Tuesday, August 16, 2022

UTTARAKANNT_TOUR_2022#பயண அனுபவக்குறிப்புகள் மகாவதார் _ பாபாஜி குகை 12.04.2022

#uttarakannt_tour_2022 
#பயணஅனுபவக்குறிப்புகள் 
#மகாவதார்பாபாஜி_குகை
12.04.2022
பகுதி - 1 
#மகாஅவதார்பாபாஜி:

'திரு.ரஜினிகாந்த் அவர்கள் நடித்த “பாபா” திரைப்படத்தின் மூலம் பெரும்பாலானோர்களால் அறிந்து கொள்ளப்பட்டவர் “மஹாவதார் ஸ்ரீ பாபா”. 

தன் தவத்தால் அற்புத ஆற்றல்களைப் பெற்ற இம்மகான் தன் ஊணுடலைத் துறந்து, “ஒளிஉடம்பைப்” பெற்று “2000” ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வருவதாக இவரை வழிபடுபவர்கள் கூறுகிறார்கள்.

இம் மகா அவதார் பாபா அவர்கள் தன்னை உண்மையாக வழிபடுபவர்கள் சிலருக்கு கனவின் மூலம் காட்சி தருவதாக கூறப்படுகிறது. 

வேறு சில பக்தர்களுக்கோ அவர்களின் இல்லத்திற்கே பாபா அவர்கள் மிகப் பிரகாசமான “ஒளி உடம்புடன்” வருவதாகவும், அவர் வந்ததற்கு அடையாளமாக மிகச் சிறந்த நறுமணம் இல்லம் முழுக்க வீசுவதாகவும் அவ்வனுபவத்தைப் பெற்றவர்கள் மெய்சிலிர்க்கின்றனர். 

தன் மீது அன்புடன் இருக்கும் பக்தர்களுக்குக்காக மகான்கள் எத்தகைய அற்புதத்தையும்  நிகழ்த்துவார்கள் என்ற தகவலுக்கு வலுசேர்க்கிறது இந்த நிகழ்வு.

#மகாவதார்பாபாஜி வரலாறு :

இவரின் வரலாறு பற்றி தெளிவான வரையறைகள் ஏதுமில்லை. 

இவரைப்பற்றிய நூல்களின்படி இவரின் இயற்பெயர் நாகராஜ். 

மகாவதார பாபா என்ற பெயர் இவரது சீடரான லாகிரி மகரிஷி என்றவரால் சூட்டப்பட்டது.

மகா அவதார் பாபாஜி - பூர்வீகம்

நாகராஜ் என்கிற பாபாஜி
பாபாஜியின் சிறப்புகளை அறிந்து தேடத்தொடங்கியவர்களுக்கு பதிலாகக் கிடைத்தது அவரின் பூர்விகம்.

பாபாஜி தமிழகத்தின் ஒரு கடலோர கிராமத்தில் - பரங்கிப்பேட்டையில் - பிறந்தார். கார்த்திகை மாதம் ரோகிணி நட்சத்திர நாளில் அவரின் ஜனனம் நிகழ்ந்தது. பெற்றோர் அவருக்கு நாகராஜ் என்று பெயர் சூட்டினர். நாகராஜ் சிறுவயது முதலே இறைச் சிந்தனையோடு வாழ்ந்துவந்தார். ஒரு கட்டத்தில் சாதுக்களின் கூட்டத்தோடு சேர்ந்துகொண்டு யோகம் பயில ஆரம்பித்தார்.

தமிழக சித்தர் மரபின் ஆதி குருவான அகஸ்தியரை தரிசனம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது. அவரை தரிசிக்க இலங்கை கதிர்காமத்துக்குச் சென்று தவம் செய்தார். அங்கே அவருக்கு அகஸ்தியரின் சீடரான போகநாதரின் தரிசனம் கிடைத்தது.

போகரிடம் யோகம் பயின்று அங்கேயே தவம் செய்து கதிர்காம முருகனைக் கண்ணாறக் கண்டார் பாபா என்கிறார்கள் ஞானிகள். 

பின்பு அகஸ்தியரை தரிசனம் செய்யும் தன் ஆவலை போகரிடம் தெரிவிக்க அவர் பொதிகை மலைக்குச் சென்று தவம் செய்யச் சொன்னார். அவ்வாறே பாபாஜியும் செய்ய அகத்தியர் மனம் மகிழ்ந்து பாபாஜிக்குக் காட்சி கொடுத்து க்ரியாயோகாவினை உபதேசம் செய்தார். 

அதன்பின் பாபாஜி இமயமலை சென்று கடும் யோகப் பயிற்சிகள் செய்து சிரஞ்சிவி ஆகும் வல்லமை பெற்றார். தாம் கற்ற யோகம் இந்த உலக நன்மைக்குப் பயன்பட வேண்டும் என்று காலம்தோறும் ஞானிகளைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு அதைக் கற்றுக்கொடுத்து வருகிறார் பாபாஜி என்கின்றனர்; க்ரியா யோகா பயிலும் யோகிகள். (Source: Wikipedia)

இந்த பாபா போகர் என்ற சித்தரின் சீடர் என்று கூறப்படுகிறது. இவரே கிருஷ்ணர் என்னும் அவதாரம் எடுத்தாக சிலரால் கூறப்படுகிறது.

மகா அவதார் பாபாஜி லாஹிரி மஹாசாயருக்கு க்ரியா யோகம் கற்றுக்கொடுத்தார். லாஹிரி மகராஜ் பல்வேறு மகான்களுக்கு அதைப் பயிற்றுவித்தார். 

அவர்களில் ஒருவர் யுக்தேஸ்வர். ஸ்ரீ யுக்தேஸ்வரின் சீடர்தான் பரமஹம்ஸ யோகானந்தர்.

 யுக்தேஸ்வரின் மூலம் மகாஅவதார் பாபாஜி முதலிய க்ரியா யோகா குருமார்கள் பற்றி அறிந்து கொள்கிறார் பரமஹம்ஸர். 

அந்த நூலில் அவர் பாபாஜியைப் பற்றிக்குறிப்பிடும்போது, “பாபாஜி கிறிஸ்துவுடன் தொடர்புள்ளவர். அவர்களிருவரும் சேர்ந்து மீட்பளிக்கும் எண்ண அதிர்வுகளை அனுப்பிய வண்ணம் உள்ளனர்” என்று குறிப்பிடுகிறார்.  

#க்ரியாயோகா

பாபாஜி உபதேசித்த க்ரியா யோகாவின் 5 கிளைகள்  க்ரியா யோகம் என்பது முழு விழிப்புணர்வோடு செய்யப்படும் செயல் என்கிறார்கள். 

இது நம்மை அறியும் வழி. ஆசனங்கள், பிராணாயாமம், தியானம், மற்றும் மந்திரம் என மொத்தம் 144 வகைப் பயிற்சியின் கலவையே பாபாஜியின் க்ரியா யோகம். 

இந்தப் பயிற்சிகளை முழு விழிப்புணர்வுடன் செய்யும்போது அனைத்தும் ஒருங்கிணைக்கப் படுகின்றன. 

முறையான இந்தப் பயிற்சியின் மூலம் மனிதர்கள் விழிப்படைந்த அதாவது தம்மை உணர்ந்த விழிப்படைந்த மனிதர்களாக மாறிவிடுவர். 

க்ரியா யோகாவின் 5 விதமான பயிற்சிகளை பாபாஜி தன் சீடர்களுக்கு உபதேசித்தார். இவை உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டவை.

இந்த பயிற்சிகளை க்ரியா ஹத யோகம், க்ரியா குண்டலினி பிராணாயாமம், க்ரியா தியான யோகம், க்ரியா மந்திர யோகம், க்ரியா பக்தி யோகம் என 5 கிளைகளாகப் பிரித்துப் போதிக்கிறார்கள் யோகாசிரியர்கள்.

குருவின் மகாமந்திரம்:

க்ரியாபாபாஜியின் பக்தர்கள், ‘ஓம் க்ரியா பாபாஜி நம ஔம்’ என்னும் அவரின் மகாமந்திரத்தைச் சொல்லி தியானிக்கிறார்கள்.

 இதில் ஓம் - பிரணவம். க்ரியா என்றால் முழு விழிப்புணர்வோடு செய்யப்படும் செயல். பாபாஜி என்பது குருவின் திருநாமம், நம என்றால் வணங்குதல். ஔம் என்பது நம் அகத்தினுள் ஒலித்ததிடும் பிரணவ ஒலி.

இம்மந்திரத்தைத் தொடர்ந்து ஜபிப்பதன் மூலம் நமது சஹஸ்ர சக்கரத்தில் அமைந்துள்ள பேரறிவாற்றலைத் தொடர்பு கொள்ளலாம். 

ஆற்றல் வாய்ந்த இம்மந்திரத்தினை குரு மூலம் பெரும் சீடன் அந்த சக்தியைப் பெறுகிறான்.

 - (Source: விகடன் கட்டுரை 30.11.20) &
(Source: Wikipedia)

#பாபாஜி பெருமைகள்:

மகாவதார பாபாஜி என்ற பெயரை சூட்டியவர், யோகிராஜ் லாஹிரி மஹாசாய என்ற மிகப் பெரிய யோகியாவார்.  இவரும், இவரின், சீடர்கள், ஸ்ரீ யுத்தேஸ்வர் கிரி, பாபா நாசிப் சிங்ஜி, ராம்கோபால் முசும்தார், சுவாமி கபலனந்தா, சுவாமி பிரபானந்தா கிரி இவர்கள், 1861 முதல் 1935 ஆண்டுகளில் பாபாஜியை தரிசனம் செய்துள்ளார்கள் என்று நம்புகிறார்கள்.

1946 ல் பரமஹன்ச யோகனந்தா வெளியிட்ட சுயசரிதை நூலில் யோகி / பாபாஜி ஐ சந்தித்த விபரம் உள்ளது.

ஸ்ரீ யுக்தேஸ்வரர் 1894 ல் வெளியிட்ட  THE HOLY SCIENCE என்ற நூலிலும், காணப்படுகிறது. 

சிவபெருமானின் அவதாரம் பாபாஜி என்றும் அவர் பல்வேறு இடங்களில், பல்வேறு வடிவங்களில் காட்சி தந்திருப்பதாக,  யோகியின் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

இதை பல்வேறு யோகிகளின் சுயசரிதைகளில் காணலாம்.

 சுமார் 100 வருடங்களாக, மகா பாபாஜி, இமாலயத்தின் பல பகுதிகளில், பல்வேறு சீடர்களுக்கும், மற்றவர்களுக்கும், காட்சியளித்துள்ளார்  என்பதை 
ஸ்ரீ யோகானந்தரின், சுயசரிதையில், குறிப்பிட்டுள்ளார்கள்.

யோகி லஹரி மகாசயா அவர்களுக்கு, 1861ல் கிரியா யோக பயிற்சியை இந்த குகைகளில், இருந்து தான், கற்றுக் கொண்டனர் என்று என்று பரமஹன்ச யோகானந்தா தமது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளர்.

#பாபாஜி_குகை :

உலகத்தின் மிக முக்கிய யோகிகளில், யோகானந்தா யோகி அவர்கள்,  தன்  சுயசரிதையில், பாபாஜி பற்றிக் குறிப்பிடுகையில்,  மகா அவதார் பாபாஜி அவர்கள்,  லாஹிரி மஹாசாயருக்கு க்ரியா யோகம் கற்றுக்கொடுத்தார். 

பாபாஜியிடமிருந்து நேரடியாக கிரியா யோக முறையை 1861ல் இமாலயத்தில் உள்ள இந்த இடத்தில் தான் பெற்றதாக தன் சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார் .

மகா அவதார் பாபாஜி இமாலய பகுதிகளில் என்றும் ஜீவித்து வருகிறார் என்றும்,  ஒரு சிலரே அவரை உணரமுடிகிறது என்றும் கூறுகிறார்; பரமஹம்ச யோகானந்தர்.

பாபாஜியின் குகை என்று அடையாளம் காணப்பட்ட இந்த இடத்திற்கு  உலகின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து தரிசனம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இப்போது இந்த இடம், உலகின் மிக முக்கிய ஆன்மீக இடமாக மாறிக் கொண்டு உள்ளது. 

நன்றி 🙏
- (விகடன் கட்டுரை 30.11.20)
(Source: Wikipedia)

இந்த இடம் எங்குள்ளது?

இந்திய இமயமலைப்பகுதியில், உத்திர காண்ட் மாநிலத்தில், பாண்டுகோலி (#PANDUKHOLI) மலைப்பகுதியில் குக்குச்சினா Kukuchina) என்ற இடத்தில் உள்ளது. 

இது #DWARHHAT என்ற நகருக்கு 25 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது.

மகாவதார் பாபாஜி குகை உத்ரகாண்ட் மாநிலத்தில் உள்ள ராணிகட் (RANIKHET) என்ற நகரிலிருந்து 55 கி.மீ. தூரத்தில் பாபாஜி குகை அமைந்துள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில், த்வரஹட் (#DWARAHAT) என்ற நகரின் அருகில்,  பத்ரிநாத் முதலிய இடங்கள்  உட்பட சுமார் 1000 -2000 நூற்றாண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட நூற்றுக் கணக்கான ஆலயங்கள் அமைந்துள்ளன. 

#ராணிஹட்  (#Ranikhet )  சென்று  த்வரஹட் வழியாக, குகுசினா என்ற இடம் 20 கி.மீ. அங்கிருந்து மலைப்பாதையில் 3 - 4 கி.மீ சென்று பாபாஜி குகையை அடையலாம்.

மேலும்,  உயரமான மலைப் பகுதியான, துனகிரி என்ற புராதான அம்பாள் தலம் பாபாஜி ஆலயம் செல்லும் பாதையில் உள்ளது. மலைப்பதையில் வரும் ஒரு ஹனுமான் ஆலயம் அருகில் பாதை பிரியும். 

இமயமலையில் உள்ள இந்த குகைக்குச் செல்ல பாதை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.


#UTTARAKANNT_TOUR_2022
#பயணஅனுபவக்குறிப்புகள்
#மகாவதார் _ பாபாஜி
12.04.2022

மகாவதார் பாபாஜி குகை தரிசனம்
பகுதி - 2.
#பயணஅனுபவக்குறிப்புகள் 
12.04.2022:

மலை எங்கும் இமயக் காட்சிகள், இயற்கை காட்சிகளில் மனதை பறிகொடுக்கலாம். பனிமலையின் பரவசத்தை உணரலாம்.

குகைக்குள் சென்று தியானம் செய்ய விரும்புகிறார்கள். 

மகாவதார பாபாஜி தரிசனம் தந்த, இந்த குகைப்பகுதியை மிகுந்த மரியாதையும், புனிதமான இடமாகக் கருதி வழிபாடு செய்கிறார்கள்.

வாகனப் போக்குவரத்து, குகுசினா அடைந்ததும், நின்று விடுகிறது.

இங்கிருந்து நடந்து செல்லலாம். சுமார் 3 - 4 கி.மீ தூரம் வரை. 

அங்கிருந்து சில கி.மீ.தூரத்திற்கு மன், கல்பாதையாக உள்ளது. 
இந்த 3-4 கிமீ தூரத்திற்கு நடக்க முடியாதவர்கள்செல்ல சிறு ரக மோட்டார் கார் வண்டிகள் வசதிகளும் உள்ளன.

அதற்கு பிறகு மலை ஏற்றம் 1 கி.மீ. பின் மலைப்பாதையில், 3 கி.மீ சென்றால் 
ஆசிரம கட்டிடம் (SAMIRTI BAWAN) உள்ளது.

இது யோகா சத்சங்க சொசைட்டியால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. 
இந்தக் கட்டிடத்திற்கு சற்று மேலே சுமார் 200 மீட்டர் தூரத்தில் பாபாஜி குகை அமைந்துள்ளது.

பாபாஜி குகை ஒரு பெரிய மலைக்குன்றின் ஒரு பக்கத்தில், சுமார் 10 அடி உயரத்தில் சில படிக்கட்டுக்களுடன் அமைந்துள்ளது. 

நுழைவுப்பாதையில் 4x 3க்கு இரும்புக் கதவு போடப்பட்டுள்ளது. உட்புறம்
சுமார் 6x10 அடி அளவில் இயற்கையான அமைப்பில் உள்ளது. பாறைகளால் உருவாகி இருக்கும் இயற்கையான குகை.

குகையின் உட்புறத்தில் எந்த சிலை அல்லது படம் எதுவும் கிடையாது. 

உட்புறத்தில் தரையின் மீது சில விரிப்புகள் போடப்பட்டுள்ளது. அதில், அமர்ந்து தியானம் செய்கிறார்கள்.

நாங்கள் சென்றபோது தனியாகவே வந்த ஒருவர் பாபாவின் சிறிய படம் மற்றும் சில பழங்கள் அதன் முன் வைத்து அமைதியான முறையில் வழிபட்டு தியானம் செய்தார்.

பெண்மனி ஒருவர் டோலியில் வந்தவர், அவரும் உள்ளே சென்று வழிபட்டு சென்றர்.

நுழைவுப்படி, உட்புறங்கள், சீரமைக்கப்பட்டு, பராமரிப்பில் உள்ளது.

இரும்புக் கதவு திறந்து வைத்திருந்ததால் நாங்கள் உட்புறம் சென்று தியான குகையில் அமர்ந்து வழிபட்டோம். சிலர் தியானம் செய்து கொண்டிருந்தார்கள்.

பகல் பொழுது, நல்ல வெய்யில் சூழல் இருந்தது. வெளிச்சம் காற்றோட்டம், இருந்தது. மலைக்குகையில் அமைதியாகவும், அற்புத இடமாகவும் இருக்கிறது.

சுற்றிலும் மரங்கள், நல்ல நிழல்.

மலைக் குகைப் பகுதியை சுற்றிவர சிறிய பாதை உள்ளது. மரங்கள் அடர்ந்து காட்டு மலைப்பாதையாகவும், உள்ளது. உள்ளூர் இளைஞர்கள் மட்டும் சிலர் குகை அமைந்துள்ள மலைக்குன்றை சுற்றி வலம் வந்தார்கள்.
மலை அடிவாரத்திலிருந்து மலைக்குகைக்கு வந்த ஒரு பெண்மணி, அவர்கள் டோலி (நாற்காலியில் உட்கார வைத்து அதை 4 பேர் மூலம் தூக்கிக் கொண்டு செல்லும் முறை)
மூலம் வந்து தரிசனம் பெற்று திரும்பி சென்றார்கள். 
வேறு குதிரை முதலிய, மலையேற்ற வசதிகள் கிடையாது.
நடந்து தான் செல்லமுடியும்.
குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே குகை உட்பகுதி திறந்திருக்கும். 
யோகா Trust மூலம் பராமரிப்பில் உள்ளது.

நாங்கள் சிலர் மலைக்குகை தரிசனம் முடிந்து சற்றுக் கீழே உள்ள ஆசிரமப்பகுதிக்கு வந்துசேர்ந்தோம். 

எங்கள் சுற்றுலா Admin. அன்பு திரு பாலசுப்ரமணியன் அய்யா அவர்கள் வந்து, மலைக்குகையின் இன்னொருபுறத்தில் உள்ள குகைப் பகுதியை பார்த்தீர்களா என்றவுடன், மீண்டும் மலை சென்று, அந்த குகையும் தரிசித்தோம்.

அது சுமார் 6 அடி உயரத்தில், எந்த பாதையும், படிகளும் இல்லாமல் அமைந்துள்ளது, அதன் மேல் ஏறி உள்ளே செல்ல முயற்சி செய்தோம்.

மலைக்குகையின் இன்னொரு புறத்தில், மேலும் ஒரு குகை உள்ளது. ஒரு ஆள் உள்ளே முயன்று சென்று விடலாம். உட்புறம் சற்று அகலமாகவும், உயரமாகவும் இருந்தாலும், ஆழமான பகுதியாகவும் உள்ளே நுழைவது மிகவும் ஆபத்தானது. இதனால், இதன் வழியை முழுவதுமாக அங்கு சரிந்துள்ள மலைப்பகுதி பாறைகளை வைத்து நன்றாக அடைத்துவிட்டார்கள். யாரும் உள்ளே சென்றுவிட முடியாது. மிக ஆபத்தான பகுதி, என்பதால், அதன் வாசலில் சற்று அமர்ந்து இருந்து விட்டு வெளியேறினோம்.

குகைக்கு நாங்கள் அனைவரும் நடந்துவந்து சென்றோம்.
ஒரு சிலர், முடியாதவர்கள் வந்து செல்ல டோலி பயன்படுத்தி வருகிறார்கள்.

தனி நபர்கள் தனியாக வந்தும், குகையில் அமர்ந்து தியானம் செய்து செல்கிறார்கள்.

ஆந்திராவில் இருந்து சிலர் குழுவாக சுற்றுலா பயணிகள், இந்த குகைக்கு வருவதைப் பார்த்தோம்.

குகை தரிசனங்கள் முடிந்ததும், மலைப் பாதையில் மீண்டும் இறங்கி நடந்துவந்தோம்.

இந்த மலைப்பகுதியில் எந்தவித கடைகள், வேறு கட்டிடங்கள் கிடையாது.

எல்லாவற்றிற்கும், நாம் துவாராகண்ட் தான் செல்ல முடியும்.  

பல இடங்கள், நல்ல மலைப்பாதைகள் இருக்கின்றன. பாதையில் ஒரு இடத்தில் சுமார் 500 மீ.தூரம் செங்குத்தாக இருந்தாலும், சரிவாக பாதை அமைத்துள்ளதால், நடந்து வந்துவிடலாம்.

ஒரு இடத்தில் சிறிய அருவிப் பாதை உள்ளது. நாங்கள் சென்றபோது, நீர் இல்லாததால், அருவிப் பக்கம் செல்லவில்லை.

பாபாஜி மலையின் எதிர்புறத்தில், தூரத்தில், துனகிரி என்ற பிரசித்திப் பெற்ற மலைக் கோவில் உள்ள மலை தெரிகிறது. 

மலைப்பாதை முடிவில் அல்லது ஆரம்பத்தில், ஒரு வீட்டில் மூலிகை தேனீர் கடை உள்ளது. வயதான அம்மா ஒருவர் , தேனீர் போட்டுக் கொடுத்தார். 

திரு ரஜினிகாந் உதவியதாக கூறுகிறார்கள்...
அவர் படம் போட்ட கொடி ஒன்று அந்த இடத்தில் பறந்து கொண்டிருந்தது.

இந்த இடம் மலை அடிவாரம் என்பதால், எல்லோரும் சற்று ஓய்வு எடுத்துக் கொண்டு மலை இறங்கினோம்.

மேலும் 2 கி.மீ. மலைப்பாதையில் நடந்துவந்து, குக்குச்சினா என்ற இடத்தை வந்து அடைந்தோம்.

இந்த இடத்தில்தான், அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டுவிடுகின்றன.
நாங்கள் வரும் போதே, மலைப்பாதையில் ஓரிடத்தில் நல்ல நீர் கிடைத்ததால்,
Admin. அவர்கள், நண்பர் திரு மணி அவர்களை உணவுக்கு ஏற்பாடு செய்ய வழி செய்திருந்ததால், அவ்விடம் வந்து மதிய உணவை முடித்துக் கொண்டு அன்று மாலை, ராணிகட் வந்து சேர்ந்தோம்.

பொதுவாக, இப்படிப்பட்ட பரபரப்பு இல்லாத அமைதியான, இயற்கை சூழல் நிறைந்த இடங்களைத் தேர்வு செய்து சென்றால் /செல்ல வேண்டுமானால், 
முதலில்,
நல்ல ஆரோக்கியமான உடல்பலம், 
நல்ல கால சூழல்,
நல்ல சிந்தனைகள் நிறைந்த மனம்.
சூழல் குறித்து எவ்விதத்திலும் சலனம் இன்றி, எதையும் ரசிக்கக்கூடிய பக்குவம் உள்ள, மனவலிமை,
இவைகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
அப்போதுதான் இவ்விடங்களில் உள்ள உண்மையான, இயற்கை நமக்குத் தரும் அளவற்ற பொக்கிஷ மன உணர்வுகள் அல்லது அங்கு கிடைக்கும் Vibrations அவற்றை நுகரக்கூடிய தூய்மையான எண்ண உணர்வுகளைப் பெற முடியும்.

மனம், உடல் பக்குவம் பெறுவது நிச்சயம். 

ஆன்மீகத்தின் அடிப்படையே இதுதான்.

 உடல், மனம், அனுபவத்தால், பக்குவம் பெற இது ஒரு நல்ல முயற்சி.

முயன்று பாருங்களேன்....

பயணங்கள் தொடரும்...
12.4.2022
நன்றி,

🙏தகவல்கள் உதவி :
 Wikepedia மற்றும் பல வலைதளங்கள்
🙏நன்றிகளும் வணக்கங்களும்🙇🏼‍♂️

#என்றும்அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்

#UTTARAKANNT_TOUR_2022
#பயண அனுபவக் குறிப்புகள்
#மகாவதார் _ பாபாஜி
12.04.2022

முதல் பகுதி:
இரண்டாவது பகுதி :

No comments:

Post a Comment

திருஆவினன்குடி - குழந்தை வேலாயுத சுவாமி -பிரதோஷக்குழுயாத்ரா 14.9.25 - கொங்குநாட்டுத்தலங்கள்

திருஆவினன்குடி - குழந்தை வேலாயுத சுவாமி திருஆவினன்குடி - குழந்தைவேலாயுத சுவாமி திரு என்ற இலக்குமி தேவியும், ஆ என்ற காமதேனுவும், இனன் என்ற சூ...