Wednesday, September 24, 2025

திருஆவினன்குடி - குழந்தை வேலாயுத சுவாமி -பிரதோஷக்குழுயாத்ரா 14.9.25 - கொங்குநாட்டுத்தலங்கள்

திருஆவினன்குடி - குழந்தை வேலாயுத சுவாமி

திருஆவினன்குடி - குழந்தைவேலாயுத சுவாமி
திரு என்ற இலக்குமி தேவியும், ஆ என்ற காமதேனுவும், இனன் என்ற சூரிய பகவானும், இத்தலத்து முருகப்பெருமானை வழிபட்டமையால் திருஆஇனன்குடி என்று பெயா் பெற்றதாக சொல்லப்படுகிறது.

சங்க காலத்தில் இந்த ஊர் திருவாவினன்குடி என்றே அழைக்கப்பட்டதாகவும், மாம்பழத்திற்காக கோபம் கொண்டு வந்தமர்ந்த முருகப்பெருமானை சிவனும், பார்வதியும், இத்திருத்தலத்திற்கு வந்து ஞானப் "பழம் நீ" என்று முருகனுக்கு சூட்டிய பெயரே, நாளடைவில் மருவி பழநி என்று ஊர் பெயர் வர காரணமானதாக தல புராணம் கூறுகின்றது.

அமைவிடம்

இத்திருத்தலம் பழநி மலைக்கோவிலுக்கு செல்லும் வழியில், பழநி மலை அடிவாரத்தில் வையாபுரி ஏரிக்கரையில் அமைந்துள்ளது. இக்கோவிலின் வடகிழக்கு திசையில் சரவணப் பொய்கை உள்ளது. இத்தலத்தில் உள்ள பெருமானை வழிபட்ட பின்னரே, மலைக்கோவிலுக்கு சென்று தண்டாயுதபாணித் தெய்வத்தை வழிபடுவது மரபு.

மூன்றாம் படைவீடு விளக்கம்

மூன்றாம் படைவீடு என்பது பழநி மலைக்கோவிலா அல்லது திருவாவினன்குடி திருத்தலமா என்பதில் பலருக்கும் மிகப்பெரிய சந்தேகம் உள்ளது.

திருவாவினன்குடி கோவிலையே நக்கீரர் பெருமான், திருமுருகாற்றுப்படையிலே முருகனின் மூன்றாம் படைவீடாக

"தாஇல் கொள்கை மடந்தையொடு சில்நாள் ஆவி னன்குடி அசைதலும் உரியன்: அதாஅன்று"

அதாவது, குற்றம் இல்லாத கோட்பாடுடன், யாவர்க்கும் நன்மையே விளைவிக்கும் உயர்ந்த கொள்கை உடைய தன் துணைவியோடு சிலகாலம் ஆவினன்குடியில் தங்கியிருப்பதற்கு உரிமை உடையவன் என்று போற்றி பாடியுள்ளார் என்பதாக சொல்லப்படுகிறது.

கோபம் கொண்டு வந்து அமர்ந்த இடமான பழநி மலைக்கோவிலில் தண்டாயுதபாணித் தெய்வமாகவும், திருவாவினன்குடி திருத்தலத்தில் மயில் மீது அமர்ந்த குழந்தை வேலாயுத சுவாமியாகவும் காட்சியளிக்கிறார். சங்க காலத்தில் இந்த இரண்டு திருத்தலங்களையும் சேர்த்தே இந்த ஊரின் பெயர் திருவாவினன்குடி என்று இருந்ததாக புராணங்கள் சொல்கின்றன.

ஆக நக்கீரர் பெருமகனார் பாடிய திருத்தலம் பழநி மலைக்கோவில் மற்றும் திருவாவினன்குடி கோவில் இரண்டையும் உள்ளடக்கிய ஒரு தலமாகவே கொள்ளலாம். எனவே மலைக்கோவில் மற்றும் திருவாவினன்குடி திருத்தலம் இரண்டையுமே மூன்றாம் படைவீடாகக் கொள்ள வேண்டும்.

ஆனால் சிலகாலம் முன்பு வரை இக்கோவிலின் சன்னதிக்கு வெளியே மூன்றாம் படைவீடு என்ற பெயர்ப் பலகை வைக்கப்பட்டிருந்தது. காலப்போக்கில் அப்பெயர்ப்பலகை நீக்கப்பட்டுவிட்டது. இன்றும் பழநி மலை அடிவாரத்தில் படிக்கட்டு நடைபாதை முடிந்து வெளியே வரும் இடத்தில் அரசாங்கத்தால் மூன்றாம் படைவீடு திருவாவினன்குடி செல்லும் வழி என்று வழிகாட்டும் பலகை வைக்கப்பட்டுள்ளது

அறுபடை வீடுகளில் சிறப்பாக கொண்டாடப்படும் பங்குனி உத்திரத் திருவிழா, திருவாவினன்குடி திருத்தலத்திலே கொடியேற்றத்துடன், திருக்கல்யாணம் மற்றும் தேர் வடம் பிடித்தல் போன்ற நிகழ்ச்சிகள் தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் தேவஸ்தானத்தால் நடத்தப்படுகின்றன

பல நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த இந்தக் கோவிலை நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் மறு கட்டுமானம் செய்தும், புதிதாக மண்டபங்கள், பிரகாரம், ராஜ கோபுரம் அமைத்தும் பெரிய கற்றளியாக எழுப்பியுள்ளனர். 1919 சூன் 26 இல் குடமுழுக்கு இடம்பெற்றது.

அருணகிரியால் திருப்புகழ்பாடப்பெற்றதலம்

பழனி மலைக்கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் முதலில் திருஆவினன்குடி கோயிலுக்கு சென்று வழிபடுவது வழக்கம்.

இது பழமையான கோயில், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு முன்பே தோன்றியதாக நம்பப்படுகிறது.

இங்குள்ள முருகப்பெருமான் குழந்தை வேலாயுதசுவாமி என்று அழைக்கப்படுகிறார்.

 பழனி மலைக்கோயிலின் அடிவாரத்தில் அமைந்துள்ளது.

சங்க காலத்தில் இந்த ஊர் திருஆவினன்குடி என்று அழைக்கப்பட்டது.

 அகத்தியர் இங்கு தவம் செய்து முருகனிடம் தமிழ் இலக்கணம் கற்றதாக புராணங்கள் கூறுகின்றன.

குழந்தை வரம் வேண்டுவோர் இங்கு வந்து வழிபட்டால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இந்த தகவல்கள் திருஆவினன்குடி கோயிலின் முக்கியத்துவத்தையும் வரலாற்று சிறப்பையும் விளக்குகின்றன.

நன்றி 🙏வலைதளம்🌐
#மீள் தரிசனம் 14.09.25 #சுப்ராம்தரிசனம்
#பிரதோஷக்குழுயாத்ரா 14.9.25
#என்றும்அன்புடன் 
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால் 
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மிகபாரதம்அகிலத்தின்சிகரம்

பழனி - தண்டாயுதபானி சுவாமி ஆலயம் - பிரதோஷக்குழு யாத்ரா 14.9.25 - கொங்குநாட்டுத்தலங்கள்

பழனி - தண்டாயுதபானி சுவாமி
பழனி
பழனி தண்டாயுதபாணி சுவாமி ஆலயம்.
14.9.25 ல் மீண்டும் தரிசிக்க வாய்ப்பு.
Cell phone, Bag , காலனிகள் வைக்க இடவசதி அடிவாரத்தில் உள்ளது.
ரோப்கார் மிகவும் கூட்டம் என்றார்கள்; நாங்கள் மலை ரயில் மூலம் சென்றோம்.
மலைரயில் முதியோருக்கு 50/-
பொதுமக்கள் 10 /- பொதுமக்கள் சிறப்பு 60/- 3 வித கட்டண விகிதம்..
1 மணி நேரம் காத்திருப்பு (முதியோர்)
மதியம் 2.30 - 3.30 காத்திருந்து மலைரயில் மூலம் 4.30 அடைந்தோம்.
மலை மீது எங்கும் கூட்டம் மிகவும் குறைவு.
உடனடியாக தரிசனம்.
சுவாமி தரிசனம் முடித்து படிவழி இறங்கி
ஆவினன்குடி சென்று தரிசனம்.
மலைப்பாதை, மற்றும் முழுவதும் சுத்தமாக காணப்படுகிறது. நிறைய வசதிகள் செய்து வருகிறார்கள்.
மலைப்பகுதி முழுதும் இலவச பேட்டரி கார் வசதி பக்தர்களுக்கு மிகவும் உபயோகமாக உள்ளது. நன்றி🙏
14.09.2025 ஞாயிறு
#சுப்ராம்தரிசனம்
#பிரதோஷக்குழுயாத்ரா 14.9.25

கடத்தூர் - குருவன் வலசு - கொங்கனேஸ்வரர்கொங்கனேஸ்வரர் ஆலயம் - குருவன் வலசு, கடத்தூர் (அருகில்) - பிரதோஷக்குழு யாத்ரா 14.9.25 - கொங்குநாட்டுத்தலங்கள்

கடத்தூர் - குருவன் வலசு - கொங்கனேஸ்வரர்
கொங்கனேஸ்வரர் ஆலயம் - குருவன் வலசு, கடத்தூர் (அருகில்)

கொங்கு மண்டலம் வரலாற்று சிறப்பு, கலை, பண்பாடு, நாகரிகம், இறையுணர்வு ஆகியவற்றைக் தன்னகத்தே கொண்ட வளம் கொழிக்கும் பழம் பெருமை வாய்ந்த பகுதியாகும். வைணவத்தின் பெருமையைப் பறைசாற்றும் வகையில் நெல்லை மாவட்டத்தில் ஒன்பது இடங்களில் பெருமாளுக்கென அமைக்கப்பட்ட கோவில்கள் நவதிருப்பதி என அழைக்கப்படுகிறது. அதே போல்
கொங்கு மண்டலத்தில் சைவத்தின் பெருமையைப் பறைசாற்றும் வகையில் அமராவதி ஆற்றின் கரையோரம் கொழுமம் முதல் கரூர் வரை 11 சிவாலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பயண அனுபவ குறிப்புகள்:
கடத்தூரில் உள்ள கொங்கனேஸ்வரர் 
ஆலயம் கிழக்குநோக்கியவாறு அமைக்கப்பட்டுள்ளது.

அமராவதி ஆறு அருகில் உள்ளது.
மிகவும் சிதலமடைந்து விட்டது.

கருவரை மட்டுமே மீதி உள்ளது. கற்றளியாக இருந்திருந்த ஆலயம், பெரிய வளாகத்தில் பெரிய ஆலயமாக இருந்திருக்க வேண்டும்.

ஆலயம் மீட்டெடுக்க / பராமரிக்க பக்தர்கள் பொதுமக்கள் உதவி அவசியம் தேவை. மிகப் பழமையான ஆலயம். சிதலமடைந்து விட்டாலும், குருக்களின் முயற்சியால் ஒரு காலம் நடைபெறுகிறது.

உள்ளூர் பக்தர்களும், சிவாலய மீட்பவர்களும் இணைந்து விட்டால், இந்த புராதான ஆலயத்தை மீட்டு விடலாம்.
இறையருள் துணையிருக்க வேண்டினோம்.

14.09.25 ஞாயிறு
#சுப்ராம்தரிசனம்
#என்றும்அன்புடன் 
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால் 
#ஆலயம் தொழுவது சாலவும் நன்று 
#ஆன்மிகபாரதம்அகிலத்தின்சிகரம்

கடத்தூர் அர்ச்சுனேஸ்வரர் கோயில். - பிரதோஷக் குழு யாத்ரா 14.9.25 - கொங்குநாட்டுத்தலங்கள்

கடத்தூர் - அர்ச்சுனேஸ்வரர் ஆலயம்

கடத்தூர் அர்ச்சுனேஸ்வரர் கோயில்.

திருப்பூர் மாவட்டம்  
 உடுமலைப் பேட்டையில் இருந்து சுமார் 23 கிலோ மீட்டர் தொலைவிலும்,
மடத்துக்குளம் / கணியூருக்கு அருகில் உள்ள கடத்தூர் என்னும் சிறிய ஊரில் அமராவதி ஆற்றங்கரையில் இந்தக் கோவில் அமைந்துள்ளது. புகழ்பெற்ற 
பழனி திருத்தலம் அருகில் உள்ளது. 

உடுமலைப்பேட்டையிலிருந்து பேருந்துகளில் இந்தக் கோவிலுக்கு எளிதாக வந்து சேரலாம். 

கொங்கு மண்டலம் வரலாற்று சிறப்பு, கலை, பண்பாடு, நாகரிகம், இறையுணர்வு ஆகியவற்றைக் தன்னகத்தே கொண்ட வளம் கொழிக்கும் பழம் பெருமை வாய்ந்த பகுதியாகும். வைணவத்தின் பெருமையைப் பறைசாற்றும் வகையில் நெல்லை மாவட்டத்தில் ஒன்பது இடங்களில் பெருமாளுக்கென அமைக்கப்பட்ட கோவில்கள் நவதிருப்பதி என அழைக்கப்படுகிறது. அதே போல் 

கொங்கு மண்டலத்தில் சைவத்தின் பெருமையைப் பறைசாற்றும் வகையில் அமராவதி ஆற்றின் கரையோரம் கொழுமம் முதல் கரூர் வரை 11 சிவாலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

 இவற்றில் கொழுமம் தாண்டேஸ்வரர் ஆலயம், காசிவிஸ்வநாதர் ஆலயம், கடத்தூர் அர்ச்சுனேஸ்வரர் ஆலயம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. 

இந்த அர்ஜூனேஸ்வரர் சிவன் கோவில் அர்ஜூனேஸ்வரர் சிவன் கோவில் கிபி 10ஆம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்ட ஒரு பழமையான சிவன் கோயிலாகும். 

அர்ச்சுனன் தனது வில்லால் இறைவனை வழிபட்டதாகவும், அர்ச்சுனனுக்கு இறைவன் அருள் புரிந்ததாகவும் நம்பப்படுகிறது. 

வருடத்தின் சில நாட்களில், சூரிய ஒளி நேரடியாக கருவறைக்குள் விழும் அற்புதம் இங்கு நிகழ்கிறது. 
சூரிய ஒளி விழும் அதிசயம் ஆண்டு முழுவதும் அதிகாலையில் சூரிய ஒளி கோவில் அருகில் உள்ள அமராவதி ஆற்றின் நீரில் பட்டு பிரதிபலித்து சுயம்புவாய் லிங்க வடிவில் எழுந்தருளியுள்ள அர்ச்சுனேஸ்வரர் மீது படுவது சிறப்பம்சமாகும். சூரியன் திசை மாறும் காலங்களான உத்திராயணம், தட்சிணாயணம் காலங்களிலும் கூட சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது விழும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. சோழர் கால கட்டிடக்கலையின் சிறப்பம்சமாகும்.

 மேலும் ஆற்று நீரில் படும் சூரிய ஒளி ஆற்றங் கரையைக் கடந்து மூன்று நிலை கோபுரம், நந்திதேவர், அர்த்தமண்டபம், மகாமண்டபம் வசந்த மண்டபம் கருவறை என சுமார் 200 அடிக்கும் மேலாக பயணம் செய்து சிவலிங்கத்தின் மீது விழுவது அதிசயிக்கத்தக்க நிகழ்வாகும். அதிகாலையில் சூரிய பகவான் தன்கிரகணங்களை அர்ச்சுனேஸ்வரர் மீது செலுத்தி வழிபடுவதால் இவ்விறைவனை வழிபடுவோருக்கு நிழல் கிரகங்களான ராகு, கேதுவின் தோஷங்கள் மற்றும் காலசர்ப்ப தோஷமும் நீங்குவதாக ஐதீகம். அமராவதி ஆற்றில் தண்ணீர் இல்லாத காலங்கள் தவிர மற்ற காலங்களில் சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது விழும் அதிசயத்தை காண முடிகிறது. இந்த அதிசய நிகழ்வை காண சுற்று வட்டார கிராமங்களில் இருந்து மட்டுமல்லாமல் நெடுந்தொலைவில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

கோயில் நேரம்
காலை 6.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 7 மணி வரையும் நடைதிறந்திருக்கும். விஷேச தினங்களில் நடைதிறப்பு நேரம் மாறுபடும்.

பஞ்சபாண்டவர்கள் அஞ்ஞாத வாசம் மேற்கொண்டு மறைந்து வாழ்ந்த காலத்தில், சிவ பூஜை செய்ய வேண்டி சுயம்புவாய் எழுந்தருளியவர் அர்ச்சுனேஸ்வரர்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிவபெருமான் சுயம்பு லிங்கமாக தோன்றி, விக்கிரம சோழனை ஆட்கொண்ட இடத்தில் இந்தத் திருக்கோவில் அமைந்துள்ளது. சோழர்களின் கட்டிட கலையை பறைசாற்றும் வகையில் முற்றிலும் கல்லால் கட்டப்பட்டுள்ளது. விக்கிரம சோழன் மட்டுமல்லாது பொதுமக்களின் பங்களிப்போடு இந்த கோவில் கட்டப்பட்டிருக்கிறது. இதனை இங்கு காணப்படும் கல்வெட்டுகள் உறுதிபடுத்துகின்றன.

இங்கு அருள்பாலிக்கும் சிவபெருமான் மகிழ்ச்சியை அளிப்பதால் ‘மருதீசர்’ எனவும், பாவவினை என்னும் நோயை நீக்க மருந்தாகத் தோன்றியதால் ‘மருந்தீசர்’ என்றும், அர்ச்சுனன் வழிபட்டதால் ‘அர்ச்சுனேஸ்வரர்’ என்றும் பல்வேறு நாமங்களில் அழைக்கப்படுகிறார்

தல வரலாறு : அமராவதி ஆற்றங் கரையில் அமைந்துள்ள 11 சிவமூர்த்த தலங்களில், கடத்தூர் மட்டுமே சுயம்பு திருமேனியை கொண்டது.

 பஞ்சபாண்டவர்கள் அஞ்ஞாத வாசம் மேற்கொண்டு மறைந்து வாழ்ந்த காலத்தில், சிவ பூஜை செய்ய வேண்டி சுயம்புவாய் எழுந்தருளியவர் அர்ச்சுனேஸ்வரர். 

பல ஆண்டுகளுக்கு பிறகு காரைத்தொழுவில் இருந்து இந்தப் பகுதி வழியாக இடையர் ஒருவர் பால் கொண்டு சென்றார். அப்போது குறிப்பிட்ட ஒரு இடத்தில் மட்டும் கால் இடறி ஒரு குடம்பால் சிந்தியது. தினமும் இந்த நிகழ்வு தொடர்ந்ததால் மன்னன் விக்கிரம சோழனின் உத்தரவுப்படி அங்கிருந்த மூங்கில் புதர்கள், மருத மரம் ஆகியவற்றை அகற்றும் பணி நடைபெற்றது. அப்போது சுயம்புவாக இருந்த சிவலிங்கத்தின் மீது வெட்டுப்பட்டு, ரத்தம் பீறிட்டு வெளிவந்தது. அது அருகில் இருந்த அமராவதி ஆற்றில் கலந்து ஓடியது. செய்தியறிந்து மன்னர் விக்கிரம சோழன் வந்து, தன் கைவிரல் மோதிரத்தால் ரத்தம் வடியும் இடத்தில் அழுத்த ரத்தம் நின்றதாம். இதையடுத்து அந்த இடத்தில் அர்ச்சுனேஸ்வரர் ஆலயத்தை விக்கிரம சோழன் அமைத்ததாக கூறப்படுகிறது. இன்றளவும் இங்குள்ள சிவலிங்கத்தின் தலைப்பாகத்தில் வெட்டுப்பட்ட காயத்தின் தழும்பு போன்ற அமைப்பை காண முடியும்.

சோழர் படைத்தளபதி நாகதோஷத்தால் பாம்பு கடித்து அவதிப்பட்ட போது, இங்குள்ள அம்மன் புற்றாக தோன்றி அருள்புரிந்ததாகவும், குலோத்துங்க சோழன் மகளுக்கு மாங்கல்ய தோஷத்தால் திருமணத்தடை ஏற்பட்ட போது, அர்ச்சுனேஸ்வரர் தோஷம் நீக்கி அருள்புரிந்ததாகவும். கர்ண பரம்பரை மற்றும் தல வரலாற்று செய்திகள் கூறுகின்றன.
திருமணத் தடை நீங்கும் தலமாக இந்தக் கோயில் பார்க்கப்படுகிறது. 

 ஒவ்வொரு வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் வளர்பிறை, பஞ்சமிதிதி மற்றும் பவுர்ணமி திதியன்றும் திருமணத்தடை நீங்க இத்திருக்கோவிலில் பரிகார பூஜைகள் நடைபெறுகிறது. இதில் மாங்கல்ய தோஷம் நீங்க வேண்டி பெண்கள் கலந்து கொண்டு பூஜைகள் செய்து வழிபட்டு வருகின்றனர். இதனால் இத்திருத்தலம் திருமணத்தடைகள் நீக்கும் ‘தென் திருமணஞ்சேரி’ என்று அழைக்கப்படுகிறது. 

கொங்கு சோழனான மூன்றாம் விக்கிரம சோழன் ஆட்சிக்காலத்தில், திரிபுவன சிங்கன் என்பவருக்கு ‘பிரமேகம்’ என்று அக்காலத்தில் அழைக்கப்பட்ட சர்க்கரை நோய் ஏற்பட்டது. அவர் கடத்தூர் மருந்தீஸ்வரரை வணங்கி வேண்டியதால் சர்க்கரை நோய் நீங்கி நலம் அடைந்தார். எனவே இறைவனுக்கு அமுது செய்ய நிலம் தானமாக வழங்கியதாகவும் இங்குள்ள கல்வெட்டுகள் மூலம் தெரியவருகிறது.

திருக்கோவில் அமைப்பு :
இக்கோயிலில் அர்ச்சுனேஸ்வரர், கோமதி அம்மமாள் சன்னதிகளும், விநாயகர், சுப்பிரமணியர், காலபைரவர், சனீஸ்வரர் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் கல்வெட்டு நிறைய உள்ளது. இக்கோயிலில் மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம் உட்பட மொத்தம் ஏழு கோபுரங்கள் உள்ளன. அர்ச்சுனேஸ்வரர் கோவில் முழுவதும் கல்லினால் கட்டப்பட்டது. சமசதுர வடிவிலான கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், வசந்த மண்டபம் என 90 அடி நீளம் கொண்டது. 

அர்ச்சுனேஸ்வரர் கோவிலின் தெற்கு திசையில் இறைவனது வலது பக்கத்தில் கிழக்கு நோக்கி கோமதி அம்மன் சன்னிதி தனியாக அமைந்துள்ளது. மேலும் இரு திருச்சுற்றுகள், இரு திருமுற்றங்கள், இரு திருவமுது மடங்கள், இரு வாசல்கள் என அமைந்துள்ளது இந்த கோவிலின் சிறப்பம்சமாகும்.

பொதுவாக சிவன் கோவிலில் இறைவனுக்கு இடது புறமாக அம்மன் சன்னிதி அமைவது மரபு. ஆனால் கடத்தூரில் அர்ச்சுனேஸ்வரர் ஆலயத்துக்கு வலது புறமாக 4 அடி உயரத்திருமேனி கொண்டு, தனி சன்னிதியில் கோமதி அம்மன் அருள்பாலிக்கிறார். எனவே காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சியைப் போன்று கடத்தூர் கோமதியம்மனும் தனிச்சிறப்பு பெற்றவராய் திகழ்கின்றார். 

சைவம், வைணவம் பேதம் இன்றி கருவறையின் மேற்கு கோஷ்டத்தில் இறைவனின் முதுகுப்பகுதியில் விஷ்ணு சன்னிதி அமைந்துள்ளது. திருக்கோவில் திருச்சுற்றில் வலம்புரி விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை, பைரவர் சன்னிதிகள் அமைந்துள்ளன. வாயிலின் முன்புறம் 4½ அடி உயர பலிபீடமும், 3½ அடி நீளம் 3 அடி உயரம் கொண்ட நந்திதேவர் சிலையும் அமைந்துள்ளது. 

சுவாமி சன்னிதியின் தெற்கு தேவ கோட்டத்தில் வெள்ளை நிறம் பளிங்குக் கல்லால் ஆன தட்சிணாமூர்த்தி சிலை உள்ளது. இந்த பளிங்கு திருமேனியானது காசியில் இருந்து கொண்டு வரப்பட்டதாக கூறுகின்றனர்.

பொதுவாக சுயம்புலிங்கம் உள்ள கோவில்களில் நவக் கிரக சன்னிதி இருப்பதில்லை. இருப்பினும் இந்த திருக்கோவிலில் கோமதியம்மனின் தவத்தினை கண்ட சனிபகவான் தானும் தவமியற்றி வழிபட்டு வந்ததாக வரலாற்று செய்திகள் தெரிவிக்கின்றன. எனவே பக்தர்கள் ஏழரைச்சனி, அஷ்டமச்சனி காலங்கள் மற்றும் ராகு, கேதுகளின் தோஷ காலங்கள் உள்ளிட்ட இடர்பாடுகள் நிறைந்த காலங்களில் இங்கு தவமியற்றி நிற்கும் சனிபகவான், கால பைரவர் ஆகியோரை வணங்கி, பின் கோமதியம்மனை வணங்கி அர்ச்சுனேஸ்வரரை வழிபட்டால் துன்பம் நீங்கி இன்பம் பெருகும்.

இக்கோயிலில் சிவாகம முறைப்படி மூன்று காலப் பூசைகள் நடக்கின்றன. மாசி, சித்திரை, ஐப்பசி மாதம் திருவிழா நடைபெறுகிறது

இத்திருக்கோவிலில் மகாசிவராத்திரி, பிரதோஷம், ஐப்பசி அன்னாபிஷேகம், ஆடிப்பூரம், பவுர்ணமி, அமாவாசை மற்றும் தேய்பிறை அஷ்டமி, பைரவர் பூஜை ஆகியவை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மேலும் பக்தர்களால் ஆயுள் ஹோமம், சஷ்டியப்த பூர்த்தி, சதாப்த பூர்த்தி ஆகியவையும் இங்கு கொண்டாடப்படுகிறது. திருமணத்தடை, குழந்தைப்பேறின்மை, காலசர்ப்ப தோஷம் மற்றும் சகல தோஷங்களுக்குமான பரிகாரத்தலமாக இத்திருக் கோவில் உள்ளது.

பயண அனுபவ குறிப்புகள்:

ஆலயம் கிழக்குநோக்கியவாறு ராஜகோபுரத்துடன் அமைக்கப்பட்டுள்ளது.
எதிரில் அமராவதி ஆறு உள்ளது.

ஆற்றுக்கரைக்கும், ஆலயத்திற்கும் இடை பகுதியில் வாகனங்கள் நிறுத்த வசதிகள் உண்டு. கழிப்பறை வசதிகள் செய்துள்ளனர். வேறு எந்தவித கடைகள், வீடுகள் அதிகம் இல்லை.

 கடத்தூர் பஸ் நிறுத்தம் முதல் 700 மீட்டர் நடந்தோ, வாகனங்களில் தான் வர முடியும்.
மிகவும் மன அமைதி தரும் இடமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரார்த்தனைத்தலமாக விளங்குவதால் பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.
குருக்கள் மிகவும் விபரம் சொல்கிறார்கள்.
கொங்குமண்டலத்தில் உள்ள புராண ஆலயங்களில் அவசியம் தரிசிக்க வேண்டிய தலம்.

இதை தரிசித்து மிக அருகில் உள்ள கடத்தூரில் - குருவன் வலசில் உள்ள கொங்கனேஸ்வரர் புராதான ஆலயம் சென்றோம்.

14.09.25 ஞாயிறு.
#சுப்ராம்தரிசனம்
#என்றும்அன்புடன் 
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால் 
# ஆலயம் தொழுவது சாலவும் நன்று 
# ஆன்மீக பாரதம் அகிலத்தின் சிகரம்
பிரதோஷக்குழு யாத்ரா - 14.9.25

திருஆவினன்குடி - குழந்தை வேலாயுத சுவாமி -பிரதோஷக்குழுயாத்ரா 14.9.25 - கொங்குநாட்டுத்தலங்கள்

திருஆவினன்குடி - குழந்தை வேலாயுத சுவாமி திருஆவினன்குடி - குழந்தைவேலாயுத சுவாமி திரு என்ற இலக்குமி தேவியும், ஆ என்ற காமதேனுவும், இனன் என்ற சூ...