Sunday, June 21, 2020

திருஎழுகூற்றிருக்கை முழு பாடல் பொருள் விளக்கப் பதிவு

திருமுறைகளில்_தமிழமுதம்
#சம்பந்தர்அமுதம்
#திருஎழுகூற்றிருக்கை
முழு பாடல்  பொருள் விளக்கப் பதிவு
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
பெரிய பதிவு
பக்தியும் தமிழ் ஆர்வமும் உள்ளவர்கள் தொடரலாம்...
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
💫கும்பகோணம் கும்பேஸ்வரர் ஆலயம், சாரங்கபாணி ஆலயம், சுவாமிமலை, மற்றும் பல ஆலயங்களில் பிரகாரத்தில் பளிங்கு கற்களில் அல்லது வண்ண ஓவியமாக ஒரு தேர் படம் அமைத்து இருப்பார்கள். அதில்  குறுக்கும் நெடுக்குமாக சிறுசிறு கட்டமாக அறைகள் வரைந்து அதில் சில வார்த்தைகளும் வரிசை வரிசையாய் எழுதி நடுவில் அம்மைப்பன் உருவம் அல்லது முருகன் உருவமும் கூட இருக்கும். (படம் இணைப்பு காண்க).

⚛️இது என்ன என்றும் இதன் விளக்கம் என்னவென்றும் அறிந்து கொள்ள முயன்ற போது, பலவித வியப்பான தகவல்கள் கிடைத்தது.

💥உலகத்தின் ஒப்பு உயர்வற்ற மொழியாகிய தமிழின் சிறப்பு விளங்கும் ஒரு அற்புத படைப்பு இது.

☸️இது ஒரு தெய்வீகப் பாடல் அமைப்பு.
#எண்ணலங்கரம் என்ற பாடல் அமைப்பை ஒட்டி அமைந்த கவி முறை. இதற்கு சித்திரக்கவி, ரத பந்தம், தேர்ப்பந்தம் என்று பெயர்.

💠உலகத்தின் வேறு எந்த மொழியிலும் இப்படிப்பட்ட சித்திர அமைப்புக் கவிதைப் பாடல்கள் இருப்பதாகத் தெரியவில்லை என்று மொழி அறிஞர்கள் மொழிகிறார்கள்.

🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏
🔯இந்த அமைப்பு முறைக்கு
திருஎழுக்கூற்றிருக்கை என்று இலக்கணம் ஆய்ந்தோர் பெயர் அளித்துள்ளார்கள்.

🛐முதன்முதலாக இந்த வகைப்பாடல் அமைப்பு முறையை அருளியவர்.
மூன்று வயதில் ஞானப்பால் அருந்தி அருள் பெற்ற தமிழ் கடவுள் முருகன் அவதாரம் என்று அருணகிரிநாதரால் போற்றப்பட்ட தமிழ் ஞானசம்பந்தர் ஆவார்.

கருவிலே திரு அமையப் பெற்று, இறையருளால் ஞானப்பால் அருந்திய ஞானி, 'இவ்  வையம் வாழ யாம் வாழ'
ஏராளமான திருத்தலங்கள் சென்று தமிழ் பண்கள் அமைத்துப் பாடிய பதிகப் பாடல்கள் மிகப்பல.

அவற்றில் நமக்குக் கிடைத்தவற்றை மூன்று திருமுறைகளாகத் தொகுத்து அமைத்துள்ளர்  நம் முன்னோர்.
முதலாம் திருமுறையில் 136, இரண்டாம் திருமுறையில் 122, மூன்றாம் திருமுறையில் 125 ம் மேலும் 3 திருப்பதிகங்களும் தொகுக்கப்பட்டுள்ளது.
226 திருத்தலங்களில்  இவர் அருளிய  பதிகங்களின் எண்ணிக்கை மொத்தம் 386. இவற்றில் நமக்கு 4146 பாடல்கள் கிடைத்துள்ளன.

இசைத் தமிழால் ஈசனை வழிபட 23 தமிழ்ப் பண்களில் இப்பாடல்கள் விளங்குகிறது.

இவர் அமைத்த 23 தமிழ் பண்கள்:

நட்டபாடை,  தக்க ராகம், 
பழந்தக்க ராகம், தக்கேசி,  குறிஞ்சி,
வியாழக் குறிஞ்சி, மேகராகக் குறிஞ்சி, யாழ்மூரி, இந்தளம், சீகாமரம், காந்தாரம், பியந்தைக் காந்தாரம், நட்டராகம், செவ்வழி, காந்தார பஞ்சமம்,  கொல்லி,   கொல்லிக் கெளவாணம்,  கெளசிகம்,   பஞ்சமம்,   சாதாரி,  பழம்பஞ்சுரம், புறநீர்மை, அந்தாளிக் குறிஞ்சி ஆக 23 பண்கள்.

பாடல் வகையில்
வினாவுரை, திருவிராகம், திரு இயமகம், வெள்ளிப் பாட்டு, நாலடிமேல் வைப்பு, திருமுக்கால், திருப்பாசுரம்,
தனித்திருவிருக்குக்குறள், ஈரடிமேல்வைப்பு,  நாலடிமேல்வைப்பு, இன்னும் பிறவுமாம்.

🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏
🔹திருஞானசம்பந்தப்பெருமான் தமிழில் பல புதிய இலக்கிய வடிவங்களைத் தோற்றுவித்தார்.

🔹திருஞானசம்பந்தர், பக்தி இலக்கியத்தை தமிழ்மொழியில் விளங்கச் செய்தவர்.

🔘இவரைப் பின்பற்றி திருமங்கையாழ்வர், அருணகிரிநாதர், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் முதலிய மிகச்சிலரே எழுகூற்றிருக்கையை அமைத்திருக்கின்றனர்.

🔱ஏழாம் நூற்றாண்டில், சாக்கியர்களையும், சமணர்களையும், பெளத்தர்களையும், தன்அருட்திறமையால் தமிழ்ப் பாடல்களில்வென்றவர்.

🎶திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடல்கள் பலவும் வழிபடுவதற்கும், பாடி மகிழ்வதற்கும்மட்டுமின்றி,
தமிழ்ச்சொல்லணி இயலுக்கும், இசைக்கும் மூலமாகத் திகழ்கின்றன.

🔰இவற்றை இலக்கண நூலார் மிறைக் கவிகள் சித்திரக் கவிகள் விருந்து வனப்பு என்று பலவாறு அழைக்கின்றனர்.

✳️திருஞானசம்பந்தர் இதனை விருந்தாய சொல்மாலை என்று தமது பதிகத்தில்குறித்துள்ளார்.
மொழிமாற்று, மாலைமாற்று... என இதில் பலவகை உண்டு.
🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏

⚜️ நாம் திருஞான சம்பந்தரின் தேவாரத் திருமுறைப் பாடல்களில் கீழ்கண்ட தலைப்பில்

#சம்பந்தர்தூது:
🔹தூது அமைப்பில் உள்ள பாடல்

#எண்ணலங்காரம்  -

#ஏகபாதம்:
🔹நான்கு அடிகள் உள்ள பாடலில் ஒரே வரியையே மீண்டும் மீண்டும் வைத்துப் பாடுவது, ஆனால் ஒவ்வொரு அடியும் வேறு வேறு பொருள் தருவது.

#மடக்கணி:
🔹மடக்கு' என்பது வந்த சொல்லோ, சொற்றோடரோ மீண்டும் வந்து பொருள் வேறுபட்டு நிற்பதாகும். யமகம் என்றாலும் மடக்கு என்றாலும் ஒரு பொருளையே குறிக்கும். யமகம் என்பது வடசொல்.

# மொழிமாற்று:
🔹ஒரே அடியில் மாறியிருக்கின்ற சொற்களைப் பொருளுக்கேற்றவாறு மாற்றி அமைத்துக்கொள்ளுதல் மொழிமாற்று எனப்படும். இதனை இலக்கண நூலார் “மொழிமாற்றுப் பொருள்கோள்” என்பர்.

முதலிய யாப்பு வகைப் பாடல்களைப் பற்றி ஏற்கனவே சிந்தித்து வந்தோம்.*

மேலும்,

🔹திருவியமகம் ( ஒவ்வொரு இரண்டு அடிகளின் கடைசியில் ஒரே வார்த்தையை, வேறு வேறு அர்த்தம் தருமாறு பாடுவது) ,

🔼 சக்கரமாற்று (ஒருபாடலின் இறுதியில் சொன்ன பெயரை அடுத்த பாடலின் ஆரம்பத்தில் வைத்துப் பாடுவது),

🔸மாலைமாற்று (முன்னிருந்து பாடினாலும், பின்னிருந்து பாடினாலும் ஒரே வார்த்தை, ஒரே அர்த்தம் தருவது) ,

🎆இது போன்று ஏராளமான அமைப்பில் சம்பந்தர் பெருமான், பதிகங்களை அருளிச் செய்து இருக்கிறார்கள்.
🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏

❇️ இந்த வகையில் நாம் இந்த பதிவுகளில் திருஎழுக்கூற்றிருக்கை என்ற அமைப்பில் உள்ள பாடல் பற்றி சிந்திப்போம்.

🎄திருஎழுக்கூற்றிருக்கை:

💥இவ்வகைப்பாடல்கள் இயற்றி அமைத்துப் பாடுவதற்குக் மிகக் கடினமானதாகும்.  ஞானம் இல்லாத கவிஞர்களால்  இயற்ற முடியாது.  மிறைகவி என்றும் கூறுவர்.

💠ஒப்பற்ற பக்தி இலக்கியங்களின் தொகுப்பான பன்னிரு திருமுறைகளில் திருக்கடைக்காப்பு என்னும் முதலாம் தேவாரத்தில்,
128 வது பதிகமாக உள்ளது.
திருப்பிரமபுரம் என்றும் சீர்காழி தலம் பற்றியது.
1382 வது பாடலாகும்.
47 அடிகளால் ஆன இதனைத்தினமும் பாராயணம் செய்து ஓதினால் திருஞானசம்பந்தர் அருளிய அனைத்தையும் ஓதிய பலனைத் தருவதாகும்.
🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏
🛡️ பாடல் அமைப்பு முறை, பொருள் விளக்கம், சிறப்பு பற்றி தொடர்ந்து சிந்திப்போம்.

📝 #திருஎழுக்கூற்றிருக்கை:

🛑அமைப்பு :

திரு + எழு + கூற்று + இருக்கை

பாடல்களின் உள்ள வார்த்தைகளில் உள்ள எண்களால் சுட்டப்படும்  அடுக்கில்
முதல் 7 வரை படிப்படியாக   
           ஒன்று, இரண்டு, ஒன்று,
                            1  2  1
ஒன்று, இரண்டு, மூன்று, இரண்டு, ஒன்று
                        1  2  3  2  1
என ஒன்று முதல் ஏழு வரையிலும் ஒவ்வொன்று ஏற்றியும், இறக்கியும் ஏழு கூறுகளிலும் எண்கள் இருக்க இயற்றப்படும் செய்யுள், எழு கூற்றிருக்கை ஆகும்.

கூறுகளாக அறைகளைக் கீறும்போது...

முதற்கூற்றில் மூன்று அறைகளும்
                       1  2  1
இரண்டாம் கூற்றில் ஐந்து அறைகளும்
                   1  2  3  2  1
மூன்றாம் கூற்றில் ஏழு அறைகளும்
                1  2  3  4  3  2  1
நான்காம் கூற்றில் ஒன்பது அறைகளும்
            1  2  3  4  5  4  3  2  1
ஐந்தாம் கூற்றில் பதினோரு அறைகளும் கீறி,
         1  2  3  4  5  6  5  4  3  2  1
ஆறாம் கூற்றில் பதிமூன்று அறைகள்
     1  2  3  4  5  6  7  6  5  4  3  2  1
அமைப்பர்.

🎎இவற்றை சித்திரக்கவி, ரதபந்தம் என்பர்.இது தேர் போன்ற அமைப்பும்

எண்களைக் கூட்டி பின் ஒவ்வொரு எண் அதிகமாகும்போதும் , மீண்டும் கீழிறங்கி, மேலே வந்து அடுத்த எண்ணைக் கூட்டிச் செல்லும். என ஏழு வரைச் சென்றதும் இது தேரின் மேலடுக்கு போல் ஆகிறது.

அதன் பின் ஒரு இடைத் தட்டு ,பீடம் பின்னர் மீண்டும் முன் சொன்ன வரிசையை அப்படியே திருப்பி
தேரின் கீழ் அடுக்காக அமைத்து இறுதியில் தொடங்கிய அதே எண்ணிலேயே முடிவடையும்.

✴️முடிவில் பாடல் அமைப்பு இப்படி இருக்க வேண்டும்.
           
                        o
                    1  2  1
                1  2  3  2  1
            1  2  3  4  3  2  1
        1  2  3  4  5  4  3  2  1
    1  2  3  4  5  6  5  4  3  2  1
1  2  3  4  5  6  7  6  5  4  3  2  1
             ⏫மேலடுக்கு
                    நடு பீடம்
                    கீழடுக்கு ⏬
1  2  3  4  5  6  7  6  5  4  3  2  1
    1  2  3  4  5  6  5  4  3  2  1
        1  2  3  4  5  4  3  2  1
            1  2  3  4  3  2  1
                1  2  3  2  1
                    1  2  1
                        o
       

🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏
📔இனி இந்தப் பதிகப் பாடல் அமைந்துள்ள முறைமை பற்றி பார்க்கலாம்.

💠தேரின் மேல்பாகம்:

1️⃣மேல் அடுக்கு : ஒன்று:
                             1  2  1
☢️ பாடல் : (வரிகள்:1-2)

ஓர் உரு ஆயினை; மான் ஆங்காரத்து
ஈர் இயல்பு ஆய், ஒரு விண் முதல் பூதலம்


(1)ஓர் உரு வாயினை
      மான் ஆங்காரத்து

(2) ஈர் இயல்பு ஆய்

(1) ஒரு விண் முதல் பூதலம்

☣️ பொருள்:

(1) ஈசன், ஏகரூபனாய் இருந்து 5 தொழில் களுக்கும் அதிபதியாக விளங்குபவன்.

🔸ஐந்தொழில் : படைத்தல், காத்தல், அழித்தல்,  மறைத்தல், அருளுதல்
   என்ற ஐந்து தொழில்களை   
   செய்வதற்காக ஒரு உருவமாய்
   இருக்கிறார்

🔸ஆங்காரத்து= ஐந்தொழில் ஆற்ற

(2) சிவன், சக்தி எனும் இருவகை இயல்புடன் உயிர்களைப் பதியை நோக்கி சாரவும், மும்மலமும் நீங்கவும் அருள்புரிபவன்.

(1) விண்முதல் ஐம்பூதங்களையும் (படைத்தவன்)

🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏

2️⃣மேல்  அடுக்கு : இரண்டு :
                        1  2  3  2  1
☢️ பாடல்: (வரிகள்: 3 - 5)

ஒன்றிய இருசுடர் உம்பர்கள் பிறவும்
படைத்து, அளித்து, அழிப்ப, மும்மூர்த்திகள் ஆயினை;
இருவரோடு ஒருவன் ஆகி நின்றனை;

💠பாடல் அமைப்பு :
                         1  2  3  2  1
(1) ஒன்றிய

(2) இருசுடர் உம்பர்கள்,  பிறவும்
       படைத்து, அளித்து, அழிப்ப,

(3)  மும்மூர்த்திகள் ஆயினை

(2) இருவரோடு

(1) ஒருவன் ஆகி நின்றனை;

☣️ பொருள்:
(1)
ஐம்பூதங்களை அவற்றுக்குரிய செயல்பாடுகளை ஒழுங்காக செய்யுமாறு  செய்பவன் இறைவனே.

(2) இருசுடரான, சூரியன் சந்திரன், தேவர்கள்,  மற்ற உயிர்கள்
என்று அனைத்தையும் படைத்து, காத்து, அழிக்கும் முத்தொழிலும் செய்கிறார்.

🔸இருசுடர் = சூரியன் சந்திரன்
🔹உம்பர்கள்= தேவர்கள்
🔼பிறவும்= மற்ற உயிர்கள்

(3) மும்மூர்த்திகளாகிய பிரம்மா, விஷ்ணு, உருத்திரன் ஆகிய மூன்று மூர்த்திகள் ஆயினன்.

(2) பிரம்மா வும், திருமாலும் உடனாக்கியவன்.

(1) அதே நேரத்தில் ஒரே ரூபமாகவும் ஒப்பற்ற ஒருவனாய் ஆகிநின்றவன்.

🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏

3️⃣மேல் அடுக்கு : 3
                    (1-2-3-4-3-2-1)

☢️ பாடல்: (வரிகள்:6 - 9)

ஓர் ஆல் நீழல், ஒண் கழல் இரண்டும்
முப்பொழுது ஏத்திய நால்வர்க்கு ஒளிநெறி
காட்டினை; நாட்டம் மூன்றும் ஆகக் கோட்டினை;
இரு நதி அரவமோடு ஒருமதி சூடினை;

💠பாடல் அமைப்பு :
                         1  2  3  4  3  2  1

(1) ஓரால் நீழல் ஒண்கழல்
(2) இரண்டும்
(3) முப்பொழுது ஏத்திய
(4) நால்வருக்கு ஒளிநெறி காட்டினை 
            நாட்ட
(3) மூன்றாகக் கோட்டினை
(2) இருநதி  அரவமொடு
(1) ஒரு மதி சூடினை

☣️ பொருள்:

(1) இறைவன் ஆலமர நிழலில் வீற்று இருக்கிறார். திருக்கழல் - திருவடி

ஓர் + ஆல் + நிழல் = ஆலமரம் என்பதும் ஒரு குறியீடு தான். பரந்த நிழலைத்தருவது ஆலமரம். நமக்கு  நிழல் தரும் திருவடி அதுவே.

(2)இறைவனின் திருவடிகள் இரண்டையும் ஒன்றாக சொல்கிறார்.

(3) மூன்று வேளைகளிலும் தொழுத

(4) நான்கு சனகாதி முனிவர்களுக்கு, எல்லையில்லா பெருவாழ்வளித்தாய்.

(3) உயர்ந்த நெறியைச் சின்முத்திரை கொண்டு காட்டி, மும்மலங்களை அறுக்க,
உண்மைப் பொருளை உணர்த்துபவன்.

(இறைவனின் கண்கள்,எவ்வகை இருளையும் போக்குவதாய் ,  சூரியன், சந்திரன் மற்றும் நெருப்பாக இருக்கிறது.
⏺️நாட்டம் = கண்கள்   என்று பொருள் கூறுவர்)

(2) இரு நதி அரவமோடு கங்கையையும், பாம்பினையும் தலையில் வாய்த்திருக்கும் இறைவன்,

(1) தலையில் சந்திரனை சூடியவர்.

🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏

4️⃣மேல் அடுக்கு: 4
                  (1-2-3-4-5-4-3-2-1)

☢️ பாடல்: (வரிகள் - 10 -13)

ஒருதாள் ஈர் அயில் மூ இலைச் சூலம்,
நால்கால் மான்மறி, ஐந்தலை அரவம்,
ஏந்தினை; காய்ந்த நால்வாய் மும்மதத்து
இரு கோட்டு ஒருகரி ஈடுஅழித்து உரித்தனை
💠பாடல் அமைப்பு :
                  1  2  3  4  5  4  3  2  1
(1) ஒருதாள்
(2)  ஈரயின்
(3)  மூவிலைச் சூலம்,
(4)  நால்கால் மான்மறி
(5) ஐந்தலை அரவம் ஏந்திணை காய்ந்த

(4)  நால்வாய்
(3) மும்மதத்து
(2) இரு கோட்டு
(1) ஒரு கரி ஈடு அழித்து உரித்தனை.

☣️ பொருள் :

(1)  திருவடி
ஒருதாள்= தாள் (தண்டு) இறைவனின் திருவடி தாமரையை சுட்டுகிறது.

(2) வாள், மழு போன்ற கூர்மையான இரும்பு ஆயுதம் ஏந்தியவர்.

ஈராயின் = ஈர்க்கும் கூர்மையுடையவை.
ஈர் அயில்= வாள், மழு (கோடரி போன்ற) அயில்(இரும்பினால் ஆனது.

(3) திரி சூலம் ஏந்தியவர்

மூ இலைச் சூலம்= திரி சூலம்

(4)  நான்கு வேதங்களும் இறைவனின் கையில் இருக்கும் மானின் கால்களாக இருக்கின்றன.

நால்வாய்-தொங்குகின்ற வாய்.
நால்கால் மான்மறி= நான்கு வேதங்களும் இறைவனின் கையில் இருக்கும் மானின் கால்களாக இருக்கின்றன.
மறி= மான் குட்டி

(5)  பஞ்சாட்சரமாகிய ஐந்து தலைகளையும் உடைய நாகத்தை இறைவன் கழுத்தில் ஏந்தி இருக்கிறார்.

ஐந்தலை அரவம் ஏந்தினை= ஐந்து தலைகளையும் உடைய நாகத்தை இறைவன் கழுத்தில் ஏந்தி இருக்கிறார். ஐந்து தலைகளும் நமசிவாய என்னும் பஞ்சாட்சரத்தை சுட்டுகின்றன.

(4)  நீர் வற்றித் தொங்கும் வாய் உடைய
(3)  (மும்) மதம் பொருந்திய,
(2)   இரு தந்தங்களையுடைய,
(1)  ஒரு யானையை உரித்தது.

நால்வாய்-தொங்குகின்ற வாய்.

🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏

5️⃣மேல் அடுக்கு : 5
                (1-2-3-4-5-6-5-4-3-2-1)

☢️ பாடல் : (வரிகள்: 14-19...)

ஒரு தனு இருகால் வளைய வாங்கி,
முப்புரத்தோடு நானிலம் அஞ்சக்
கொன்று தலத்துறு அவுணரை அறுத்தனை;
ஐம்புலன்  நால்ஆம் அந்தக் கரணம்,
முக்குணம் இருவலி ஒருங்கிய வானோர்
ஏத்த நின்றனை; ... ... ....  ....   ....

💠பாடல் அமைப்பு :
                1-2-3-4-5-6-5-4-3-2-1
(1) ஒரு தனு
(2) இருகால் வளையவாங்கி,
(3) முப்புரத்தோடு
(4) நானிலம்
(5) அஞ்சக் கொன்று தலத்து உறு 
            அவுணரை
(6) அறுத்தனை
(5) ஐம்புலன்,
(4) நால் ஆம் அந்தக்கரணம்,
(3) முக்குணம்,
(2) இருவலி,
(1) ஒருங்கிய வானோர் ஏத்த நின்றனை

☣️ பொருள் :

(1)  மேருமலையை
(2) வில்லாகக் கொண்டு வளைய வாங்கி
(3) முப்புரங்களையும்
(4) உலகம்
(5) அஞ்சி வியக்குமாறு அழித்து
           அதிலிருந்த தீய அசுரர்களை
(6) அழித்தவர்.
(5) மெய், வாய், கண், மூக்கு, செவியாகிய 
           ஐம்புலன்களையும்,
(4) அந்தக் கரணங்கள் நான்கும்,
(3) முக்குணங்களாகிய (சாத்துவிகம்,
           ரஜோகுணம், தாமோ குணம் ஆகிய
           முக்குணங்களும்,
(2) இருவகையான (உள்/வெளி மூச்சு)
           காற்றும் ஒருங்கி
(1)  ஒன்றிய மனத்தினராய், மேவிய
           வானோர் ஏத்த நின்ற ஈசன்.

முதல் பாதி திரிபுரம் எரித்த வரலாற்றையும் (வெளிப்புறமாக), அடுத்தபாதி உட்புறமாக , எப்படி நம்மை வெற்றிகொள்ள வேண்டும் என்பதை சொல்கிறது இந்த அடிகள் .

ஐம்புலன்களை அடக்கி, மனம் , புத்தி, சித்தம், அகங்காரம்-    என்னும் நான்கு கூறுகளைக்கொண்ட அந்தக்கரணம் அடக்கி, முக்குணம்- சத்வம், தேஜஸ், தமோ குணங்கள், சுவாசத்தை ஒருங்கி ,மனதை ஒருநிலைப்படுத்திய தேவர்கள் ஏத்த நின்றனை- தேவர்கள் புகழ நின்றனை இறைவா.

🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏

6️⃣மேல் அடுக்கு : 6
             (1-2-3-4-5-6-7-6-5-4-3-2-1)

☢️ பாடல் : (வரிகள்: ...19- 31)

... ... ..... ....       ஒருங்கிய மனத்தோடு,
இரு பிறப்பு ஓர்ந்து, முப்பொழுது குறை முடித்து,
நான்மறை ஓதி, ஐவகை வேள்வி
அமைத்து, ஆரங்கம்முதல்எழுத் தோதி,
வரன்முறை பயின்றுஎழு வான்தனை வளர்க்கும்
பிரமபுரம் பேணினை;
அறுபதம் முரலும் வேணுபுரம் விரும்பினை;
இகலி அமைந்து உணர் புகலி அமர்ந்தனை;
பொங்குநால்கடல் சூழ் வெங்குரு விளங்கினை;
பாணி மூஉலகும் புதைய, மேல் மிதந்த
தோணிபுரத்து உறைந்தனை; தொலையா இருநிதி
வாய்ந்த பூந்தராய் ஏய்ந்தனை;
வரபுரம் என்றுஉணர் சிரபுரத்து உறைந்தனை;

💠பாடல் அமைப்பு :
              1  2  3  4  5  6  5  4  3  2  1

(1) ஒருங்கிய மனத்தோடு
(2) இரு பிறப்பு ஓர்ந்து
(3) முப்பொழுது குறை முடித்து
(4) நால்மறை ஓதி
(5) ஐவகை வேள்வி அமைத்து,
(6) ஆறு அங்கம் முதல் எழுத்து ஓதி, வரல்
            முறை பயின்று,
(7) எழுவான்தனை வளர்க்கும்
             பிரமபுரம் பேணினை
(6) அறுபதம் முரலும் வேணுபுரம் 
            விரும்பினை இகலிய
(5) அமைந்து உணர் புகலி அமர்ந்தனை
            பொங்கு
(4) நால்கடல் சூழ் வெங்குரு விளங்கினை
(3) மூஉலகும் புதைய, மேல் மிதந்த
            தோணிபுரத்து உறைந்தனை
(2) இருநிதி வாய்ந்த பூந்தராய்
            ஏய்ந்தனை
 (1) வரபுரம் ஒன்று உணர் சிரபுரத்து உறைந்தனை

☣️ பொருள் :

மேல் தட்டு 6: (1-2-3-4-5-6-7-6-5-4-3-2-1)
(1) மனதை ஒருநிலைப்படுத்தி ,

(2) அன்னையின் கருவில் ஒரு முறையும், பூணூல் அணியும்போது ஒரு முறையும் என அந்தணர்களுக்கு இப்பிறப்பு என்பதை சொல்கிறார் சம்பந்தர்.

 (3) மூன்று பொழுதும் முறையான கிரியைகளை செய்து (சந்தியா வந்தனம்)

(4) நான்கு வேதங்களாகிய
இருக்கு, யஜூர், சாமம், அதர்வணம் ஆகியவற்றை ஓதி,

(5) ஐவகை வேள்வியாகிய சிவபூசை, குருபூசை, மகேஸ்வர பூசை, பிராமண உபசரிப்பு, அதிதி உபசாரம், ஆகியன ஆற்றி,

(6)  ஷடங்கம் எனப்படும் வேதத்தின் ஆறு அங்கங்களாகிய  சந்தசு, கற்பம், வியாகரணம், சிட்சை, சோதிடம், நிருத்தி ஆகியவற்றின் பிரதானமான முதல் எழுத்தாகிய பிரணவத்தை ஓதியும்
எப்படி மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் என்ற சொல்முறை பயின்று

(7) அந்தனர்கள் வேள்வியில் வளர்க்கும் அக்கினி பிழம்பு எழும் சீர்காழி நகரில் விரும்பி இருப்பவர் இறைவன்.

(6) அறுபதம்(வண்டு) ரீங்காரமிடும் சீர்காழியை விரும்பினை

(5) நரகர்கள் தன்னைக் கொடியவன் என்று இகழும் பழி நீங்க யமன் வழிபட்ட சீர்காழி நகரில் அமர்ந்தவர்.

(4) பொங்கும் நால்கடல் சூழ் வெங்குரு நகரில் விளங்கும்

(3) மூஉலகும் புதைய, மேல் மிதந்த
தோணிபுரத்து உறைந்தனை-

(2) இருநிதி வாய்ந்த ந்தராய் ஏய்ந்தனை-சங்கநிதி,பதுமதி என்ற இருநிதிகளோடு பொருந்தியவராக இறைவன் இருக்கிறார்

 (1) அமுதம் பெற வந்த ஒரு அரக்கனின் சிரம் கொய்யப்பட்டு பின் வரம்பெற்ற சிரபுரம் சீர்காழியாம்.

🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏

 7️⃣ அடுக்கு : 7
              (1-2-3-4-5-6-7-6-5-4-3-2-1)

☢️ பாடல்: (வரிகள் - 32-42)

ஒருமலை யெடுத்த இருதிறல் அரக்கன்
விறல்கெடுத்து அருளினை; புறவம் புரிந்தனை;
முந்நீர்த் துயின்றோன், நான்முகன், அறியாப்
பண்பொடு நின்றனை; சண்பை அமர்ந்தனை;

ஐயுறும் அமணரும் அறுவகைத் தேரரும்
ஊழியும் உணராக் காழி அமர்ந்தனை;
எச்சன் ஏழ் இசையோன் கொச்சையை மெச்சினை;
ஆறுபதமும், ஐந்து அமர் கல்வியும்,
மறை முதல் நான்கும்,
மூன்று காலமும், தோன்ற நின்றனை;
இருமையின் ஒருமையும், ஒருமையின் பெருமையும்.

💠பாடல் அமைப்பு :
          1-2-3-4-5-6-7-6-5-4-3-2-1

(1) ஒருமலை எடுத்த

(2) இருதிறல் அரக்கன் விறல் கெடுத்து
          அருளினை புறவம் புரிந்தனை

(3)  முந்நீர்த் துயின்றோன்

(4) நான்முகன் அறியாப்பண்பொடு
           நின்றனை சண்பை அமர்ந்தனை

(5) ஐயுறும் அமணரும்

(6) அறுவகைத் தேரரும் ஊழியும்   
          உணராக் காழி அமர்ந்தனை எச்சன்

(7)  ஏழ் இசையோன் கொச்சையை
            மெச்சினை
(6) ஆறுபதமும்

(5) ஐந்து அமர் கல்வியும் மறைமுதல்

(4) நான்கும்

(3) மூன்று காலமும்தோன்ற நின்றனை

(2) இருமையின் ஒருமையும்

(1) ஒருமையின் பெருமையும்

☣️ பொருள்:

(1) இராவணன் இமய மலையை எடுத்தான்

 (2) வலிமை-பெருவலிமையுடைய அரக்கன் வெற்றியைக் கெடுத்து, நான் என்ற ஆணவத்தை அழித்து அருளினார்.
சிபி ராஜாவுக்கும், புறவுக்கும் முக்தி கிடைத்த புறவம் ஆகிய சீர்காழியில் இருப்பவர்.

(3) பாற்கடலில் உறங்கும் விஷ்ணு ,
(முந்நீர்த் துயின்றோன்- முந்நீர்(கடல்)
பாற்கடலில் உறங்கும் விஷ்ணு)பிரம்மன்
இவர்கள் அறியமுடியாத ஆற்றலைப் போற்றுகிறது.

(4) நான்கு மறைகளிலும் தோய்ந்தவன்.

(5) ஐந்து எழுத்தாகும் ஞானத்திலும் சிறப்பானவன்.

(6) சமணரும் தேரரும் உணராதவராய் காழியில் வீற்றிருப்பார்.

(7) ஏழ் இசையோன் கொச்சை என்ற காழியில் இருப்பாவர்.

(6) ஆறுபதமும்- ஆறு விதமான விழிப்புநிலைகளை இது குறிக்கிறது. ஆழ்ந்த உறக்கம், துரியம்,துரியாதீதம் முதலியன.

(5) ஐந்து அமர் கல்வியும்- அவர் காலத்தில் ஐந்து வகையான கல்வி ஞானத்தில் விளங்கியவர்.

(4) நான்கு மறைகளையும் அருளியவர்.

(3)கடந்த/நிகழ்எ/திர் காலம் என்ற முக்காலத்தையும் தோன்ற வைத்து நின்றவர்.

(2) இறைவன் வேறு, நாம் வேறு என்பது ஒரு கொள்கை.அனைத்தும் ப்ரஹ்மம் என்பது அத்வைதக்கொள்கை.

(1) எல்லாமாக, எல்லா உயிர்களுமாக பிரபஞ்சமாக நீக்கமற நிறைந்த ஒருமை இறைவனின் பெருமையும்

🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏

♦️நடு பீடம்:

☢️ பாடல் : (வரிகள்: 43-47):

மறு இலா மறையோர்
கழுமல முது பதிக் கவுணியன் கட்டுரை
கழுமல முதுபதிக்கவுணியன் அறியும்;
அனைய தன்மையை ஆதலின், நின்னை
நினைய வல்லவர் இல்லை, நீள் நிலத்தே.

☣️ பொருள்:

மறு இலா மறையோர்- தங்களுக்கு உள்ள கடமைகளை(வேதங்களை முறையாய் படிப்பது, வேள்விகளை செய்து எல்லாருக்காகவும் பிரார்த்திப்பது) என்று வாழும் குறை இல்லாத மறையவர்கள்

கழுமல முது பதிக் கவுணியன் கட்டுரை- கவுணியர் என்பது சம்பந்தரின் குலம். தன்னை சொல்லிக்கொள்கிறார். இதுபோன்ற முத்திரை அவருடைய எல்லா பதிகங்களில் இருக்கும்.கழுமல முதுபதிக்கவுணியன் அறியும்

அனைய தன்மையை ஆதலின், நின்னைநினைய வல்லவர் இல்லை, நீள் நிலத்தே இது வரை சம்பந்தர் சொன்ன கருத்துகளை அவருடைய தந்தை அறிவார்.

இந்த கருத்துகளை அறிந்தவர் யாரும் நீள்நிலத்தில் (இந்த பூமியில்), நினைய வல்லவர் இல்லை- இறைவனை,நினைக்காமல் இருக்க மாட்டார்கள்.

🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏
ஒப்பற்ற பக்தி இலக்கியங்களின் தொகுப்பான பன்னிரு திருமுறைகளில்
திருக்கடைக்காப்பு என்னும் முதலாம் தேவாரத்தில்,
128 வது பதிகமாக உள்ளது.
திருப்பிரமபுரம் என்றும் சீர்காழி தலம் பற்றியது.
1382 வது பாடலாகும்.
திருஞானசம்பந்தர் அருளியது:

🛐முழு பதிகம் :

1
ஓர் உரு ஆயினை; மான் ஆங்காரத்து
ஈர் இயல்பு ஆய், ஒரு விண் முதல் பூதலம்
2
ஒன்றிய இருசுடர் உம்பர்கள் பிறவும்
படைத்து, அளித்து, அழிப்ப, மும்மூர்த்திகள் ஆயினை;
இருவரோடு ஒருவன் ஆகி நின்றனை;

3
ஓர் ஆல் நீழல், ஒண் கழல் இரண்டும்
முப்பொழுது ஏத்திய நால்வர்க்கு ஒளிநெறி
காட்டினை; நாட்டம் மூன்றும் ஆகக் கோட்டினை;
இரு நதி அரவமோடு ஒருமதி சூடினை;

4
ஒருதாள் ஈர் அயில் மூ இலைச் சூலம்,
நால்கால் மான்மறி, ஐந்தலை அரவம்,
ஏந்தினை; காய்ந்த நால் வாய் மும் மதத்து
இரு கோட்டு ஒருகரி ஈடு அழித்து உரித்தனை;

5
ஒரு தனு இருகால் வளைய வாங்கி,
முப்புரத்தோடு நானிலம் அஞ்ச,
கொன்று தலத்து உற அவுணரை அறுத்தனை;
ஐம்புலன், நால் ஆம் அந்தக்கரணம்,
முக்குணம், இருவளி, ஒருங்கிய வானோர்
ஏத்த நின்றனை;


  ... ... ..... ....       ஒருங்கிய மனத்தோடு,
இரு பிறப்பு ஓர்ந்து, முப்பொழுது குறை முடித்து,
நால்மறை ஓதி, ஐவகை வேள்வி
அமைத்து, ஆறு அங்கம் முதல் எழுத்து ஓதி,
வரல் முறை பயின்று, எழு வான்தனை வளர்க்கும்
பிரமபுரம் பேணினை;
அறுபதம் முரலும் வேணுபுரம் விரும்பினை;
இகலி அமைந்து உணர் புகலி அமர்ந்தனை;
பொங்கு நால்கடல் சூழ் வெங்குரு விளங்கினை;
பாணி மூஉலகும் புதைய, மேல் மிதந்த
தோணிபுரத்து உறைந்தனை; தொலையா இருநிதி
வாய்ந்த ந்தராய் ஏய்ந்தனை;
வர புரம் ஒன்று உணர் சிரபுரத்து உறைந்தனை;

7
ஒருமலை எடுத்த இருதிறல் அரக்கன்
விறல் கெடுத்து அருளினை; புறவம் புரிந்தனை;
முந்நீர்த் துயின்றோன், நான்முகன், அறியாப்
பண்பொடு நின்றனை; சண்பை அமர்ந்தனை;
ஐயுறும் அமணரும் அறுவகைத் தேரரும்
ஊழியும் உணராக் காழி அமர்ந்தனை;
எச்சன் ஏழ் இசையோன் கொச்சையை மெச்சினை;
ஆறுபதமும், ஐந்து அமர் கல்வியும்,
மறை முதல் நான்கும்,
மூன்று காலமும், தோன்ற நின்றனை;
இருமையின் ஒருமையும், ஒருமையின் பெருமையும்,

காப்பு பாடல் :

மறு இலா மறையோர்
கழுமல முது பதிக் கவுணியன் கட்டுரை
கழுமல முதுபதிக்கவுணியன் அறியும்;
அனைய தன்மையை ஆதலின், நின்னை
நினைய வல்லவர் இல்லை, நீள் நிலத்தே.

🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏
என்றும் அன்புடன்
சுப்ராம் அருணாசலம்
காரைக்கால்.
🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏

No comments:

Post a Comment

பதிவு - 13 நாள் - 7 ஆதிகைலாஷ் தரிசனம் Gunji to Jolingkong (4630mts.) Adikailash and back to Budhi (2740mts.) Total 86 Kms. 9 - 10 hrs. நாள் - 7 - 01.06.24 - சனி

பதிவு - 13 நாள் - 7  மிக முக்கிய நாள் ஆதிகைலாஷ் தரிசனம் Gunji to Jolingkong (4630mts.) Adikailash and back to Budhi (2740mts.) Total  86 Kms...