Monday, April 19, 2021

அப்பர் அமுதம் - திருமுறைக் காட்சி

#அப்பர்அமுதம்:
திருமுறைக் காட்சி

அது ஒரு பெருங் கிணறு 
அதனுள் இருந்தது ஒரு சிறு ஆமை. பிறந்தது முதல் அதற்கு அதுவே உலகம். 

 இதைவிட பேரிடம் புவி எங்கும் இல்லை என்று அலப்பறை செய்து வாழும்.

ஒரு நாள் பெரும் மழை 
அருகிலிருந்த கடல் பொங்கியது. 
கடலாமையொன்று கரை ஒதுங்கி
தவறி விழுந்தது அக்கிணற்றில்.

புதுவரவு வந்ததும் கர்வம் கொண்டு 
 எங்கிருந்து வந்துள்ளாய் நீயென
கிணற்றாமை கேட்டது

அருகில் இருக்கும் பெருங்கடல் பற்றிரைத்து அங்கி இருந்தேன்
என்று கடலாமை கனிவுடன் பதிலுரை தந்தது.

இதைக் கேட்டு கைக்கொட்டி 
இக்கிணற்றை விடவா பெரியது அது
இதற்கு இணையா அப்பெருங்கடல்
என்று பலவாறு கூறி எள்ளிநகையாடியது.

அகங்காரம் பெருங்கடல் பற்றிய குறையறிவு கொண்ட கூவத்தின் (கிணற்று ஆமை)
அறியாமை அறிந்து அமைதி கொண்டது
கடலாமை.

இது போன்றே மாந்தர் பலர்
மாதேவன் கருணைக் கடல் பற்றி
அறியாமல் பாவங்கள் செய்திடுவார்.
அவர் உணரார்.

என்பர் அப்பர் பெருமான்.
(சித்திரை: சதயம்: அப்பர் அய்க்கியம்)
கூவல் ஆமை குரைகடல் ஆமையைக்
கூவ லோடு ஒக்குமோ கடல் 
என்றல் போல்
பாவ காரிகள் பார்ப்பரிது என்பரால்
தேவ தேவன் சிவன் பெருந் தன்மையே.
 
- - தேவாரம்.5.100.10
பதிகம்: பொது : ஆதிபுராணத் திருக்குறுந்தொகை.
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்

No comments:

Post a Comment

எண்கண் சுப்ரமணிய சுவாமி ஆலயம், பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில்

7.எண்கண் சுப்ரமணிய சுவாமி ஆலயம், பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில் ⛳ இருப்பிடம் திருவாரூர் - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் திருவாரூரில் இருந்து...