கொண்டத்து காளியம்மன் கோயில்
திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த பெருமாநல்லூரில் பிரசித்திப் பெற்ற இந்த ஆலயம் உள்ளது.
பெருமாநல்லூரின் வடமேற்குப் பகுதியில் வடக்கு நோக்கி இந்த கோயில் அமைந்துள்ளது.
இப்பகுதி வயல்வெளிகள் நிறைந்த பழமையான பகுதியாக இருந்ததால் இவ்வூர் தொடக்கத்தில் 'பெரும்பழனம்" என்றும் 'பெரும்பழனாபுரி" என்றும் வழங்கப்பட்டு, காலப்போக்கில் பெருமாநல்லூர் என்ற பெயர் பெற்றது.
மூலவர் - கொண்டத்துக்காளியம்மன் (குண்டத்தம்மன்)
தல விருட்சம் - வேப்பமரம்
தீர்த்தம் - கிணற்று நீர்
பழமை - 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் - பெரும்பழனம்
தல வரலாறு :
சேரமன்னர்கள் அப்பகுதியை ஆண்டபோது, போரில் வெற்றி மட்டுமே கிடைக்க வேண்டும் என்பதற்காக தங்கள் குருநாதரிடம் ஆலோசனை கேட்டனர். அதற்கு குருநாதர், போரில் வெல்ல படைபலம் மட்டுமின்றி காளியின் அருளும் வேண்டும் எனக் கூறினார். எனவே, அவளுக்கு கோவில் அமைத்து களப்பலி கொடுத்து போருக்குச் சென்றால் எளிதில் வெல்லலாம் என்றார்.
அதன்படி மன்னர்கள் அந்த இடத்தில் காளிதேவிக்கு கோவில் ஒன்றைக் கட்டினர். பின்பு அண்டை நாடுகள் மீது படையெடுத்துச் செல்லும் முன்பு காளியை வணங்கி பெரிய குண்டம் ஒன்றில் வேள்வி வளர்த்து அதில் வீரர் ஒருவரை பலி கொடுத்து விட்டுச் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
தலபெருமை :
மன்னர் காலத்திற்கு பின்னர், மக்கள் தொடர்ந்து கொண்டத்துக்காளி அம்மனை வழிபட்டு குண்டம் இறங்கி வந்தனர்.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் குண்டம் திருவிழாவின்போது இந்த கோயிலுக்கு ஆங்கிலேய அதிகாரி தனது சேனையுடன் வந்திருந்தார். மேள வாத்தியங்கள் முழங்க ஆடிக்கொண்டும், பாடிக்கொண்டும் வந்த வீரமக்கள் குண்டம் இறங்கி நேர்த்திக் கடன் நிறைவேற்றிக் கொண்டிருந்தார்கள்.
அதனைப் பார்த்த அந்த ஆங்கிலேய அதிகாரி '" இது அறிவற்ற செயலாக இருக்கிறது. அம்மனை வணங்க வேண்டும் என்றால் இப்படியெல்லாம் தீயில் இறங்கக் கூடாது. இங்கு பக்தர்கள் தீ மிதிப்பதை அனுமதிக்க முடியாது " என்றார். அதன் பின்னர், குண்டத்தில் பக்தர்கள் இறங்க முடியாத வகையில் நெருப்பில் உருகிப் பொங்கும் குங்கிலியத்தை கொட்டினார்.
குங்கிலியம் உருகி கொதித்து பொங்கி நின்றது. கோயில் பூசாரி பூஜைகள் செய்தார். அப்போது தீபஸ்தம்பத்திலிருந்து இறங்கி வந்த பல்லி குண்டத்தின் மீது ஊர்ந்து அம்மன் கருவறையைச் சென்று அடைந்தது. அதை தொடர்ந்து பூசாரியும், வீரமக்களும் குண்டம் இறங்கினார்கள். குண்டத்தில் மண்டியிட்டபடி ஒரு பெண், தெய்வ குண்டம் இறங்கும் வீரமக்களின் பாதங்களை தனது இரண்டு கைகளாலும் ஏந்தி தாங்கிக் கொண்டு இருப்பதை ஆங்கிலேய அதிகாரி தனது பூதக்கண்ணாடியின் மூலம் பார்த்தார்.
அப்படிப் பார்த்த அந்த ஆங்கிலேய அதிகாரியின் பார்வை மங்கியது. அவர் மிகவும் திகைத்து துடித்தார். ஊர் பெருமக்கள் அவருக்கு காளியம்மனின் பெருமையை எடுத்துக் கூறினார்கள். அவர்கள் அறிவுறுத்தியபடி அம்மனை வணங்கி மன்னிப்புகேட்டு வேண்டினார். பிறகு சிறிது நேரத்தில் அவருக்கு பார்வை திரும்பியது.
அம்மனின் அருளைக் கண்டு வியந்த ஆங்கிலேயர் கோயில் திருவிழாவின்போது தீபம், தீவட்டி ஆகியவற்றை எடுக்க ஆறு குடம் எண்ணெய் வழங்க உத்தரவிட்டார். இதுவே அம்மனின் அருளுக்கு அத்தாட்சி ஆகும்.
ஆலய அமைப்பு :
கருவறையில் காளியம்மன் அமர்ந்த நிலையில் எட்டு கைகளுடன் காட்சி தருகிறாள். கோயிலின் முன்பு திறந்த வெளியில் அறுபது அடி நீளமுள்ள குண்டம் உள்ளது.
இங்கு வீற்றிருக்கும் கொண்டத்துக்காளியம்மன் ஏழு பேராக அவதரித்த அம்பாள்; சகோதரிகளில், ஒருவராக, எட்டு கைகளில் ஆயுதங்களையும் ஏந்தி, லட்சுமி, காளி, சரஸ்வதி என மூன்று அன்னையர்களின் அம்சமாக அருள்பாலிக்கிறாள்.
இத்தல விநாயகர் பால விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இங்கு நைவேத்யமாக சர்க்கரைப் பொங்கல் படைக்கின்றனர். சுற்றுப்பிரகாரத்தில் சப்தகன்னியர், குதிரைகளுடன் முனியப்பன், கருப்பராயர் ஆகியோர் அருள்புரிகின்றனர்.
அம்பாள் சன்னதிக்கு இடப்புறம் முத்துக்குமரன், தனது கழுத்தில் சொருகிய வாளை கையில் பிடித்தபடி, அருட்காட்சி தருவது வேறு தலங்களில் இல்லாத இத்தல சிறப்பாகும்.
பங்குனி மாதம் பண்ணாரி அம்மன் திருவிழா நடைபெறும் நாளையொட்டி சில நாட்கள் முன்பின்னாக இந்த கோயில் குண்டம் திருவிழா நடைபெறும். குண்டம் இறங்குதல் நிகழ்ச்சியையொட்டியே இந்த அம்மன் குண்டத்து காளியம்மன் என அழைக்கப்பட்டாள்.
பிரார்த்தனை :
குடும்ப பிரச்சனை தீர, குழந்தை பாக்கியம் கிடைக்க, விவசாயம் செழிக்க, தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் தீர இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.
குண்டம் இறங்குதல், அக்னிச்சட்டி, பால்குடம், அங்கபிரதட்சணம், குண்டத்தில் உப்பு, மிளகு, கரும்பு போடுதல் போன்றவற்றை பக்தர்கள் இங்கு நேர்த்திக்கடனாக செய்கின்றனர். தோல் நோய் தீர்ந்திட காளிக்குரிய சிங்க வாகனத்தின் மீது வெற்றிலை, பாக்கு வைத்து வணங்கப்படுகிறது.
நன்றி🙏
13.6.2026 சுப்புராம் மீள் தரிசனம்,,🙏🛕🇮🇳
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#கொங்குத்தலங்கள் ⛳
No comments:
Post a Comment