Friday, April 17, 2026

மருங்கப்பள்ளம் மருந்தீசுவரர் கோவில்மருந்து கல்வம் மற்றும் குழவியே சிவலிங்கமாக இருக்கும் தலம் 12.04.26

மருங்கப்பள்ளம் மருந்தீசுவரர் கோவில்
மருந்து கல்வம் மற்றும் குழவியே சிவலிங்கமாக இருக்கும் தலம்

அமைவிடம்⛳
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது மருங்கப்பள்ளம். 
ECR சாலையில் சேதுபாவா சத்திரம் வந்து பேராவூரணி சாலையில் வர வேண்டும். குருவிக்கரம்பை என்ற ஊர் அருகில் இந்த தலம் உள்ளது.

🔱சிறப்பு
இத்தலத்து இறைவன் திருநாமம் மருந்தீசுவரர், ஔஷதபுரீசுவரர். இறைவியின் திருநாமம் மருத்துவ நாயகி , பெரியநாயகி. சகல நோய்களையும் இறைவன் குணப்படுத்துவதால் இந்த பெயர் ஏற்பட்டது. இக்கோவில் 1200 ஆண்டுகள் பழமையானது.

📚தல புராணம்
சூரியனுக்கும் உஷா தேவிக்கும் பிறந்த குழந்தைகள் நசத்யா மற்றும் தசரா. அஸ்வினி குமாரர்கள் என்றழைக்கப்படும் இவர்கள், பிரம்மாவின் ஆணைப்படி, தேவலோக மருத்துவர் பதவியை அடைவதற்காக சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்து, அந்த பதவியை அடைந்தார்கள். அவர்கள் முதலில் மூலிகைகளை அரைக்க பயன்படுத்திய, கல்வம் (கல்வம் என்பது கல்லினாலான ஆன முட்டை வடிவமான குழியுள்ள அம்மி) மற்றும் குழவியையே, உலக உயிர்கள் யாவும் ஆரோக்கியமாக வாழும் பொருட்டு சிவலிங்கமாக பிரதிஷ்டைசெய்து, "ஸ்ரீ மருந்தீசுவரர்" என்று திருநாமம் வைத்து வழிபட்டார்கள்.

 மருந்தீசுவரர் லிங்கத்தில், குழவியின் விளிம்பு இருப்பது, நாம் வேறு எந்த தலத்து சிவலிங்கத் திருமேனியிலும் காண முடியாது.
ஆஞ்சநேயப் பெருமான் சஞ்சீவி மலையைப் பெயர்த்து எடுத்து செல்லும்போது மருந்தீஸ்வரர் திருவருளால் அதிலிருந்து ஒர் பெரும் பாறை இவ்வூரில் விழுந்து சிதறியது. விழுந்ததினால் ஏற்பட்ட பள்ளம், மருந்து தீர்த்தம் என்று அழைக்கப்படும் இக்கோவிலின் திருக்குளமானது. பாறையிலிருந்து சிதறிய மூலிகைகள் இவ்வூரெங்கும் மருத்துவ தாவரங்கள் ஆகவும், முக்கிய மூலிகையான பாதிரி தல விருட்சமாகவும் ஆனது. இதனாலையே இவ்வூர் மருந்து + பள்ளம் = மருந்துப்பள்ளம் என பெயர்பெற்றது. இதுவே மருவி மருங்கப்பள்ளம் என் அழைக்கப்படுகிறது. மருந்துபுரி, ஒளஷதபுரி என்றும் இத்தலம் புராணங்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

சரபோஜி மன்ணனுக்கு நோய் தீர்த்த தலம் அதனால் இவ்வாலயம் அவரால் கட்டப்பட்டதாக ஆலயவரலாறு

💥ஆலய சிறப்புகள்:
சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்த, திருக்குளத்து நீரே( மருந்து தீர்த்தம்) தீராத நோய் தீர்க்கும் மஹாஔஷத பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படுகின்றது. 

திங்கட்கிழமைகளில் காலை 6.00 மணிக்கு பால் அபிஷேகம் தொடர்ந்து பூசை மிகவும் விஷேசம்
மருத்துவத் துறையைச் சார்ந்த அனைவரும் வழிபட வேண்டிய தலம் மருந்தீசுவரர், அனைத்து நோய்களையும் தீர்க்கும் மருத்துவராக விளங்குவதால், சகல துறை வைத்தியர்களும், அறுவை சிகிச்சை நிபுணர்களும், சித்த மருத்துவர்களும், நாட்டு வைத்தியர்களும், மருத்துவத் துறையில் படிப்பவர்களும், மருந்து தயாரிக்கும் நிறுவனங்களும், விற்பனையாளர்களும், செவிலியர்களும் வழிபட வேண்டிய தெய்வமாக திகழ்கிறார். மருத்துவர்கள் தங்களது மருத்துவ சாதனங்களை இறைவன் திருபாதத்தில் வைத்து பூஜை செய்து எடுத்துச்சென்றால் அவர்களது அனைத்து மருத்துவ சிகிச்சைகளும் வெற்றியடையும். உடல்நிலை பாதிக்கபெற்ற அன்பர்கள் தங்களது மருந்துப் பொருட்களை இறைவன் திருவடியில் வைத்து வணங்கி, மருந்துப் பொருட்களை இறைவன் திருபிரசாதமாக உண்ணும்பொழுது வியாதி உடனே நிவர்த்தியாகும்.

அசுவினி, ஆயில்யம் நட்சத்திரக்காரர்களுக்கு நற்பலன் தரும் தலம்
அசுவினி, ஆயில்யம் நட்சத்திரக்காரர்கள் மற்றும் ஞாயிறு, செவ்வாய்க் கிழமையில் பிறந்தவர்கள் வழிபடவண்டிய தலம் இது. பிறந்தநாள், திருமண நாள், ஜன்ம நட்சத்திர நாள், ஆகிய தினங்களில் இங்குள்ள மருந்து தீர்த்தத்தில் நீராடி ஆயுஷ்ய ஹோமம் செய்து கொண்டால் நீண்ட ஆயுளோடு வாழலாம் என்பது ஐதீகம். நோய்கள் நிவர்த்தியாகும்.

ஆலய அமைப்பு🛕
ஆலயம் கிழக்கு நோக்கிய அமைப்பில் உள்ளது. ஆலயம் அருகில் பெரிய தீர்த்தக்குளம் ஒன்றும் உள்ளது. பாதிரி மரம் உள்ளது.
கிழக்கு நோக்கிய 3 நிலை இராஜகோபுரம் கடந்தால் பலிபீடம் நந்தி மண்டபம் அதன் கீழ சுவாமி சன்னதி நோக்கி மன்னர் சிலை உள்ளது.

சுவாமி மருந்தீஸ்வரர் கிழக்கு நோக்கிய கருவரையும் அம்பாள் தெற்கு நோக்கிய கருவரையும் இணைத்து அழகிய முன் மன்டபம் கட்டப்பட்டுள்ளது. முன் மண்டபத்தில் சுவாமி அம்பாள் நடுவில் தென்முகமாக நடராஜர் சன்னதி உள்ளது.
மண்டபமேல் விதானத்தில் ஆலய தலவரலாறு வரையப்பட்ட ஓவியங்கள் 
ஒரு மூலையில் முன்பு இருந்த அம்மன் வைத்துள்ளனர் மண்டபத்தின் ஒரு பகுதி யாக பூசை செய்வதற்கான பகுதியாக அமைத்துள்ளனர்.
ஏகப்பிரகாரம் கோஷ்ட்டத்தில் தட்சினாமூர்த்தி முன் மண்டப அமைப்புடன் உள்ளார். மற்றும் நர்த்தன விநாயகர் உள்ளார்
மேற்கு பிரகாரத்தில் கிழக்கு நோக்கிய தனிசன்னதியில் விநாயகர் மற்றொரு புறம் வள்ளி தெய்வானையுடன் முருகர்
கோஷ்ட்டத்தில் லிங்கோத்பவர்
வடக்கில் பிரும்மா, துர்க்கை தனிசன்னதியுடன், மற்றும் சண்டிகேஸ்வரர் அமைந்துள்ளார்.
வடகிழக்கில் தனி சன்னதியில் 
மகாவிஷ்ணு, காலபைரவர், அனுகிரக சனிஸ்வரர், லெட்சுமி நாராயணர், சூரியன் உள்ளனர்.

ஆலயம் வெளியில் மதில்சுவரில் ஆலய தல வரலாறு சிற்பமாகவும் டிஜிட்டல் போர்டிலும் உள்ளது.

#பயண அனுபவக்குறிப்புகள் 🕊️
#சுப்ராம்🔱🇮🇳
ஆலயம் செல்ல நல்லசாலை வசதி உள்ளது.
ஆலயம் அருகில் வாகனங்கள் நிறுத்தலாம்
பெரியகுளம் ஆலயம் எதிரில் படித்துறையும் உள்ளது. ஆலய வெளிப்பிரகாரம் மிகவும் தூய்மையாக காணப்படுகிறது 
கும்பாபிஷேகம் நடந்து சில வருடங்கள் ஆகிறதால் ஆலயம் முழுவதும் மிகவும் சுத்தமாகவும் மிகவும் அழகாகவும் உள்ளது.

திங்கட்கிழமை விஷேச பூசை,விழா நாட்களில் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள்

ஆலய குருக்கள் மிகவும் அருமையான முறையில் தலவரலாறு, பரிகார பூசை, ஆலய நடைமுறை பூசை , பலன் பெறும் பக்தர்களின் அனுபவங்கள் முதலியவற்றை பொறுமையாகவும் பக்தி சிரத்தையுடனும் எடுத்து உரைத்தது மிகவும் சிறப்பு 

அவசியம் தரிசித்து பலன் பெற வேண்டிய ஆலயம்
12.04.2026 சுப்ராம்🔱🇮🇳
நன்றி🙏
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#TempleWorshipisTrulyVirtuous🙆🏼🔱
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#BharatisSpiritualZenith🕉️🏔️,
#ECRதலங்கள் - #பேராவூரணிஅருகில்


No comments:

Post a Comment

சின்ன ஆவுடையார் கோவில்(கொள்ளுக்காடு) ஆத்மநாதசுவாமி ஆலயம்மூலவர்: ஆத்மநாதசுவாமி, யோகாம்பாள் 12.04.26

சின்ன ஆவுடையார் கோவில் (கொள்ளுக்காடு) ஆத்மநாதசுவாமி ஆலயம் மூலவர்: ஆத்மநாதசுவாமி, யோகாம்பாள். அமைவிடம்⛳ தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்...