ஓணகாந்தன்தளி
காஞ்சிபுரத்திலுள்ள பாடல் பெற்ற திருக்கோயில்கள் ஐந்தினுள் இத்திருக்கோயிலும் ஒன்று.
ஓணேஸ்வரர் காந்தேஸ்வரர் கோயில் தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுச் சிவாலயம்.
அமைவிடம்
இத்திருக்கோயில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு மேற்கேயுள்ள சர்வதீர்த்தத்துக்கு வடமேற்கே சுமார் ஒரு கி.மீ. தொலைவில் பஞ்சுப்பேட்டை என்ற பகுதியில் உள்ள துணை நிலையத்திற்கு எதிரில் கோவில் உள்ளது. சாலையோரத்திலேயே கோவிலும் மின் நிலையமும் அமைந்துள்ளது. இங்கு சுந்தரர் பதிகம் பாடி இறைவனிடமிருந்து புளியங்காய்களை பொன்காய்களாகப் பெற்றார் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).
அமைப்பு
வாணாசுரனுடைய சேனாதிபதிகளான ஓணன், காந்தன் என்னும் இருவர் வழிபட்ட இத்தலத்தில் இவ்விருவரும் வழிபட்ட ஓணேஸ்வரர், காந்தேஸ்வரர் ஆகிய இரு சிவலிங்கத் திருமேனிகளும் அடுத்தடுத்து தனிச் சன்னதிகளாக உள்ளன. சலந்தரன் வழிபட்டதாகச் சொல்லப்படும் சலேந்தரேஸ்வரர் சிவலிங்கத்திருமேனி தனியே உள்ளது. இவ்வகையில் ஓணகாந்தன்தளி ஓணகாந்தேஸ்வரர் கோயில் வளாகத்தில் மூன்று சிவலிங்கத் திருமேனிகளை மூலவராகக் கொண்ட மூன்று சன்னதிகள் உள்ளன. அவை ஒரே நுழைவாயிலைக் கொண்டு அமைந்துள்ளன. அணைத்தும் கிழக்கு நோக்கியே அமைந்துள்ளது
ஓணகாந்தேஸ்வரர்
ஓணகாந்தேஸ்வரர் (ஓணேஸ்வரர்) சன்னதியின் கோஷ்டத்தில் பாலவிநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். முன்புறத்தில் பலி பீடம் மற்றும் நந்தி உள்ளன. இங்கு வயிறுதாரி விநாயகர், குமார வேலன், பைரவர், சூரியன் நவக்கிரகம், அகோர வீரபத்திரர் ஆகியோரின் சன்னதிகள் உள்ளன.
காந்தேஸ்வரர்
காந்தேஸ்வரர் சன்னதியின் வலது புறத்தில் ஓம்கார கணபதி, இடது புறத்தில் சுப்ரமணியர் ஆகியோர் உள்ளனர். முன்புறம் நந்தி மண்டபம் உள்ளது.
சலந்தரேஸ்வரர்
இக்கோயிலுக்கு வெளியேயிருந்த, சலந்தரன் வழிபட்ட சிவலிங்கத் திருமேனியை எடுத்துவந்து இங்கு தனிக்கோயிலாக ஸ்தாபனம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதுவே சலந்தரேசம் எனப்படுகிறது; இது பிற்கால பிரதிஷ்டையாகும்.
சலந்தரேஸ்வரர் சன்னதிக்கு மேற்கண்ட இரு சன்னதிகளின் வலது புறத்தில் உள்ள திருச்சுற்றில் உள்ள வாயில் வழியாகச் செல்ல வேண்டும். வெளியிலிருந்து நேரடியாக உள்ளே வரமுடியாது. சலந்தரேஸ்வரர் சன்னதியின் திருச்சுற்றில் கணபதி சன்னதி, சுப்ரமணியர் சன்னதி, சண்டிகேஸ்வரர் சன்னதி ஆகிய சன்னதிகள் உள்ளன. முன் புறத்தில் பலிபீடம், நந்தி மண்டபம் ஆகியவை உள்ளன.
தல சிறப்பு
இத்திருக்கோயிலின் அர்த்த மண்டபத்தில் சுந்தரர் மற்றும் சிவபெருமானாரின் திருப்பாதம் உள்ளது.
இங்கு வந்த சுந்தரர், இறைவனிடம் அடிமைத் திறம் பேசி, 'நெய்யும் பாலும் தயிரும் கொண்டு' என்று தொடங்கும் பதிகம் பாடி பொன் பெற்றார் என்பது வரலாறு.மேற்படி பதிகத்துள் சுந்தரர் குறித்துள்ளதற்கேற்ப இக்கோயிலில் 'வயிறுதாரிப் பிள்ளையார் ' சந்நிதி உள்ளது.மேற்படி பதிகத்தில் ஐந்தாவது பாடலைத் தொடங்கிப் பாடும்போது, இறைவன் பக்கத்தில் உள்ள புளிய மரத்தில் சென்று ஒளிந்து கொண்டதாகவும்; அஃதறிந்த சுந்தரர் அங்குச் சென்று பதிகத்தை தொடரவே, இறைவன் அப்புளிய மரத்துக் காய்களையே பொன் காய்களாக விழுமாறு உதிர்க்க, சுந்தரர் அவற்றைப் பெற்றார் என்பதாக இப்பகுதியில் செவிவழிச் செய்தியாகச் சொல்லப்படுகிறது.இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
நன்றி🙏
#சுப்ராம்தரிசனம் 16.08.2026
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
No comments:
Post a Comment