Wednesday, September 28, 2022

காரைக்கால் கொலு 2022 நவராத்திரி 2022

காரைக்கால் கொலு 2022

🌟நவராத்திரியை முன்னிட்டு,
14வது ஆண்டாக  ஸ்ரீ கைலாசநாதர் ஆலயம் மற்றும் சிவனடியார் திருக்கூட்ட அறக்கட்டளையின் சார்பில்,
காரைக்கால் அம்மையார் ஆலய வளாகத்தில்,  ஆன்மீக கொலு வைக்கப்பட்டுள்ளது.

🌟இன்று 26.09.2022 மாலை 6.30 மணி அளவில், கும்பாபிஷேக சாம்ராட், தமிழகத்தின் மூத்த ஆன்மீக பெரியவர், திருக்கண்ணங்குடி சிவஸ்ரீ  T.K. பாலாமணி சிவாச்சாரியார் அவர்களால் விஷேச பூசையுடன் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

🌟26.09.2022 திங்கள் முதல் உள்ள 5.10.2022 புதன் வரை நடைபெறும் இக்கொலுவின் கானும் சில சிறப்பு அம்சங்கள்:

1. முகப்பு அலங்காரம்:

ஆலய நுழைவு அமைப்பில் முகப்பு அலங்காரம், மேல்மாடத்தில், விநாயகர், வள்ளிதெய்வானையுடன் சுப்பிரமணியர், கைலாச காட்சியில் சிவன், பார்வதி, அம்பாள், மற்றும் சண்டிகேஸ்வரர்.
இவர்களை ஆலய  நுழைவு கோபுர வாசல் மேல் மாடம் போல அமைக்கப்பட்டுள்ள சிறப்பு.

2. அற்புத தட்சினாமூர்த்தி:

ஆலய கோபுர வாசல் நுழைவு அமைப்புத்தாண்டி, உட்புறம் நுழைந்தால்,  தட்சினாமூர்த்தி சுமார் 12 அடி உயரத்தில், மிகப்பிரம்மாண்ட  அருள்தரும் ஞான உருவம். மிகவும் அழகிய முறையில் உருவாக்கியுள்ளனர்.  புதுமையான முறையில் உருவாக்கம் செய்யப்பட்ட  கருவரை மண்டத்தின் உள் அமைப்பில் உள்ளார். இதன், அமைப்பும், ஒளி அமைப்பும் வித்தியாசமாக இருக்கிறது.

3. தட்சிணா மூர்த்தியின் பக்தி  தரிசனம் பெற்று  படி இறங்கினால், மூன்று காந்திகள்  பொம்மை நமக்கு வாழ்வியல் உண்மைப் பக்குவத்தை உணர்த்துகிறது.

4. அடுத்து, மகாபாரத அர்ச்சுணன் பெற்ற   விசுவரூப பெருமாள் காட்சி.

6. ஈசனமூலையில், தனி உஞ்சலில், ஆனந்த வட பத்திரக் காளியம்மன்.

இவர் நாங்கூர் மதங்கீஸ்வரர் ஆலயத்தில் வழிபாட்டில் உள்ளவர்.  பொதுவாக, சிவன் ஆலயத்தில் உள்ள காளி மிகச்சிறப்பும் அரியதுமானதும் என்றும் கூறுவார்கள். இவ்வாலத்தின், தென் பிரகாரத்தில், தனி சன்னதியில், வடக்கு நோக்கி அருளும் ஆனந்த ஊஞ்சல் காளி.

உஞ்சலில் உள்ள காளி. 5 வருடத்திற்கு ஒரு முறை குடமுழுக்கு செய்யப்பட்டு, வீதி ஊர்வலம் வருவது கண்கொள்ளாக் காட்சி. அடுத்த வருடம் 2023 ஆண்டில் நடைபெற உள்ளது என்பதால், தற்போது, காரைக்கால் கொலுவில் காட்சித் தருகிறார்.  மிகவும் அதிசயகாளி. தத்ரூபமாகவும், அருளும் ஆனந்தமும் தரும் சிறப்புடன் உள்ளது.

7. அடுத்து, பெருமாளின் முக்கோலம். மற்றும் யோகநரசிம்மர் அருட் கோலம்.

8. தொடர்ந்து, சதுரங்க வல்லபர்.
நீடாமங்கலம் அருகில் உள்ள திருமுறை பாடல் பெற்ற தலத்தில் திருப்பூவனத்தில் உள்ள பூவனநாதர் சதுரங்கம் ஆடும் காட்சி.
2022 தமிழ்நாட்டு தலைநகரில் நடைபெற்ற  உலக சதுரங்கப் போட்டியைத் துவக்கிவைத்த பாரதப் பிரதமர்  பெருமையுடன் குறிப்பிட்ட நமது இறைவன்.  இங்கு காரைக்காலில் காட்சியில் உள்ளார்.

9. அடுத்து, குற்றாலநாதர் காட்சி:

மேற்கு மலைத் தொடரின் முக்கிய மூலிகை வனமான விளங்குவது குற்றாலம். அதன் அருவி நீரில் அன்றாடும் அபிஷேகம் கொள்ளும் குற்றாலநாதர், இங்கே,  காட்சிப்படுத்தப்பட்டுள்ளது, மலையிலிருந்து நீர் விழுந்து குற்றாலநாதரை நேரடியாக அபிஷேகம் காணும் காட்சி நமக்குப் பெருமை.

10. கொலுவின் நடுமண்டபத்தில் சிறப்பாகவும், முக்கிய காட்சிகளாகவும் சிறப்பு அமைப்புகள்.

1. திருமுறைநாதர் :
கொலுமண்டபத்தின் வலதுபுறத்தில்,
திருமுறைநாதருக்கு, சுவாமி, அம்பாளாக  அலங்காரம் செய்து ரிஷபத்தில் வைக்கப்பட்டு, ரிஷபாரூடராகக் காட்சித் தருகிறார்.

2. திருமெய்ச்சூர் லலித்தாம்பிகை
நடுநாயகமாக, அம்மனின், அழகுடன் அருள்தரும் காட்சி கொலுவின் பிரதானம். சிறப்பு அலங்காரத்தில் லலித்தாம்பிகை அம்பாள் அமைக்கப்பட்டுள்ளார். கண்கொள்ளக் காட்சி.

3. திருவாரூர் தியாகராசர் :
இடதுபுறம், உலகில் வேறு எங்கும் இல்லாத  தோற்றத்தில் விசித்திர காட்சிக்கோலமாக, ஆரூர் தியாகராசர்  அம்பல் திருமாளத்திற்கு எழுந்தருளி, சோமாஜி மாறனார் யாகத்தில் பங்கு கொண்டு அவிர்பாகம் பெற வரும் அற்புதக் காட்சி.

சுவாமி,
ரிஷபத்தைத் தன்  தோளில் தூக்கிக்கொண்டும்,  புலையர் வேடத்தில், பறை அடித்துக்கொண்டு, நான்கு வேதங்களையும் நாய்கள் போலமாற்றி, உடன் கொண்டு வரவும்,

அம்பாள்,
கள் குடத்தை தலையில் வைத்துக்கொண்டும், விநாயகர், மற்றும் முருகரை, பாலகர்களாக, துணைக்கு அழைத்துக் கொண்டும், வரும் வேடம்.

இம்மூன்று காட்சிகளையும் இவ்வருடத்தின் பிரதான கொலுக்காட்சிகளாக அமைத்துள்ளார்கள்.

11. அடுத்து நாம் காண்பது,
சாகம்பரி பூசை :

காரைக்கால் நகர சிறப்புக்கும் பெருமைக்கும் காரணமான புராதான சிறப்பு வாய்ந்த நிகழ்வு:
ஸ்ரீ சுந்தராம்பாள், ஸ்ரீ கைலாசநாதருக்கு சாகாம்பரியாக வந்து பூசை செய்யும் காட்சி.
உலகம்,  நீர் வற்றி, பஞ்சம் ஏற்பட்டபோது, உயிர்கள் பிணி நீங்கி, உணவு பெறவேண்டி, கைலாயத்தில் உள்ள, ஸ்ரீ சுந்தராம்பாள், ஸ்ரீ சாகாம்பரி வேடம் கொண்டு காரைக்கால் ஸ்ரீகைலாசநாதரை சிறப்பு வழிபாடுகளும், பூசைகளும் செய்து, உலகத்திற்கு  பசி, பிணி, பஞ்சம் நீக்கிய புராண தலவரலாற்றுக் காட்சி.

ஆவணி மாதம் முதல் நாளில் வருடம்தோறும் காரைக்காலில் ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் நடைபெறும் விஷேச பூசை இங்கு எல்லோருக்கும் நவராத்திரியில் தரிசனக் காட்சியாக உள்ளது.

12. பொம்மைகள் காட்சி:
சோமாஜி மாற நாயனார் அருள் பெற்ற வரலாறு.
அம்பல் நகரில் வசித்த சோமாஜிநாயனர். சுந்தரமூர்த்தி நாயனார் மீது மிக்க அன்பு கொண்டு, தினம் அவருக்கு பிடித்த தூதுவளைக்  கீரை எடுத்துக்கொண்டு, அவர் வீட்டில் கொடுப்பது, சுந்தரர் தன் துணைவியான பரவையாரிடம்  தினம் கீரை தரும் அன்பர் பற்றி விசாரித்தல்.
சோமாஜி மாறனாரைப்பற்றி தெரிந்துகொண்டபின்  அவருக்கு எப்படி உதவலாம் என்று  அறிந்து கொள்ளுதல்.
சோமாஜி மாறனாரும், திருவாரூர் தியாகேசப்பெருமான் வந்து தான் செய்யும் யாகத்தில் அவிர்பாகம் பெற வேண்டும் என வேண்டிக்கொள்ளுதல்.
சுவாமியும்,  எவ்வுருவில் வந்தாலும், தங்களுக்கு அவிர்பாகம் தரவேண்டும் எனக் கட்டளையிடுதல்.
அவ்வாறே, புலையர் வேடத்தில் வந்து இறைவரைக் கண்டு உணர்ந்து, வணங்கி அவிர்பாகம் கொடுத்து இறையருள் பெற்ற நிகழ்வு.

சோமாஜிநாயனார்.
இவர்  வரலாற்றின் சில பகுதிகளை  பொம்மைகளில் வடித்து காட்சிப்படுத்தியுள்ளார்கள்.

🌟மேலும், தவழும் கண்ணன், பாண்டுரங்கர், கோதண்டராமர், சீதை, லெட்சுமணர், அனுமார் பொம்மை உருவங்களும் அலங்கரிப்பில் உள்ளன.

இத்துடன் முதன்மை காட்சிக்கொலு மிகச் சிறப்பாக அமைந்துள்ளது.

13. பொது பொம்மைகள் காட்சிக்கொலு :

உட்புறம், மண்டபத்தில்,  11 படிகளில் ஏராளமான பொம்மைகளை வைத்து  அலங்கரிக்கப்பட்ட  வழக்கமான இறையுருக்களுடன்,  மனிதர்கள்  உருவங்கள், வாழ்க்கை முறையில் ஏற்படும் பல்வேறு செயல்பாடுகள், பொம்மைகள் காட்சிக் கொலுவும்  அமைக்கப்பட்டுள்ளது.

தினமும், கலை /பாட்டு / நிகழ்வுகளும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

காரைக்காலில் அமைக்கப்பட்டுள்ள கொலுவின் தனித்தன்மை வாய்ந்த சிறப்புகள்:

💥புராண நிகழ்வுகள், தல வரலாறுகள், நாயன்மார் வரலாறுகள் முதலியவற்றை அடிப்படையாகக் கொண்ட, இதுபோன்ற ஆன்மீக நிகழ்வுகள் அடிப்படையில் பொம்மைக்காட்சி வேறு எங்கும் உருவாக்கப்பட்டு காட்சிபடுத்தும் முறைகளில் காணுவது அரிது.

💥பொம்மைக் காட்சிகள் அனைத்தும் பல்வேறு பொருட்கள் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் புதிது புதிதாகவே பொம்மைகளை  உருவாக்கம் செய்யப்படுகிறது என்பதே மிகச்சிறப்பு.

💥வேறு எங்கும் ஒவ்வொரு வருடமும், புதிய முறையில் உருவாக்கம் செய்யப்படுவதில்லை.

💥ஒவ்வொரு முறை கொலு முடிந்ததும், முற்றிலும், பிரிக்கப்பட்டுவிடுகிறது.

💥அருகில் உள்ள தமிழ் மாநிலத்தில் வேறு எந்த மாவட்டங்களில் உள்ள வேறு எந்த ஆலயங்களிலும், இப்படிப்பட்ட ஆன்மீக தகவல் நுணுக்கங்களுடன் கொலு உருவாக்கம், அமைப்புக் கிடையாது என்பதால், அருகில் உள்ள நாகப்பட்டினம், திருவாரூர், கும்பகோணம், மயிலாடுதுறை மாவட்டங்களிலிருந்து, ஆன்மீக உணர்வுடையோர் ஏராளமானோர் வந்து  கண்டு வியந்து, பேரானந்தம் அடைந்து வியப்பை வெளியிட்டு செல்கிறார்கள் என்பது கூடுதல் சிறப்பு.

💥துவக்க விழாவில் பங்குபெற்ற ஆன்மீக சான்றோர், கும்பாபிஷேக மூத்த முதன்மை , திருக்கண்ணங்குடி சிவஸ்ரீ  T.K. பாலாமணி சிவாச்சாரியார் அவர்கள்,திறந்து வைத்து, பூசைகள் செய்து 26.09.2022 மாலை 7 மணி அளவில், திறந்து வைத்துள்ளார்.
அவர் துவக்கிவைத்து நெகிழ்ந்து பாராட்டினார்கள்.

🧡கொலுவின் சிறப்புகள், கொலு வைப்பதின் நோக்கம் குறித்து ஆன்மீக விளக்கம் கொடுத்தார்.

💙கொலு பொம்மைகள் மன்னிலிருந்து உருவாக்கம் செய்யப்படுவதால், பூமியின் சக்தியும், ஆற்றலும் உணரப்படுதலும், வழிபடப்படுவதும் வழக்கமாயிற்று என்றார்.
 
💚நவராத்திரியின் போது, சக்தியின் ஆற்றல் மிகவும் அதிகரித்து இருக்கும். எனவே, நவராத்திரியில் பூசை செய்து  வழிபடுவதால், பொம்மைகள் அனைத்திற்கும், ஆன்மீக சக்தி ஆற்றல் உருவாக்கம் பெற்று, சக்தியின் ஆற்றல் பெருகும். 

💜ஆன்மீக சிறப்பு வாய்ந்த பல தலங்களில் உள்ள புராண வரலாறுகள், ஆலய தெய்வ வழிபாடுகள், நாயன்மார் வரலாறுகள் காட்சிப்படுத்தப்படும்போது, அவற்றையெல்லாம், அந்தந்த ஊர் மக்கள், தாங்கள் இருக்கும் இடத்திலிருந்தே அவற்றின் சிறப்பை எளிதாக உணர்ந்து கொள்ள முடிகிறது.

🛕மேலும், ஆண்டுகள் தோரும், ஆன்மீக காட்சிகளைப் புதுமையான முறையில் அமைத்து  காரைக்காலில், சிறப்பாகக் கொலு கொண்டாடப்படுவது மிகச்சிறப்பும், பெருமையும் நிறைந்தது.

🛕இதை ஒரு முன்னுதாரணமாகக் கொண்டு, ஒவ்வொரு ஆலயத்திலும், குறைந்தபட்சம், மாவட்ட அளவில் ஒரு சில ஆலயங்களிலாவது இது போன்ற சிறப்பு கவனமும், முயற்சியும் செய்யப்பட வேண்டிய அவசியம் குறித்து வலியுறுத்தினார்.

🛕இவ்வாறு, மிகச்சிறப்பான முறையில் நடைபெற்று வரும் காரைக்கால் கொலுவில் தாம் தம் குடும்பத்தினருடன் வந்து ஆர்வத்துடன் கலந்து கொள்வதில், மிக மகிழ்வும், மனநிறைவும் ஏற்படுவதாக, நெகிழ்ச்சியுடனும், பெருமையுடனும் கூறினார்கள்.

🌟காரைக்கால், கைலாசநாதர் ஆலயத்தில், சிறப்பு வழிபாடுகளும் பூசைகளும், உழவாரப்பணி, மற்றும்  சமய ஆன்மீக தொண்டுகளிலும் பல்லாண்டுகளாக மிகச்சிறப்பான முறையில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு,  தன்னலம் இல்லாமல் சிவத்தொண்டுகள் பலவும் செய்துவரும் காரைக்கால் சிவனடியார் திருக்கூட்டத்தின் பொறுப்பாளார்கள், அடியார்கள் அணைவருக்கும் பாராட்டுகள். வாழ்த்துக்கள்.

🎉 🙏குறிப்பாக, மிக முக்கிய பொறுப்பில் இருந்து செயலாற்றும்  இக்கொலுவின் தலைமை சிற்பி திரு T.மரகதவேல் அவர்களின் அர்பணிப்புடன் கூடிய ஆற்றல்மிகு சேவையும், அவர்கள் ஆற்றும் தொண்டும், அவருக்கு உறுதுணையாக செயல்பட்டுவரும், இளைஞர்கள் கூட்டமைப்பும் என்றென்றும் பாரட்டுக்குரியவர்கள்.

🙏கைலாசநாதர் அருளால், வளர்ந்திடும்
இளைஞர்களை வணங்கிடுகிறேன்.

🙏இறை உணர்வு வற்றாத ஆர்வம், விடாமுயற்சி, கடும் உழைப்பு,
கைலாசநாதர் அருள் பெற்ற இளைஞர்களின் தூய்மையான அர்ப்பணிப்பு. வாழ்த்திடுவோம் வாருங்கள்.

🙏சமூகத்தில் பல்வேறு பணிகளில், ஈடுபட்டு தங்கள் குடும்பம், வாழ்வாதாரத்தையும், பொறுப்புடன் கவனித்துக் கொண்டு, ஆன்மீகத் தொண்டில் தன்னலம் இல்லாமல், ஒன்றுபட்டு அயராது பாடுபடும் இவர்கள்
🙏காரைக்காலின் ஆன்மீக காவலர்கள்.
காரைக்காலின் பெருமைக்கு மேலும் உயர்வு தந்து வையம் போற்ற வைக்கும்  இவர்கள் சேவைகளைப் போற்றுவோம். வளரட்டும் ஆன்மீகத் தொண்டு.
வாழ்க வளத்துடன். வணங்கிடுவோம்.
என்றும் இறையருள் துணையிருக்கும்.

பாராட்டுக்கள்.
வணக்கங்கள்
நன்றிகள்
26.09.2022
#என்றும்அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்


No comments:

Post a Comment

பதிவு - 13 நாள் - 7 ஆதிகைலாஷ் தரிசனம் Gunji to Jolingkong (4630mts.) Adikailash and back to Budhi (2740mts.) Total 86 Kms. 9 - 10 hrs. நாள் - 7 - 01.06.24 - சனி

பதிவு - 13 நாள் - 7  மிக முக்கிய நாள் ஆதிகைலாஷ் தரிசனம் Gunji to Jolingkong (4630mts.) Adikailash and back to Budhi (2740mts.) Total  86 Kms...