Sunday, August 30, 2026

பழையனூர் சாட்சி பூதேஸ்வரர் ஆலயம் 15.8.26

பழையனூர்
சாட்சி பூதேஸ்வரர் ஆலயம்

திருவலங்காடு பஸ் நிலையத்திலிருந்து தெற்கே 1 கிமீ தூரத்தில் உள்ளது. 
கிழக்கு நோக்கிய ஒரு சிவலிங்கம் மட்டும் உள்ள சன்னதி சிறிய ஆலய அமைப்பு.
ஆலயம் எதிர்ப்புறம் நீலி புரானத்தில் வரும் நீதி வழுவாத 70 வேளாளர்கள் உயிர்நீத்த இடம் அடையாளப்படுத்தப்பட்டு உள்ளது 
நீலி புராணம்
காஞ்சிபுரத்தில் ஒரு வணிகன் வசித்து வந்தான். அவனது மனைவியின் பெயர் நீலி. அவளுடன் அவன் இன்பமாக வாழ்ந்து வந்தான். கணவனுக்கு நீலி ஒரு குறையையும் வைக்கவில்லை. என்றாலும் அந்த வணிகன் அடிக்கடி பாலியல் தொழில் புரிபவர்களின் வீட்டுக்கு சென்று வந்தான். நீலிக்கு இது பிடிக்கவில்லை. கண்டித்தாள். வணிகன் இதை பொருட்படுத்தவில்லை. தொடர்ந்து தனது லீலைகளை நடத்தி வந்தான். நீலியும் விடவில்லை. அவனை கண்டிப்பதையும் நிறுத்தவில்லை. தனது சந்தோஷத்துக்கு இடையூறாக நீலி இருப்பதால், சுபயோக சுபதினத்தில் அவளை அவன் கொன்று விட்டான்.

நீலி பேயாக மாறி அவனை பழிவாங்க அலைந்து கொண்டிருந்தாள். இந்த விஷயம் வணிகனுக்கு தெரிந்ததும் சாமியாரை தேடி ஓடினான். அவரிடமிருந்து ஒரு மந்திரவாளை பெற்றுக் கொண்டான். எங்கு சென்றாலும் அந்த வாளுடனேயே சென்றான்.

ஒருநாள் பழையனூருக்கு வியாபார விஷயமாக அவன் சென்றபோது, பேய் உருவில் இருந்த நீலி அவனை துரத்த ஆரம்பித்தாள். ஆனால், அவளால் அவனை எதுவும் செய்யமுடியவில்லை. அவனிடமிருந்த மந்திரவாள் அவளை தடுத்தது. உடனே நீலி, கள்ளிக்கொம்பை ஒடித்து அதை குழந்தையாக மாற்றினாள். தானும் ஒரு அழகிய பெண்ணாக மாறினாள். குழந்தையை இடுப்பில் சுமந்தபடி அவனை பின்தொடர்ந்தாள். வணிகன் பயந்துவிட்டான். நேராக பழையனூரில் உள்ள 70 வேளாளர்கள் அடங்கிய சபையில் முறையிட்டான். அழகிய பெண்ணாக உருமாறி இருந்த நீலி அழுதாள். இவர் என் கணவர். தாசி வலையில் விழுந்து என்னையும் எங்கள் குழந்தையையும் நிர்கதியாக விட்டுவிட்டார். எங்களை சேர்த்து வையுங்கள்…” என்று கதறினாள் .

இதை கேட்டு வணிகன் அலறினான். ” பொய். இவள் என் மனைவியே அல்ல. பேய்!” என ஓலமிட்டான். ஆனால், குழந்தை ஓடிச்சென்று அவனை கொஞ்சியது. ”அப்பா…” என்றழைத்து முத்தமிட்டது . இதனை பார்த்த வேளாளர்கள் வணிகன் பொய் சொல்வதாக நினைத்தனர். ”சரி, இன்றிரவு நீங்கள் மூவரும் இங்கேயே தங்குங்கள். நாளை காலையில் மற்ற விஷயங்களை பேசிக் கொள்ளலாம்” என்றபடி வணிகனையும், குழந்தையுடன் இருந்த அந்தப் பெண்ணையும் ஒரே அறையில் தங்க வைத்தனர். முரண்டு பிடித்த வணிகனை அடக்கினர். போகும்போது மறக்காமல் வணிகனிடமிருந்த அந்த மந்திர வாளை வாங்கி சென்றனர். ”உங்கள் பாதுகாப்புக்கு நாங்கள் எழுபது பேர் இருக்கும்போது இந்த வாள் எதற்கு? உங்களுக்கு ஏதாவது ஆபத்தென்றால் நாங்கள் எழுபது பேரும் இங்குள்ள இறைவன் மீது ஆணையாக சாட்சி அளித்து இறைவன் திருமுன்பாக தீக்குளிக்கிறோம்” என்று சொல்லிவிட்டு சென்றனர்.

வணிகனின் கையைவிட்டு மந்திரவாள் சென்றதும் அழகிய பெண்ணாக உருமாறியிருந்த நீலி, தன் உருவத்துக்கு வந்தாள். வணிகனை கொன்று பழி தீர்த்தாள். மறுநாள் வணிகனை காப்பாற்ற முடியாமல் போனதற்காக எழுபது வேளாளர்களும் தீக்குளித்து இறந்தார்கள்.

இவ்வாறு சாட்சியாக இருந்த இறைவன் மீது செய்த சத்தியத்தை காப்பாற்ற 70 பேர் இக்கோவிலின் முன்பு உயிர் நீத்தார்கள்

#மீள்தரிசனம்
15.08.2026 #சுப்ராம்தரிசனம்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#திருவலங்கடு #பழையனூர்

No comments:

Post a Comment

பழையனூர் (திருவலங்காடு) கைலாசநாதர் ஆலயம் 15.08.26

பழையனூர் கைலாசநாதர் ஆலயம் பழையனூரில் கிழக்குபாகத்தில் அமைந்துள்ளது கிழக்கு நோக்கிய ஆலயம் தென்புறம் நுழைவு வாசல் உள்ளது கீழ்புரம் பலிபீடம் நந...