சூரியகோடீசுவரர் கோவில்
கும்பகோணத்தில் இருந்து, கஞ்சனூர், திருலோகி கிராமங்களின் அருகில் 15.கி.மீ தொலைவில், சூரியனார் கோவிலுக்கு அருகே அமைந்துள்ளது கீழசூரியமூலை என்ற தலம்.
கும்பகோணத்திலிருந்து கஞ்சனூர் வழியாக திருலோகி செல்லும் பேருந்தில் சென்றால் கோவிலருகே இறங்கிக் கொள்ளலாம்.
ஆலய அமைப்பு:
கிழக்குப் பார்த்த சந்நிதியில் அருள்கிறார் சூரிய கோடீஸ்வரர். தெற்கு நோக்கிய சந்நிதியில் பவளக்கொடி அம்பாள்.
தெற்கு கோட்டத்தில் ஆனந்த தட்சிணாமூர்த்தி புன்னகைத்த நிலையில் காட்சி தருகிறார். வெளித் திருச்சுற்றின் தென் மூலையில் சக்தி விநாயகரும், மேல் திருச்சுற்றில் வள்ளி தெய்வானையுடன் முருகனும், தென் மூலையில் நாகலிங்கமும், வடக்குப் திருச்சுற்றில் துர்க்கை மற்றும் சண்டிகேசுவரர் திருமேனிகளும் உள்ளன.
வடமேற்கு மூலையில் நவக்கிரகங்கள் தங்கள் வாகனங்களுடன் தனிமண்டபத்தில் காட்சி தருகிறார்கள். உள்ளே, சுவாமி மண்டபத்தின் வடகிழக்கு மூலையில் பைரவர் மற்றும் சூரியன் திருமேனிகள் உள்ளன.
இங்குள்ள மூலவரை காலை முதல் மாலை வரை சூரிய பகவான் தனது பொற்கதிர்களால் ஆராதனை செய்வதாக ஐதீகம். அதற்கு ஏற்ப காலை சூரிய உதயம் முதல், மாலை சூரிய அஸ்தமனம் வரை மூலவரின் நிழல் சுவற்றில் தெரியும். மற்ற நேரங்களில் தெரிவதில்லை.
பல ஆலயங்களில் கருவறை இறைவன் மீது ஒரு ஆண்டில் சில நாட்கள் மட்டுமே சூரிய ஒளி படரும். இப்படி ஒளிபடுவதை சூரியன் செய்யும் சிவபூஜை எனக் கூறுவர். ஆனால், இந்த ஆலய இறைவன் மீது தினந்தினம் கதிரவனின் பொற்கதிர்கள் சில நிமிடங்களாவது படர்ந்து செல்வது எங்கும் காணாத அற்புதம் என்கின்றனர் பக்தர்கள்.
பைரவர்:
பைரவரின் கழுத்தில் சிவப்பு ஒளி வெளிப்படும் அற்புதம்.
இக்கோவிலில், சுவாமி மண்டபத்தின் வடகிழக்கு மூலையில் பைரவர், சூரியன் திருமேனிகள் உள்ளன. இங்குள்ள பைரவர், சொர்ண பைரவர், என அழைக்கப்படுகிறார். இந்த பைரவருக்கு தீபாராதனை காட்டும்போது அவரது கண்டத்தில் (கழுத்தில்) பவளமணி அளவில் சிவப்பு ஒளி வெளிப்படுவதும், அது மெல்ல அசைவதும் மெய் சிலிர்க்க வைக்கும் காட்சி.
சுவாமி, அம்பாளுக்கு ஆரத்தி காண்பித்து விட்டு, பைரவரிடம் ஆரத்தி காட்டும்போது மட்டும், பைரவரின் கண்டத்தில் (கழுத்தில், குரல்வளை பகுதியில்) சிவப்பு நிறத்தில் பவழம் போல ஓர் ஒளி தோன்றி, அசைந்து மறைகிறது. சிறு பொறி போல வந்து மறையும் அந்தப் பவழ மணியின் ஒளிக்கிரணங்கள்தான், நம் பித்ரு சாபத்தை யும் சூரிய சந்திரர்களின் கிரணங்களால் ஏற்படும் துன்பங்களையும் பிணிகளையும் தீர்த்து வைக்கும் என்பது நம்பிக்கை.
இந்த பைரவர் தன் கழுத்துப் பவளமணியின் ஏழு ஒளிக் கிரணங்களின் மூலம் அனைத்து கோடி சூரிய, சந்திர மூர்த்திகளின் ஒளிக் கிரணங்களால் ஏற்படும் தோஷங்களையும், பிணிகளையும் நிவர்த்தி செய்கிறார். தவிர பணத்தட்டுப்பாடு, வறுமையைப் போக்கக் கூடியவர். இந்த பைரவர் என்ற நம்பிக்கையும் உண்டு.
இந்த பைரவரின் கண்டப்பகுதி ஆறு மாதங்களுக்கு ஒரு முறை நிறம் மாறுவதும், பின் பழைய நிலையை அடைவதும் இததலத்தின் சிறப்பு. இத் தலத்தின் பைரவரை தரிசனம் செய்தால் பக்தர்களின் கண்டம் நீங்குமாம்.
துர்க்கை
பக்தர்களை எழுந்து வந்து வரவேற்கும் அபூர்வத் தோற்றத்தில் துர்க்கை அம்மன்
இக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் துர்க்கையின் ஒரு பாதத்தில் மட்டும் மெட்டி உள்ளது. மேலும் துர்க்கையின் இரு பாதங்களும் ஒன்றுக்கொன்று நேரான நிலையில் இல்லை. அதாவது துர்க்கை அம்மன் தன் வலது காலை சற்று முன்பக்கமாக நீட்டி வைத்துக்கொண்டு காட்சி தருகிறாள். இந்த தோற்றமானது, தன்னைத் தரிசிக்க வரும் பக்தர்களை துர்க்கை அம்மன் வலது காலை முன் வைத்து எழுந்து, அவளே முன்னால் வந்து வரவேற்பது போல தோன்றும். துர்க்கை அம்மனின் இந்த தோற்றத்தை நாம் வேற எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.
மகாலட்சுமி
இக்கோயிலில், கோயிலின் குபேர மூலையில், பத்மாசன கோலத்தில் இருக்கும் மகாலட்சுமியின் வலக்காலில் ஆறாவது விரல் அமைந்துள்ளது. ‘ஆறு’ என்பது சுக்கிரனுக்குரிய எண். எனவே சுக்கிரனின் ஆதிக்கம் அவளிடம் நிறைந்திருக்கிறது என்கிறார்கள். மகாலட்சுமி எப்போதும் சுக்கிரனுடைய அனுக்கிரகத் திலேயே இருப்பதால், அவளை வணங்குவோருக்குச் செல்வத்தை அருளுவாள்.
இங்ஙனம் மகாலட்சுமியின் கடாட்சம் கிடைக்கும்படி அருளும் இத்தலத்தின் நாயகனாம் சூரியகோடீஸரரை ஒருமுறை தரிசித்து வழிபட்டால், நம் வாழ்வில் வறுமை என்பதே இருக்காது. எல்லா செல்வங்களும் பொங்கிப்பெருகும்; கடன் பிரச்னைகள் முற்றிலும் நீங்கும் என்பது நம்பிக்கை.
இந்த ஆலய இறைவன் மீது தினந்தினம் கதிரவனின் பொற்கதிர்கள் சில நிமிடங்களாவது படர்ந்து செல்வது எங்கும் காணாத அற்புதம்.
ஒரு கண் பார்வை, மாறுகண் பார்வை, மங்கலான கண் பார்வை, பார்வை இழப்பு போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இத் தலத்திற்கு வந்து சூரிய கோடீசுவரரை வழிபட்டால் பலன் கிடைக்கும்.
தமிழ் தாத்தா. உ.வே.சாமிநாதய்யர் பிறந்த ஊர்.
தல புராணம் :
"கீழச்-சூரிய-மூலை" என்கிற #சூரியகோடீஸ்வரர் திருத்தலம்.
சூரியனுக்கு மூலாதார சக்தியை கொடுத்ததால் சூரிய மூலை என இத்தலம் அழைக்கப்பட்டது. சூரியனார் கோவிலில் தன் குஷ்ட நோய் நீங்கப் பெற்ற சூரியன், இத்தலத்தில் தன் முழு சக்தியையும் பெற்றான்.
அனைத்து லோகங்களில் உள்ளவர்கள் பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொண்டு பயனடைவதைக் கண்ட சூரிய பகவானுக்கு, தன்னால் பிரதோஷ வழிபாட்டில் கலந்துகொள்ள முடியவில்லையே என்ற ஏக்கம் இருந்தது. பிரதோஷ நேரம் என்பது தினசரி மாலைப் பொழுதுதானே! சூரியன் மறையும் நேரம் அது என்பதால் சூரியனால் வழிபாட்டில் எப்படி கலந்து கொள்ள முடியும்? அந்த நேரம் தன்னுடைய பணி நேரம் என்பதால் அந்த வழிபாட்டில் தன்னால் நிரந்தரமாக எப்போதுமே கலந்துகொள்ள முடியாமல் போய்விடுமே என எண்ணி வேதனை அடைந்தார். தன் வேதனையையும், வருத்தத்தையும் யாக்ஞவல்கிய மாமுனியிடம் எடுத்துரைத்தார் சூரிய பகவான். இந்த மாமுனி சூரியபகவானிடமிருந்து வேதங்களைக் கற்றவர்.
சூரிய பகவானின் வருத்தத்தைக் கேட்ட மாமுனி, அவருக்கு ஆறுதல் கூறினார். பின், தான் தினந்தோறும் வழிபடுகின்ற கீழச் சூரிய மூலையில் உள்ள சூரிய கோடிப் பிரகாசரிடம் தன் சூரியனின் கவலையை எடுத்துரைத்து, தினந்தோறும் அவரை வணங்கினார். தன் குருவின் வேதனையை தீர்த்து வைக்கும்படி வேண்டினார். பின், சூரிய பகவானிடமிருந்து தான் கற்றுக்கொண்ட வேதங்கள் அனைத்தையும் தட்சணையாக, வேதாக்கனி யோகப் பாஸ்கரச் சக்கர வடிவில் அவற்றின் பலன்களைப் பொறித்து சூரிய கோடீஸ்வரருடைய பாதங்களில் அர்ப் பணித்தார். மாமுனி சமர்ப்பித்த வேத மந்திர சக்திகளெல்லாம் சூரிய கோடீஸ்வரருடைய திருவடிகளில் ஓர் அற்புத விருட்சமாக வளர்ந்தது. அதுவே இலுப்பை மரம். இந்தக் கோவிலின் தல விருட்சமும் இதுதான்.
இலுப்பை மரத்தில் உருவான இலுப்பைக் கொட்டையிலிருந்து எடுக்கப்பட்ட இலுப்பை எண்ணெயால் தீபம் ஏற்றத் தொடங்கினார் மாமுனி. அந்த பகுதி இலுப்ப மரக் காடாக மாறியது. தினமும் அந்த மரங்களிலிருந்து கிடைக்கும் இலுப்பை எண்ணெயால், கோடி அகல் தீபங்கள் ஏற்றி சூரிய கோடீஸ்வரரை வழிபடத் தொடங்கினார். தினமும் மாலையில் சந்தியா வேளையில் இந்த வழிபாடு நடந்தது. அந்த நேரம் பிரதோஷ வழிபாட்டு நேரம் அல்லவா? மறுநாள் காலையில் சூரிய உதயத்தின் போது சூரிய பகவான், இந்த இலுப்பை எண்ணெய் தீபங்களைத் தரிசித்து பிரதோஷ வழிபாட்டின் பலன் அனைத்தையும் பெற்றார் என்பது புராண வரலாறு. இந்த புராண வரலாற்றுகுரிய தலமே கீழச் சூரிய மூலை.
உலகம் அறிய வேண்டிய அற்புத ஆலயம்.
தகவல்கள்: வலை தளங்கள் நன்றி🙏🏻
#மீள்தரிசனம் - #ரதசப்தமி
25.01.2026 #சுப்ராம்தரிசனம்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
No comments:
Post a Comment