அருள்மிகு சரிவார்க் குழலி உடனுறை இராமநாதர்
தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 77-ஆவது சிவத்தலமாகும். சம்பந்தர் பாடல் பெற்றது.
நாகப்பட்டினம் - நன்னிலம் - கும்பகோணம் சாலையில் உள்ள திருப்புகழுரில் இருந்து ஆட்டோ வசதி உள்ளது.
நன்னிலம் - நாகப்பட்டினம் சாலையில் உள்ள திருப்புகலூருக்கு தெற்கில் 2. கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இந்தத் தலம் திருப்புகலூரிலிருந்து முடிகொண்டான் ஆற்றைக் கடந்து, திருக்கண்ணபுரம் சென்று 1/2 கி.மீ. கிழக்கே சென்றால் இத்தலத்தை அடையலாம்.
அருளோடு பொருளும் அள்ளித் தரும் திருத்தலங்கள் சோழ நாட்டில் எண்ணற்றவை. அவற்றுள் ஸ்ரீராமபிரான் வழிபட்ட தலமாகப் பேசப்படுவது இராமனதீஸ்வரம். ""இராம நந்தீஸ்வரம்'' என்று முன்பு அழைக்கப்பட்டது இந்தத் தலம். திருக்கண்ணபுரம் ஊரின் சைவ ஆலயமாக இந்த இராமனதீஸ்வரமும், வைணவாலயமாக ஸ்ரீசெளரிராஜப் பெருமாள் ஆலயமும் அமைந்திருப்பது சிறப்பாகும்.
தல வரலாறு
சீதையை கடத்திச் சென்று சிறை வைத்தான் ராவணன். அவன் மீது போர் தொடுத்து, அவனை அழித்தார் ராமன். பரமேஸ்வரனின் அதிதீவிர பக்தனான ராவணேஸ்வரனைக் கொன்ற பாவம் பிரம்மஹத்தியாய் ராமபிரானை பற்றிக் கொண்டது. பிரம்மஹத்தி தோஷம் விலக வேண்டி, சேதுக் கரையில் மணலால் லிங்கம் அமைத்து வழிபட்டார் ராமர். இதுவே "இராமேஸ்வரம்' ஆனது.
ராவண சம்ஹார பாவம் தீர ராமன் சிவலிங்க வழிபாடு செய்ததாக தலபுராணம் கூறுகின்றது. அந்த பாவம் நீங்குவதற்காக பல தலங்களுக்குச் சென்ற ராமன், அதன் ஒரு பகுதியாக இந்த தலத்திற்கும் வந்தார்.
ரகுராமர் இங்கே தீர்த்தம் ஒன்றை ஏற்படுத்தி சிவபெருமானை வழிபட்டுள்ளார். இதனால் ஆலயத்தின் எதிரே உள்ள திருக்குளம் "இராமதீர்த்தம்' என்று அழைக்கப்படுகிறது.
அவர் இத்தலத்தில் உள்ள புஷ் கரணி தீர்த்தத்தில் நீராடி, பின் அய்யனை தரிசிக்க வரும் போது நந்தி தேவன் அவரை மறித்து நிற்கிறார். ‘ராவணனை கொன்ற பாவம் உங்களுக்கு நீங்கவில்லை. எனவே தாங்கள் உள்ளே செல்லக்கூடாது' என்பது அவரின் வாதம். ஆனால் அம்பிகை அந்த சம்பவத்தைப் பார்த்து திகைத்தார். உடனே அங்கு வந்து நந்தியை தனது திருக்கரத்தால் பிடித்து, ராமனை உள்ளே செல்ல வழி விடுகிறார். ராமபிரானும் உள்ளே சென்று லிங்கத்தை வழிபடுகிறார். அதன் பின் சாப விமோசனம் பெறுகிறார். ராமனுக்கு சாப விமோசனம் கொடுத்த ஈசன், ‘ராமநாதேஸ்வரர், ராமலிங்கேஸ்வரர்’ என பெயர் பெற்றார். நந்தி வழி மறித்தும் ராமன் உள்ளே வந்து சிவனை வணங்கி நின்ற காரணத்தினால், இந்த திருத்தலம் ‘ராமநந்தீஸ்வரம்’ என்று பெயர் பெற்றது. அதுவே நாளடைவில் மருவி தற்போது ‘ராமனதீச்சரம்’ என்று அழைக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தை உண்மை என நிரூபிக்கும் வகையில், சான்றாக இத்தல உற்ஸவ மூர்த்தியான சோமாஸ்கந்தர் விக்கிரகத்தில், அம்பாளின் இடது கரத்தில் நந்தி உள்ளதைக் காணலாம். இந்த விக்கிரகம் பாதுகாப்பு காரணமாக திருப்புகலூர் சிவாலயத்தில் வைக்கப்பட்டுள்ளது.
ராமபிரானால் வழிபாடு செய்யப்பெற்ற ராமேஸ்வரத்தைப் போல, ராமனதீச்சரமும் ராமனால் பூஜை செய்யப் பெற்றது. மேலும் இங்குள்ள சிவலிங்கத் திருமேனியில் ஜோதி புலப்படுவதாலும், ராமன தீச்சரமும் பன்னிரு ஜோதிர்லிங்க தலங்களுக்கு ஒப்பானதாக போற்றப்படுகிறது. இந்த தலத்தில் அருள்பாலிக்கும் இறைவனை வணங்கினால், இந்தியாவில் உள்ள பன்னிரு ஜோதிர் லிங்கங்களையும் தரிசித்த புண்ணியம் கிடைக்கும் என்கிறார்கள்.
துர்வாச முனிவர் இங்கே தவம் புரிந்ததால் தவ பூமியாகத் திகழ்கிறது.
துர்வாசர் பூஜித்த லிங்கம் : இந்த ஆலயத்தில் மற்றுமொரு சிறப்பு துர்வாச முனிவர். இவர் அத்ரி மகரிஷியின் மகன் ஆவார். இவர் பல இடங்களுக்குச் சென்று சிவபெருமானை பிரதிஷ்டை செய்து வணங்கி வந்துள்ளார். இவர் சென்ற இடங்களை எல்லாம், காளகஸ்தி கோவிலுக்கு இணையான கோவில் என்பார்கள். அந்த வகையில் இந்த திருத்தலத்திற்கும் வந்து, சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டு பேறு பெற்றுள்ளார் துர்வாச முனிவர். அந்த வகையில் இந்தத் திருத்தலமும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. துர்வாச முனிவர் பூஜித்த சிவலிங்கம், பைரவர் திருமேனிக்கு அருகில் அமைந்திருக்கிறது.
தலசிறப்புகள்
மூலவர் பெரிய திருவுருவம். உயரமான பெரிய சுற்றுடைய ஆவுடையாருடன் கூடிய உயர்ந்த பாணம். சுவாமியின் விமானம் வேசர அமைப்புடையது. கல்வெட்டில் சுவாமியின் பெயர் இராமனதீச்சர முடையார் என்று காணப்படுகிறது. குலோத்துங்கன் இக்கோயிற் பூசைக்காக சிவபாதசேகர மங்கலம் என்னும் பெயருடைய நிலப்பகதியை தானமாக அளித்த செய்தியும் கல்வெட்டு வாயிலாக தெரியவருகிறது.
ஆலய அமைப்பு
பேருந்து சாலையின் தென்புறமாய் முதலில் இராமதீர்த்தக் குளம் அமைந்திருக்க, எதிரே தோரண வாயிலுடன் ஆலயம் திகழ்கிறது.
உள்ளே நுழைந்தால், வாயிலுக்கு வெளியே நந்தியெம்பெருமான் வீற்றிருக்கின்றார். பலிபீடம், உள்ளது
வலது புறம் அன்னை கருவார் குழலியம்மை, ராமருக்கு தடை நீங்க நந்தியை கையில் பிடித்தது போல், அனைவர் வாழ்விலும் உள்ள இடர்பாடுகளை களைய இன் முகத்தோடு காத்திருக்கிறார்.
அம்பாள் ‘குழலி’ என்ற பெயரில் இந்த சுற்று வட்டாரத்தில் மட்டுமே அழைக்கப் படுகிறார். நந்தியை தடுத்து ராமரை தரிசனம் செய்ய அனுமதித்த தலம் என்பதால் இத்தலம் ராமேஸ்வரத்துக்கு இணையானது
ஒரே பிராகாரம் கொண்ட விசாலமான ஆலயம். ஆலயத்தின் மையமாக அமைந்த அகண்ட மேடை. அதன் மேற்குப் பகுதியில் சுவாமி சந்நிதியும், வட புறத்தில் அம்பாள் சந்நிதியும் அமைந்துள்ளன. தென்முகம் கொண்டது அம்பாள் சந்நிதி. அதனுள் ரம்மியமாய் காட்சி தருகின்றாள் அன்னை ஸ்ரீசூளிகாம்பாள். "சரிவார்க்குழலி' என்றும், "கருவார்க்குழலி' என்றும் அழைக்கப்படுகிறாள். கரத்தினில் ருத்ராட்ச மாலை ஏந்திக் காணப்படுகிறாள்.
பின், சுவாமி சந்நிதி அடையும் முன் இரண்டாம் வாயிலின் மேல் கயிலை தரிசனம் காணலாம். உள்ளே பெரியதொரு மகா மண்டபம். அடுத்து இடை மண்டபம். பின்னர் ஈசன் கருவறை. கருவறையுள் பளபளக்கும் கல்லாலான பச்சை இழையோடும் பாண லிங்கம் வட்ட ஆவுடை நடுவே உள்ளது. இவர் இராமநாதீஸ்வரர் என்றும் இராமலிங்கேஸ்வரர் என்றும் போற்றப்படுகின்றார். பக்தர்களை ஈர்க்கும் வண்ணம் ஜோதி வடிவாய் ஜொலிக்கின்றார்.
சுவாமி கருவறை விமானம் பிரம்மாண்டத்தை பிரதிபலிக்கின்றது.
இக்கோவில் விமானத்தை மாதிரியாக வைத்துதான் தஞ்சை பெருவுடையார் கோவில் கட்டப்பட்டது என்பர். எனவே இந்த கோவில் தஞ்சைக்கு நிகரானதாகும்.
இந்த ஆலயமானது, 32 அடி உயரத்தில் நான்கு தளங்களை கொண்ட விமானத்தோடு அமைந்துள்ளது. இதன் கலசம் செம்பினால் அமைக்கப்பட்டுள்ளது.
கோவிலைச் சுற்றி வந்தால்
இரண்டு தூண்களைக் கொண்ட தனி மண்டபமாக, தட்சிணாமூர்த்தி மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தை இரண்டு யாழிகள் தாங்குவது போன்ற அமைப்பு சிறப்பாக வடிக்கப்பட்டிருக்கிறது. சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் ஆகிய நால்வரும், சின்முத்திரையைக் காட்டி சிவ ரகசியத்தை அருளும் வண்ணம் வீற்றிருக்கிறார்கள்.
ஆலய வலம் வருகையில் கன்னி மூலையில் தனிச் சந்நிதியில் கணபதியையும், வருண பாகத்தில் கந்தனையும், வாயு திக்கில் கஜலக்ஷ்மியையும் வணங்கி மகிழ்கின்றோம். மேலும்,, லிங்கோத்பவர், வள்ளி - தெய்வானை சமேத முருகப்பெருமான், திருமால், பிரம்மா, சண்டிகேஸ்வரர், துர்க்கை, நவக்கிரகங்கள், பைரவர், துர்வாச முனிவர் வணங்கிய லிங்கம், மற்றொரு லிங்கம், அகத்தியர், அப்பர், திருஞானசம்பந்தர், காமதேனு, சூரியன் ஆகிய திருமேனிகள் காணப்படுகின்றன.
அம்மன் சன்னிதியில் கோவில் தல புராணத்தை விளக்கும் வண்ணம், ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன.
தல விருட்சமாக மகிழமரம் மணம் பரப்புகின்றது.. அம்பாள் சன்னிதிக்கு நேரில் எதிரில் பிரகாரத்தில் இந்த தல விருட்சம் இருக்கிறது.
மகிழ மரத்தை தல விருட்சமாக கொண்டதால், இத்தல இறைவனுக்கு ‘மகிழம்பூவனநாதர்’ என்ற பெயரும் உண்டு. மகிழ மரத்துக்கு என்று தனிச் சிறப்புகள் பல இருக்கின்றன.
திருவொற்றியூரில் சுந்தரமூர்த்தி சுவாமி களுக்காக சிவபெருமான் காட்சியளித்தது, மகிழ மரத்தின் அடியில் என்று பெரிய புராணம் கூறுகிறது. எனவே இந்த மரம் இருக்கும் இடத்தில் சிவபெருமானின் அருள் பல மடங்காக பெருகி இருக்கும் என்பது ஐதீகம்.
இக்கோயிலில் காணப்பட்ட கல்வெட்டில் இறைவன் பெயர் இராமநதீச்சர முடையார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தல இறைவனை, ராமநந்தீஸ்வரர், ராமநாதேஸ்வரர், ராமலிங்கேஸ்வரர் போன்ற பெயர்களில் அழைக்கிறார்கள். அதே போல் இறைவியையும், கருவார்குழலியம்மை, சூளிகாம்பாள், சரிவார்குழலி என்ற திருநாமங்களில் போற்றுகிறார்கள்.
சூரிய புஷ்கரணி, சூரிய பூஜை ஆகியவை இந்த ஆலயத்தின் தீர்த்தங்கள் ஆகும்
மணிகங்கை என்றொரு தீர்த்தமும் இத்தலத்துக்கு உண்டு.
இத்தலம் ஞான சம்பந்தரால் பாடப்பட்ட தலமாகும். தேவாரப்பாடல்கள்: சம்பந்தர் : சங்கொளிர் முன்கைய....
திருக்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீனத்தின் மூலமாக இந்தக் கோவில் பராமரிக்கப்பட்டு, அனைத்து பூஜைகளும் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
நந்தன ஆண்டு ஐப்பசி 26-ஆம் நாள், 11.11.2012 ஞாயிறு அன்று குடமுழுக்கு ஆனதற்கான கல்வெட்டு கோயிலில் உள்ளது.
இந்த ஆலயத்தில் ஐப்பசி மாதம் வரும் கந்த சஷ்டியை முன்னிட்டு 10 நாள் உற்சவம் நடைபெறும். இந்த உற்சவத்தில் சுப்பிரமணியர் தீர்த்தவாரி நடக்கிறது. இங்குள்ள சுப்பிரமணியர் திருச்செந்தூர் முருகனுக்கு இணையானவர். எனவே இங்கு வந்து வணங்கினால் திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்ததற்கு சமமாகும். கார்த்திகை மாதம் சஷ்டி திதியில் சண்முகருக்கு சிறப்பு அர்ச்சனை நடைபெறும். இந்த கோவிலை பொறுத்தவரை சகல தோஷமும் நீங்கும் தலமாகும். ராமர் வழிபட்ட தலம் என்பதால் இந்த தலம் ராஜராஜ சோழன் ஆட்சிக்கு முற்பட்டதாக கருதப்படுகிறது.
அம்மனை வழிபட்டு சுமங்கலி பூஜை செய்தால், அவர்கள் குடும்பம் செழிப்படையும். கணவர்கள் நோய் பிடியில் இருந்து விடுபடுவார்கள். பெண்கள் தீர்க்க சுமங்கலியாக இருப்பார்கள். பெண்களுக்கு சுக பிரசவம் நடை பெறும். திருமணத் தடை நீங்கி, குழந்தை பேறு கிடைக்கிறது.
இந்த ஆலயம் தினமும் காலை 6 மணியில் இருந்து 10 மணி வரையிலும், மாலை 5 மணியில் இருந்து இரவு 8 மணி வரையிலும் திறந்து இருக்கும்.
நன்றி வலைதளம்...🙏📚📡💻
பல முறை தரிசனம் கிடைக்கப்பெற்ற தலம்.
#மீள்தரிசனம்
4.02.2026 #சுப்ராம்தரிசனம்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
🌼
No comments:
Post a Comment