சமயபுரம்
சமயபுரம் மாரியம்மன் கோயில் தமிழ் நாட்டில் மையமாக விளங்கும் திருச்சிராப்பள்ளி நகரத்திற்கு வடக்கே, காவிரியின் வடகரையிலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள முதன்மையான மாரியம்மன் கோயிலாகும்.
வரலாறு.
இது ஒரு சோழ மன்னர் தன் தங்கைக்கு சீதனமாக ஒரு நகரையும் கோட்டையையும் உண்டாக்கிக் கொடுத்த இடமாகக் கருதப்படுகிறது. பிற்காலத்தில், பாண்டிய மன்னர்களின் படையெடுப்பால் அவை அழிந்து வேம்புக்காடாக மாறியதாகவும், தொடர்ந்து அங்கு அம்மன் கோயில் உருவானதாகவும் கூறப்படுகிறது.
ஆலயஅமைப்பு.
தற்போதைய ஆலயம் கி.பி. 1804ல் விஜயரங்க சொக்கநாத நாயக்க மன்னரால் கட்டப்பட்டது.
சமயபுரத்தாள் ஆலயம் கிழக்கு மேற்கில் அமைந்துள்ளது. கிழக்குமேற்காக சுமார் 280 அடி நீளத்துடனும் தெற்குவடக்காக 150 அடி அகலத்துடனும் அமைந்துள்ளது.
மூன்று திருச்சுற்றுகள் கொண்ட இந்தக் கோயில் முகப்பில் நீண்ட மண்டபம் ஒன்றுள்ளது. மூன்றாம் பிராகாரத்தில் பௌர்ணமி மண்டபம், நவராத்திரி மண்டபம், வசந்த மண்டபம் ஆகியவை அமைந்துள்ளன.
இரண்டாம் பிராகாரத்தில் விநாயகர், மாரியம்மனின் உற்சவ மூர்த்தி மற்றும் கருப்பண்ணசாமி ஆகியோரது சந்நிதிகள் உள்ளன.
ஆலயத்தில் உள்ள முக்கிய பிற தெய்வ சன்னதிகள்.
விநாயகர் சன்னதி, காஞ்சி பெரியவரின் ஆலோசனைபடி ஆலய வலப்புறத்தில் ஞான சக்தி, இச்சா சக்தி, கிரியா சக்தி வடிவம் கொண்ட மூன்று விநாயகர்களை பிரதிஷ்டை செய்தனர்.
இரண்டு மாரியம்மன் சுதை விக்ரகங்கள்
ஆயிரம் கண்ணுடையாள்
உற்சவ அம்மன், கருப்பண்ணசாமி சன்னதி.
ஆலயத்தில் உள்ள கோபுரங்கள்.
ஐந்து நிலை கோபுரம் திருக்கோயில் மேற்கு பகுதியிலும்
மூன்று நிலை கோபுரங்கள் கோபுரங்கள் திருக்கோயில் வடக்குப் பகுதியிலும்
ஏழு நிலை ராஜகோபுரம் திருகோயிலின் கிழக்குப் பகுதியிலும் அமைக்கப்பட்டுள்ளன.
விக்கிரகங்களின் அமைப்பு.
மூலவரான மாரியம்மன் மாரியம்மன் சுகாசினியாகக் காட்சி தருகிறாள். தலைக்கு மேல் ஐந்து தலை நாகம் படம் விரித்த நிலையில் காட்சி தருகிறது. நெற்றி நிறைய திருநீறு, குங்குமம் அணிந்துள்ளாள்.
அன்னை இடது கால் மடித்து, வலது கால் தொங்க விட்டு அமர்ந்துள்ளாள். பாதத்தில் மூன்று அசுரர்கள் தலை காணப்படுகின்றன. இவை ஆணவம், கன்மம், மாயை குறிக்கிறது.
எட்டுத் திருக்கரங்களில் முறையே கத்தி, கபாலம், சூலம், மணிமாலை, வில், அம்பு, உடுக்கை, பாசம் ஆகியவற்றை ஏந்தியுள்ளாள். ஜொலிக்கும் தோடுகள், மூக்குத்தி அணிந்துள்ளாள்.
நட்சத்திரங்கள் 27 ஆதிக்கங்களை தன்னுள் அடக்கி, 27 யந்திரங்களாக திருமேனி பிரதிஷ்டையில் இங்கு அருள்புரிகிறாள் சமயபுரத்தாள்
சமயபுரத்தாள் விக்கிரகம் மூலிகைகளால் ஆனதால், இதற்கு அபிஷேகம் கிடையாது. உற்சவர் அம்மனுக்கு மட்டுமே அபிஷேகம்.
கருவறையின் பின்புறம் அம்மனின் பாதங்கள் உள்ளன.
அம்மன் சிவரூபமாக கருதப்படுவதால் விபூதி விசேஷ பிரசாதமாக வழங்கப்படுகிறது
பக்தர்களுக்காக அம்மனே விரதம் இருக்கிறாள்! இது ‘பச்சைப் பட்டினி விரதம்’ எனப்படுகிறது. மாசி மாதக் கடைசி ஞாயிறன்று அம்மனின் பச்சைப் பட்டினி விரதம் துவங்குகிறது. விரத காலமான மாசி முதல் பங்குனி கடைசி ஞாயிறு வரை 27 நாட்களும் அம்பாளுக்கு ஒரு வேளை நிவேதிக்கப்படுகின்றன.
பெருமாளிடமும், ஈஸ்வரரிடமும் சீர்வரிசை பெறும் அம்மன் இவள் மட்டுமே!
கொள்ளிடம் தான் அண்ணன் ஸ்ரீரங்கநாதரையும், தங்கை சமயபுரத்தாளையும் பிரிக்கிறது. தைப்பூசத்தின் போது அம்மன், கொள்ளிடக் கரையின் தென் பகுதியில் நீராட வருவாள்.
அன்று ஸ்ரீரங்கம் பெருமாள் ஆலயத்திலிருந்து பட்டுப் புடவைகள், மாலைகள், தளிகைகள் ‘மகமாயி’க்கு சீராக அனுப்பி வைக்கும் வழக்கம் தொன்று தொட்டு இருந்து வருகிறது. இதை தீர்த்தவாரி விழா என்பர்
சித்திரை திருவிழா பத்தாம் நாளில் திருவானைக்காவில் அருள் புரியும் ஸ்ரீஜம்புகேஸ்வரர், மாரியம்மனுக்கு சீர்வரிசை அனுப்பி வைப்பார்.
இங்கு உயிர்ப்பலி கிடையாது. அம்மனுக்கு மாவிளக்கும், எலுமிச்சம் பழ மாலையும்விருப்பமானவை.
பிரார்த்தனைகள்:
தாலிவரம், குழந்தை வரம், உடல் உறுப்புகள், அம்மை முதலிய நோய் நீங்க வேண்டியும், மேலும், பல்வேறு வித பிரார்த்தணைகள் இங்கு செய்கிறார்கள்.
வேண்டுபவர்களுக்கு வேண்டியதை செய்யும் கண்கண்ட தெய்வமாக வணங்கப்பட்டுவரும் சமயபுரம் மாரியம்மன், தமிழ்நாட்டின் தலைசிறந்த ஆலயங்களில், முதன்மையானது.
தீர்த்தங்கள்:
பெருவளை வாய்க்கால் மற்றும் மேற்கே உள்ள மாரி தீர்த்தம் (தெப்பக்குளம்) இக்கோயிலின் தீர்த்தங்களாகும்.
தலமரம்:
இக்கோயிலின் தல மரம் வேப்ப மரமாகும்.
பக்தர்களது முயற்சியால் 1984 ஆம் ஆண்டு முதல் சமயபுரம் மாரியம்மன் கோயில், தனி நிர்வாகத்துக்கு மாறியது.
பக்தர்களுக்கு உள்ள வசதிகள்.
கோவிலின் தென்புறத்தில் பக்தர்கள் ஓய்வுக்கூடம், பிரார்த்தனை முடி எடுக்கும் இடம், கழிவரைகள், குளியல் அறைகள், பொருள்கள் வைக்குமிடங்கள், கைப்பேசி, காலணிகள், வைக்குமிடங்கள், அன்னதானக்கூடம் மற்றும் இலவச அல்லது சிறப்பு கட்டணம் (ரூ 100/-) தரிசன வரிசை உள்நுழைவுப்பகுதிகளும் தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளது.
பேருந்து நிலையம், வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் ஆலயத்தின் கிழக்குப்பகுதியில் உள்ளன.
ஞாயிறு மற்றும் விஷேசநாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும்.
வாழ்வில் ஒரு முறையாவது வந்து வணங்க வேண்டிய அம்மன் தலம்.
நன்றி
5.07.2026 #மீள்தரிசனம்
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம் தொழுவது சாலவும் நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்