Monday, January 16, 2023

பஞ்சவடி - நாசிக் பயணஅனுபவக்குறிப்புகள் 🕊️#மகாராஷ்ட்ரா#நாசிக்_பஞ்சவடி15.10.2022. பயண அனுபவக் குறிப்புகள்🕊️

#பஞ்சவடி - நாசிக் 
பயணஅனுபவக்குறிப்புகள் 🕊️
#மகாராஷ்ட்ரா
#நாசிக்_பஞ்சவடி
15.10.2022. 
பயண அனுபவக் குறிப்புகள்🕊️

🌟நாங்கள் 15.10.2022 அன்று  காலை  
திரயம்பகேஸ்வரர் ஜோதிர்லிங்கம்   தரிசித்து, பயண ஏற்பாட்டாளர்கள் தயாரித்து அளித்த காலை உணவை  அங்கேயே முடித்துக் கொண்டு,  அங்கிருந்து சுமார் 9.15 மணி அளவில் எங்கள் தனி பேருந்தில் புறப்பட்டு, சுமார் 30 கி.மீ பயணத்தில்,  நாசிக் நகர் வந்து அடைந்தோம்.

🌟#நாசிக்

⚡நாசிக் பாரத தேசத்தில், மகாராஷ்டிரா மாநிலத்தில், உள்ள ஒரு நகரமாகும். மகாராஷ்டிர மாநிலத்தின் வடகிழக்குப் பகுதியில் இது அமைந்துள்ளது. 

⚡இது மும்பையில் இருந்து சுமார் 180 கி.மீ. தொலைவிலும் புனேயில் இருந்து 202 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
இது நாசிக் மாவட்டத்தின் தலைநகரமாக விளங்குகிறது. 
⚡இது மிகவும் இனிமையான பருவநிலைக்கு பெயர்பெற்றது. ⚡இந்திய அரசின் வங்கித்தாள் அச்சகம் இங்கு உள்ளது. 
⚡இந்த நகரம் விதையில்லா திராட்சைக்கு பெயர் பெற்றது. ⚡இராமாயண காலத்தில் இந்நகரத்தின் பெயர் பஞ்சவடியாக இருந்தது*

🌟#பஞ்சவடி

இராமாயண சுவடுகளில் .....

🌀'இராமாயணத்தில் அயோத்தியின் மன்னன் தசரதனின் மனைவியருள் கைகேயி தனது சேடி மந்தரையின் போதனையால் தனது மகன் பரதனுக்கு கோசலநாட்டையும், அதன் அரசபதவியையும் பெறும் நோக்கில் தசரதனிடம் இரண்டு வரங்களை பெறுகிறார். அதன் விளைவாய் அரசனாக முடிசூட்ட இருந்த இராமன் 14 வருடம் வனவாசம் செல்கிறார்.  மனைவி சீதை, சகோதரர் இலக்குமணன் ஆகிய இருவரும் அவருடன் செல்கின்றனர்.

🌀அயோத்தியிலிருந்து தெற்கு நோக்கி சென்ற இராமரை, இந்த பகுதியில் இருந்த முனிவர்கள் வரவேற்று, இங்கேயே தங்கவேண்டும் என்ற அவர்கள் கோரிக்கைக்கு இணங்கி, அந்தப் பகுதியில் தங்க சம்மதிக்கிறார்.

🌀அகத்திய முனிவர்,  குறிப்பிடும் ஐந்து ஆலமரக்கூட்டம் இருந்த இடத்திற்கு சென்று தங்குமாறு கூறுகிறார். அந்த இடத்திற்கு முனிவர்கள் வைத்த பெயர் பஞ்சவடி.

🌀வனவாசத்தின்போது, இங்கு ஆசிரமம் அமைத்து,  ராமரும், சீதாபிராட்டியும், லெட்சுமணர் பாதுகாவல் துணையுடன்,
வசித்து வந்தார்.  

🌀இங்குள்ள ஒரு குகையில் ராம, லெட்சுமணர், சீதை ஆகியோர் தங்கினர். இங்குதான் சூர்ப்பநகை வந்து ராமன் மீது காதல் கொள்ள, அவளுடைய மூக்கை லெட்சுமணன் அறுக்க, மாரீசன் வந்து பொன் மான் வேடம் பூண்டு ராம, லெட்சுமணர்களையும் சீதையையும் ஏமாற்ற, அதே நேரத்தில் ராவணன் தவ வேடம் பூண்டு சீதையைக் கடத்த — ராமாயணம் புதிய திருப்பத்தை அடைகிறது''*

பயண அனுபவக் குறிப்புகள்🕊️

🟢மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள, நாசிக் பகுதியில் உள்ள பஞ்சவடி என்ற இந்த இடம் மிக அருமையான இயற்கை வளமும், பருவகால சூழலும் நிறைந்து அமைதியும் அழகும் உள்ள இடமாக விளங்கியுள்ளது. 

🟢ஒரு காலத்தில் மலை குன்றுகளுடன் கூடிய அடர்ந்த காடுகளாக இருந்த இந்த பகுதி என்பதை நிரூபணம் செய்யும் வகையில், இன்னும் மரங்களும், அமைப்புகளும் சில இடங்களில் இருந்து வருகின்றன.

🟢நாசிக் பெருநகரின் ஊடே கோதாவரி நதி மேற்கிலிருந்து சற்று வடக்கில் சென்று திரும்பி பின் தென் கிழக்காகவும் பாய்ந்து ஓடுகிறது. கோதாவரி நதிக்கரையின் வடபகுதியில் இந்த இடம் அமைந்துள்ளது...*
 
🟢கோதாவரி நதியின் இருபுறங்களிலும் நீண்டகல் படித்துறைகள் அமைக்கப்பட்டுள்ளது.  ஏராளமான புராதான ஆலயங்கள் உள்ளன.

🟢12 ஆண்டுளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா இங்கு நடைபெறுவது வழக்கம்.

🟢நாசிக் என்ற பெயர் மூக்கை குறிக்கிறது.

🟢ஊருக்குள் நுழைந்தவுடனே ராமாயணக் காட்சிகள், சுவரில் பளிச்செனத் தெரிகின்றன. அருகிலுள்ள பூங்காவில் வால்மீகீ, சுவாமி விவேகாநந்தர் சிலைகளும் உள்ளன.

🟢இந்தக் காட்சிகளையெல்லாம் பஞ்சவடியில் சித்திரமாக செதுக்கியும் வரைந்தும் வைத்துள்ளனர்.

🟢கோதாவரி நதிக்கரையின் பகுதியில் நீண்ட வாகன நிறுத்தும் இடம் அமைக்கப்பட்டுள்ளது.

🟢எங்கள் பேருந்து நிறுத்திய பிறகு அங்கிருந்து சுமார் 150 மீட்டர் தூரத்தில் இருந்த காலராம் கோயில் என்ற ஆலயம் இருந்தது.  நாங்கள் நடந்து சென்று தரிசித்தோம். இதை அடுத்து சீதா குகை என்ற இடமும் உள்ளது.  இந்த பகுதிகள் சற்று உயரமான பகுதியாக இருந்ததால், சிலர் Auto மூலம் இந்த ஆலயம் வந்தனர்.

#காலாராம் ஆலயம் :

🛕பஞ்சவடியில் உள்ள மிக முக்கிய ஆலயமாக உள்ளது.இது ஒரு மிகப்பெரிய ஆலயம். ராமருக்காகக் கட்டப்பட்ட ஆலயம்.
முழுவதும் கருப்பான கருங்கற்களால் ஆன ஆலயம். கருப்பாக இருப்பதால் - காலாராம் - என்று அழைக்கப்படுகிறது.

🛕நுழைவில் ராஜகோபுரம் இல்லை. ஆனால், கோட்டை போல சுற்று மதில் சுவர்களுடன் உள்ளது. நீள்செவ்வக அமைப்புடையது.

🛕இந்தக் கோவிலின் உள் அமைப்பு, அருகில் உள்ள ஜோதிர்லிங்கத் தலமான திரயம்பகேஸ்வரர் ஆலய வடிவமைப்பிலேயே உள்ளது. வடநாட்டு கோயில்கள் அமைப்பிலேயே உயரமான கருவறை கோபுரம் அமைப்புள்ள ஆலயங்களில் இதுவும் ஒன்று. 

🛕இதன்உட்புறம் நுழைந்ததும், பிரகாரவாசல்: அதைத் தாண்டியதும், நீண்ட பெரிய மண்டபம்;

🛕அதை அடுத்து, கருவரை முன் மண்டபம் மூன்று பக்கவாசல்கள் கொண்டது. சுமார் 10-12 படிகள் மேல் ஏறவேண்டும்.  வட்ட வடிவமைப்பில், சற்று உயர கூம்புவடிவக் கோபுரம் உடையது.

🛕இதை அடுத்துஆலய கருவறை ஒட்டி உள்ள மிகப்பெரிய வட்டவடிவ முன் மண்டபம்.  மிக மிக அழகிய வடிவமைப்பில் உள்ள உள் விதானம் அற்புதமானது. மேல் விதானம் வட்டக் கோபுர வடிவில் உள்ளது.

🛕இந்த மன்டபத்துடன்  இணைந்து, கிழக்கு நோக்கிய கருவரை உள்ளது. இங்கிருந்து கருவறையில் உள்ள மூலவர்களை வணங்க வேண்டும்.

🛕கருவறையில், அழகிய பளபளப்பான கருங்கலால் ஆன (சாலக்கிரமா என்று தெரியவில்லை) பெரிய உருவில் ஸ்ரீராமர், ஸ்ரீசீதாதேவியார், 
ஸ்ரீ லெட்சுமணன் உடன் அமைத்துள்ளார்கள்.
அற்புதமான வடிவங்கள்.

🛕கருவரை தரிசனம் முடித்துக்கொண்டு ஆலய பிரகாரம் சுற்றி வந்தோம்.
பிரகாரத்தில் மண்டபங்கள் இணைந்துள்ளன. ஆலயம் முழுமையும் மிகத்தூய்மையாக பராமரித்து வருகிறார்கள். திரயம்பகேஸ்வரர் ஆலய அடிப்படை அமைப்பில் உள்ளது போலவே, ஆலயம் கருவரை உள் அமைப்பும், கோபுரமும், வெளி சுற்றும்  அமைந்துள்ளது. 

🛕தினசரி பூசை நடைமுறைகள், மற்றும் முக்கிய நிகழ்வு பூசை நடைமுறைகள், ஆலயம் கட்டப்பட்ட வரலாறுகள்,  ஆலய நிர்வாகத்தினரால், கிழக்கு புறம் உள்ள மண்டபத்தில் எழுதி வைக்கப்பட்டுள்ளது. சிறிய அலுவலகம் ஒன்றும் உள்ளது.

 🛕ஆலயம் மிகவும் பழமையானது.
பாதுகாவலர்களுடன் கண்காணிப்பு கேமரா உட்பட எல்லாம் தனியார் Trust மூலம் பராமரிப்பு நடந்துவருகிறது. வெளிப்புறம் வாகனங்கள் நிறுத்த இடங்கள் உள்ளது.

🛕இந்த கோயிலுக்கு  நாங்கள் சென்ற வருடம் (மார்ச், 2021) ல் நாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து Auto மூலம்  வந்த பொழுதும் முழுவதுமாக இருந்து சுற்றி பார்த்து தரிசித்தோம். 
இப்போது இரண்டாவது முறையாக இவ்வாலயம் தரிசனம் கிடைத்துள்ளது.

ஆலய வரலாறு:

🌟ஸ்ரீராமர் வனவாசம்  வந்த இருந்த போது, இந்த இடத்தில் தான் பூசைகள், நடத்தி வந்தார். அருகில் உள்ள கோதாவரி நதியில் நீராடி (இந்த இடம் ராம் குண்ட் என்று அழைக்கப்படுகிறது),  நித்திய கர்மங்கள் செய்துவந்தார் என்று நம்பப்படுகிறது.  இங்கு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பமேளா நடைபெற்று வருகிறது)

🌟சத்ரபதி சிவாஜி மகராஜாவிற்கு, சமர்த்த ராமதாஸ் ஸ்வாமி என்பார் அரசியல் மற்றும் ஆன்மீக ஆலோசகராக இருந்தவர். இவர் ஒரு சிறந்த ராமபக்தர்.  பணிரெண்டு ஆண்டுகள் (1620 - 1632), நாசிக் பகுதியில் தவம் செய்து  கொண்டிருந்தபோது, இவ்வாலயத்தில் உள்ள விக்ரகங்களை வழிபாடு செய்து வந்தார்.  இதனால், ஸ்ரீராமரின் அருள் அவருக்குக் கிட்டியதாக அவர் தனக்குள் உணர்ந்தார்.

🌟இந்த விக்கிரகங்கள் உள்ள இந்த இடத்தில் தான், ஸ்ரீராமரின் தவசாலை இருந்ததாக நம்புகிறார்கள்.
மரத்தினால், கட்டப்பட்டிருந்த இந்த ஆலயம், காலஞ்சென்ற, சாவ்வி மாதவ்ராவ் பேஷ்வா என்பவர் ஆலோசணையின் பேரில், சர்தார் ரெங்கராவ் என்பவரால், 23 லட்ச ரூபாய் மதிப்பில், 1780 ஆரம்பித்து 1792ல் இப்புதிய ஆலயம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது 

 🌟இவ்வாலயம் முழுதும் சுமார் ரூ.2 கோடி மதிப்பீட்டில் இவ்வாலய போஷகர்களால், 
2003ல் புதியதாக புனரமைக்கப்பட்டு, பாதுகாப்புடன் பராமரிக்கப்பட்டும் வருகிறது. 

✨இந்த விபரங்கள் ஆலயத்தில் குறிக்கப்பட்டுள்ளது.

சீதா குகை:

 🟡காலராம் ஆலயத்திலிருந்து சற்று வடக்கில் சுமார் ஒரு 200 மீட்டர் தூரத்தில் சீதா குகை என்ற இடம் உள்ளது சீதா வசித்த குகை இங்குள்ளது. இந்த இடங்களை பஞ்சவடி என்று அழைக்கின்றனர்.  உள்ளே செல்ல வரிசை முறை  உண்டு.

🟠சீதா குகை இருக்கும் இடத்தில்  ஐந்து ஆல மரங்கள் ஒரே இடத்தில் இருக்கிறது

🔴முதலில் சிறிய Hall போன்ற அமைப்பு, அங்கே அனுமன் முதலிய சிற்பங்கள். அதிலிருந்து சில குறுகிய படிகள் வழியாக குகைக்குள் செல்லவேண்டும்.
மெதுவாக உள்ளே நுழைந்து சிறிது தூரம் சென்றால், ஒரு சிறிய அறை அதில் ராமர், லெட்சுமணர், சீதா உருவங்களுடன் கூடிய சிலைகள் ஒரு அழகிய மர பீடத்தில் தரிசனம் செய்ய வைத்துள்ளார்கள்.

🟤இதை தரிசித்து பின் மீண்டும் ஒரு குறுகிய பாதை படிகள் சில ஏறி இறங்கினால், ஒரு சிறிய இடம் உள்ளது. இது சற்று ஆழத்தில் உள்ளது. இதனுள் மீண்டும் நுழைந்தால் ஒரு சிவலிங்கம் நடுப்பகுதியில் அமைந்துள்ளது.  இந்த லிங்கம், ஸ்ரீசீதாவால் வணங்கப்பட்டது என்று கூறுகிறார்கள். இதை தரிசித்து பின் உள் நுழைந்த வழியே வெளியில் வந்து இன்னும் சில படிகள் மேல ஏறிய பிறகு ஒரு குறுகிய பாதையில் சற்று தூரம் வந்தால் குகைப் பகுதியின் வெளிப் பகுதிக்கு வந்து விடலாம்.

🟢 வெளிப்பகுதி இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு புறம் குகை நுழைவு பகுதி. மறுபுறம் வெளியேறும் வழி. இங்கு பூசை சாமான்கள் விற்கிறார்கள். 

🟡வெளிப்பகுதியில் 5 ஆலமரங்கள் உள்ளன. பொதுமக்கள் அடையாளம் காண்பதற்காக, 1, 2, என்று எண்கள் உள்ள போர்டு வைத்து இருக்கிறார்கள்.

🟢சாலையில் எதிர்புறம் ஒரு சிறிய கண்காட்சிக்கூடம் உள்ளது  நபருக்கு ₹ 1/ மட்டும்  கொடுத்துச் செல்லலாம்.

🟠 கண்காட்சியில், ஒரு ஆசிரமம், சீதை யின் செயல்பாடுகள்,  முனிவர் வேஷத்தில் ராவணன் பிட்க்ஷை கேட்க வரும் தோற்றம் காட்சி. 

🟡சீதாமாதா ஆசிரம குடிலில் பல்வேறு பணிகள் செய்வது, முதலிய சில ராமாயண காட்சிகளை அழகான பொம்மைகள் வைத்து வண்ண விளக்கொளியுடன் தோற்றங்கள் கொடுத்து காட்சிப்படுத்தி உள்ளனர்.
 
✨இந்த இடம் நாசிக் - பஞ்சவடி - என்பது மிக முக்கியமான இடமாகக் கருதப்படுகிறது. ஏராளமானவர்கள் வந்து தரிசித்து செல்கிறார்கள் பல்வேறு சிறு கடைகள் உள்ளன.

🌟சீதா குகை செல்பவர்கள் சில விஷயங்கள் கவனத்தில் கொண்டு அவசியம் தரிசிக்கலாம்.

⚡வரிசையாக சென்றுதான் தரிசிக்க முடியும்.

⚡நுழைவு பாதையில் படிகள் அனைத்தும் சற்று குறுகளாகவும் சிறிய அளவு படிகளாகவும், பல ஆண்டுகளாக உபயோகத்தில் இருப்பதால் வழுக்கும் படிகளும் உள்ளது.

 ⚡மிகவும் எச்சரிக்கையாகவும், ஜாக்கிரதையாகவும், குகை  உள்ளே சென்று தரிசித்து பின் வெளியில் வரவேண்டும். அதிகம் பக்தர்கள் கூட்டம் இல்லாவிட்டால் சுமார் ஒரு 5 முதல் 10 நிமிடத்தில் குகை உள்சென்று சுற்றிப் பார்த்து விட்டு வரலாம்.. மிக அதிகமான நபர்கள்  வரிசையில்  இருந்தால் இன்னும் சந்து கூடுதல் நேரமாகலாம். அங்கு இருக்கும் இரண்டு மூன்று சன்னதியில் குருக்கள் இருந்து கொண்டு பூஜை  செய்து வருகிறார்கள்.

⚡மிகவும் குனிய முடியாதவர்கள், கால்களை நன்றாக மடக்கவே முடியாதவர்கள், இயல்புக்கு மேல் பருமனாக உள்ளவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள்.  

⚡குகை முழுதும் மின்விளக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இயற்கை வெளிச்சம் கிடையாது. காற்றோட்டம் சாதாரண அளவில்தான் உள்ளது என்பதை கவனத்தில் கொள்ளலாம். எனினும், முயன்றால்,  நேரத்தில் சென்று தரிசித்து வர முடியும்.

⚡ நாங்கள் 2021 சென்றபோது அதிக கூட்டம் இருந்தது.

⚡இந்த முறை நாங்கள் சென்றபோது மிகவும் கூட்டம் இல்லை. இதனால் மிக சுலபமாகவும் உள்ளே சென்று தரிசனம் செய்து வெளியில் வந்தோம்.

⚡சீதா குகை என்ற இந்த இடத்திலிருந்து சங்கமம் என்ற இடத்திற்கு Share Auto Rs.100/- சென்றோம்.

சங்கமம்:

🌟பொதுவாக, இந்த இடங்களில் பல புராதான ஆலயங்கள் உள்ளன.
💮இந்த இடத்தில் முதலில் லெட்சுமணர் ஆலயம் என்ற இடம் சென்றோம். இந்த இடத்தில் ராம் சீதா, லெட்சுமணன் சிலைகள் வைத்து வணங்கப்பட்டு வருகின்றன. 

🌵லெட்சுமணர், சூர்ப்பனகையை வாளால் மூக்கை அறுக்கும் காட்சி யை சிலை வடிவில் அமைத்துள்ளனர். சில ராமாயணக் காட்சிகளும் அமைக்கப்பட்டுள்ளது.

💐அடுத்து சர்வ தர்ம ஆலயம் என்ற ஆலயம் உள்ளது. தனியார் பராமரிப்பில் அமைக்கப்பட்டுள்ளது.

🥀 ஏராளமான கடவுளர் உருவங்களை சிறிய சிறிய இடத்தில் கண்காட்சி போல வைத்து பூசை செய்கிறார்கள்.

🍁வாசலில் பெரிய அனுமன் சிலை மற்றும் பல்வேறு சிலைகளையும் அமைத்துள்ளனர்.

🌿மூலிகை மருந்து வியாபாரமும் செய்கிறார்கள்.

🌳இந்த ஆலயக் கட்டிடங்களுக்கு அருகில்,
கோதாவரி சங்கம் சென்று பார்க்க படிகள் அமைத்து உள்ளனர்

🌿கோதாவரி நதி அருகில் வடக்கிலிருந்து வந்து இணையும் கபிலநதியுடன் சங்கமித்து வளைந்து பின் தெற்கு நோக்கிப் பாயும் அற்புத காட்சி காணலாம்.

🌻நாம் நதியில் உள்ள பாறைகளில் இறங்கி சென்று பார்க்கலாம்.

🏵️ஒரு இடத்தில், ஒரு பாறையில் மூன்று பெரிய குழிகள் உள்ளன. இது சீதைகுளம்  என்று கூறுகிறர்கள். மேலும் ஒரு பெரிய பாறையில் உள்ள குழியில் கபிலமுனி வழிபட்ட இடம் என்றும், அங்கு ஒரு சிவலிங்கமும் உள்ளது.

🍀நதிகள் சங்கமிக்கும் அந்த இடம் சூழல் பாறைகள் சூழ மிக அருமையாகவே இருந்தது.

🍁கும்பமேளா சமயத்தில் இங்கு மிக அதிகக் கூட்டம் இருக்கும் என்று கூறப்பட்டது.

(🌟நாங்கள் 2021 ல் IRCTC Tourல் வந்த போது, பக்திதாம் என்ற இடத்தில் தங்கவைக்கப்பட்டோம். இது ஒரு தனியார் ஆலய பொது இடம். இவ்வளாகத்தில், ஒரு சிவன் ஆலயமும் இணைந்து உள்ளது.
மிகவும் தூய்மையாகவும், கட்டுப்பாடுகளுடன் உள்ள இடம்.
பெரிய Hall வசதி செய்து தரப்பட்டிருந்தது.
இணைந்த மாடிக் கட்டிடத்தில்,
இங்கு யாத்ரீகர்கள் தங்க பல தனி அறைகளும் கட்டணத்துடன் அனுமதிக்கின்றார்கள். தனி மின்தூக்கி (LIFT) வசதிகள் இருக்கின்றது. 3 பேர்களுக்கு 1700 ஒரு நாள் வாடகைக் கொடுத்தோம் (2021)  நல்ல வசதிகள் இருந்தன.

🌟இங்கிருந்து நபருக்கு, ரூ100|- கொடுத்து, Share Auto மூலம் அருகில் உள்ள (சுமார் 6 இடங்கள்) ராமர் குண்டம், கபாலிஸ்வரர் மகாதேவர் ஆலயம், காலராம் ஆலயம், சீதா குகை, லெட்சுமணன் ஆலயம், மற்றும் கோதாவரி சங்கமம் எனப்படும் இந்த இடங்கள் முழுமைக்கும்  புராதான இராமாயண நிகழ்வுகள் நடந்த இடங்களாக ஏற்கப்பட்ட இடங்கள். இவை அனைத்தையும் நன்று தரிசித்தோம்.
பிறகு, நாங்கள் 14.3.2021 இரவு வந்து தங்கினோம்)

🏵️மேலும், சில ஆலயங்கள்,
ராம் குண்ட் அருகில் உள்ளன.
முக்கியமாக

🛕கபாலீஸ்வரர் என்ற மிக புராதானமான சிவன் ஆலயம் குறிப்பிடத்தக்கது.
நந்தியம் பெருமான், சிவன் பின்புறம் தனியாக உள்ள ஆலயம்.

🛕கங்கா- கோதாவரி ஆலயம்
இதில், கங்கா மாதாவிற்கும், கோதாவரி அன்னைக்கும் சிலைகள் உண்டு.

💮இன்னும் சிறுசிறு ஆலயங்கள் கரைஓரம் அமைக்கப்பட்டு, வழிபாட்டில் உள்ளன.

🌼இந்த முறை சீதா குகையிலிருந்து சங்கமம் சென்று அங்குள்ள இடங்களை தரிசித்து பிறகு, எங்கள் பேருந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கோதாவரி கரையில் உள்ள ராம் குண்ட் அருகில் உள்ள வாகன நிறுத்தம் சென்று அடைந்தோம். இதற்கு நபருக்கு 100/- Share Auto வாடகைக் கொடுத்தோம்

🌼இவையெல்லாம் தரிசித்துவிட்டு, 15.10.2022 அன்றே நாங்கள் நாசிக் விட்டுப் புறப்பட்டோம்.
வழியில் முக்தீஸ்வரர் ஆலயம் சென்று தரிசனம் செய்துவிட்டு, மதிய உணவு வழியில் முடித்துக் கொண்டு, மாலையில் ஷீரடி சென்று சேர்ந்தோம்.

🛐பயணங்கள் தொடரும்.... 
நன்றி🙇🏼‍♂️🙏 
#என்றும்அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
15.10.2022
#பயண_அனுபவக்_குறிப்புகள் 🕊️
#ஜோதிர்லிங்கதரிசனம்2022
#ஜோதிர்லிங்கதரிசனம்
#மகாராஷ்ட்ரா
#நாசிக்_பஞ்சவடி

No comments:

Post a Comment

பதிவு - 13 நாள் - 7 ஆதிகைலாஷ் தரிசனம் Gunji to Jolingkong (4630mts.) Adikailash and back to Budhi (2740mts.) Total 86 Kms. 9 - 10 hrs. நாள் - 7 - 01.06.24 - சனி

பதிவு - 13 நாள் - 7  மிக முக்கிய நாள் ஆதிகைலாஷ் தரிசனம் Gunji to Jolingkong (4630mts.) Adikailash and back to Budhi (2740mts.) Total  86 Kms...