இத்தலம் அமைந்துள்ள இடம் பல்லடம்-காங்கேயம் நெடுஞ்சாலையில் உள்ள (என்ஹச்-67) மாதப்பூர் எனும் கிராமம்
ஆலயம் செல்ல ஆர்ச் ஒன்றும் அதன் வழியாக சுமார் 100 மீட்டர் பாதையும் அமைத்து உள்ளனர்.
மூலவர் : முத்து குமார சுவாமி.
உற்சவர் : முத்துகுமாரசுவாமி, மதிமாலீஸ்வரர். மரகதாம்பிகை.
அம்மன்/தாயார் : மரகதாம்பிகை.
தல விருட்சம் : ஆலமரம்.
தீர்த்தம் : சரவண தீர்த்தம்.
மாதப்பூர் முருகன் கோவில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவில், பழனி முருகன் கோவிலைப் போலவே ஒரே உருவ ஒற்றுமையுடன் அமைந்துள்ளது. பேரழகு வாய்ந்த இத்தல மூலவர் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.
கோவிலின் சிறப்பம்சங்கள்:
தல வரலாறு: சிவபெருமானும் பார்வதியும் மாதப்பூர் குன்றின் மீது நின்று, ஞானப்பழத்திற்காக கோபித்துச் சென்ற முருகனை "மகனே எங்கே இருக்கிறாய்" என அழைக்க, பழனியிலிருந்து "தாயே, இதோ இங்கு இருக்கிறேன்" என முருகன் காட்சியளித்ததாக நம்பப்படுகிறது. 'மாதாவுக்கு மகன் காட்சியளித்த ஊர்' என்பதால் இப்பெயர் பெற்றது.
திப்பு சுல்தான் வரலாறு: திப்பு சுல்தான் தனது படைகளைத் தேடி முருகனின் மீது ஏறி நின்றபோது பார்வை இழந்ததாகவும், பின்னர் முருகனை வேண்டி மன்னிப்பு கேட்டு மீண்டும் பார்வை பெற்றதாகவும், அதன் நன்றிக்கடனாக அவர் இக்கோவிலை எழுப்பியதாகவும் வரலாறு கூறுகிறது.
பழநிமுருகன் போலவே மாதப்பூர் முருகனும் ஒரே உருவ ஒற்றுமையுடன் உள்ளதே சிறப்பு. அதுமட்டுமின்றி முருகன் தாய், தந்தையருடன் அமர்ந்துள்ள இடம் என்பதால் இது மிகவும் சிறப்புமிக்கதாகும்.
மைசூர் மகாராஜாக்கள் இத்தலத்துக்கு வந்து வழிபட்டுச் சென்றதை கல்வெட்டு சான்றுகள் மூலம் அறியப்படுகிறது. கோயில் பூஜைகள் தொடர்ந்து நடைபெறவும், வாத்தியம், ஆடல்மகளிர் என அனைத்து பணிகளுக்கும் தனித்தனியே நிலங்கள் வழங்கி நித்திய பூஜைகள், விழாக்கள் போன்றவை தங்குதடையின்றி நடைபெற அன்றைய அரசர்கள் உதவி புரிந்துள்ளனர். கோயில் பெயரில் தனியே நிலமும் ஊழியம் செய்பவர்களுக்கு என தனியே மானிய நிலங்களும் அரசர்களால் ஒதுக்கப்பட்டுள்ளன.
அதற்குண்டான ஆவணங்கள் அனைத்தும் இன்றும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. பழநி கோயில் உருவான சமகாலத்தில் இக்கோயிலும் உருவானதாக அறியப்படுகிறது. பழநி முருகனுக்கும் மாதப்பூர் முருகனுக்கும் உருவ ஒற்றுமை உள்ளது பழநி முருகன் மேற்கு நோக்கியும் இம்முருகன் கிழக்கு நோக்கியும் இருப்பது மட்டுமே வேறுபாடு இத்தலத்தில் உள்ள சுனை, பாத விநாயகர், படிகள் மற்றும் கற்கோவில் வடிவமைப்பும் ஒரே மாதிரியாக இருப்பதால் சமகால வரலாற்றுக்கு ஆதாரமாகச் சொல்லப்படுகிறது.
கோயிலின் தென்பகுதியில் மதிமாலீஸ்வரர் சன்னிதியும், அடுத்து மரகதாம்பிகை சன்னிதியும் உள்ளன. அடுத்துள்ள தனிச்சன்னிதியில் முருகன் முத்துக்குமாரசுவாமி என்ற திருநாமத்தில் தண்டத்துடன் நின்ற கோலத்தில் அருள்புரிகிறார் முருகன் என்றாலே அழகன்தான். ஆனால் இவரோ பேரழகன். கண்டு துதிக்க கண் கோடி வேண்டும் முருகன் அழகை கண்டு தொழ நாலாயிரம் கண்படைத்திலனே அந்த நான்முகன் என அருணகிரிநாதர் பாடிய வரிகள் தான் நினைவுக்கு வரும் மலைக்கோயில் 40 படிக்கட்டுகளைக் கொண்டது. படி தொடக்கத்தில் பாதவிநாயகர் சன்னிதி உள்ளது. கொங்கு நாட்டு மரபுபடி தீபஸ்தம்பம் கோயிலுக்கு வெளியே வாசலில் அமைந்துள்ளது. கார்த்திகை தீபத்தின்போது மகா தீபம் இங்குதான் ஏற்றப்படும்.
மலைக்கோவில்:
குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பர். ஆனால் தாய் தந்தையுடன் அருள்பாலிக்கும் ஓர் அற்புத தலமாக விளங்குகின்றது மாதப்பூர் முத்து குமார சுவாமி கோயில் ஒரு சிறிய குன்றின் மீது அமைந்துள்ள அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய பழமையான கற்கோயில்.
மதிமாலீஸ்வரர், மரகதாம்பிகை. முத்துகுமாரசுவாமி என மூவருக்கும் தனிச் சன்னிதிகள் வரிசையாக உள்ளன தனித்தனியே விமானங்களும் அழகிய வடிவில் அமைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் ஒரு பெரிய பாறை மீது அமைந்துள்ளன. கருவறைக்கு முன் அர்த்த மண்டபம், முன் மண்டபம் என அழகிய கற்சிற்பங்களுடன் கூடிய மண்டபங்களனைத் தன்னகத்தே கொண்டது. மீன் சின்னங்கள் காணப்படுவதால் பாண்டிய மன்னர்கள் காலத்தில் திருப்பணி செய்த கோயில் என சொல்லப்படுகிறது. சமீபத்தில் கும்பாபிஷேகம் நடந்திருந்தாலும் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ளது பிரிதொரு சிறப்பு. கோயிலைச்சுற்றி வெளி பிரகாரத்தில் சூரியன், கன்னிமூல கணபதி, தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், துர்க்கை, சனீஸ்வரர், காலபைரவர், நவகிரஹம் மற்றும் சந்திரன் ஆகிய தெய்வங்கள் தனிச் சன்னிதியில் அருள் பாலிக்கின்றனர்.
இக்குன்றின் தென்புறம் ஒரு சுனை உள்ளது. அம்பாள் தனக்காக கங்கையை உருவாக்கிக் கொண்டதாகவும், மகன் தாய்க்காக சுனையை உருவாக்கியதாகவும் அறியப்படுகிறது வருடம் முழுவதும் பாறை இடுக்குகளில் இருந்து வரும் நீர் தரைமட்டத்திற்கு பொங்கி வந்து வழிந்து ஓடுவதும் என்றும் வற்றாமல் இருப்பதும் பேரதிசயமாகும். கடுமையான வறட்சி காலத்திலும் வற்றியது இல்லை
*சஷ்டி விரதம் இருந்து துதித்து வந்தால் திருமண தடைகள், பிள்ளைப்பேறு ஆகிய வேண்டுதல்கள் நிறைவேறுவதாலும், அன்னை மரகதாம்பிகை தாயுள்ளத்தோடு அருள்வதால், வேண்டுவன எல்லாம் நிறைவேறுகின்றன. என ஏராளமான பக்தர்கள் நம்பிக்கையுடன் வழிபடுகின்றனர்.
சுவாமிக்கு சந்தனகாப்பு, பஞ்சாமிர்த அபிசேகம், பால் அபிசேகம், அன்னதானம் வழங்குவது, நெய் விளக்கு ஏற்றுதல், அபிசேக ஆராதனைகள் ஆகியவை இத்தலத்து முக்கிய நேர்த்திகடன்களாக உள்ளது.
வாகனங்கள் நிறுத்துவதற்கு வசதிகள் உள்ளது. திருமணம் போன்ற மற்றும் சிறிய விழாக்கள் நடத்துவதற்கு ஏற்றஒரு சிறிய மண்டபம் உள்ளது. மேலும் கழிவறை வசதிகள் குளியலறை வசதிகள் இருக்கின்றன
வேறு எந்த விதமான கடைகள் வீடுகள், பெரிய கட்டிடங்கள் அருகில் இல்லை
ஆலய விழா விஷேச காலங்களில் தற்காலிக ஏற்பாடுகள் செயல்படலாம்.
தனிமையும், அமைதியும் பக்தியும் முருகன் அருள் நிறைவும் வேண்டுபவர்களுக்கு அருமையான இடம்
காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 6.30 மணி வரை ஆலயம் திறந்திருக்கும்.
நன்றி🙏
13.6.2026 Subbram_சுப்புராம் தரிசனம்,🙏🛕🇮🇳
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#கொங்குத்தலங்கள்
No comments:
Post a Comment