Tuesday, July 21, 2020

தமிழிசைப்பொக்கிஷம் வழிமொழிதிருவிராகம் பதிவு : மூன்று

#திருமுறைகளில்_தமிழமுதம்:
#சம்பந்தர்_அமுதம்

#தமிழரின்பொக்கிஷம்:
பதிவு : மூன்று

#வழிமொழிதிருவிராகம், பற்றிய பதிவு.
மூன்றம் திருமுறை பதிகம்: 325 
பாடல் 1 முதல் 4 பாடல்கள்.

🙏🙇‍♂️அன்பு வேண்டுகோள்:🙇‍♂️🙏

👣1. பக்தியும், தமிழில் ஆர்வம் உள்ளவர்கள் தொடரவும்.

🌬️2. இப்பதிவுகளில் உள்ள தேவாரப் பாடல்களை குறைந்தபட்சம் இரண்டு முறைகளாவது வாய் விட்டு உச்சரித்து படித்தல் அவசியம்.

📚3. இப்பதிவின் நோக்கம்: பழந்தமிழ் பக்தி இலக்கியப் பெருமையையும் சிறப்பையும் ஒவ்வொருவரும் உணரவேண்டும் என்பதே. 

🙇‍♂️நன்றி🙏

🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
ஞானசம்பந்தர் அருளிய அற்புத இசைத் தமிழ் பதிகங்கள் வரிசையில் இதுவும் ஒன்று.

#தமிழரின்பொக்கிஷம்:

#திருவிராகம்,# வழிமொழிதிருவிராகம்,
#வண்ணகம்,#முடுக்கியல்,#அடுக்கியல் 
இவை பற்றி முன்பதிவுகளில் சிந்தித்தோம்.
தொடர்ந்து
#வழிமொழிதிருவிராகம் பதிகப் பாடல் விளக்கங்களயும், சிறப்புகளையும்
தொடர்ந்து இப்பதிவில் பார்ப்போம்.

📕மூன்றாம் திருமுறையில் வரும்
பாடல்கள்:  714 - 725
பதிகம் 325    தலம் திருப்பிரமபுரம்.
'சுரர் உலகு நரர்கள்பயில் தரணிதல'
எனத் தொடங்கும் பதிகப் பாடல்கள்.

⚜️#வழிமொழிதிருவிராகம் என்னும் வகை சேர்ந்தது.

🅾️#வழிமொழிதிருவிராகம்:
⏺️இலக்கணம் :

⏏️குற்றெழுத்துப் பயின்று வரும் முடுகிய ஓசையுடையதாய் அடி முதற்சீரின் இரண்டாம் எழுத்து சீர்தோறும் ஒன்றி வழியெதுகையால் வரத் தொடுப்பது இவ்வகையாம்.
(முடுகிய என்பது வேகமாக ஓடும் தாள அமைப்பு எனக் கொள்ளலாம்)

🔸இதன் ஓசை அமைப்பில் பாடல் 

தனனதன  தனனதன  தனனதன  
              தனனதன    தனனதனனா

என அமைகிறது.

🔵 இதில் திருஞானசம்பந்தர் 'வழிமொழிகள் மொழி தகையவே' என்று குறிப்பிட்டு சிறப்பிப்பதாலே இந்தப் பதிகம் வழிமொழி திருவிராகம் என்னும் பெயர் சூட்டப்பட்டது.

⏺️சந்தப்பாக்களின் சீர்களில் ஒவ்வொர் உயிரும் ஓரசை என்பதால் ஓசை நயமும் தாளமும் நிறைய அமைத்துள்ளதை நாம் சிந்திக்க வேண்டும்.

⏺️இந்தப் பதிகம் 12 பாடல்கள் கொண்டது.

⏹️சீர்காழிப்பதியின் 12 பெயர்கள் வந்த வழியை -  வரலாற்றிணை - விளக்கத் தக்க வகையில் அமைந்துள்ளது.

🔹சாதாரி என்ற பண் வகையினது.

🛐🙏🎪🙏🏻🎪🙏🏼🎪🙏🏽🎪🙏🏾🎪🙏🏿🎪🛐

பாடல்: 01   -
💠 திருப்பிரமபுரம்: படைப்புத் தொழில் வேண்டி, பிரம்மன் தங்கி வழிபட்டு இறையருளைப் பெற்றதால் இப்பெயர்.

🔹இந்தப் பதிகத்தின் முதல் பாடல் பிரம்மபுரம் என்ற சீர்காழி பதியின் பெயர் வந்த வழியை சொல்லும்  

✳️பாடலில் 'ர' கரமாக சீர் அமைத்துள்ளார்.

பாடல் : 714

சுரர்உலகு   நரர்கள்பயில்  தரணிதல
           முரன் அழிய   அரணமதில்முப்

புரம்எரிய  விரவுவகை  சரவிசைகொள்
           கரமுடைய  பரமன்  இடமாம்

வரம்அருள  வரன்முறையின் 
     நிரைநிறைகொள்
           வருசுருதி  சிரவுரையினாற்

பிரமன்உயர்  அரன்எழில்கொள் 
      சரணஇணை
              பரவவளர்  பிரமபுரமே.

                                             - 0:3:325:01
பொருள் :

சுரர் உலகும் - தேவலோகமும்
நரர்கள் பயில் - மனிதர் வாழும்.
தரணி தலம் - பூலோகமும், 
முரண் அழிய - வலிமை அழியும்படி. ( அதனால்,) 
அரணம் - காவலாகிய. 

முப்புரம் - முப்புர முடிய. 
விரவுவகை எரிய - கலந்து பல இடமும் எரியும்படி. 
சரவிசை - அம்பின் விசையால்
கொள் - ( அவ்அம்பைக் ) கொண்ட, 
கரம் உடைய, பரமன் இடமாம். 

நிரை - வரிசையாக, 
வரன்முறையின் வரு - வரன்முறையில் ஓதிவருகின்ற. 
நிறைகொள் - நிறைவையுடைய.
சுருதி சிரம் - வேத முடிவாகிய உபநிடதங்களின், 
உரையினால் - வசனங்களினால். 

உயர் - எவரினும் உயர்ந்த, 
அரன் - சிவபெருமானின். 
எழில் கொள் - அழகையுடைய, 
சரண இணை - இரு திருவடிகளையும். வரம் அருள - தனக்கு வரம் அருள்வான் வேண்டி, (பிரமன்)
பரவ - துதிக்க. 
வளர் - புகழால் ஓங்கிய. 
பிரமபுரமே - பிரமபுரம் என்னும் பெயர்பெற்ற தலமாம்

🛐🙏🎪🙏🏻🎪🙏🏼🎪🙏🏽🎪🙏🏾🎪🙏🏿🎪🛐

♦️இதே முறையில் வரும் அடுத்தடுத்தப் பாடல்களையும் சீர் அமைப்பு முறையும் கவனிக்க வேண்டும்.

🔹இரண்டாவது பாடலில் வேணுபுரம் என்ற பெயர் வருவதால் 'ண' கரவரிசை வருமாரு அமைத்துள்ளார்.

பாடல் : 02. (வேணுபுரம்): 

💠இந்திரனுக்காக, விநாயகரைப் படைத்து
கஜாசுரனை அழித்து, இறைவன் அருளியதால், மூங்கில் உருவம் கொண்டு இந்திரன் தவம் செய்த தலம்.

பாடல் : 715

தாணுமிகு  ஆணிசைகொடு   ஆணுவியர்
பேணுமது    காணுமளவிற்
கோணுநுதல்  நீள்நயனி       கோணில்பிடி
மாணிமது    நாணும்  வகையே
ஏணுகரி       புணழிய     ஆணியல்கொண்
மாணிபதி    சேண்அமரர்      கோன்
வேணுவினை  யேணிநகர்   காணிதிவி
காணநடு  வேணுபுரமே.
               
                                  -03.325.02 (715)
தாணு - சிவபெருமான்
ஆணு - ( தன் ) அன்பர்களாகிய தேவர்கள். 
வியர் பேணு மது - (கயமுகாசுரனால்) அச்சம் கொள்வதை. 
காணும் அளவில் - அறிந்ததும்.
மிகு - வலிமை மிகுந்த. 
ஆண் இசைகொடு - ஆண் யானையின் வடிவைக்காண இசைந்து. ( நிற்க - அதற்கேற்ப.) 

கோணுநுதல் - வளைந்த நெற்றியை. நீள்நயனி - நீண்ட கண்ணையுமுடையவளாகிய அம்பிகை. கோண்இல் - குற்றமில்லாத படி. 
பிடி - பெண் யானையின் உருவை. 
மாணி - பெருமையையுடையவளாய்க் காண. 
மது - மது என்ற அசுரனும். 
நாணும் வகை ஏணு - வெட்கும்படி வலிமைகொண்ட. 

கரி - கயமுகாசுரன். 
பூண் - தான் மேற்கொண்ட தீய தொழில்கள். 
அழிய - அழியும்படி. 
ஆண் - ஆண் தகையாகிய விநாயகக் கடவுள். ( கயமுகாசுரனுக்குப் பேடியர் போல் அஞ்சிய தேவர் துயரந் தவிர்த்த வீரம் குறிக்க ஆண் என்றனர் ) 
இயல் - ( அன்பர்க்கு அனுக்கிரகிக்கும் ) அருளை, 
கொள் - கொள் வித்த. 
மாணி - பெருமையுடையோனாகிய சிவபெருமானின். 
பதி - இடம். 
சேண் - வானுலகில் உள்ள, 
அமரர்கோன் - இந்திரன். 

வேணு வினை - மூங்கிலை. 
ஏணி - ஏணியாகக்கொண்டு. 
காண்இல் - தான் நேரேகாண முடியாத. திவி - தேவலோகத்தின் நிலையைக் காண - ஒளிந்து காணும் பொருட்டு. 
நடு - நட்ட, 
வேணுபுரம் - வேணுபுரமாம் 
ஆணு - அன்பு

🛐🙏🎪🙏🏻🎪🙏🏼🎪🙏🏽🎪🙏🏾🎪🙏🏿🎪🛐

பாடல்: 3:  புகலி (என்பதால் 'ல' கர சீர்)
சனகாதி முனிவர்களுக்கு அருள குருமுகமாய் அருளிய இடம்.  தேவர்கள் புகலிடமான இடம்.

பாடல் : 716

பகல்ஒளிசெய்  நகமணியை முகைமலரை
        நிகழ்சரண  அகவு  முனிவர்க்கு
அகலமலி  சகலகலை  மிகவுரைசெய்
        முகமுடைய  பகவன்இடமாம்
பகைகளையும்  வகையில்அறு  
முகஇறையை
          மிகஅருள   நிகரில்  இமையோர்
புகவுலகு  புகழஎழில்   திகழநிகழ்
           அலர்பெருகு  புகலிநகரே.

                               -03:325:03 (716)
பொருள் :

நகம் = மலை
முகை மலர் = தாமரை மலர்
பகவன் = சிவபெருமான்

பகல் ஒளி செய் - சூரியனைப்போற் பிரகாசிக்கும். 
நகம் மணியை - மலையிற் பிறக்கும் பத்மராக மணிகளையும். 
முகை மலரை - அரும்பு விரிந்த செந்தாமரை ( நாண் ) மலரையும். 
நிகழ் - போன்ற. 
சரண - திருவடிப் பேற்றுக்குரிய. 
அகவு - விருப்பம் மிக்க. 
முனிவர்க்கு - சனகாதி முனிவர்களுக்கு,

அகலம்மலி - விஸ்தார மாகிய, 
சகலகலை - கலைகளனைத்தையும். 
மிக - ( தெளிவு ) மிகும்படி. 
உரை செய் - உபதேசித்தருளிய. 
முகம் உடைய - திருவருள் நோக்கம் உடைய. 
பகவன் இடமாம் - சிவபெருமானின் இடம் ஆகும். 
முகை மலர்ந்த மலர் - புதுப்பூ. பகவன் - சிவபெருமான் 
 முகம் - என்னும் சொல் திருவருள் நோக்கம் என்னும் பொருளில் வந்தமை காண்க. 

பகை - தேவர் பகைவர்களாகிய அரக்கர் முதலாயினோரை. ` பகை ` பகைவருக்கு ஆயினமையின் பண்பாகுபெயர்.
இறை - கடவுள். 
மிக - அறச்செயல்கள் அதிகரிக்க. 
அருள - தர. அதனால். 
நிகரில் இமையோர் - மகிழ்ச்சியில் நிகர் இல்லாத தேவர்கள். 

புக - சரண்புக, 
எழில் திகழ - அழகு விளங்க. 
நிகழ் - ( இவற்றால் ) நேர்ந்த ( புகலியெனும் பெயர் ). 
அலர்பெருகு - அனைத்துலகினும் மிக்குப் பெருகிய ( புகலி நகர் என்க.)

🛐🙏🎪🙏🏻🎪🙏🏼🎪🙏🏽🎪🙏🏾🎪🙏🏿🎪🛐
பாடல்:04 - வெங்குரு  =
💠குருபகவான் வழிபட்ட இடம்.
✳️('ங்' - சீர் அமைப்பில் பாடல்)

பாடல்: 717

அங்கண்மதி   கங்கைநதி    வெங்கண்அர
வங்கள்எழில்  தங்கும்  இதழித்
துங்கமலர்        தங்குசடை    அங்கிநிகர்
எங்கள்இறை   தங்கும்  இடமாம்
வெங்கதிர்வி   ளங்குலகம்    எங்கும்எதிர்
பொங்கெரிபு    லன்கள் களைவோர்
வெங்குருவி     ளங்கிஉமை   பங்கரசர
ணங்கள்பணி  வெங்குருவதே.

                                    -03.325:04 (717)
பொருள் :

இதழி=கொன்றை மலர்
வெங்குரு விளங்கி = குருபகவானைச் சுட்டியது.
வெம்மை = விருப்பம் என்னும் பொருள்.

அங்கண்மதி - அழகிய ஆகாயத்தினிடத்தில் உள்ள சந்திரனும், வெங்கண் அரவங்கள் - கொடிய பாம்புகளும். 
எழில் தங்கும் இதழித் துங்கமலர் - அழகு தங்கிய கொன்றையின் தூயமலரும். தங்கு சடை - பொருந்திய சடையானது. 
அங்கி நிகர் - தீயையொக்கும். 
எங்கள் இறை - எங்கள் தலைவன்.  

வெங்கதிர் - சூரியனால், 
விளங்கும் - விளங்குகின்ற. உலகமெங்கும் - உலகில் உள்ள அனைவரும். 
எதிர் - நல் வழிக்குமாறாக. 
பொங்கு - மிக. எரி - வருத்துகின்ற. புலன்கள் - மனம் முதலிய அந்தக் கரணங்களின் சேட்டையை. 
களைவோர் - நீக்க விரும்புவோர். 

வெங்குரு - கொடிய தேவ குருவினால். விளங்கி - தமது துயர் களைதற்கிடமிதுவேயென்று தெளிந்து. உமைபங்கர் - சிவபெருமானின் - சரணங்கள் பணி - பாதங்களைப்பணிந்த. 
வெங்குரு அது - வெங்குரு என்னும் அத்தலமாம்.
🛐🙏🎪🙏🏻🎪🙏🏼🎪🙏🏽🎪🙏🏾🎪🙏🏿🎪🛐

#வழிமொழிதிருவிராகம் என்னும் இவ்வற்புத பதிகத்தின் பாடல்களின் விளக்கத்தையும் சிறப்புகளையும் அடுத்தடுத்த பதிவில் தொடர்ந்து சிந்திக்கலாம்.

நன்றி.

🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
✍️எண்ணமும் ஆக்கமும்:

என்றும் அன்புடன்
சுப்ராம் அருணாசலம்
காரைக்கால்.🙇‍♂️🙏🙇‍♂️
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
பதிவு : ஒன்று
https://m.facebook.com/story.php?story_fbid=4163567850385107&id=100001957991710
பதிவு : இரண்டு
https://m.facebook.com/story.php?story_fbid=4167871086621450&id=100001957991710

No comments:

Post a Comment

பதிவு - 13 நாள் - 7 ஆதிகைலாஷ் தரிசனம் Gunji to Jolingkong (4630mts.) Adikailash and back to Budhi (2740mts.) Total 86 Kms. 9 - 10 hrs. நாள் - 7 - 01.06.24 - சனி

பதிவு - 13 நாள் - 7  மிக முக்கிய நாள் ஆதிகைலாஷ் தரிசனம் Gunji to Jolingkong (4630mts.) Adikailash and back to Budhi (2740mts.) Total  86 Kms...