Saturday, June 12, 2021

மடக்கணி - சம்பந்தர் அமுதம் பதிவு : நான்கு - பாடல் 6,7, 8

#திருமுறைகளில்_தமிழமுதம்
#சம்பந்தர்அமுதம்
#மடக்கணி
பதிவு : நான்கு (பாடல் 6, 7, 8)
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇🙏🏻

 🙇🏻‍♀️மடக்கணி பாடல்கள்:
மடக்கு' என்பது வந்த சொல்லோ, சொற்றோடரோ மீண்டும் வந்து பொருள் வேறுபட்டு நிற்பதாகும். தமிழ் ஞானசம்பந்தர் அருளிச் செய்த இந்த வகைப் பாடல்களைப் பற்றி தொடர்ந்து சிந்திப்போம்.

🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇🙏🏻

தேவாரம். - மூன்றாம் திருமுறை 
பாடல் 1217
பதிகம். 371 தலம் - திருக்கழுமலம்
பாடல் - 6
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
திகழ்கைய தும்புகை தங்குஅழலே
         தேவர் தொழுவதும் தங்கழலே

இகழ்பவர் தாம்ஒரு மானிடமே
         இருந்தனு வோடு எழில் மானிடமே

மிகவரு நீர் கொளும் அஞ்சடையே
        மின்னிகர் கின்றதும் அஞ்சடையே

தகவிர தம்கொள்வர் சுந்தரரே
         தக்க தாராய் உறை சுந்தரரே
      
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
பாடல் பொருள் விளக்கம்:

1. ஈசன், திகழ்கின்ற கையில் புகை கொண்டு எழும் நெருப்பினை உடையவர்.
தேவர்கள் தொழுது ஏத்தும் திருக்கழலை உடையவர்.

திகழ் - விளங்குகின்ற, 
அழலே - நெருப்பே, 
தம் கழலே - தமது திருவடியையேயாம்

2. தம்மை இகழ்ந்த தாருகவனத்து முனிவர்கள் ஏவிய மானை இடக்கரத்தில் ஏந்தியுள்ளார். 
பக்குவமான ஆன்மாக்களுக்கு ஞானோபதேசம் செய்ய அவர் காட்சி தந்தது மானிட உடம்பில். 

இகழ்பவர் - தம்மை அலட்சியம் செய்தவர்களாகிய. 
தாம் - தாருகவனத்துமுனிவர் ( ஏவிய ) ஒருமான், 
இடம் - இடக்கரத்தில் உள்ளது  
இருந்தனுவோடு - பக்குவ ஆன்மாக்களுக்கு ( உபதேசிக்கும் பொருட்டு ) அவர்தம் பெருமைபொருந்திய உடம்பிற்கு. 
எழில் - அழகிய. 
மானிடவடிவமே என்றது ` மானிடரை ஆட்கொள்ள மானிட வடிவங்கொண்டு வருவன் ` என்ற கருத்து.

3.பெருக்கெடுக்கும் கங்கையைத் தாங்கியது அழகிய சடையிலே.
மின்னலைப் போன்று ஒளிரும் அழகிய சடையை உடையவர். 

மிகவரும், நீர் கொளும் - தண்ணீரைத் தன்னகத்து அடக்கிய,
மஞ்சு - மேகங்கள். 
அடைவு - தம்மிடம் சேர்தலையுடையது. என்றது சிவபெருமான் சடாபாரத்தில் மேகங்கள் இருப்பதைக் குறித்தது. இதனைத் திரு விளையாடல் நான்மாடக்கூடலான படலத்தால் அறிக.
 மின் - மின்னலை. 
நிகர்கின்றதும் - ஒப்பதுவும். 
அம்சடையே - அழகிய சடையே.

4. தகுந்த விரதம் கொண்டு காத்தருளும் சுந்தர வடிவினர். 
அவர் எக்காலத்திலும் அழியாது நிலைத்து நிற்கும் பூந்தராய் என்னும் திருப்பதியில் வீற்றிருந்தருளும் அழகர்.

தக - தகுமாறு. 
விரதம் - மனத்தையடக்கல் முதலிய விரதங் காத்தலை. 
கொள்வர் - பாராட்டியேற்றுக் கொள்பவராகிய சுந்தரர். 
கொள்வர் - இவ்வுலகிற்குத் தலைவர். விரதமெல்லாம் மாண்ட மனத்தார் மனத்தான் கண்டாய் ` எனவும், ` விரதங் கொண்டாட வல்லானும் ` எனவும் வரும் அப்பர் திருவாக்கிலும் ஒலிக்கிறது. வசுந்தரர் எனற்பாலது சுந்தரர் என நின்றது முதற்குறை. உலகத்தை உடையவர் என்று பொருள். 
தக்க தராய் - பூந்தராய்.
உறை - வீற்றிருக்கும், சுந்தரர் அழகர்.

🛐தல குறிப்பு: பூந்தாராய்:
சங்கநிதி பதுமநிதி என்னும் இருநிதிகளின் அதிதேவதைகள் பூந்தாராய் இருந்து (தார் = மாலை) இத்தலத்தை வழிபட்டும் பேறு பெற்றதால் இப்பெயர்.

🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
தேவாரம். - மூன்றாம் திருமுறை 
பாடல் 1218
பதிகம். 371 தலம் - திருக்கழுமலம்
பாடல் - 7
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
ஓர்வரு கண்கள் இணைக்கயலே
      உமையவள் கண்கள் இணைக்கயலே

ஏர்மருவும் சுழல் நாகமதே
       எழில்கொள் உதாசனன் ஆகமதே

நீர்வரு கொந்தள கம்கையதே
       நெடுஞ்சடை மேவிய கங்கையதே

சேர்வரு யோகதியம் பகனே
        சிரபுர மேய தியம்பகனே
  
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇

பாடல் பொருள் விளக்கம்:
1.நெஞ்சே ஈசனையன்றிப் பிறவற்றைக் காணுமாறு கண்களைச் செலுத்தற்க.
அவ்வாறு செலுத்துதல் புறம்பானது என்க

உமாதேவியின் கண்கள் இணையாக மேவி, கயல்கள் போன்று தம் குஞ்சுகளைப் பார்வையால் கனிந்து நோக்கும் தன்மையில், மன்னுயிர்களைக் கனிவுடன் நோக்கி வாழவைக்கும் பாங்குடைய ஈசன்.

ஓர்வு அரு கண்கள் - மாலற நேயம் மலிந்தவர் வேடத்தை அரனென நினைக்காத கண்கள். 
இணைக்க - அன்பரொடு மருவுதற்கு. அயல் - புறம்பானவை. 
இணைக்கயல் - இரு மீன்களுக்கு ஒப்பாகும். 

2. அழகிய கழலில் நாகத்தைக் கட்டி இருப்பர்.
திருமேனி நெருப்பு வண்ணம் உடையது.

ஏர் மருவும் - அழகு பொருந்திய. 
கழல் - வீரக்கண்டையாக இருப்பது. 
நாகம் அது - பாம்பாம்.
எழில் கொள் - அழகிய. 
உதாசனன் - அக்கினி. 
ஆகம் அது - திருவுடம்பாக இருப்பது. 

3. நீர் மயமான ஈசனின் சடை முடி அலங்கரிக்கப்பட் ஒழுங்குடன் திகழ்வது.
நெடுஞ்சடையில் கங்கையைத் தரித்தவன்.

நீர்வரு - நீர்மயமான. 
கொந்தளம் - சடைமுடி
கொந்து அளகம் - கொத்தான கூந்தல். 
கையது - ஒப்பனைஒழுங்கு உள்ளது. 
கங்கையது - கங்கையாகிய மங்கைக்கு உரியது. 
ஒரு மங்கையே நீர்மயமாக இருப்பாளேயானால் அவளது சாங்கமும் நீர்மயமானதே என்று கொள்வதற்கு நீர்வரு கொந்தளகம் என்று கூறினார்.

4. சேர்தற்கரிய யோகநிலையைக் காட்டிய மூன்று கண்களையுடையவரே. நெருப்பாகிய அம்பைக் கையின் இடத்துக்கொண்டு சிரபுரம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்து அருளுகின்றார்.

சேர்வரு - சேர்தற்கரிய. 
யோகம் - யோகநிலையைக் காட்டிய. 
தியம்பகன் - மூன்று கண்களை உடையவன். 
தியம்பகன் - திரியம்பகன் என்பதன் மரூஉ. சிரபுரம், 
மேய - எழுந்தருளிய.
 தீ - நெருப்பாகிய. 
அம்பு - அம்பைக்கொண்ட. 
அகன் - கையினிடத்தை உடையவன்.
 தீ - குறுக்கல் விகாரமாய் தி என நின்றது. அகம் - இடம்.

🛐தலக்குறிப்பு: சிரபுரம் : சிலம்பன் என்னும் அசுரன் வேற்றுருவுடன் அமுதம் பெற வந்த போழுது, திருமால் அவனது தலையை வெட்டினார். அவனது தலை (சிரம்) இராகுவாக நின்று பூசித்ததால் இப்பெயர் பெற்றது சீர்காழி.
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
தேவாரம். - மூன்றாம் திருமுறை 
பாடல் 1219
பதிகம். 371 தலம் - திருக்கழுமலம்
பாடல் - 8
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
ஈண்டு துயிலமர் அப்பினனே
     இருங்கண் இடந்துஅடி அப்பினனே

தீண்டவரும் பரிசு அக்கரமே
       திகழ்ந்து ஒளி சேர்வது சக்கரமே

வேண்டி வருந்த நகைத் தலையே
       மிகைத்தவ ரோடு நகைத்தலையே

பூண்டன சேரலும் மாபதியே
         புறவம் அமர்ந்த உமாபதியே.

🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
பாடல் பொருள் விளக்கம்:

1.பாற்கடலில் துயில் கொள்ளும் திருமால், 
தமது பெரிய கண்ணைத் தோண்டிச் சிவபெருமானின் திருவடிகளில் அர்ச்சித்தனர். 

ஈண்டு - இங்கே ( திருவீழிமிழலையில் ). துயில் அமர் அப்பினன் - கடலில் தூங்கும் திருமால். 
அப்பு - தண்ணீர், கடலைக் குறித்தது தானியாகுபெயர். 
இரு - பெரிய. 
கண் - கண்ணை. 
இடந்து - தோண்டி. 
அடி - திருவடியின்கண். 
அப்பினன் - சேர்த்தான்

2. தீண்டுதற்கரிய தன்மையுடைய அந்தக் கரத்தில் 
ஒளியுடையதாய் விளங்குவது சக்கரமே.

தீண்டல் அரு - தீண்டுவதற்கு அரிய. 
பரிசு - தன்மையுடன்.
 அக்கரம் - அந்தக்கரத்தில். 
திகழ்ந்து - விளங்கி. 
ஒளிசேர்வது - ஒளி உடையதாய் இருப்பது. சக்கரம் - சக்கர ஆயுதமாம். 

3. தன்னை ஏளனம் செய்து கொல்ல வந்த தாருகாவனத்து முனிவர்களை நோக்கி, அவர்களை ஏளனம் செய்யுமாறு மண்டை ஓடுகளைக் கோர்த்து மாலையாகக் கொண்டவர்.

வேண்டி - ( தாருகாவனத்து முனிவர் ) விரும்பி. 
வருந்த - யாகம் செய்து சிரமப்பட ( தோன்றிய ).
 நகைத்தலை - நகுவெண்டலையானது. அவரோடு - அம்முனிவ ரோடு. 
மிகைத்து - மிக்க மாறுகொண்டு. நகைத்தலையே

4. அவர் சேர்வது எவற்றிலும் சிறந்த அடியார் உள்ளமாகிய இடமாம். 
புறவம் என்னும் திருத் தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுபவரும் அந்த உமாபதியே ஆவார்.

பூண்டனர் - நகைத்தலை உடையதாக
 பூண்டனர் - தலைக்கண் அணிந்தனர். சிவனைக் கொல்லவந்த நகுவெண்டலை சிரிப்பது, அம் முனிவரைப் பரிகசிப்பதைப் போலக் காணும்படி அதனை அணிந்தனர் என்பது கருத்து.
சேரலும் - சேர்வதும். 
மா - எவற்றிலும் சிறந்த ( அடியார் உள்ளமாகிய ). 
பதி - இடம்.

⛰️தலம் குறிப்பு: புறவம் :
சிபிச்சக்கரவர்த்தியிடம் இந்திரன் பருந்தாகவும், அக்கினி தேவன் புறாவாகவும் சென்று சோதித்தார்கள்.
சிபி புறாவின் எடைக்குத் தனது உடல் தசையை அறுத்து ஈடு செய்தான். இப் பாவம் நீங்கப் புறாவாகிய அக்கினி தேவன் இத்தலத்தை வழிபட்டதால் புறவம் எனப்பட்டது.
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
பத்தி இலக்கியத்தில் தமிழின் பெருமையை உலகறியச் செய்த 
ஆளுடைய பிள்ளையாரின் அமுத பாடல்களின் ஒரு துளி பருகினோம்; இறையருளால்.
இதன் பெருமையை எண்ணிப் போற்றுவோம். 
வணக்கம்.
நன்றி
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
முதல் பதிவில் பாடல் 1. விளக்கம்
1.
https://m.facebook.com/story.php?story_fbid=5711134088961801&id=100001957991710
2.
https://m.facebook.com/story.php?story_fbid=3991943280880899&id=100001957991710
பதிவு : இரண்டு பாடல். 2,3. விளக்கம்:
https://m.facebook.com/story.php?story_fbid=5716695178405692&id=100001957991710
2.
https://m.facebook.com/story.php?story_fbid=3995772097164684&id=100001957991710
பதிவு : மூன்று. பாடல் 4, 5 விளக்கம்:
https://m.facebook.com/story.php?story_fbid=5721422241266319&id=100001957991710
2.
https://m.facebook.com/story.php?story_fbid=4000232066718687&id=100001957991710

No comments:

Post a Comment

பதிவு - 13 நாள் - 7 ஆதிகைலாஷ் தரிசனம் Gunji to Jolingkong (4630mts.) Adikailash and back to Budhi (2740mts.) Total 86 Kms. 9 - 10 hrs. நாள் - 7 - 01.06.24 - சனி

பதிவு - 13 நாள் - 7  மிக முக்கிய நாள் ஆதிகைலாஷ் தரிசனம் Gunji to Jolingkong (4630mts.) Adikailash and back to Budhi (2740mts.) Total  86 Kms...