Thursday, July 23, 2026

வயலூர் முருகன் ஆலயம் 5.07.26

வயலூர்
ஒவ்வொரு முருக பக்தரும் தரிசிக்க வேண்டிய ஆழமான ஆன்மீக மற்றும் பழமையான கோவில். 1,200 ஆண்டுகள் பழமையான இந்த சோழர் காலக் கோயில், முருகப்பெருமான் அருணகிரிநாதருக்கு அருள்பாலித்து, திருப்புகழ் இயற்றும்படி அருளிய தலமாகப் புகழ் பெற்றது.
தனிச்சிறப்பு: இங்குள்ள நடராஜர் சிலை மிகவும் அரிதானது, ஏனெனில் அவர் ஒரு காலில் நிற்காமல் இரு காலிலும் நிற்கிறார்.
நவகிரகங்கள்: சுவாரஸ்யமாக, அனைத்து கிரக தெய்வங்களும் இங்கு முருகப்பெருமானை எதிர்கொள்கின்றன, இது அவர்கள் மீது அவர் கட்டளையிட்டதைக் குறிக்கிறது.
புனித குளம்: முருகப்பெருமானின் வேள்வியால் உருவாக்கப்பட்டதாக நம்பப்படும் சக்தி தீர்த்தக் குளத்தைத் தவறவிடாதீர்கள்.
முருகப் பெருமானுக்குப் பிடித்தமான ஆலயங்கள் இரண்டு என்பார் அருணகிரிநாதர். ஒன்று திருச்செங்கோடு, மற்றொன்று திருச்சி வயலூர். திருச்சியில் இருந்து மேற்கே, 18 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது வயலூர். குமாரவயலூர் என்னும் வயலூர், வயல்கள் சூழ்ந்த இடம் என்பதால் இந்தப் பெயர் பெற்றது என்பர். இவ்வூரை 'உறையூர் கூற்றத்து வயலூர்', 'தென்கரை பிரமதேய நந்திவர்ம மங்கலம்' 'ராஜகம்பீர வளநாடு' 'மேலைவயலூர்' என்று குறிப்பிடுகின்றன. அருணகிரிநாதரை திருவண்ணாமலையில் கம்பத்து இளையவராக தடுத்தாட்கொண்ட முருகப் பெருமான் முதன்புதலில் வயலூருக்குத்தான் வரச்சொல்லி உத்தரவிட்டார். அருணகிரிநாதர் இங்குள்ள முருகப்பெருமானை வழிபட்டு 18 பாடல்கள் புனைந்த பெருமை கொண்ட தலம் இது. இங்கிருந்தே திருப்புகழ் எனும் பெரும் பொக்கிஷம் உருவானது என்பதும் இவ்வாலய பெருமைகளில் ஒன்று. முருகப்பெருமானின் பெருமை சொல்லும் ஆலயமாக இது இருந்தாலும், ஆதியில் இது சிவாலயமாகவே உருவானது என்கிறது தலவரலாறு. காலமறியா காலத்தில் காட்டு விலங்குகளை வேட்டையாடச் சென்ற ஒரு சோழ மன்னன், இங்கிருந்த கரும்பு ஒன்றை ஒடிக்க வாளால் வெட்டினான். அப்போது ஒடிந்த கரும்பிலிருந்து ரத்தம் வடிந்தது. இதனால் பதறிய சோழன் வயலைத் தோண்டிப் பார்க்கையில், அங்கே ஈசன் லிங்கமேனியாக காட்சி அளித்தான். அங்கேயே அவருக்கு ஓர் ஆலயம் எழுப்பி, ஆதிநாதர் என்ற திருநாமம் இட்டு வணங்கினான் என்று சொல்லப்படுகிறது. 9-ம் நூற்றாண்டில் இந்த ஆலயம் மீண்டும் புனரமைக்கப்பட்டது. ராஜகேசரிவர்மன், குலோத்துங்கச் சோழன், பரகேசி வர்மன், ராஜேந்திர சோழன் ஆகியோரால் திருப்பணிகள் கண்ட இந்த கோயிலின் கல்வெட்டுகள் ஆலயத்தின் பழைமையை எடுத்துக் கூறுகின்றன. இங்குள்ள ஆதிநாதர் தம்மை நாடிவரும் பக்தர்கள் கேட்பதை மறக்காமல் கொடுப்பதால் மறப்பிலி நாதர் என்றும் அக்னி பகவான் வழிபட்டதால் அக்னீஸ்வரன் என்றும், விடங்கப் பெருமான், திருமகாதேவன், திருக்கற்றளிப் பெருமான் என பல நாமங்களால் வணங்கப்படுகிறார். இங்கு அம்பிகையின் திருநாமம் ஆதிநாயகி. இங்கே வீற்றிருக்கும் கணபதியைப் பொய்யாக் கணபதி என்பர். கைத்தல நிறைகனி... எனத் துவங்கும் அருணகிரிநாதரின் விநாயகர் ஸ்தோத்திரப் பாடல் உருவானதும் இவரால்தான்.

வயலூர் முருகப்பெருமான் என்று உலகெங்கும் பிரசித்தமான இந்த ஆலயத்தில் தெய்வானை, வள்ளி ஆகிய இருவருடனும் முருகப்பெருமான் இணைந்து ஈசனை இங்கு பூஜிக்கிறார்கள் என்பது ஐதீகம். தனி சந்நிதியில் வள்ளி - தெய்வானை சமேதராக காட்சி தருகிறார் வயலூர் முருகப்பெருமான். முயலகன் இல்லாத சதுர தாண்டவ நடராஜர், முருகப் பெருமானே தன் வேலினால் குத்தி உண்டாக்கிய சக்தி தீர்த்தம், வைகாசி விசாக சுவாதி நட்சத்திரத்தன்று நடைபெறும் சட்டத்தேர் விழா என இந்த ஆலயத்தில் அதிசயங்கள் அநேகம். திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருப்பணிகள் செய்து வழிபட்ட திருத்தலம் இந்த வயலூர் முருகன் கோயில். திருமண தோஷம் மற்றும் தடைகள் உள்ளவர்கள், முதல் நாள் இரவே இங்கு வந்து தங்கி, மறுநாள் சக்தி தீர்த்தத்தில் நீராடி, முருகப்பெருமானை வழிபட்டால் திருமணம் நடந்தேறும் என்பது நம்பிக்கை. ஆண்டு முழுக்க பக்தர்கள் இங்கு வந்து கூடி முடி இறக்குதல், காவடி எடுத்தல், பால் குடம் எடுத்தல், காது குத்தல், சஷ்டி விரதம் இருத்தல், ஆண்கள் அங்கபிரதட்சணம் செய்தல், பெண்கள் கும்பிடு தண்டமும், அடிப் பிரதட்சணமும் செய்வது என பல நேர்த்திக்கடன்கள் செய்கின்றனர். நாக தோஷம் மற்றும் குழந்தை வரம் இல்லாதோர் இங்கு வந்து தீர்த்தத்தில் நீராடி, வழிபட்டால் தோஷங்கள் நீங்கி, நற்பலன்கள் அடைவர் என்பது நம்பிக்கை.

நன்றி🙏
5.07.2026 #சுப்ராம்தரிசனம்
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

No comments:

Post a Comment

பெருங்குடி : அருள்மிகுஶ்ரீ சிவகாமசுந்தரி அம்பிகை சமேதஶ்ரீ (திருப்பெருமுடி பரமேஸ்வரமுடையார்)அகஸ்தீஸ்வரர் திருக்கோயில், 5.06.26

பெருங்குடி : அருள்மிகு ஶ்ரீ சிவகாமசுந்தரி அம்பிகை சமேத ஶ்ரீ (திருப்பெருமுடி பரமேஸ்வரமுடையார்) அகஸ்தீஸ்வரர் திருக்கோயில், பெருங்குடி கிராமம்,...