Friday, February 6, 2026

செங்காட்டாங்குடிஅருள்மிகு திருக்குழல் நன்மாது உடனுறை கணபதீச்சரத்தார்திருமுறைத்தலம், திருப்புகழ் தலம்

செங்காட்டாங்குடி
அருள்மிகு திருக்குழல் நன்மாது உடனுறை கணபதீச்சரத்தார்
திருமுறைத்தலம், திருப்புகழ் தலம்

திருச்செங்காட்டங்குடி (Thiruchenkattankudi), தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருமருகல் வட்டாரத்தில் அமைந்துள்ள ஒரு வரலாற்று சிறப்புமிக்க கிராமம் ஆகும். இது தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் 79-வது சிவத்தலமாகப் போற்றப்படுகிறது. இக்கோயில் உத்தராபதீசுவரர் திருக்கோயில் எனப்படுகிறது. 

 நாகைமாவட்டம் நன்னிலம் வட்டத்தில் உள்ளது. திருவாரூரிலிருந்தும் பேருந்து வசதி உள்ளது. 
இறைவன் - கணபதீச்சரத்தார். பைரவ கோலத்துடன் உத்திராபதியார் எழுந்தருளியிருக்கிறார். ஆத்திவனநாதர், மந்திரபுரீசுவரர், கணபதீஸ்வரர், பிரமபுரீஸ்வரர், பாஸ்கரபுரீஸ்வரர்.  
இறைவியார் திருப்பெயர்: சூளிகாம்பாள் (குழலம்மை), திருகுகுழல் உமைநங்கை.  

தல மரம்: ஆத்தி மரம் தீர்த்தம் : சூரிய தீர்த்தம், தீர்த்தக் குளம் கோயிலுக்கு எதிரில் உள்ளது.   

வழிபட்டோர்: சம்பந்தர்,அப்பர் , சுந்தரர், பரணதேவ நாயனார், சேக்கிழார், விநாயகர், பிரமன், சத்பாஷாடர் முதலியோர். Sthala Puranam

விநாயகப்பெருமான் கஜமுகாசுரனைக் கொன்றகாலத்து அவன் உடலினின்றும் பெருகிய இரத்தவெள்ளத்தால் இவ்விடம் முழுதும் செந்நிறமாயிற்று. ஆதலால் இத்தலம் செங்காடு, செங்காட்டங்குடி எனப் பெயர்பெற்றது. விநாயகப்பெருமான் கயமுகனைக் கொன்ற கறை நீங்கச் சிவலிங்கப்பெருமானைத் தாபித்து வழிபட்டார். அதனால் `கணபதீச்சரம்` எனத் திருக்கோயில் வழங்கப்பெறுவ தாயிற்று. இவ்வரலாற்றைக் கந்தபுராணத்து,

ஏடவிழ் அலங்கல் திண்டோள் இபமுகத் தவுணன் மார்பில்
நீடிய குருதிச் செந்நீர் நீத்தமாய் ஒழுகும் வேலைப்
பாடுற வருங்கான் ஒன்றிற் பரத்தலின் அதுவே செய்ய
காடெனப் பெயர்பெற் றின்னுங் காண்டக இருந்த தம்மா!
மீண்டும்செங் காட்டில் ஓர்சார் மேவிமெய்ஞ் ஞானத்தும்பர்
தாண்டவம் புரியுந் தாதை தன்னுருத் தாபித் தேத்திப்
பூண்டபேர் அன்பிற் பூசை புரிந்தனன் புவியு ளோர்க்குக்
காண்டகும் அனைய தானம் கணபதீச் சரம தென்பர்.
என்ற செய்யுட்களான் அறியலாம்.
மிகப் பழமையான திருவாத்திவிருக்ஷம் ஒன்று, எழுந்தருள் நாயகர் திருமுன்பு இருக்கின்றது. பிராகாரத்தின் கீழ்ப்பக்கத்தில் இத்தலத்து வாழ்ந்த சிறுத்தொண்டர், திருவெண்காட்டு நங்கை, சீராளன், சந்தன நங்கை இவர்கள் திருவுருவங்கள் இருக்கின்றன. சிறுத்தொண்டர், உத்தராபதியினின்றும் வந்த பைரவ வேடம் தாங்கிய பரமனுக்குத் தம்மகன் சீராளனையே கறிசமைத்திட்டு முத்தியடைந்தனர் என்பது வரலாறு. 

இந்த அடியார் பெருமகனார், திருஞானசம்பந்தப் பெருமானும், அப்ப மூர்த்திகளும் எழுந்தருளியகாலத்து அவர்கள் நட்பைப்பெற்று அவர்கள் பதிகத்துச் சிறப்பிக்கப்பெறும் தகுதியைப்பெற்றவர். சித்திரைப் பூர்ணிமையில் சிறுத்தொண்டர் திருவமுதுபடைத்த திருவிழா நடைபெறும். அமுதுபடையல் என்றே அது வழங்குகிறது.

சிறப்பம்சங்கள்:
மூலவர்: உத்தராபதீசுவரர் (இத்தலம் மந்திரபுரீசம், ஆத்திவனம் எனப் பல பெயர்களால் அழைக்கப்படுகிறது).
சிறப்பு: பார்வதி தேவிக்கு சிவபெருமான் நர்த்தனமாடிக் காட்டிய தலம். விநாயகர், "வாதாபி கணபதி"யாகப் போற்றப்படுகிறார்.
வரலாறு: சிறுத்தொண்ட நாயனார் அவதரித்த தலம். இவரது மகனைப் பலியிட்டு சிவனுக்கு உணவு படைத்த பக்தி கதை இத்தலத்துடன் தொடர்புடையது.
திருவிழா: கணபதிக்கு சிறப்பு வழிபாடுகள் மற்றும் உத்தராபதீசுவரர் வெள்ளை சாத்தி உலா போன்றவை முக்கிய நிகழ்வுகளாகும்.

சந்தான பாக்கியம் (குழந்தை வரம்) அருளும் தலமாகவும், ஞானசம்பந்தர், நாவுக்கரசரால் பாடப்பெற்ற தலம். 

திருச்செங்காட்டங்குடி கோயில் தலவரலாறு Sthala puranam of Thiruchengattangudi Temple

கணபதி இறைவனை வழிபட்டதால் இக்கோயிலுக்கு "கணபதீச்சரம்" என்று பெயர். ஆலயம் கணபதீச்சுரம் எனவும், ஊர் திருச்செங்காட்டங்குடி எனவும் வங்கி வருகிறது. விநாயகர், கயமுகாசூரனைக் கொன்ற பழிதீர இங்கு இறைவனை வழிபட்டார். அசுரனைக் கொன்றபோது அவனுடைய உடற்குருதி படிந்து இப்பகுதி செங்காடாக ஆயினமையின் 'செங்காட்டங்குடி' என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது

. பைரவ வேடத்தில் இறைவன் வந்து சிறுத்தொண்டரிடம் பிள்ளைக்கறியமுது கேட்டு அவருக்கும் அவர் மனைவி, மகன், வேலைக்காரி ஆரியோருக்கும் அருள்புரிந்து தலம். 

"உத்ராபதியார் " திருமேனி உருவான விதம் பற்றி சொல்லப்படும் வரலாறாவது - ஐயடிகள் காடவர்கோன் என்னும் பல்லவ மன்னன், சிறுத் தொண்டருக்கு இறைவன் அருள் புரிந்த செய்தியைக் கேட்டு, இத்தலத்திற்கு வந்து, பல நாட்கள் தங்கி வழிபட்டு வந்தார். உத்திராபதியாரின் தோற்றத்தைக் காண விரும்பினார். இறைவன், "இத்திருக்கோயிலைத் திருப்பணி செய்து, உத்தராபதியார் திருவுருவம் அமைத்துச் சித்திரைத் திருவோணத்தில் குடமுழுக்கு செய்வாயாகில், யாம் சண்பகப்பூ மணம் வீசக் கட்சி தருவோம்" என்றருளினார். ஐயடிகள் அவ்வாறே செயல்படலானார். கொல்லர்கள் உத்ராபதியார் உருவம் அமைக்கத் தொடங்கினர். பல இடர்பாடுகள் - கும்பாபிஷேக நாள் நெருங்கியது. மன்னனோ விரைவில் முடிக்க கட்டளையிட்டான். வடிவம் நன்கு அமைய வேண்டுமே என்ற கவலையுடன் உலைக்களத்தில் ஐம்பொன்னை உருக்கிக் கொண்டிருந்தனர். இறைவன் சிவயோகியார் வடிவில் அங்கு வந்து நீர் கேட்டார். இருந்தவர்கள், "உலைக்களத்தில் நீர் ஏது? காய்ச்சிய மழுதான் உள்ளது; வேண்டுமானால் ஊற்றுகிறோம்" என்றனர். சிவயோகியார், "நல்லது; அதையே ஊற்றுங்கள்" என்றார். கொல்லர்கள் காய்ச்சிய மழுவை ஊற்ற, வாங்கியுண்ட சிவயோகியார் அங்கிருந்து மறைந்தார் - உத்தராபதீஸ்வரர் உருவானார். செய்தியறிந்த மன்னன் வியந்து போற்றி, அத்திருவுருவை கோயிலில் எழுந்தருளுவித்து - கும்பாபிஷேகம் செய்வித்தான். ஐயடிகள் காடவர்கோனுக்கு இறைவன் சண்பகப்பூவின் மணம் வீச, காட்சித் தந்தருளினார். (ஆதாரம் - கோயில் வரலாறு.)

இத்தலம் மூர்த்தி, தலம், தீர்த்தம், தலவிருட்சம் ஆகிய நான்காலும் சிறப்புடையது. சிறுத் தொண்டர் அருள் பெற்றத் தலம். மந்திரபுரி, செங்காடு, சத்தியபுரி, பிரமபுரி, தந்திரபுரி, ஆத்திவனம், பாஸ்கரபுரி, சமுத்திரபுரி, கணபதீச்சரம் ஆகிய ஒன்பது திருநாமங்களைக் கொண்டு விளங்குகின்றது. 

தல தீர்த்தம் - தீர்த்தக் குளம் கோயிலுக்கு எதிரில் உள்ளது; இத்தலத்தில் ஒன்பது தீர்த்தங்கள் உண்டென்று சொல்லப்படுகிறது; அவை:- சத்திய தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், அக்கினி தீர்த்தம், இந்திர தீர்த்தம், யம தீர்த்தம், வருண தீர்த்தம், வாயு தீர்த்தம், சீராள தீர்த்தம் என்பன அவ்வொன்பதாகும். இறைவனார், அடியார் பொருட்டு பூமியில் வந்து, தம் பாதம் தோய நடந்து அருள் செய்தத் திருத்தலங்களான சிதம்பரம், திருஆலவாய், திருவாரூர், திருக்கச்சூர் ஆலக்கோயில், திருகுருகாவூர் வெள்ளடை, திருஅம்பர்மாகாளம், திருமறைக்காடு, திருவாய்மூர், திருப்பஞ்ஞீலி, திருப்பெருந்துறை, திருச்சாய்க்காடு, திருவெண்ணைநல்லூர், திருநாவலூர் ஆகிய தலங்கள் வரிசையில் இத்தலம் இறைவன் உத்திராபதீஸ்வரராகத் தோன்றி, சிறுத்தொண்ட நாயனார் இல்லம் முதலாக கணபதீச்சர ஆலய ஆத்திமரம் வரை தனது பொற்பாதம் பதித்த சிறப்புடையது. 

இறைவன் அமர்ந்திருக்க, சிறுத்தொண்டர் அவரை அமுதுசெய்ய அழைக்கும் சிற்பம் இங்குள்ளது. 

விநாயகர், பிரமன், வாசுதேவன், சூரியன், சந்திரன், சத்யாஷாட முனிவர், சிறுத்தொண்டர், ஐயடிகள் காடவர்கோன் ஆகியோர் வழிபாடு செய்து பேறு பெற்ற தலம்.

 நாயன்மார்கள் வரலாற்றில், சரவணத்துத் தனயரான முருகப் பெருமானுடன் கூட இறைவியாரும் இறைவரும் சோமாஸ்கந்தர் திருக்கோலம் காட்டி அருளியது இத்திருத்தலத்தில்தான் என்ற தனிச் சிறப்பு பெற்றத் திருத்தலமாகும்.

 சுவாமி கருவறை அகழி அமைப்புடையது. மூலவர் கணபதீச்சரமுடையார். இங்கு பேழையில் மரகத லிங்கம் உள்ளது. 

சிறுத்தொண்டர் பல்லவ மன்னனின் தளபதியாக 'வாதாபி ' சென்று சாளுக்கியரோடு போர் செய்து வாகை சூடி வந்தபோது உடன் கொண்டு வந்த (வாதாபி) விநாயகரை இக்கோயிலில்தான் பிரதிஷ்டை செய்துள்ளார். 

சிறுத்தொண்டர் மாளிகை இன்று கோயிலாகவுள்ளது. இங்குச் சிறுத்தொண்டர், உத்ராபதீஸ்வரர் (உற்சவ காலங்களில் வீதி உலா வருபவர் இவரே),

 திருவெண்காட்டு நங்கை அன்னம் பரிமாறும் கோலத்தில் திருவுருவங்கள் உள்ளன. இத்தலத்தில் சில மருந்துப் பொருள்களும் சேர்த்து செய்யப்படும் சீராளங்கறி எனும் பிரசாதம் - அமுது படையல் விழா நாளன்று மட்டுமே கிடைக்கும்; மக்கட்பேறில்லாதவர்கள் உத்ராபதியாரை வழிபட்டு, இப்பிரசாதத்தை உண்டால் புத்திரப் பேறு அடையப் பெறுவர். 

கல்வெட்டுக்களில் இறைவன், 'செங்காடுடைய நாயனார் ', 'கணபதீச்சரமுடைய மகாதேவர் ', 'கணபதீஸ்வரமுடையார் ' எனவும்; தலத்தின் பெயர் "கயா மாணிக்க வளநாட்டு மருகல் நாட்டு திருச்செங்காட்டங்குடி" என்று குறிப்பிடப்படுகிறது.

நன்றி வலைதளம்...🙏📚📡💻
பல முறை தரிசனம் கிடைக்கப்பெற்ற தலம்.

#மீள்தரிசனம் 4.2.2026
4.02.2026 #சுப்ராம்தரிசனம்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

Check out this review of SCN079 Sri Uthirapasupatheeshwarar Swamy Temple, Thiruchengattangudi, Thevaram padal pettra sthalam on Google Maps
https://goo.gl/maps/VXDrd7SjrQJVLgv96

No comments:

Post a Comment

திருப்புகழூர் அருள்மிகு கருந்தாள் குழலியம்மை உடனுறை அக்கினிபுரீஸ்வரர் நாயன்மார்தலம் திருமுறைத்தலம், திருப்புகழ்த்தலம்

திருப்புகழூர் அருள்மிகு கருந்தாள் குழலியம்மை உடனுறை அக்கினிபுரீஸ்வரர் நாயன்மார்தலம் திருமுறைத்தலம்,  திருப்புகழ்த்தலம் தலம்: சோழவள நாட்டில் ...