Wednesday, October 8, 2025

குன்றக்குடி சண்முகநாதர் ஆலயம்குன்றக்குடி குன்றவர் முருகன் கோயில் - 28.9.25

குன்றக்குடி  சண்முகநாதர்ஆலயம்

#குன்றக்குடி சண்முகநாதர் ஆலயம்
குன்றக்குடி குன்றவர் முருகன் கோயில்.

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி எனும் ஊரின் குன்றின் உச்சியில் சண்முகநாதர், வள்ளி – தெய்வானையுடன், ஆறுமுகங்களும் பன்னிரு திருக்கரங்களுடன் காட்சி தருகிறார். இக்கோயிலில் குடிகொண்ட முருகனை குறித்து அருணகிரிநாதர் தம் திருப்புகழில் பாடியுள்ளார்.

அமைவிடம்
மதுரையிலிருந்து எண்பது கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. குன்றக்குடியிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் பிள்ளையார்பட்டி கோயில் உள்ளது. காரைக்குடியில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இங்கிருந்து மதுரை செல்லும் பேருந்தில் சென்று குன்றக்குடி கோவிலுக்கு செல்லலாம்.
புதுக்கோட்டையிலிருந்து 40 கிமீ தொலைவிலும்,திருச்சிராப்பள்ளியிலிருந்து 89 கிமீ தொலைவிலும், குன்றக்குடியின் மையப் பகுதியில் இந்த முருகன் கோயில் உள்ளது. காரைக்குடி, திருப்பத்தூர், மதுரை, திருச்சியிலிருந்து ஏராளமான பேருந்துகள் உள்ளன.
 இது பிரார்த்தனை ஸ்தலங்களில் முதன்மையானது.

பெருமை:
முருகப்பெருமானின் சாபத்தால் மயிலே, மலையாகிப்போனதாகவும், அந்த மலை மீதுதான் முருகப்பெருமான் வீற்றிருப்பதாகவும் ஸ்தலபுராணம் கூறுகிறது. இந்த மலை மயிலின் வடிவத்தை ஒத்திருப்பதால், மயூரகிரி, மயில்மலை, அரசவரம், கிருஷ்ணநகரம் போன்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது.  செட்டிமுருகன், குன்றையூருடையான், மயூரகிரிநாதன், மயில்கலைக்கந்தன். குன்றைமுருகன், தேனாறுடையான்” என்று பலபெயர்கள் மூலவருக்கு உண்டு.

சூரியன், நாரதர், விஸ்வாமித்திரர், வசிஷ்டர், கருடன், இந்திரன், மன்மதன் முதலானோர் இங்கு வந்து தவமிருந்து வரம் பெற்றனர் என்கிறது ஸ்தல புராணம். மேலும் அகத்தியர் மற்றும் பாண்டவர்கள் வழிபட்ட சிறப்பும் இந்த கோயிலுக்கு உண்டு.
இக்கோயில் முருகனை போற்றி அருணகிரிநாதர் தம் திருப்புகழிலும், பாம்பன் சுவாமிகள் தன் பாடலிலும் சிறப்பித்து பாடியுள்ளார்கள்.
மற்றும் ஏராளமான புலவர்களும், முருகனருள் பெற்ற ஞானிகளும், பல்வேறு வகை புராணம், பாடல்கள், இலக்கியங்கள் செய்துள்ளார்கள்.

 புராண காலத்திலிருந்து தற்காலம் வரை 
இத்தலமுருகன் அருள் பெற்றோர், உண்மை வரலாறுகள் பலவும் ஆதாரம் செய்துள்ளார்கள்.

ஸ்தல புராணம்:
ஒருசமயம், அசுரர்கள் தேவர்களைப் பழிவாங்கும் நோக்கில்
அசுரர்கள் ஒன்று திரண்டு மயிலிடம் சென்று, பிரம்மதேவரின் அன்னம், திருமாலின் கருடன் ஆகியவை தாங்கள்தான் மயிலைவிட வேகமாகப் பறக்கக் கூடியவர்கள் என்று சொன்னதாக உண்மைக்குப் புறம்பான செய்தியைக் கூறினர். அசுரர்களின் சூழ்ச்சி அறியாத மயில் கோபம் அடைந்து,
பிரம்மாண்ட உருவம் எடுத்து அன்னத்தையும், கருடனையும் விழுங்கி விட்டது. இதனை அறிந்த இந்திரனும் திருமாலும் முருகனிடம் முறையிட அன்னத்தையும், கருடனையும் மீட்டுத் தந்தார். தனது தவற்றுக்கு வருந்திய மயில், அரசவனத்துக்கு (குன்றக்குடி) வந்து முருகப் பெருமானை நோக்கி தவம் மேற்கொண்டது. முருகப் பெருமானும் மயிலை மன்னித்து சாப விமோசனம் அளித்தார். பின்னர் மயிலின் வேண்டுகோளுக்கிணங்க, இந்தத் தலத்திலேயே இருந்து அருளாட்சி செய்து வருகிறார் என்கிறது ஸ்தல புராணம்.

ஸ்தல வரலாறு:
இக்கோயில் சுமார் 1200 ஆண்டுகளுக்கு முந்தையது. இக்கோயில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டு, பின்னர் மருது சகோதரர்களால் பல திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன.
மருதுபாண்டியருள் மூத்தவரான பெரிய மருதுவுக்கு முதுகில் ஏற்பட்டிருந்த ராஜ பிளவை என்னும் கட்டியை, குன்றக்குடி முருகப்பெருமானின் அருட்பிரசாதமான திருநீறு குணப்படுத்தியதாக வரலாற்றுச் செய்தி. 

ஆலய அமைப்பு:
குன்றக்குடி மலையின் மேலே முருகனுக்கும், கீழே சிவபெருமானுக்கு குடைவரைக் கோயிலாக (தேனாற்று நாதர் - அழகம்மை) அமைந்துள்ளது.
 குன்றக்குடி மலையானது ஒரு மயில் படுத்து அடைகாக்கும் வடிவில் இருக்கின்றது. மலையின் நுழைவாயில் மயில் தோகை போல் இருப்பதால் அங்கிருக்கும் ‘தோகையடி விநாயகரை’ பக்தர்கள் முதலில் வழிபட்ட பின்னரே மேலேறிச் செல்ல வேண்டும் என்பது ஐதீகம். பின் குன்றக்குடி முருகனைத் தரிசிப்பதற்காக 149 படிகள் ஏற வேண்டும். வழியில் கார்த்திகை விநாயகர், இடும்பன் மற்றும் வீரபாகுவின் சந்நிதிகளையும் காணலாம். குன்றின் மீதேறிச் செல்லும் வழிகளில் பக்தர்கள் இளைப்பாறும் விதத்தில் பல மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளது மலைக்கோயிலின் முகப்பில் ஐந்து நிலை இராஜகோபுரம் தெற்கு நோக்கி அமைந்துள்ளது. கோயில் சிறிய மண்டபங்களுடனும் ஒரே திருச்சுற்றுடனும் விளங்குகிறது. மகாமண்டபத்தின் இடப்பக்கம் கணபதி காசிவிஸ்வநாதர் விசாலாட்சி சந்நிதிகள் உள்ளன. மற்றும் தட்சிணாமூர்த்தி, ஸ்வர்ண விநாயகர், குழந்தை வடிவேலர், இடும்பன், நடராஜர், நவகிரகங்கள், வல்லப கணபதி, நால்வர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் உள்ளனர். அலங்கார மண்டபத்தில் மருது சகோதரர்களின் உருவச் சிலைகள் உள்ளன. ஆறுமுகப் பெருமாளின் உற்சவர் சந்நிதி இங்கு உள்ளது. இதனை அடுத்துள்ள மயில் மண்டபத்தில் த்வஜஸ்தம்பம், பலிபீடம் மற்றும் மயில் வாகனம் அமைந்துள்ளது.
கர்ப்பக் கிரகத்தில் மூலவர் ஷண்முகநாதர் கிழக்குத் திசையைப் பார்த்தபடி ஆறு முகங்களுடன் பன்னிரு திருக்கரங்களுடன் மயிலின் மீது வலது காலை மடித்தும் இடது காலைத் தொங்க விட்டவாறு அருள்பாலிக்கின்றார். இடப்பக்கம் தெய்வானை, வலப்பக்கம் வள்ளி என இருவரும் தனித்தனி மயில்களில் அமர்ந்துள்ளனர்.

ஸ்தல விருட்சம் : அரசமரம்
ஸ்தலத் தீர்த்தம் : தேனாறு

ஸ்தலச் சிறப்பு:
இந்த மலையின் மேற்பகுதியில் ஞானிகள் வாழ்ந்ததற்கான கற்படுக்கைகளும் பிராமிக் கல்வெட்டுகளும் உள்ளது. 

திருவிழாக்கள்:
இக்கோயிலில் ஆண்டு முழுவதும் பல திருவிழாக்கள் கொண்டாடப்பட்டு, பல பக்தர்களை ஈர்க்கிறது.பங்குனி உத்திரத்திலும், தைப்பூசத்திலும் பக்தர்கள் குறிப்பாக செட்டி மக்கள் சேவடி தேய காவடியும், பால் போல் பெருகிவாழப் பாற்குடமும் எடுத்து தேனாற்றுடையானை வணங்கி வருகின்றனர். மேலும், சித்திரையில் பால் பெருக்கு விழா, வைகாசி விசாகம், ஆனி மகாபிஷேகம், ஆடியில் திருப்படி பூஜை, ஆவணி மூலப்பிட்டுத் திருவிழா, புரட்டாசி மாதம் அம்பு போடும் திருவிழா, ஐப்பசியில் சூரனை வேலால் சம்கரிக்கும் கந்தர் சஷ்டி விழாவும்கார்த்திகையில் திருக்கார்த்திகையும் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன.
சண்முகார்ச்சனை மற்றும் சண்முக வேள்வியும் நடக்கும்.

  இக்கோவிலில் நடைபெறும் விழாக்களின் போதெல்லாம், பக்தர்கள் பால்காவடி, பன்னீர் காவடி, பறவை காவடி போன்ற காவடிகள் எடுத்து முருகனுக்கு பாலாபிஷேகம் செய்து வணங்கி வருகின்றனர்.

பிரார்த்தனை, நேர்த்திக்கடன்:

குன்றக்குடி மலையில் சண்முகநாதப் பெருமான் வள்ளி தெய்வானையோடு இணைந்து காட்சி அளிப்பதால்

இங்குத் திருமணம் செய்து கொள்ளும் தம்பதியினர் மகிழ்ச்சியுடன் பல்லாண்டு வாழ்வார்கள் என்பது நம்பிக்கை என்பதால் இந்த இம்மலைக் கோயில் திருமணத் திருத்தலமாக விளங்குகிறது.

குன்றக்குடி முருகனின் அருளாசியால் 
விவசாயிகள் இக்கோவிலில் வீற்றிருக்கும் முருகனின் அருளால் தங்கள் முதல் விளைச்சலை. வைக்கோல் விரித்து அதில் நெல்லைக் கொட்டி பொதிந்து பின்னர் அதனை திரித்துக் கட்டிக் கொண்டு வந்து கோட்டை காவடி என்ற பெயரோடு தலையில் சுமந்து வந்து கோவிலுக்குக் காணிக்கை செலுத்தி வருகின்றனர்

ஆயுள் தோஷம் மற்றும் பெற்றோருக்கு தோஷம் உள்ள தங்கள் குழந்தைகளை இக்கோவிலில் குழந்தையை முருகனுக்குத் தத்தாகக் கொடுத்து விடும் வழக்கம் இன்று வரை நீடித்து வருகிறது.

தோல் நோய் நீங்க கோயில் தீர்த்தத்திலும்
இடும்பன் சன்னதியிலும் பக்தர்கள் உப்பும் மிளகும் வாங்கிக் காணிக்கையாக செலுத்தும்போது உப்பு கரைவது போல பக்தர்களின் தோல் நோய் காணாமல் போய்விடுதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

நோய் நீக்கம், துன்ப நீக்கம், குழந்தை வரம், ஆயுள் பலம், கல்வி, அறிவு, செல்வம், விவசாயம் செழிப்பு ஆகியவற்றைப்பெற இத்தலத்தில் முருகனிடம் வேண்டுகிறார்கள்.
மருது பாண்டியரின் நோய் குணமானதோடு, கலிங்க நாட்டு இடும்பன் காவடி எடுத்து வந்து இத்தல முருகனை வழிபட்டு வயிற்று வலி நீங்கியதால் இது நோய்கள் தீர்க்கும் மருத்துவ தலமாகவும் விளங்குகிறது

குன்றக்குடி காவடி என்பது புகழ்பெற்றது. குன்றக்குடிக்குக் காவடி எடுத்தால் நினைத்‌த‌வை கை கூடியே தீரும் என்பது ஐதீகம்.  

இந்த குன்றக்குடி முருகன் கோவிலில் சில வித்தியாசமான நேர்த்திக்கடன்கள் செய்து வரும் பக்தர்கள் கும்பிடு தண்டம் எனும் கோயிலைச் சுற்றிதொடர்ந்து கும்பிட்டு விழுந்து கொண்டே வரும் பிரார்த்தனை செய்து பலனடைந்து வருகின்றனர்

நேர்த்திக்கடனாகக் காவடி எடுத்தல், பால்குடம் எடுத்தல், சஷ்டி விரதம் இருத்தல், உடற்பிணி தீர ஆண்கள் அங்கப்பிரதட்சணம், பெண்கள் கும்பிடுதண்டமும், அடிப்பிரதட்சணமும் நிறைவேற்றுகின்றனர். 

வெள்ளியிலான அந்தந்த உறுப்பு வடிவங்களைக் காணிக்கை செலுத்துகின்றனர். ‌தோல் வியாதிகள் தீர, சொறிபடை நீங்கச் சரவணப்பொய்கையிலும் இடும்பன் சந்நிதியிலும் உப்பும் மிளகும் போடுகின்றனர். விவசாய விளைச்சல் பெற்றவர்கள் தானியங்களைக் காணிக்கை செலுத்துகின்றனர். 

அரிசி கொண்டு வந்து மலைப்படிகளில் தூவுகின்றனர். கோழி, ஆடு மாடு ஆகியவற்றை நேர்த்திக்கடனாகச் செலுத்துகின்றனர். தவிரச் சண்முகார்ச்சனை, சண்முக வேள்வி ஆகியவை செய்கிறார்கள். கார்த்திகை விரதம் இருத்தல், இதைத்தவிர ஏழைகளுக்கு அன்னதானம், திருப்பணிக்குப் பொருளுதவி செய்கின்றனர்.

தினசரி காலை 6.00 மணி முதல் மதியம் 12.30 வரை மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையில் கோவில் திறந்திருக்கும். கோயில் நேரங்கள் திருவிழாவிற்கு ஏற்ப மாறுபடும்.

2. குன்றக்குடி குடைவரை கோயில்கள்:

குன்றின் கீழ் அடிவாரத்தில் உள்ள குடவரை கோவில்,
குன்றக்குடி மலையின் மேலே முருகனுக்கும், கீழே சிவபெருமானுக்கு குடைவரைக் கோயிலாக (தேனாற்று நாதர் - அழகம்மை) அமைந்துள்ளது.

குன்றக்குடியில் அமைந்துள்ள மூன்று குடைவரை கோயில் ஆகும். பொ.ஊ. 7 ஆம் நூற்றாண்டில் தொடக்ககாலப் பாண்டியர்களால் அமைக்கப்பட்டவை ஆகும். பாறையில் வெட்டப்பட்டவையாக மூன்று குகைகள் காணப்படுகின்றன. பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமான இக்கோயில்கள் குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனத்தின் கீழ் உள்ளன.

அமைப்பு
இம்மூன்று குடைவரைகளும் இவை குடையப்பட்டுள்ள குன்றின் தெற்குப் பகுதிச் சரிவில் உள்ளன. இவை ஒன்றுக்குப் பக்கத்தில் மற்றதாக அடுத்தடுத்து வரிசையாகக் குடையப்பட்டுள்ளன. அடுத்தடுத்த குடைவரைகளுக்கு இடையில் உள்ள பகுதியில் கோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு கோட்டத்தில் சிவலிங்கமும், மற்றதில் வலம்புரி விநாயகர் சிற்பமும் உள்ளன. இம்மூன்று குடைவரைகளுக்கும் முன்னால், அவற்றை முழுவதுமாக மறைக்கக்கூடிய வகையில் மண்டபம் ஒன்று உள்ளது. இது பிற்காலத்தைச் சேர்ந்தது.

சிற்பங்கள்
இக்குடைவரை கோயிலில் புராணக் கதைகளை விளக்கும் சிற்பங்கள் உள்ளன. இவை அக்காலத்துச் சிற்ப மரபையொட்டிய புடைப்புச் சிற்பங்களாகும். 
திருமால் தன் கண் மலரால் அர்ச்சித்து, சக்கராயுதத்தைப் பெற்றது;  புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளது. இச்சிற்பத்தில், சிவபெருமான் நடனமாடுவதைத் திருமால் கருடன்மீது சாய்ந்தபடி பார்ப்பதையும், பிடுங்கி எடுத்த ஒரு கண் திருமாலின் கையில் இருப்பதையும் காண முடிகிறது.

கல்வெட்டுக்கள்
இங்குள்ள குடைவரைகளின் சுவர்களிலும், தூண்களிலும், முன் மண்டபத்திலுமாக மொத்தம் 45 கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. இவற்றுட் பெரும்பாலானவை பாண்டிய மன்னர் காலத்தவை. 

இவற்றுள் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் கல்வெட்டுக்கள் மட்டும் 12 உள்ளன. இவற்றுடன், சடையவர்மன் சிறீவல்லபதேவன், விக்கிரம பாண்டியன், மாறவர்மன் குலசேகர பாண்டியன் ஆகிய பாண்டிய மன்னர்களின் கல்வெட்டுக்களும் இங்கு உள்ளன. சோழ மன்னர்களில் முதலாம் இராசராசன், முதலாம் இராசேந்திரன், முதலாம் குலோத்துங்கன் ஆகியோர் காலக் கல்வெட்டுக்களும் உண்டு.

#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️

⛳இந்த தலம் ஒரு குன்றை முதன்மையாகக் கொண்டுள்ளது. பிரதான சாலை ஒட்டியே வாகனங்கள் நிறுத்துமிடம், மற்றும் கடைகள் உள்ளன. குளியல், கழிப்பறை வசதிகளும் உண்டு. சாலையின் அடுத்து,
ஆலயக்குளம் ஒன்றும் உள்ளது.

⛳பிரதான சாலையில், சன்னதி தெருவில் ஒரு வளைவு உள்ளது. அதன் வழி சென்று முதலில், தோகை விநாயகர் வணங்கி, வடபுறம் உள்ள  149 படிகள் கொண்ட மலை மீது ஏறினால், கிழக்கு நோக்கிய ஆலயம் உள்ளது. முன் மண்டம், மயில் மண்டபம், கருவரையில் மூலவர் தரிசிக்கலாம்.
⛳ Rs.10/- சிறப்பு தரிசனம் மயில் மண்டபத்தின் வழியில் சென்று தரிசிக்கலாம்.
⛳ஒரே பிரகாரம் சுற்றி படிகள் இறங்க வேண்டும்.
⛳மலைப் படிகள் முழுவதும் மேல் கல் கூறைகள், மண்டபங்கள் உள்ளன. படிகள் எளிதாகவும், சரிவாகவும் உள்ளதால், முதியோர்களும் எளிதாக மலைக்கோவில் சென்று தரிசிக்கின்றார்கள்.
படிகூரைகளில், தலவரலாறு, புராணங்கள், தலப்பாடல்கள் சித்திரங்கள் வரையப்பட்டுள்ளன.

⛳அடிவாரத்தில், 
குகைக் கோவிலில், தேனாற்று நாதர் - அழகம்மை அமைந்துள்ளது. மேலும்,
கிழக்கு நோக்கிய பெரிய மண்டபத்தில் நடுப்பகுதியில் ஊஞ்சல் அமைத்து உள்ளனர். அதில் ஆறுமுகனார் வள்ளிதெய்வாணையுடன் காட்சி அளிக்கிறார். மண்டபக்கூரையில் வண்ண ஓவியங்கள் பிரமிக்க வைக்கிறது.
♻️ ஏற்கனவே சிலமுறைகள் இவ்வாலயம் தரிசித்து இருந்தாலும், ஒவ்வொரு முறையும் புது அனுபவங்கள் கிட்டுகிறது மகிழ்ச்சி

🙏இந்த மயில் வாகனனின் திருக்கோவிலுக்கு வாழ்வில் ஒரு முறையேனும் சென்று முருகனை தரிசனம் செய்து அருள் பெறுவோம் ஆனந்தம் அடைவோம்

நன்றி🙏
28.09.25 ஞாயிற்றுக்கிழமை
#சுப்ராம்தரிசனம்
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#பிரதோஷக்குழுயாத்ரா 28.09.2025

No comments:

Post a Comment

வேலங்குடி பெருமாள் ஆலயம் 28.9.25

வேலங்குடி பெருமாள் ஆலயம் #வேலங்குடிபெருமாள் ஆலயம் 🛕  பெருமாள் ஆலயமும் அழகுற அமைந்துள்ளது. ராஜகோபுரம், பிரகாரம்,  உள்ளே பெரிய மண்டபம். கருடன...