Wednesday, October 8, 2025

பிள்ளையார்பட்டி - கற்பக விநாயகர் - 28.9.25

பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர்ஆலயம்

பிள்ளையார்பட்டிகற்பகவிநாயகர்ஆலயம்

🛕பிள்ளையார்பட்டிகற்பகவிநாயகர்ஆலயம்
🛕இருப்பிடம்
பிள்ளையார்பட்டி எனப் பெயர் கொண்டு விளங்கும் இவ்வூர் தமிழ்நாடு மாநிலத்தில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது. காரைக்குடியிலிருந்து திருப்பத்தூர் செல்லும் வழியில் குன்றக்குடிக்கு அடுத்து உள்ளது.

🛕பிள்ளையார்பட்டி என்னும் பெயரே இது விநாயகப்பெருமான் கோயில் கொண்டருளும் ஒரு சிற்றுர் என்பதை நன்கு விளங்க வைத்துக் கொண்டிருக்கிறது. 

🛕இந்த ஊருக்கு பிள்ளையார்பட்டி என்பதே இன்று நாடறிந்த பெயராயினும், 1. எருகாட்டூர் அல்லது எக்காட்டுர், 2. மருதங்குடி, 3. திருவீங்கைகுடி, 4. திருவீங்கைச்வரம், 5. இராசநாராயணபுரம் என்று வேறு ஐந்து பெயர்கள் உண்டு. மருதங்கூர், தென்மருதூர், கணேசபுரம், கணேசமாநகரம், பிள்ளை நகர் போன்ற பெயர்கள் பிற்காலப் பெயர்கள் பிற்காலப் பாடல்களில் காணப்படுகின்றன.

🛕ஆலய அமைப்பு :
இங்குள்ள சிறிய மலையின் அடிவாரத்தில் கோவில் குடையப்பெற்றுள்ளது. இக்கோவில் சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாகக் கருதப்படுகிறது.

🛕 மலையைக் குடைந்து அமைக்கப்பெற்ற சுமார் 6 அடி உயரமுள்ள கற்பகப் பிள்ளையாரின் உருவம் வடக்குத் திசை பார்த்துக் காணப்படுகிறது.

 🛕குகைக்கோயிலில், சிவன் மற்றும் பிற கடவுளர்களின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. ஆகம கல்வெட்டுக்களில் எழுதியுள்ளபடி இக்கோயில், பொ.ஊ. 1291 மற்றும் 1238ம் ஆண்டின் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தது எனக் கருதப்படுகிறது.

🛕கோயிலின் அமைப்பு இருபகுதிகளாக அமைந்திருக்கிறது. கோயிலின் ஒரு பகுதி குடைவரைக் கோயிலாகவும், மற்றொரு பகுதி கற்றளி எனவும் அமைந்திருக்கிறது. பிள்ளையார்பட்டி கோயில், தமிழ்நாட்டுக் குடைவரைக் கோயில்களில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

முதன்முதலாக நடந்த திருப்பணி இன்று காணப்பெறும் திருக்கோயிலின் தெற்கு புறத்தில் கீழ்மேலாக நீண்டு கிடக்கும் குன்றில் வடமுகமாக மலையைக் குடைந்து அமைக்கப் பெற்ற குடைவரைக் கோயிலாகும்.

🛕கோயில் திருமதிலின் கிழக்கு வாயிலில் ராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. ஏழு நிலைகளுடன் அமைந்த இக்கோபுரம் அதிட்டானம் முதல் கல்லாரம் வரை வெள்ளைக் கல்லாலும் அதற்கு மேற்பட்ட பகுதிகள் செங்கல் மற்றும் சுதை கொண்டு எழுப்பப்பட்டுள்ளது. 

🛕கற்பக விநாயகர் சந்நிதியின் முன்புறமாக இருக்கும் திருமதிலின் வடக்கு வாயிலில் விநாயகக் கோபுரம் எழுப்பப்பட்டுள்ளது. இது மூன்று நிலைகளுடன் காணப்படுகிறது. இக்கோபுரம் அதிட்டானம் முதல் கல்லாரம் வரை வெள்ளைக் கற்களைக் கொண்டும் அதன் மேல் எழுப்பப்பட்டுள்ள கோபுரத் தளங்கள் செங்கல்லைக் கொண்டும் எழுப்பப்பட்டிருக்கிறது.

🛕இந்த குடைவரைக் கோயிலுக்குள் நாம் நுழைந்தால் முதலில் உள்ள கிழ்மேல் ஓடிய பத்தி காணப்படும். அதற்கு அடுத்து நான்கு தூண்கள் இடைநிற்க தென்வடல் ஓடிய இரட்டைப்பத்தி மண்டபம் காணப்படும். அம்மண்டபத்தின் கீழ்புறபத்தியில் தென்பால் மலை நெற்றியில் 6 அடி உயரம் உள்ள கம்பீர நிலையில் விளங்கும் கற்பக விநாயகர் திருக்கோலம் அர்த்த சித்திரம் ஆக வடக்கு நோக்கி விளங்கக் காண்போம். இந்த மூர்த்தி தான் பிள்ளையார்பட்டியின் பெருந்தெய்வமான கற்பக விநாயகரான தேசிவிநாயகப் பிள்ளையார்.

🔰பிள்ளையாரின் சிறப்பு
1. இங்கு பெருமானின் துதிக்கை வலம்சுழித்ததாக அமைந்திருப்பது.
2. சாதாரணமாக மற்ற இடங்களில் இருப்பதைப்போல நான்கு கைகள் இல்லாமல் இரண்டு கரங்களை கொண்டு விளங்குவது.
3. அங்குச பாசங்கள் இல்லாமல் விளங்குவது.
4. வயிறு, ஆசனத்தில் படியாமல் "அர்த்தபத்ம" ஆசனம், போன்று கால்கள் மடித்திருக்க அமர்ந்தருள்வது.
5. இடக்கரத்தை கடிஹஸ்தமாக இடையில் நாட்டிப் பெருமிதக் கோலம் தோன்றப் பொலிவது.
6. வலக்கரத்தில் மோதகம் தாங்கியருள்வது.
7.ஆண், பெண் இணைப்பை புலப்படுத்தும் முறையில் வலத்தந்தம் நீண்டும், இடத்தந்தம் குருகியும் காணப்படுவது.ஆகிய இவை பிள்ளையார்பட்டி பெருமானிடம் காணப்பெறும் சிறப்பாகும். இவற்றால் நாம் உணரக்கூடியது உணர வேண்டியது ஒன்று. பிள்ளையார் வணக்கம் தமிழ் நாட்டில் தோன்றிய ஆதி நாளிலேயே இந்த மூர்த்தம் அமைக்கப் பெற்றிருக்கிறது என்ற உண்மை தான் அது.

🛕ஆறு அடி உயரமுள்ள கற்பக விநாயகரின் சன்னதி மலையைக் குடைந்து அமையப்பெற்றுள்ளதால், இங்கு சன்னதியை வலம் வர இயலாது. பிள்ளையாரின் திரு உருவம் வடக்கு நோக்கியும், அவரின் தும்பிக்கை வலது புறமாக சுழித்தும் (வலம்புரி விநாயகர்) இருப்பது இக் கோயிலின் தனிச் சிறப்பாக உள்ளது. 

🛕இங்கு திருமணம் நடைபெற வைக்கும் "கார்த்தியாயினி" அம்மன் சன்னதியும், பிள்ளை வரமளிக்கும் "நாகலிங்கம்" சுவாமி சன்னதியும், அனைத்து செல்வ வளங்களை அளிக்கும் "பசுபதீசுவரர்" சன்னதியும் உள்ளது.

🛕பிள்ளையர் சன்னதிக்கு அடுத்து  மேற்கே அதேமலை நெற்றியில் தெற்கு நோக்கிய சங்கர நராயணர் உருநாட்டு சண்டீசன், கருடன் இருவரும் இருபுறம் நின்ற கோலத்தில் விளங்குகிறார்.

🛕அந்த மேல்புரத்தில் பத்தியின் நடுவே கிழக்கு பார்த்த திருவாயிலுடன் கூடிய திருவுண்ணாழி துங்கானை மாட அமைதியிற் குடையப் பெற்றுள்ளது. அதன் நடுவிலே கடைந்தமைத்த பெரியதொரு மஹாலிங்கம் பொழிந்தினிது துலங்கக் காண்போம்.  இந்த மூர்த்தி தன் திருவீசர் என்று விளங்கும் திருவீங்கைக்குடி மஹாதேவர் .
குடைவரைக் கோயிலினுள் நடுவே கிழக்கு முகமாக அமைக்கப்பட்டிருக்கும் மகாலிங்கம் மிகுந்த பொலிவுடன் காணப்படுகிறது. இக் குகைக் கோயிலிலிருந்து சிறிது தூரத்தில் கிழக்கு நோக்கிய சந்நிதியாக அமைந்திருக்கிறது மருதீசர் சந்நிதி. சதுர வடிவ கருவறையின் நடுவே வட்ட வடிவமான ஆவுடையார் மீது லிங்க வடிவில் அமைந்துள்ள மருதீசர் அர்ஜுனவனேசர் என்ற பெயரிலும் வழங்கப்படுகிறார். இக் கருவறையைச் சுற்றியுள்ள புறச் சுவர்கள் சிற்பங்கள் எதுவுமின்றி நுட்பமான கட்டட வேலைப்பாடுகளுடன் மிக அழகாகவும் எளிமையாகவும் திகழ்கின்றன. மருதீசர் கோயில் 30 செப்புத் திருமேனிகளைக் கொண்டுள்ளது. காலத்தால் இவை பொ.ஊ. 10-ஆம் நூற்றாண்டு முதல் 19-ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி வரையிலானது.

🛕திருவுண்ணாழியின் வடபுற வெளிச்சுவரில் வடக்குப் பார்த்த லிங்கோத்பவர் மூர்த்தியை காணலாம். இந்த அளவில் உள்ள குடைவரைக் கோயில் தான் முதல்திருப்பணி ஆகும்.
மருதீசர் கோயிலின் மேல்சுற்றுப் பிரகாரத்தின் வடகிழக்குப் பகுதியில் வீற்றிருப்பவர் வாடாமலர் மங்கை. இவருடைய சந்நிதி தெற்கு முகமாகக் காட்சியளிக்கிறது. கருவறை நடுவே அம்மனின் திருஉருவம் பத்ம பீடத்தின் மீது இரண்டு கைகளுடன் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறது. இக் கோயிலின் தலவிருட்சமாக அர்ச்சுனா மரம் உள்ளது. வடக்கு கோபுர வாயிலின் உள்ளே கிழக்குப் பகுதியில் சிவகாமியம்மன் சந்நிதி உள்ளது. மகா மண்டபத்தின் வடக்குப் பகுதியில் நடராசர் சபையுள்ளது. அலங்கார மண்டபத்தில் வரையப்பட்டிருக்கும் ஓவியங்கள் ஓவியக்கலைக்குப் பெருமை சேர்க்கும் விதமாக அமைந்திருக்கிறது.

🛕சிறப்பு:
 இக் கோயில் சிவன் கோயிலாக இருந்தாலும் கற்பக விநாயகரால் மக்களிடையே பிரசித்தி பெற்று பிள்ளையார்பட்டி பிள்ளையார் கோயில் என்றே அழைக்கப்படுகிறது.

🛕விநாயகர் கோபுரத்திற்கு எதிரே வெளிப் பிரகாரத்தின் வட திசையில் விசாலமாக அமைந்த திருக்குளம் உள்ளது.

 🛕பிள்ளையார்பட்டியில் ஒவ்வொரு சதுர்த்தியின்போதும் இரவு நேரத்தில் விநாயகர் மூஷிக வாகனத்தில் எழுந்தருளி கோயில் உட்பிரகாரத்தில் வலம் வருவார். ஆவணியில் வரும் விநாயகர் சதுர்த்தி பெரும் விழாவாக கொண்டாடப்படுகிறது.

🛕இக் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் வேண்டுகோள் நிறைவேறியதும், இத் தலத்தில் உள்ள பிள்ளையாருக்கு, முக்குறுணி மோதகம் (கொழுக்கட்டை) படைத்து வழிபடுகிறார்கள். தொழில் அபிவிருத்தி வேண்டுவோர் இத்தலத்தில் கணபதி ஹோமம் செய்து பயனடைகிறார்கள். மேலும் அருகம்புல் மாலை அணிவித்து வழிபாடு செய்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்துகிறார்கள்.

#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️

💠காலை 6 மணிக்கு தான் ஆலயம் திறக்கப்படுகிறது. வடக்கு, கிழக்கு
இரண்டு நுழைவு வாயில் உள்ளது.
இரண்டும் வரிசைகள் முறைப்படுத்தப்பட்டுள்ளது. முதலில் விநாயகர் தரிசனம் அடுத்து சிவனாலயம்.

💠ஆலயம் முழுதும் தரிசித்துப்பின் குன்றை வெளிப்புறமாக சுற்றி வரலாம். நல்ல பாதை வசதிகள் உண்டு. 

💠கிழக்குப் புறத்தில் உள்ள குளம் அடுத்து சன்னதி வீதியி முழுதும் சிறு கடைகள், உணவுக்கடைகள், ஆலய பூசை பொருட்கள் முதலியன உள்ளன.

💠வாகன நிறுத்துமிடங்கள், தங்கும் இடங்கள், குளியல், கழிப்பறைகள், மண்டபங்கள் வசதிகளும் ஏராளம் உண்டு.

💠பக்தர்கள் வருகை எப்போதும் அதிகம் இருப்பதால், பரபரப்பாக எப்போதும் இவ்வூர் உள்ளது.

💠பல முறை சென்று தரிசித்து இருந்தாலும், ஆலயம் ஒவ்வொறு முறையும் பொலிவுடன் விளங்குவதையும் வளர்ச்சியையும் பெருமிதத்துடன் காண முடிகிறது.

நன்றி🙏
28.09.25 ஞாயிற்றுக்கிழமை
#சுப்ராம்தரிசனம்
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#பிரதோஷக்குழுயாத்ரா 28.09.2025

No comments:

Post a Comment

வேலங்குடி பெருமாள் ஆலயம் 28.9.25

வேலங்குடி பெருமாள் ஆலயம் #வேலங்குடிபெருமாள் ஆலயம் 🛕  பெருமாள் ஆலயமும் அழகுற அமைந்துள்ளது. ராஜகோபுரம், பிரகாரம்,  உள்ளே பெரிய மண்டபம். கருடன...