திருப்பூரிலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் கொடுவாய் செல்லும் வழியில் அலகுமலை அமைந்துள்ளது. 900 ஆண்டுகள் பழமையான இத்தலத்தில் முத்துக்குமார சுவாமி பாலதண்டாயுதபாணி ஆண்டி கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
அலகுமலைப் பெயர் காரணம்:
புகழ்விளங்கும் பொங்கலூர் நாட்டில், பூம்பொழில்களுக்கிடையே அமைந்திருக்கும் வானவன்சேரி அலகுமலை’ என்பது சான்றோர் வாக்கு.
மலை அடிவாரத்தில் 'அழகாபுரி அம்மன்' என்ற அன்னை ஊர்க்காவல் தெய்வமாக அருள் பாலித்து வருகிறார். இதன் காரணமாக அன்னையின் பெயரே மருவி, இந்த மலைக்கு அலகுமலை என்ற பெயர் வந்ததாகவும் சிலர் கூறுகிறார்கள். சூரியனுடன் சேர்த்து ஒன்பது கிரகங்கள், நவக்கிரகங்களாக இருப்பதுபோன்று இந்த மலையை சுற்றிலும் ஏழு மலைகள் உள்ளன. அவை சென்னிமலை, சிவன் மலை, வட்ட மலை, ஊதியூர் மலை, பழனி மலை, மருதமலை, கதித்தமலை ஆகியனவாகும். இந்த ஏழு மலைகளுக்கு நடுவில் அலகுமலை அழகுற காட்சியளிக்கிறது.
அலகுமலை என்றால் அகன்று உயர்ந்த மலை என்று பொருள். அதேபோன்று, பச்சைப்பசேல் என்று பச்சைப்பட்டு உடுத்திய பாவைபோல் இயற்கை அழகுடன் காட்சி தரும் இந்த மலையை, `அழகுமலை' என்று சொல்வதும் மிகவும் பொருத்தம்தான்.
அலகு என்றால் 'மூக்கு' என்பது பொருள். இந்த மலை, மயில் மூக்கின் வடிவம் போல் அமைந்து உள்ளதால் 'அலகு மலை' எனப் பெயர் பெற்றது.
இயற்கை எழில் கொஞ்சும் இந்த மலைக்கோவிலுக்குச் செல்ல 300 படிகளும், உச்சி வரை வாகனத்தில் செல்ல தனி சாலை வசதியும் உள்ளது.
ஆலய அமைப்பு:
அலகுமலை கோவில் கிழக்கு மேற்காக அமைந்துள்ளது. கிழக்கில் தாழ்ந்தும், மேற்கில் உயர்ந்தும் காணப்படுகிறது. முருகனை தரிசனம் செய்வதற்கு கிட்டத்தட்ட 300 படிகளை ஏறி செல்ல வேண்டும். மலை அடிவாரத்தில் மயில் வாகன மண்டபம் உள்ளது. இதை தாண்டி படியேறி சென்றால் எட்டு தூண்கள் கொண்ட மண்டபம் காணப்படும். இதை கடந்து சென்றால் இடதுபுறத்தில் பாத விநாயகரை தரிசிக்கலாம்.
விநாயகரை வழிபட்டு விட்டு, மேலே சென்றால் கார்த்திகை மண்டபத்தில் முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளையும் தரிசனம் செய்யலாம். இந்த ஆறுபடை வீடுகள் கோவில் 1984-ம் ஆண்டுகளில் கட்டப்பட்டது. தமிழ் நாட்டில் உள்ள ஆறுபடை வீடுகளில் முருகப்பெருமான் எந்தக்கோலத்தில் உள்ளாரோ, அதேபோன்று இந்த சன்னிதிகளிலும் காட்சி தருவது தனிச்சிறப்பாகும். இதற்கு அருகில் நவக்கிரகங்கள் சன்னிதியும், விநாயகர் சன்னிதியும் உள்ளன.
இதையடுத்து வடக்கு நோக்கி அமைந்துள்ள படிகளை கடந்தால் இடதுபுறம் இடும்பன் சன்னிதி அமைந்துள்ளது. அடுத்ததாக குழந்தை குமரர் சன்னிதி காணப்படுகிறது. இறுதியாக, கோவிலுக்குள் நுழைந்ததும் முதலில் கொடிமரம் அமைந்துள்ளது.
கொடிமரத்திற்கு மேற்கு நோக்கி மயில் வாகனமும், அதற்கு அருகில் பலிபீடமும் உள்ளது. கோவிலின் இடது புறத்தில் தல விருட்சமான வில்வ மரம் அமைந்துள்ளது. கோவில் மகா மண்டபத்தின் உள்ளே வலதுபுறத்தில் ஆனந்த விநாயகரும், வலம்புரி விநாயகரும் அருள்பாலிக்கிறார்கள். இடதுபுறத்தில் வீரபாகு தேவர் உள்ளார்.
கருவறையில் முருகப்பெருமான், சுமார் நான்கரை அடி உயரத்தில் 'முத்துக்குமார பாலதண்டாயுதபாணி' எனும் திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இவர் கண்களை சற்று தாழ்த்திய நிலையில் கையில் தண் டாயுதத்துடன் ஞான குருவாக காட்சி தருகிறார். இவரை வெள்ளிக் கவச அலங்காரத்தில் பார்க்க கண்கோடி வேண்டும் என்ற அளவுக்கு அளவுக்கு அழகு ரூபமாக ஜொலிக்கிறார். கர்ப்பக்கிரகத்தில் முருகன் ஆண்டி கோலத்தில் இருப்பதால் வள்ளி, தெய்வானை தெற்கு நோக்கிய தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கிறார்கள்.
மலைப்பாதையில் உள்ள கார்த்திகை மண்டபத்தில் நின்றபடி, ஒரே சமயத்தில் ஆறுபடை முருகனையும், மேலே உள்ள அலகுமலை குமரனையும் கண்குளிர தரிசனம் செய்ய முடியும்.
கோவிலின் சிறப்பம்சங்கள்:
மூலவர்: சுமார் நான்கரை அடி உயரத்தில், பழனி ஆண்டவர் கோலத்தில் மூலவர் காட்சி தருகிறார். இந்த இடம் மலையின் உச்சியில் உள்ளது.
ஆறுபடை வீடுகள்: முருகனின் அறுபடை வீடுகளுக்கான தனிச் சன்னதிகள் இங்கு அமைந்துள்ளன. இந்த சன்னதிகள் உச்சியில் உள்ள முருகன் ஆலயத்திலிருந்து சுமார் 20 படிகள் கீழே உள்ளது. இங்கு ஒரு விநாயகர் மற்றும் ஆஞ்சினேயர் வணங்கிய சிவன் சன்னதியும் மற்றும் ஒரு ஆஞ்சனேயர் சிலையும் உண்டு.
சிறப்புகள்:
முழுவதும் நல்ல பராமரிப்பில் உள்ள ஆலயம்
மலை அடிவாரத்தில் உள்ள கைலாசநாதர் கோவிலில் கி.பி.1641-ம் ஆண்டை சேர்ந்த கல்வெட்டு ஒன்று உள்ளது. அதில் இக்கோவிலுக்கு திருமலை நாயக்கர் திருப்பணி செய்தது குறிப்பிடப்பட்டுள்ளது.
திருவிழாக்கள்: தமிழ் புத்தாண்டன்று நடைபெறும் சித்திரை கனி அலங்காரம் மற்றும் தைப்பூசம் மிகவும் பிரசித்தி பெற்றவை. வைகாசி விசாகம், பங்குனி உத்திரம், கந்தசஷ்டி, கார்த்திகை போன்ற முருகனுக்கு உகந்த நாட்களில் வழிபாடுகள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இங்கு பௌர்ணமி கிரிவலம் விசேஷமாக நடத்தப்படுகிறது. தைப்பூச திருவிழா ஏழு நாட்கள் அபிஷேகங்கள், ஹோமங்கள் என வெகு விமரிசையாக நடைபெறுகின்றன. நிறைவு நாளில் பக்தர்கள் பால் குடம் எடுத்தும், காவடி எடுத்தும் முருகனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
குழந்தை வரம் வேண்டுபவர்கள் சஷ்டி தினங்களில் விரதம் இருந்து இருந்து முருகனுக்கு செவ்வரளி மாலை சாத்தி, தயிர் அபிஷேகம் செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. திருமணத் தடை நீங்கவும், தொழில் விருத்தி அடையவும் இங்கு பக்தர்கள் சிறப்பு பரிகாரங்கள் செய்கின்றனர்.
நன்றி🙏
13.6.2026 Subbram_சுப்புராம் மீள் தரிசனம்,🙏🛕🇮🇳
#என்றும்அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#கொங்குத்தலங்கள்
No comments:
Post a Comment