்து இறைவி கோகிலாம்பாள், கருவறையில் மணக்கோலத்தில், மணப்பெண்ணுக்குரிய நாணத்துடன் அமர்ந்து உள்ளார். திருமணஞ்சேரி என்றால் திருமணம் நடந்த இடம் என்று அர்த்தம். பூலோகத்தில் சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் திருமணம் நிகழ்ந்த இடம்தான் இந்த திருமணஞ்சேரி. சிவபெருமானுக்கு பார்வதி தேவியை கன்னிகாதானம் செய்து திருமணத்தை நடத்தி வைத்தவர் மகாவிஷ்ணு. திருமணத்திற்கு புரோகிதராக இருந்தவர் பிரம்மா..
தல புராணம்
சிவ பார்வதி திருமண நிகழ்ச்சிகள் நடந்த தலங்கள்
ஒரு சமயம் பார்வதி தேவி சிவபெருமானிடம், நாதா! தங்களை பூலோக முறைப்படி திருமணம் செய்ய என் மனம் விரும்புகிறது . அவ்விருப்பத்தை நிறைவேற்றி வைக்குமாறு வேண்ட சிவனும் சிறிது காலம் பொறுத்திருக்கும்படி கூறினார் .
தம் எண்ணம் நிறைவேற வெகுகாலம் ஆகுமென்ற எண்ணத்தில் பார்வதி சிவனிடம் அலட்சியமாக நடந்து கொள்ள, அதை கவனித்த சிவபெருமான்,நான் உன் விருப்பத்திற்கு சம்மதித்த போதும் காலம் கடக்கிறதென அலட்சியமாக நடப்பதால் எம்மைப் பிரிந்து நீ பூலோகத்தில் பசுவாக பிறப்பாய் என கட்டளையிட்டார் .
அம்பிகைக்கு பசு சாபம் கொடுக்கப்பட்ட தலம் தேரழந்தூர். திருமால் பசு மேய்ப்போனாக உருவெடுத்து, பசுக்களை பராமரித்து வந்த தலம் கோமல். ஈசனின் சாபத்தால் அம்பிகை பசுவாகி சிவனின் மீது பக்தி கொண்டு உலவி வந்தார் .அப்படி உலவி வந்தபோது, ஒரு இடத்தில் இருந்த லிங்கத்தின் மீது தினம் பாலைப் பொழிந்து அபிஷேகித்து வந்தார் . பசு உருவில் இருந்த அம்பிகையின் பாதக்குளம்புகள் பட்டு ஈசனின் உடல் மீது தழும்புகள் உண்டான ஊர் 'திருக்குளம்பம்'. பின் திருவாடுதுறையில் சிவனால் பசுவுக்கு முக்தி அளிக்கப்பட்டது.
திருத்துருத்தி எனப்படும் குத்தாலத்தில் பரத மகரிஷி பிரமாண்ட யாகவேள்வி நடத்த அந்த யாக வேள்வியில் சிவபெருமானின் அருளால் அம்பிகை தோன்றினார். தெய்வீகப் பெண் ஒருவர் வேள்வியில் வர ஆச்சர்யப்பட்டு பரத மகரிஷி நிற்க, சிவபெருமான் தோன்றி,மகரிஷியே வேள்வியில் வந்தவர் உமாதேவியே! அவரை உமது பெண்ணாக ஏற்று எமக்கு திருமணம் நடத்த ஏற்பாடு செய்யுங்கள். நான் எதிர் கொண்டு வருவேன் எனக்கூறி மறைந்தார் . இறை உத்திரவுப்படி திருமண யாகங்கள் புரிந்து மங்கள ஸ்நானமும் கங்கணதாரமும் செய்த இடம், திருவேள்விக்குடி. பின் பாலிகை ஸ்தாபனம் குருமுலைப்பாலையில் செய்யப்பட்டது.
அதன் பின்னர் மணமகளான உமாதேவியை அழைத்துக்கொண்டு சிவனை தேடி பரத மகரிஷி வர, இறைவன் மாப்பிள்ளை கோலத்தில் எதிர் கொண்டு காட்சி கொடுத்த இடமே 'திரு எதிர்கொள்பாடி' என அழைக்கப்படுகிறது.
பின் மணமகனான சிவனையும் உமாதேவியையும் அழைத்துக்கொண்டு, பூலோக முறைப்படி கல்யாண வைபவம் நடந்த இடம் திருமணஞ்சேரி. திருமணத்தைகாண விண்ணவர்கள், தேவர்கள், நவகிரகங்கள் வந்தனர் . சிவபெருமானும், பார்வதி தேவியும் கைகோர்த்தபடி திருமணக் கோலத்தில் காட்சி தருவது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.
திருமண தடை நீக்கும் பரிகாரத் தலம்
திருமணஞ்சேரி நித்திய கல்யாண ஷேத்திரம் ஆகும். இங்கு சிவன் ஸ்ரீகல்யாண சுந்தரராக, ஸ்ரீ உத்வாக நாதராக எழுந்தருளி தன்னை நாடி வந்தோர் திருமணத்தை நடத்தி வைக்கிறார். அம்பிகை எப்படி தாம் விரும்பியவாறு சிவனை மணம் புரிந்து கொண்டாரோ, அதுபோல இங்கே வணங்குவோர்க்கு அவரவர் விருப்பம் போல திருமணம் நடைபெறுகிறது. திருமணஞ்சேரி கோவிலை தரிசித்தால், தடைப்பட்ட திருமணம் விரைவில் நடந்தேறும். நல்ல வரன் கிடைத்து, சிறப்பான இல்வாழ்க்கை அமையும் என்பது ஐதீகம்.
கோவில் தரிசன நேரம்- காலை 7.30 மணி முதல் பகல் 01.30 மணிவரை மாலை 3.30 மணி முதல் இரவு 8.30 மணிவரை
திருமண பூஜை மேலே குறிப்பிட்ட நேரத்தில் தொடர்ந்து நடைபெறும்.
பரிகாரம் பூசை:
நீண்ட நாள் திருமணம் தடை பெற்றவர்கள் இத்திருக்கோவில் கல்யாண பூஜையில் கலந்து கொண்டால் 3 மாதத்தில் திருமணம் நடைபெறும்.
திருமண பூஜையில் கலந்துகொள்ள திருக்கோவில் நிர்வாகம் சார்பாக திருக்கோவில் அலுவலகத்தில் ரூபாய் 200 செலுத்தி விட்டால் (2 மாலை, 2 தேங்காய், பூ, மஞ்சள், குங்குமம், கல்கண்டு, எலுமிச்சம் பழம், ) அடங்கிய பை வழங்கப்படும், பூஜை பை வாங்கி கொண்டு திருக்கோவில் உள்ளே செல்லவேண்டும் வெளியில் எந்தப் பொருளும் வாங்கத்தேவையில்லை. திருக்கோவில் உள்ளே சென்றதும் திருக்கோவில் கொடிமரம் அருகில் இருக்கும் விநாயகரை தரிசனம் செய்ய வேண்டும் விநாயகரை வணங்கிவிட்டு உள்ளே சென்றதும் திருமண கோலத்தில் உள்ள உற்சவர் சுவாமிக்கு எதிரில் உள்ள மண்டபத்தில் திருமணம் ஆகாத ஆண்கள் திருமணம் ஆகாத பெண்கள் என தனி தனியாக அமர வேண்டும் பூஜை முடிந்தவுடன் மூலவர் அம்பாளை தரிசனம் செய்ய வேண்டும்
பூஜை முடிந்தவுடன் கோவில் அர்ச்சகர் மாலை, எலுமிச்சம் பழம், பூஜை செய்த பூஜை பை நம்மிடம் வழங்குவார்
பூஜை முடிந்து மறுநாள் வீட்டிற்கு வந்தவுடன் காலை குளித்தவுடன் வீட்டில் விளக்கு ஏற்றி பூஜை செய்த மாலையை அணிந்து சாமி கும்பிடவேண்டும் சாமி கும்பிட்டுவிட்டு மாலையை மஞ்சள் பையில் வைத்து பூஜை அறையில் பத்திரமாக வைக்கவேண்டும் மற்றும் பூஜை செய்த எலுமிச்சம் பழத்தை வெறும் வயிற்றில் உப்பு சர்க்கரை சேர்க்காமல் திருமணபூஜை செய்தவர்மட்டும் குடிக்க வேண்டும் மேலும் பூஜை செய்த விபூதி குங்குமம் பூஜை செய்தவர் மட்டும் தினமும் அணிந்துகொள்ளவேண்டும்
திருமணம் ஆனவர்கள் தன் துணையுடன் மீண்டும் திருக்கோவிலுக்கு வந்து மாலையை கோவிலில் செலுத்தவேண்டும்
குழந்தை பேறு தடைப்பட்டவர்கள் தொடர்ந்து 3 அமாவாசை அன்று இராகு பகவானுக்கு நடைபெறும் சிறப்பு பூஜையில் பங்குபெற்றால் வெகு விரைவில் குழந்தை பேறு உண்டாகும்
மேலும் திருக்கோவிலுக்கு அருகில் ஆங்காங்கே வியாபாரிகள் மஞ்சள் குங்குமம் வாங்க வேண்டும் என்பார்கள் நீங்கள் எந்த பொருளும் வாங்க தேவையில்லை ஆலயத்தில்.ரூபாய் செலுத்தி Ticket வாங்கினால் மட்டும் போதும்.
இத்திருக்கோவிலுக்கு மயிலாடுதுறை மற்றும் குத்தாலம் ஆகிய ஊர்களில் இருந்து குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே பேருந்து வசதிகள் உண்டு
குத்தாலம் ஊருக்கு மயிலாடுதுறை கும்பகோணம் தஞ்சாவூர் ஆகிய ஊர்களில் இருந்து நிறைய பேருந்து வசதிகள் உள்ளன.
மேலும் குத்தாலம் ஊரில் இருந்து ஆட்டோ மற்றும் கார்களில் 1 நபருக்கு ரூபாய் 100-150 (விசாரித்து ) செலுத்தி திருக்கோவிலை அடையலாம். திருமணஞ்சேரி மிகவும் சிற்றூர். பெரிய வசதிகள் கிடையாது. கழிவரை குளியல் அறை, ஆலயம் முன்பு உள்ள கட்டிடத்தில் உள்ளன.
மிக அருகில் எதிர்கொள்பாடி பாடல் பெற்ற தலம் உள்ளது தரிசனம் செய்து வாருங்கள். மேலும், திருவேள்விக்குடி, குத்தாலம் ஊர்களும் மிக அருகில் சில கி.மீ.தூரத்திலேயே இருப்பதால், சேர்த்து தரிசனம் செய்யலாம்.
நன்றி🙏🏻
#மீள்தரிசனம் - #ரதசப்தமி
25.01.2026 #சுப்ராம்தரிசனம்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
No comments:
Post a Comment