Tuesday, July 21, 2020

ஏகபாதம் பதிவு : 1

#திருமுறைசிந்தனைகள் :
#சம்பந்தர்அமுதம்
#ஏகபாதம் :

'தமிழுக்கு அமுதென்று பேர்...' 
என்று வெறும் கூற்று மட்டும் நமக்குப்
போதாது. உண்மையில் நாம் தமிழ் இலக்கியங்களைப்பற்றி சிந்திக்க வேண்டும். அமுதத்தைப் பருக வேண்டும் என்ற நோக்கில்தான் இந்தப் பதிவு.

நம் பக்தி இலக்கியத்தில்
ஒப்பற்ற நம் தமிழ் மொழியின்
அற்புத யாப்பமைந்த சிறப்பான ஒரு பதிகப் பாடல் அமைப்புக் குறித்து 
ஒரு துளியேனும் நாம் சிந்திக்க முயலலாமே என்ற வகையில் பதிவிடப்படுகிறது.
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇🛐

சீர்காழிப்பதியில் அவதரித்து, இறைவரால் அமுது ஊட்டப்பெற்ற 
தமிழ் ஞானசம்பந்தர்  தமிழுக்கு அணி செய்தவர்.  செந்தமிழினால் இறைவனை
எண்ணித் துதி செய்தவர். பக்தி இசைப் பாடல்கள் அருளிச் செய்தவர். 

தமிழ் ஞானி திருஞானசம்பந்தர் என்னும் இந்த ஞான பிள்ளையாரின் பாடல்களில் 
நமக்கு தற்போதுவரை கிடைத்துள்ளவை;
226 தலங்களைப் பற்றிய, 386 பதிகங்களில் உள்ள 4146 பாடல்கள் மட்டுமே.
இவர் பாடல்களை முதல் மூன்றுத் திருமுறைகளாகத் தொகுத்துள்ளார்கள்.

தமிழுக்கு புதிய புதிய யாப்பு வகைகளை இவரே முதன் முதலாகக் கையாண்டார் என்பது மிகச் சிறப்பு.

இதில் ஏகபாதம் என்னும் தனி சிறப்புப் பெற்ற யாப்பமை பதிகம் ஒன்றைப் பற்றிய சிந்தனையே இப்பதிவு.

முதல் திருமுறையில் உள்ள 127 வது பதிகம் சீர்காழி என்கிற திருப்பிரமபுரம்  என்ற தலத்தில் அருளப்பட்டது. இது
ஏகபாதம் என்ற யாப்பு முறையில் பெற்ற 12 பாடல்கள் கொண்டது. இது பற்றி சிந்திப்போம்.

ஏகபாதம்:- ஏகபாதம் என்பது, 
ஏகம் - ஒன்று; பாதம் - அடி. 
ஏகபாதம் - ஓர் அடி.

ஓரடியே அடுத்தடுத்த அடிகளில் பொருள் வேறுபடுமாறு நான்கு முறை மடித்து மடித்து வந்து ஒரு பாடலாக அமைந்திருப்பதால் "ஏகபாதம்" எனப் பெயர் பெற்றது.

சித்திரக்கவியின் ஒரு வகை.

மிறைக்கவி என்பார்கள். இதன் பொருள் வருத்தஞ்செய்வது, மூளையைக் கசக்கிப் பிழிந்து உரை செய்வதாம்.

திட்டமாக உரை செய்வதியலாது.

15ம் நூற்றாண்டின் வாழ்ந்த சீர்காழி கண்ணுடைய வள்ளலார், சம்பந்தப் பெருமாளை மானசீக குருவாக போற்றியவர், தம் ஒழுவில் ஒடுக்கம் என்ற சித்தாந்த நூல் மூலம் விளக்கியுள்ளார்.

திருஞானசம்பந்தப் பெருமானின் பதிகப் பாடல்கள் இறைவன் தந்த அருளுரைகளே என்பதால் இதற்கு  சம்பந்தப் பெருமானே முழுப் பொருள் தர இயலும் என்று கூறுகிறார்கள்.

பெருமறிஞர் வ.த. இராமசுப்பிரமணியம்
பெரும் அறிஞர் திரு S.வெங்கடேஸ்வன்
பெரும் புலவர் கி.மஞ்சுளா முதலியவர்கள்  பாடல்களுக்கு உரை செய்துள்ளார்கள்

பன்னிரு பாடல்களைக் கொண்ட இப்பதிகத்தில் உள்ள இன்னொரு தனிச்சிறப்பு, சீர்காழித் திருத்தலத்தின் பன்னிரு திருப்பெயர்களைக் கொண்டு விளங்குவதுதான்.
(பதிகத்தின் 12 பாடல்களில் முதல் பாடல் மட்டுமே இப்பதிவில்)

🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇🛐

பாடல்: 1.
பிரம புரத்துறை பெம்மா னெம்மான்
பிரம புரத்துறை பெம்மா னெம்மான்
பிரம புரத்துறை பெம்மா னெம்மான்
பிரம புரத்துறை பெம்மா னெம்மான்

முதலாம் திருமுறை. பதிகம்: 127
பாடல். 1370
 4 வரிகளுக்கும் பொருள் விளக்கம்:
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇🛐
1.
பிரமம்   புரத்துறை பெம்மான் எம்மான் 

பிரம்மத்தை பரிபூரணமாக உணர்ந்த பெருமகன் எம் தலைவன்.

பிரம்மம் = ஞானம்
புரத்து உரை = ஞானத்தை வியந்து நிற்கும்
பெம்மான் = பெருமைக்குரியவன்
எம்மான் = எம் தலைவன்
--- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
2.
பிரமபுரத்து உறை பெம் மான் எம் ஆன்

மேல் உலகில் உள்ள ஆகாயகங்கையை விரும்பி முடியில் வைத்தவர் எம் ஆன்மாவில் உறைபவன்.

பிரமபுரம்=மேலே உள்ள மேலுலகம்; உறை=இருந்த தண்ணீர், கங்கை நதி; பெம்=விருப்பம்; 
மான்=மான் போன்ற சாயலை உடைய       கங்கை நங்கை; 
எம்=எமது; 
ஆன்=ஆன்மா.
 - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - 
3.
பிரம்ம  புரத்துறை பெம்மான் எம்மான்

பிரம்மன் ஈசனைப் பூசித்த தலம் பிரமபுரம். அந் நகருக்குரிய பெருமானே எம் தலைவன்.
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -  - - 
4.
பிரம்ம  புரத்து  (உ)றை பெம்மான் எம்மான்

யாவருக்கும் பெருமானாகிய ஈசன் எம் தலைவன். அவன் பிரம்மபுரத்தில் விளங்குவன்.   
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - 
பத்தி இலக்கியத்தில் தமிழின் பெருமையை உலகறியச் செய்த 
ஆளுடைய பிள்ளையாரின் அமுத பாடல்களின் ஒரு துளி பருகினோம்; இறையருளால்.
இதன் பெருமையை எண்ணிப் போற்றுவோம். 

வணக்கம்.
நன்றி
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇🛐என்றும் அன்புடன்
சுப்ராம் அருணாசலம்
காரைக்கால்
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇🛐

1 comment:

பதிவு - 13 நாள் - 7 ஆதிகைலாஷ் தரிசனம் Gunji to Jolingkong (4630mts.) Adikailash and back to Budhi (2740mts.) Total 86 Kms. 9 - 10 hrs. நாள் - 7 - 01.06.24 - சனி

பதிவு - 13 நாள் - 7  மிக முக்கிய நாள் ஆதிகைலாஷ் தரிசனம் Gunji to Jolingkong (4630mts.) Adikailash and back to Budhi (2740mts.) Total  86 Kms...